30 August, 2011

ஆயிற்றா?

முக்காலத்திலும் கால் பரப்பியிருக்கும்
முனிவனிடம் வந்தது புழுவொன்று
சுவாமி எம்மை கோழி செய்வீரா
கோழிகளெல்லாம் கொத்திக் கொத்தி
சித்திரவதைக்கின்றன
முறுவலித்துக்கொண்டே சொன்னான் முனி
செய்தோம்
ஆயிற்று புழு கோழியாக

கோழியை விரட்டிக் கடித்தது கடுவன்பூனை
மீண்டும் முனிவன் காலடி வந்தது கோழி
சுவாமி எம்மை பூனை செய்வீரா
செய்தோம்
சிறகுகள் உதிர உதிர
மெதுகால்களில் நகங்கள் முளைத்து
பூனை பிரசன்னமானது

பட்டுமேனி உதறி சோம்பல் முறிக்கையில்
கடைவாயில் எச்சிலொழுக நாய் நெருங்கியதும்
விதிர்விதிர்த்தது பூனை
மீண்டும் முனிவனிடம்... மீண்டும் செய்தோமென்றான்
பூனை நாயாகிப் பூரித்தது

நாயின் ராஜநடை மனிதன் எறிந்த கல்லில் இடற
ஓலமிட்டபடி ஓடிவந்த நாய்
எம்மை மனிதனாக்கினால் நல்லது
ஆக்குவீரா முனிவனே என்றது
ஆயிற்று நாய் மனிதனாக

அநாதையாக இறந்துகிடந்தவனை
புழுக்கள் மொய்த்துக் கிடந்தன
பார்த்த மனிதன் பதறினான் முனியிடம்

முனியே...
எம்மை புழுவாக்கிவிடும் என்றபோதே
மனிதன் புழுவானான்

மீண்டும் முறுவலித்தான் முனி
ஆயிற்றா?

25 August, 2011

முறுவல்

நிறைசூலியான பசும்நாற்றுகளில் திகைந்துவிட்ட
புகையான் குறித்து அங்கலாய்க்கும்
விவசாயி போலிருந்தது
வண்டல் வண்டலாய்ப் பெருக்கெடுத்த
உன் சோக முறுவல்

நீர்ப்பெருக்கத்தில் சலசலக்கும் வாமடையென
மனம் சஞ்சலத்தில் சப்தித்துத் திணறுகிறது

தூர்களிடை நெளிந்தூரும் நாகத்தின்மீது
தவறிவிழுந்து அரற்றுகிற தவளையாய்
காற்றில் சிதறியலையும் உன் பார்வையில்
அச்சமுறுகிறேன்

விஷந்தேக்கித் திரியும் நட்டுவாகளிக்கு
வழிவிட்டு வரப்பிலிருந்து இறங்குவதென
இறங்கிவிட முடியுமாவென அறிந்தேனில்லை
உன்னிலிருந்து

பெருங்காற்றுக்கு வீழ்ந்துபட்ட கருவேலத்திலிருந்து
தனித்துக் கிளம்பிவிட்ட தூக்கணாங்குருவியின்
இருப்பை நினைவுறுத்தி ஊசலாடும் கூட்டை
ஆறுதலாக்கிக் கொள்கிறது பொழுது

முதிர்ந்தும்முதிராத முலைகளின்
இளஞ்சூட்டுக்கு இணக்கமாய்
சூடும் சுவையுமுடைய உன் முறுவலைப்
பத்திரப்படுத்துகிறேன்
நடுக்கமுறும் எனது கூதிர்காலத்தை
பொதிந்து வைக்கலாமென்று