14 September, 2013

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2013 :)

நண்பர்களுக்கு வணக்கம்...

”மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” என்கிற என் கவிதைத் தொகுதி ’’ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2013’’ க்கும் தேர்வாகி இருக்கிறது. விருது குழுவுக்கும், நடுவர் குழுவுக்கு எனது நன்றிகள்.

சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருது 2013,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் படைப்பிலக்கிய விருது 2013... ஆகிய விருதுகளுக்கும் தேர்வாகி இருக்கிறது

அன்புடன்

கதிர்பாரதி
தலைமை உதவி ஆசிரியர்
ஆனந்த விகடன் வார இதழ்
சென்னை - 02

31 August, 2013

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது - 2013 :)

நண்பர்களுக்கு வணக்கம்...

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் மாநில அளவிலான படைப்பிலக்கிய விருது (2013) க்கும், ”மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” கவிதைத் தொகுப்பு தேர்வாகி இருக்கிறது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயலாளர் செந்தீ நடராஜன், இப்போதுதான் தொலைபேசியில் அழைத்து இந்தத் தகவலைச் சொன்னார். என் கவிதைச் செயல்பாட்டின் மகிழ்வான தருணம் இது தேர்வுக் குழுவுக்கு என் நன்றிகள் 

அன்புடன்
கதிர்பாரதி 

புத்தகம் வெளியீடு : புது எழுத்து பதிப்பகம், 
காவிரிப்பட்டினம், தொடர்புக்கு: 9842647101, 9042158667

24 August, 2013

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது :)


வணக்கம் நண்பர்களே...

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது, மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்கிற என் முதல் கவிதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தை பதிப்பித்த புது எழுத்து பதிப்பகம் மனோன்மணிக்கும், வாசித்த, விமர்சித்த, பாராட்டிய... அனவருக்கும் நன்றி.

கதிர்பாரதி

08 August, 2013

கதிரின் பார்வையில்... ஒவ்வொரு நாளும் விடியலில் ஒரு பூவைப் பறித்துத் தனக்குத்தானே சூட்டி அழகு பார்த்துக்கொள்கின்றன = தாராகணேசன்

கதிர்பாரதியின் கவிதைகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர் தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் கவிதைகளில் இயங்கி வருவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டும் இன்றி அவ்வப்போது அவரது கவிதைகளைக் குறித்தும் நான் அவரிடம் உரையாடியிருக்கிறேன். மிகுந்த உற்சாகத்துடன் என்னோடு உரையாடுவார்.
ஆட்ரே லார்ட் கவிதைகளைக் குறித்துச் சொல்லியிருப்பது இப்போது நினைவுக்கு வருகிறது. கவிதை என்பது ஒரு கனவு மட்டுமல்ல. அது ஒரு தொலைநோக்கு. வாழ்வு எனும் உடலமைப்பின் எலும்புக்கூட்டுக் கட்டமைப்பு. எதிர்காலத்தின் மாற்றங்களுக்கான அஸ்திவாரத்தை அது வடிவமைக்கிறது. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வண்ணம், நமது அச்சங்களின் அல்லது கவலைகளின் மீதாக கட்டப்பட்டிருக்கும் ஓர் பாலம் அது. லார்டின் கூற்று எழுதப்பட்ட, அல்ல எழுதப்படுகிற எல்லாக் கவிதைகளுக்குமான நிதர்சனம் என்றே நான் கருதுகிறேன். எண்ணற்ற கவிதைத் தொகுப்புகளையும், கட்டுரைகளும், குழந்தைகளுக்கான புத்தகங்களையும் எழுதிப் புகழ்பெற்ற அமெரிக்காவின் பொயட் லாரட் மாக்ஸேன் குமி, கவிதை என்பது எதையும் நிகழ்த்துவதில்லை. அது சொல்லப்பட்ட வார்த்தைகளின் பள்ளத்தாக்கில் பிழைத்தஞ்சி நிற்பது மட்டுமே என்று கவிதை குறித்த தனது கருத்தை முன் வைக்கிறார். இங்கு பிழைத்தெஞ்சி நிற்பது கவிதைகள் மட்டுமல்ல. வாழ்வின் பாழில் ஊசலாட ஆதாரமாய் இருக்கும் கவிதையின் மெல்லிய இழையைப் பிடித்தபடி நிற்கும் கவிஞனும் தான். இதனை நான் இப்படிச் சொல்ல விழைகிறேன். In the feeble string of his verse, oscillates the poet in the void of his life.
மிகுந்த எதார்த்தத்துடன், பகட்டுகள் ஏதும் இல்லாமல், இயல்பாக எளிமையாக மரபின் சாயலுடன் எழுதி வரும் கதிர்பாரதியின் கவிதைகள் மனதுக்கு இதம் தருபவை. நம் சமகாலத்திய கவிஞனும், விமர்சகரும் மொழி பெயர்ப்பாளருமான Robert Fitzerald ராபர்ட் ப்ட்ஜெராட் கவிதையென்பது குறைந்த பட்சமாக வசீகர தேர்த்தியென்றும் அதிகபட்சமாக தேவவெளிப்பாடு அல்லது தேவோக்த்தம் என்றும் மிக அழகாக குறிப்பிடுகிறார்.
கவிதையென்பது ஒரு தொழில் அல்ல, அது வாழ்வின் முறை என்றும், அது ஒரு காலிக் கூடை, அதில் வாழ்வினை இட்டு அதனை எதாவது செய்து பார் என்றும் சற்று நகைச்சுவையாகச் சொல்கிறார் அமெரிக்கச் சமகாலக் கவிஞரும் புலிட்சர் பரிசுக்குரியவருமான மேரி ஆலிவர்.
கவிதைகள் குறித்து எத்தனையோ சொல்லப் பட்டிருக்கின்றன. கவிஞனின் நோக்கில் ஒரு விதமாகவும், விமர்சக நோக்கில் ஒரு விதமாகவும், சாதாரண மனிதனின் நோக்கில் ஒருவிதமாகவும், கலைஞனின் நோக்கில் ஒருவிதமாகவும் வடிவம் கொள்ளும் கவிதை எப்போதும் ஒரே வடிவத்தில் இருப்பதே இல்லை. வடிவங்களற்றும் வேறு வேறு வடிவமாகவும் தெரியும் கவிதைகள் ஒரு அப்ஸ்ட்ரக்ட் ஓவியத்தைப் போலவே எனக்குள் எப்போதும் தோற்றங்கொள்கின்றன.

தற்போதைய சூழலில் நரன் தனது சிறுகுறிப்பில் சொல்லியிருப்பது போல மொழியின் இறுக்கத்தைத் தளர்த்திய கவிதைகள் கதிர் பாரதியினுடையவை. இவரது தொகுப்பு கையில் கிடைத்ததும் உறையைப் பிரித்த போது புத்தகத்தின் முகப்பிற்கு பதிலாய் கண்ணில் பட்டது பின்புற அட்டையும், நரனின் குறிப்பும் தனது கவிதைகளைப் போலவே எளிமையாய்ச் சிரித்துக் கொண்டிருந்த கதிரின் புகைப்படமும்தான். அப்படியே புத்தகத்தைப் பின்புறமிருந்து புரட்டி நான் வாசித்த முதல் கடைசிக்கவிதை இன்னும் மனதில் நிற்கிறது.
அன்றாட நிகழ்வுகள், the everydayness கதிரை எப்படி ஆழமாக பாதிக்கின்றன என்பதை பதிவு செய்கின்றன அவரது கவிதைகள். தனிமனித வாழ்வு குறித்து மட்டுமின்றி, நிலமும், நிலம் மீதான பயிர்களும், உடனுரை உயிர்களும் அவற்றின் அழகும் வலியும் அவரால் எப்படி தொட்டுணரப் பட்டன என்பதற்கு நான் வாசித்த அவரின் கடைசிக் கவிதையே கட்டியம் கூறுகிறது. பக்கம் 68... (கவிதை வாசிக்க..)
இந்தக் கவிதையை வாசித்ததும்... முதலில் நினைவுக்கு வந்தது புலான் உண்ணாமை அதிகாரத்தின் இரண்டு குறள்கள்..
கொல்லாள் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
தன்ஊன் பெருக்கற்க்குக் தான் பிரிது ஊனுன்பான்
எங்கனம் ஆளும் அருள்.

கைகூப்பித் தொழக்கூடிய கவிதையாகவே எனக்கு அது படுகிறது. மறியின் கதறலை தேவமைந்தனின் கையறு நிலைக்கு ஒப்பிட்ட மஹிமை மிக உன்னதம். கூடவே ருதுவனத்தின் எனது ஒரு கவிதை நினைவுக்கு வந்தது.

இருள் புரளும் தார்ச்சாலைகளின்
வலியுணராது
அக்கரையின்றி விரையும்
குளுரூட்டப்பட்ட வாகனம்

ஒற்றை மலரின் தொடலில் உருவாகிவிடுக்கின்றன கதிருக்குள் கவிதைகளாக. இந்தத் தொகுப்பின் நான் மிகவும் ரசித்த கவிதை என்று சொன்னால் ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள். (பக்கம் 9... வாசிக்கஅதுமட்டுமல்ல, யானையோடு நேசம் கொள்ளும் முறையை நமக்கெல்லாம் போதிக்கிறார் கதிர்பாரதி. யானையின் துதிக்கைக்கு முத்தம் தந்தால் அது நேசத்தின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ஒரு புதிய விதிமுறைகயைக் கூட உருவாக்கியிருக்கிறார். இனி எல்லோரும் யானைகளை முத்தமிடுவோம். அவற்றின் வாலுக்குப் பூச்சூட்டுவோம். கால்களில் சங்கிலிகளுக்குப் பதிலாகச் சலங்கைகளைப் பூட்டுவோம். தந்தங்களில் மணி கட்டுவோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, காணிநிலம் வேண்டுமென்று சக்தியிடம் வரங்கேட்டான் பாரதி. ஆனால் இருக்கும் நிலத்தை மீட்க ஏங்கும் கதிரின் கவிதை என்னைத் தொட்டது. எனக்கு வாய்த்தது நன்நிலம் தான் என்று ஆரம்பிக்கிறது அந்தக் கவிதை. தனது நிலத்தின் மீதான ஆத்மார்த்தமான காதல், தளர்ந்து போய்விடாத நம்பிக்கை கசாப்புக் கடைக்காரனின் கதறும் மறி, காந்திஜியின் வயிற்றுக்குள் கதறிய மறி, தேவகுமாரன் கண்டெடுத்த மந்தை பிரித்த மறி, கல்வாரியில் அரற்றிய தேவனின் ஒலி, உண்ணாதே புலால் எனச்சொன்ன வள்ளுவனின் மதி அத்தனையும் கேட்டது அந்த ஒற்றைக் கவிதைக்குள்.
இயற்கை மற்றும் உயிர்களின் மீதான கதிர் பாரதியின் இளக்கமுற்ற மனப்பாங்கு அவரது கவிதைகள் நெடுகிலும் ஒரு சன்னமான நதி போல ஓடத் தொடங்கிய பின் வாசிப்பவரின் நெஞ்சில் அருவியெனப் பெருக்கம் கொண்டு விழுகின்றன. பறவையின் கூடுகளில் ஊடுருவித் துளைத்த சாரை, எப்போதேனும் ஒன்றிரண்டு அரும்புகளைத் தருகின்ற தோட்டத்துச் சப்பாத்திக்கள்ளி, கூட்டில் அடைக்கப்பட்ட புறா, எலிகளின் தானியச் சபலம்... என்று விரிகிறது அவரது கவிதைகளின் வெளி. அவரது வனத்தின் சல்லிவேர்களோடு சில விதைகளையும் கவ்வி வருகின்ற பறவையின் பாடல்கள் இவரது கவிதைகளுக்கான சிம்பொனியை எனது வாசிப்பு நெடுகிலும் பின்னணி இசைத்துக் கொண்டிருந்தன.
நேற்றைக்கும் இன்றைக்குமாக காற்றில் அலைந்தபடி இருக்கின்றன அவரது கனவுத் தோட்டத்தில் முளைவிட்ட பிஞ்சுக் கிளைகள். வேம்பின் கருணையில் இவரது கோடைகள் எல்லாம் தித்திப்பாகித் திகட்டுகின்றன. கதிரின் ஆன்மவேட்கை கார்காலத்தை அடைகாக்கும் குஞ்சாகவும், கொடுங்கோடையில் மரக்கிளையில் கூடுகட்டும் ஒரு இருளின் நிறமொத்த பறவையாகவும், துண்டுதுண்டு கனவுகளை இழையாக்கி நெய்கின்ற தேவதறியாகவும், அபிலாஷையின் தளிர்களிலிருந்து சொட்டும் துளிப்பனியாகவும், யாருக்கும் தெரியாமல் மனதை நனைக்கும் மழையாகவும், மழைத்துளி அருந்தும் ஒரு சக்கரவாகப் பறவையாகவும் என்னுள் தோற்றம் கொண்டன.
கதிரின் பார்வையில்... ஒவ்வொரு நாளும் விடியலில் ஒரு பூவைப் பறித்துத் தனக்குத்தானே சூட்டி அழகு பார்த்துக் கொள்கின்றன. எத்தனை வியக்கத்தகு பார்வை இது. இயற்கையும், வனப்பும் இல்லாத சூழ்நிலையில், பதற்றமும், படபடப்புமான அன்றாடங்களில், நெரிசலும், நெருக்கடியுமான வாழ்வு முறையும், துரோகமும் அதன் துக்கமும் தொண்டை அடைக்கும் நாட்கடத்தலில்.. தனக்குள்ளே ரகசியமாய் ஒரு மாபெரும் வனத்தை உருவாக்கி, கவிதைகளை அவற்றின் கனியாக்கித் தருகிறது கதிரின் மனது வாசகனுக்கு.
இரயிலைத் துரத்திக்கொண்டே ஓடுவதைப் போல தவறவிட்ட சந்தோஷங்களும், அடைய முடியா எதிர்பார்ப்புகளின் ஏமாற்ற தொனிகளும், உதிர்ந்து விழுகின்ற இரண்டையும் இக்கவிதை தன் கையளவு நிலத்தின் மீது வைக்கிறது. (பக்கம் 31... வாசிக்க)
கனவுகளைப் பதியமிட்டு வளர்க்கும் கதிர்பாரதியின் அகண்ட வனத்திற்குள் காலத்தை அறுக்கும் ஆலகாலமும் கலந்துதான் கிடக்கிறது. பறவைகளும், யானைகளும், தேவகுமாரனும், ஆனந்தியும், திலீபனும், மெசியாவும், கலகலத்து நகைத்தபடி ஓடியும் ஒளிந்தும் விளையாட இயற்கை தளும்பிக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து பல தொகுதிகளை கதிர்பாரதி நமக்குத் தருவார் என்ற நம்பிக்கையினையும் நம்முள் விதைக்கிறது அவ்வனத்துப் பறவை

30 July, 2013

என்னை மறியாய் மாற்றி இழுத்துச் சென்றவன் (கவிஞர். கதிர்பாரதியின் ”மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” கவிதைத் தொகுப்புக்கான மதிப்புரை) - ரவிசுப்பிரமணியன்



கவிஞர்களும் ஓவியர்களும் இசைக்கலைஞர்களும் சுவாதீனமாய் உலவும் அந் நகரத்தில்தான், அவனைக் கண்டேன். முதலில் அவனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவனின் சில வரிகளைக் கேட்ட பின்பு, உடனே கண்டுபிடித்து விட்டேன். அவனும் என்னை சட்டென கண்டு கொண்டு விட்டான். நீயும் எனக்கொரு முன்னோடியென கரம் பிடித்து, நேசம் தளும்ப கைகுலுக்கி வீட்டுக்கு அழைத்தான். அவன் சொற்களின் சூன்யக்காரனெனவும் வரிகளை ரத்தம் கக்கவைக்கும் மஸ்தான் விளையாட்டு தெரிந்தவனெனவும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால், கொன்றவனை கடவுளாக்கிய அவனை நிராகரித்து நகர முயன்றேன். அவனோ பேச ஆரம்பித்தான். அவன் வாசகங்களின் மகிமையால் மேய்ப்பவனுக்கு முன்னால் செல்லும் ஆட்டுக்குட்டி போல், அவன் சொற்களை அசைபோட்டபடி போக ஆரம்பித்தேன்.
அவன் வரவேற்பறையில் மாட்டியிருந்த இந்த கவிதை என்னால் மறக்க இயலாதது.

திசைகளைப் பதற்றத்துக்குள்ளாக்கி
மாநகரச் சாலையில் விரையும்
ஞாயிற்றுக்கிழமை கசாப்புக்கடைகாரனின்
இரு சக்கர வாகனத்தில்
குறுக்குவாட்டாகக் கிடந்து கதறுகிற
மறியைப் பார்த்ததும்


நீங்கள் என்ன செய்வீர்கள்.



என் பிதாவே என் பிதாவே

ஏன் என்னை கைவிட்டீரென
கல்வாரி மலையில் அரற்றிய
என் தேவனேஎன் தேவனேஎன்று
கை தொழுவேன்
நான்.

ஆட்டுக்குட்டியை கொல்வதற்காக கட்டிச் செல்பவனைப் பார்த்து, ஏதும் செய்ய இயலாது, வழக்கமான பிரார்த்தனையை மட்டுமே செய்ய முடிகிறது அவனால். ஆனால் ஒரு வகையில், ஏசுவும் ஆட்டுக்குட்டியின் நிலையில்தான் இருக்கிறார் என்பதை, இகழ்ச்சியோ, பரிகாசமோ அற்று, கழிவிரக்கமாய் அரற்றுகிற இந்த தொனி கவிதைக்குப் புதிது.
அவனின் ஒவ்வொரு அறைக்குள்ளும் விதவிதமாய்ச் சித்திரங்கள். அபூர்வ சொல்லடுக்கின் லாகிரி மொழியில், நிலத்துக்கு நாமகரணம் சூட்டி, பறவையாக பறக்க வைத்திருந்தான் ஒன்றில். அப்பாவை மகனாக்கி, மகனை அப்பாவாக்கி, பால்கிளி ஓவியங்கள் போல் மாற்றியிருந்தான் சிலவற்றில்.  புரோட்டாக்கள் பேசுகிற ஊரில், ரயிலைக் கொன்றவனும், நேசத்துக்குரியவளின் பார்வைக்கு கோயில் கட்டுபவனும், வானூர்தியை அணைத்துறங்கும் சிறுவனும், சப்பாத்திக் கள்ளியின் கீறலுக்கு கரிசனக் கவலையை மட்டுமே களிம்பாய் பூசுகிறவனுமென, விதவித விசேஷ மனிதர்களை உலவவிட்டிருந்தான் அவன். ஆரம்பத்தில் நான் ஏன் பயந்தேன் என இப்போதாவது உங்களுக்கு புரிந்திருக்கும்.
மனித மனசின் பல வித ரூபங்களும் வண்டல் பூமியின் நெல்லும் வேம்பும் வாதநாராயண பூக்களும் அதில் பறந்து திரியும் கொண்டலாத்திகளும் இதர தாவர ஜங்கம உயிரனங்களும் நிறைந்திருந்த அவன் வீட்டின், கொல்லைப்புறக் குளத்தில் ததும்பிக் கொண்டிருந்த பெளர்ணமியை, கொக்கு கொத்த, நிலவோ ரெக்கை விரித்துப் பறந்து கொண்டிருந்தது. புதுமைப்பித்தன் வேறு வகையாய், சூரியனை இப்படி சொன்னது ஞாபகம் வருகிறது. அதுகுறித்து வெங்கட்சாமிநாதனும் சோ. தருமனும் கூட எழுதியுள்ளனர். புதுமைப்பித்தன் எழுதியது இதுதான். வாய்க்காலில் ஓடிய தண்ணீரில், குழந்தை தன் கால்களை முக்கி முக்கி விளையாடிக் கொண்டிருந்தது. ஆனானப்பட்ட சூரிய பகவானே, குழந்தையின் கால் தரிசனத்துக்காக காத்திருந்தான். அங்கே சூரியனை பறிதவிக்க விட்டான் புதுமைப்பித்தன். கொக்கை நிற்க வைத்துவிட்டு நிலவை பறக்கவிட்டிருந்தான் அவன்.
பைபிளின் ஆழ்ந்த வாசிப்பும் அது சார்ந்த பரந்த விஷயங்களும், அவனை மதம் நோக்கி நகர்த்தாமல் இருப்பதும் கூட, கர்த்தரின் கருணைதான் போல.
எளிதில் மீள முடியா வார்த்தைகளின் வசீகரச்சுழல்களை உருவாக்கி, அதில் என்னை சிக்க வைத்து மகிழ்ந்து கொண்டிருந்தவன், நெடுஞ்சாலையை, உயிர் கவ்வும் மிருகமாக்கியும் சிரிப்பினை, மதுவாக்கியும் மேலும் விளையாடிக் கொண்டிருந்தான். ஏற்கனவே திகிலில் இருந்த நான், வெளியேற யத்தனிக்கும் வேளையில், ’ச்சூ- வென ஒரு மந்திரம் சொன்னான். என் தலையில் திருநீறும் வாயில் ரெண்டொரு வேப்பிலை கொழுந்துகளும் இருந்தன. அப்போது தட்டுப்பட்டது இது.


மருத்துவமனையில் இருந்து துவண்ட நாற்றென

ஆயாவை வீட்டுக்கு ஏந்தி வரும்
அந்தப் புளியமரத்து முடுக்குப் பாதையில்
தலைகுப்புற அசைவற்றுக் கிடந்த
வண்ணத்துப் பூச்சியை இழுத்துப்போகின்றன
கொலைக்கரம் வாய்த்த எறும்புக்கூட்டம்.

காற்றுத் தொகுதி ஆராதித்துக் கிடந்த
அதன் வண்ணச் சிறகுகளிலிருக்கும்
நான்கைந்து ஓட்டைகளின் வழியே
வெளியேற முடிவு செய்து விட்டது
ஆயாவின் உயிர்.

இப்படி அவன் சொல்லின் மாயக்கட்டில் மேலும் நடந்து கொண்டிருந்த போது, அவன் சிருஷ்ட்டித்த இன்னும் சில வெளிகள் புலனாகத் துவங்கியது. அங்கேயும் அவன் கவிதைகளை, கூடு விட்டு கூடு பாய ஏவியபடியே இருந்தான். நானோ, அவன் உருவாக்கித் தந்த ஒரு புராதன நகரிலேயே திளைத்து, ஆவணம் ஏதும் கிடைக்குமா என தேடிக்கொண்டிருந்த போது, சட்டென ஒரு அதிர் குரலில், தலையில் ஒட்டியிருக்கும் காலாதீதத்தின் தூசியை தட்டிவிட்டு வாவென ஒரு அதட்டல் போட்டான்.
பின் தொடர்ந்த என்னிடம், பெண்ணின் தீராக்காமத்தை, அதன் முன் தண்டனிடும் ஆணின் கம்பீரத்தை, இரண்டும் ரஸவாதம் புரியும் தாது புஷ்ட்டி சிட்டுக்குருவி தாம்பத்திய காமலோக ரகசியங்களை - மயக்கும் பாகேஸ்வரியில், தெலேர் மெஹந்தியின் சூஃபி பாணியின் ஆழ அடர் குரலில் பாடலென இசைக்கத் துவங்கினான். மந்திரம் போல் வேண்டுமடா சொல் என்றான் பாரதி. இவனோ கலா மாய லோகத்தில் சித்திரத்தை, இசையை, புராதனத்தை, மந்திரத்தை என, வித வித வடிவில் வித்வத்வம் காட்டியபடி இருக்கிறான். அவன் கண்கள் மூடியிருந்தும் என்னால் அவனை கடந்து போக முடியவில்லை. ஆவணப்படமென்றும் கவிதையென்றும் பாடலென்றும் பரபரப்பாய் இருந்த என்னை, இங்கிருந்து மீட்டுச்செல்ல விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி. அஞ்சல் பேழை 696, சென்னை14.


ஆத்மார்த்தி மதுரையில் ஏற்பாடு செய்திருந்த வதனம் இலக்கிய நிகழ்வில் கவிஞர் ரவி சுப்ரமணியம் வாசித்த கட்டுரை