11 July, 2012

பெயர் சுமந்து கனக்கிறேன்


அதிவேகச் சுழிப்பில் மல்லாத்திவிடும் நதியின் இழுப்பிலிருந்து
தப்பித்து கரையேறியபோதுதான் என் பெயர் முதன்முறையாக
வெடவெடப்பில் ஆடியதைக் கவனித்தேன்.
பிறிதொருகணத்தில் வழிமறித்த நாகத்திடமிருந்து எதிர்த்திசையிலோடி
பயம் தடுக்கி விழுந்ததில் கைகால் முகமென
எங்கும் சிராய்ப்புகள் பெயருக்கு.
தவிரவும், அன்றுதான் ரத்தமும் வியர்வையும் பெயரிலிருந்து
வழியுமென்பது தெரிய வந்து திடுக்கிட்டேன்.
எனக்கு நாகமெனில் உங்களுக்கு
சித்தம் கலங்கிய நாய்
பித்தம் தலைக்கேறிய யானை
ஆறுசக்கரப் பாய்ச்சலோடு வந்த வாகனம்
எதுவாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
உயிரைக் காத்தல் என்பது பெயரைக் காத்தல்தான்
என்று பளிச்சிடுகிறது மூளைக்குள் மின்னலொன்று.
பெயர் சொல்ல பிள்ளை இல்லையென்பதுதான்
நாண்டுகொண்ட ரெஜினா சித்தி பிணமாகக் காரணம்.
உயிரை எடுப்பதைக் காட்டிலும் கீழானது
பெயரைக் கெடுப்பதெனில்
உயிரைக் கொடுத்தாவது பெயரைக் கா என்று
இதற்குதான் சொன்னார்களோ பெரியோர்.
என் பெயர்க் கொண்ட நண்பனின் பிணத்தைச்
சுமந்து செல்லும் துக்கத்தில் உணர்கிறேன்
நான் கனப்பதை.
 

3 comments:

ராமலக்ஷ்மி said...

/உயிரைக் காத்தல் என்பது பெயரைக் காத்தல்தான்/

வித்தியாசமான பார்வை.

கனமான கவிதை.

ஹ ர ணி said...

கதிர்பாரதி

கூடி வைத்தபெயரை சூடிக்கொண்டோம். சுமந்தலைகிறோம். ஆனாலும் பெயர் காத்தல் பேரவஸ்தை. கவிதையில் கணத்துபோகிறேன்..நண்பனுக்காகக் கொடுத்த தோளும் வலியும் உணரும் நிலையாகவே.

நிலாமகள் said...

எனக்கு நாகமெனில் உங்களுக்கு
சித்தம் கலங்கிய நாய்
பித்தம் தலைக்கேறிய யானை
ஆறுசக்கரப் பாய்ச்சலோடு வந்த வாகனம்//

ஐயோடா!

உயிரை எடுப்பதைக் காட்டிலும் கீழானது
பெயரைக் கெடுப்பதெனில்//

ச‌ரிதான்...

என் பெயர்க் கொண்ட நண்பனின் பிணத்தைச்
சுமந்து //

க‌ன‌த்து சூழ்கிற‌து க‌விதையுள் ம‌ன‌ம் க‌சியும் துக்க‌ம்!