16 April, 2022

தேடலின் சிறகுகள் படபடக்கும் ‘உயர்திணைப் பறவை’: கதிர்பாரதியின் கவிதை நூல் விமர்சனம் – க.ரகுநாதன் நூல் விமர்சனம் | வாசகசாலை

 கவிதையின் குறியீடுகளும் படிமங்களும் சாத்தியமல்லாத உலகையும் காட்சிப்படுத்தி மனக்கண் முன் நிறுத்தும் வல்லமை கொண்டவை. நம்மை அயராது கேள்விகளின் முனையில், ஆழத்தின் ஆழத்தில், உச்சியின் உச்சத்தில், விரிவின் விரிவில்  வைத்திருக்க கவிதையின் ஒற்றைச் சொல்லால் முடியும். முதல் கவிதையில் தன் பயணத்தைத் துவங்கும் கவிஞர் கதிர் பாரதியின்  ‘உயர்திணைப் பறவை’ கடைசிப் பக்கம் முடிந்தும் இந்நூலில் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது.

கட்புலனாகாத ஒன்றின் தீவிரம் நிரம்பிய இக்கவிதைகள் கவிதைக்கான பாடுபொருள் அரசியல், அழகியல், காதல் தாண்டி பெருமளவில் பரந்து விரிந்து கிடக்கிறது என்பதன் உள்ளர்த்தம் பொதிந்தவை. ஒரு புள்ளி அதிகமானாலும் அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும் கணினிக் கட்டளை போல ஒரு சொல்லில் அடுத்த தளத்தினுள் தள்ளிவிட்டு அகம் நோக்கும் இக்கவிதைகள், கையில் வைத்துள்ள ஒரு படிகத்தின் வழியே நுழைந்து எண்ணற்ற வண்ணத் துகள்களாகச் சிதறி கட்டற்ற காட்சிப் படிமங்களாக ஒளிர்கின்றன.

வாழ்வென்பதன் பொருளை தத்துவத்தில் தேடலாம். தத்துவத்தையோ கவிதையில் தேடலாம். கவிதையோ வாழ்வாக தத்துவமாகப் பிரதிபலிக்கிறது. //ஒரு மாங்கனியைத் தீண்டும் போது ………. அதன் வழி பூமியின் ஆழத்தைத் தீண்டுகிறாய். பகலை இருளை அதன் மூலம் வெளியைத் தீண்டுகிறாய்….

// எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பதைப் போல எல்லா உயிரும் பொருளும்
பிரபஞ்சத்தின் மாறுபட்ட வடிவங்களே என்பதன் உட்பொருள் பொதிந்த கவிதை.

 //ஓர் அரிசிக்கும் ஒரு பருக்கைக்கும்
இடையிலான தூரம்//

காலத்துக்கும் அகாலத்துக்குமான அலைதலே அதை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றுகிறது எனில் வாழ்வுதான் என்ன? யார் இயக்குகிறார் இதை என கேள்வி எழுப்புகிறது “அலைவுறுதல்” கவிதை. பேரங்காடிகளில் கால்கடுக்க வேலை பார்க்கும் பெண்ணின் கால்வலி தீர்க்கும் ஒரு கணநேர நாற்காலி அமர்தல் தரும் நிம்மதி அவளின் பிரியமானவனின் தோள் புதைதலுக்குச் சமம் ஆக்குகிறது ஒரு கவிதை. எல்லோரும் ஏதோவொரு உயரத்தையே தேடிக் கொண்டிருக்கிறோம். பணம், பதவி, அதிகாரம், கடவுள் என.

 //உயரத்தில் இருப்பவற்றுக்கு
உயரத்தில் ஒரு வேலையும் இல்லை.//

எனில் உயரத்தில் உள்ள எவருக்கும், ஏன் கடவுளர்களுக்கும் வேலை இல்லைதானோ என சிந்திக்க வைக்கிறது ‘உயரத்தின் சரிதம்’. தேநீருக்கும் ஜென்னுக்கும் உள்ள தொடர்பைப் போல் ஒரு கோப்பைத் தேநீரில் ஏற்பட்ட ஏகாந்த அனுபவத்தைத் தேடுகிறது ‘அதிகாலையில் தித்தித்தல்’ கவிதை. “ஒரே ‘ஒரே’வுக்குள்” கவிதை பேசும் பொருள் எல்லாம் ஒன்றுக்குள், ஒன்றுக்குள்ளே எல்லாமும் என்பதே. எதுவுமற்றதுள் எல்லாமும் இருப்பது என்பது போலவும்தான். ஆசை அறுமின் என்கிறோம். ஆனால் பிணமும் ஆசையோடுதான் கங்கையில் மிதக்கிறது. பிணத்திற்கும் உண்டு கடைசி ஆசை என்கிறது ஒரு கவிதை. புள்ளி என்பதில் உருவானதே அனைத்தும். பிறகு அனைத்தும் புள்ளியில் இயைவதே காலவிதியா? காலம் 60 ‘நொடிப் பழங்கள்’ ஆன கவிதையாகிறது இவர் காலச் செடியில். ஞாபகம் ஒரு சர்வாதிகாரி. அது சொல்வதை நாம் கேட்டாக வேண்டும். ஒரு தம்பியின் ஞாபகம் இப்படியாக இருக்கிறது.

//மாடக் குழியில்
காற்றுக்கேற்ப அசைந்து மினுங்கும்
அகலின் கீற்றுக்கு,
கற்பூரமாகப் பற்றிக் கொண்டு
கரைந்த
அக்காவின் ஞாபகம்.//  



‘அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருக்கிறது’ என்ற கவிதையை வாசிக்கையில் நெஞ்சில் உருகிய உணர்ச்சிகள், பாலூட்டும் போது எப்படி நெஞ்சாங்கூட்டினுள் அவள் பொங்கித் ததும்பிருப்பாளோ அப்படி உணர வைக்கிறது. அம்மாவின் இருப்பை, அவள் வாழ்வை எல்லாமும் அவளே, அவளே எல்லாமும் என்பதாக 30 சிறுகவிதைகளாக ஒரு பெரும் வாழ்வைப் படைத்துள்ளார்.

 //சாரையும் நாகமும்
பிணையல் போடும் வைக்கோல்போர்த் தோட்ட
சீமைக்கருவேல மரத்தடியில்
அழுதபடி
ஓரிரவு முழுக்க
தனித்துப் படுத்திருந்தாயே
ஏன் அம்மா?
நீயும் பார்த்தாய் தானே நிலவே…//

பாம்பு நடமாடும் இடத்தில் விடிய விடிய ஏன் தனித்துப் படுத்தாள் அம்மா? என்ன கசப்பு அவள் மனதில்? தெரியவில்லை. இக்கவிதை பாரி மகளிரின் பாடல் நினைவூட்டும் துயரம் நிறைந்தது. உயிரை ஈந்த அன்னை வாழ்வின் இனிமையை மட்டுமல்ல கசப்பையும் சேர்த்தே அமுதவிஷமாக ஊட்டுகிறாள்.

//பால்குடி மறக்க
கற்றாழைச் சாற்றைக் காம்பில் இழுவி
முலை ஈந்த அம்மா
வாழ்வின் முதற்கசப்பையும்
உன் உடலில் இருந்தே
அருந்தப் பெற்றேன்
என்பதையாவது சொல்லிவிடுகிறேன்.//

அன்னையருக்கு வரும் துன்பங்களை செய்வதறியாது திகைத்து நின்று பார்க்கும் குழந்தைகள் ஏராளம். அதற்கான தீர்வு ஏற்படுத்தும் நிலை வாழ்வில் வரும்போது பிரச்சினைகள் மறைந்திருக்கும் அல்லது அன்னையரே…! முதலாக அமைந்த கடைசிக் கவிதையைப் படிக்கையில் கண்கள் துளிர்த்தால் அதில் நம் தாயின் பிம்பம் தெரிவதைக் காணலாம்.

 //கக்கடைசியில் ஏர்வாடி தர்காவில்
அம்மாவைச் சேர்த்தோம்.
சங்கிலி பிணைத்து
அழைத்துப் போகையில்
என் தலை தடவினாள்.
அப்போது கலைந்த முடியை
எத்துணை முறை சீவியும்
ஒழுங்குபடுத்த முடியவில்லை.//

கலைந்த வாழ்வை, நினைவை எந்த அலங்காரமும் நேர்த்தியாக்கி விடமுடியாது.  எத்தனை ஆசை, ஆணவம், அதிகாரம்…எல்லாமும் பிரபஞ்சத்தின் முன் தூசிதான்.

//பேசு தூசியே பேசு
உன் புஜபல பராக்கிரமத்தை//

//கங்கையில் பிணம் மிதக்கிறது.
பிணம்தான்
ஆசை ஆசையாக மிதக்கிறது
கங்கை ஒன்றும் சுமக்கவில்லை.//

இதைவிட வாழ்வைச் சிறப்பாகப் பார்க்க, உணர வைக்க கவிதையைத் தவிர  வேறு எதனால் முடியும்?          

அம்மாவைப் பிரிந்து பறந்தலைந்த பின் தாயிடம் சேரத் துடிக்கும் பறவையின் குரல், மனம் திருந்தி தன் தாயிடம் உருகும் ஊதாரி மைந்தனின் குரல் என்ற படிமம் ஒரு கணம் சிலிர்க்கச் செய்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகாரத்திற்கு பயன்படுகின்றன. அல்லது அதிகாரம் அறிவியலைக் கைக்கொள்கிறது. நவீன அறிவியல் தனிமனிதனின் சுதந்திரத்தைக் கைப்பற்றும் அதே வேளையில் அவனைக் கட்டுக்குள்ளும் வைத்திருக்கிறது என்பதற்கு “எல்லாம்வல்ல சிசிடிவி கேமிரா” கவிதையே சான்று.  இதில் வரும் கேமிரா சபலத்தை, பாவத்தை, ஆணவக் கொலையை, உணவு கொண்டு செல்பவனின் பசியை, மனைவியை சந்தேகிப்பவனின் மனதில் சுழலும் சிவப்பு விளக்கைக் கண்காணிக்கிறது.

//பூமி தன்னைத் தானே
சுற்றிக் கொண்டு
சிசிடிவி கேமிராவையும்
சுற்றி வருகிறது.//

ஆம். பல்லாயிரம் கண்கொண்ட டிஜிட்டல் மாரி அது. ஒரு குழந்தைக்கு இரு தாய்மார்கள் உரிமை கோரும் அக்பரின் தர்பார் கவிதை நோபல் பரிசு பெற்ற லூயி க்ளக் கவிதையை நினைவூட்டுகிறது. “ஆனந்தன் போல ஆனந்தன்” நகுலனின் ராமச்சந்திரன் கவிதையின் கண்ணாடி பிம்பம். ‘கிருஷ்ண நிழல்’ தரும் உபதேசம் இயற்கையின் பொருட்டு மலர்ந்த கவிதை. ஞானத்தின் வாசலை நமக்கு அறிமுகம் செய்கிறது “ஆமை+நத்தை=ஜென்” கவிதை. ஏறும் உயரம் மட்டுமல்ல இறங்கும் உயரமும் ஞானத்திற்கு இட்டுச் செல்லும்தான். //ஒன்பது துவாரங்கள் ஒன்றிலும் வடியாது ஒன்பதையும் தாண்டி நிற்கிறது ஒன்று// கூழாங்கல்லுக்குள் இருக்கும் அமைதி ஒரு பாறைக்குள்ளும் அதன் வழியே வெளியேறும் புத்தனுக்குள்ளும் தெரிகிறது எனில் அமைதியாய் இருப்பனவற்றின் அனைத்துள்ளும் நிறைந்திருப்பது புத்தனின் புன்முறுவல்தானா என வியப்படையச் செய்யும் கவிதையின் தொடர்ச்சியாக, தனித்து வந்துவிட்ட இறகு ஒன்றின் நிம்மதியில், புத்தனின் அமைதியையும் நாம் உணரலாம்.




 “தனிச்சுற்றுக்கு” கவிதை ஏற்படுத்துவது மெய்த்தேடலின் ஒரு சிறு துகள். ஒரு மலரை எல்லோரும் கைகளில் ஏந்தி உள்ளோம். எத்தனை முறை மலர்ந்தோம்? எத்தனை முறை உணர்ந்தோம்? என்பதுவே நம் தேடலின் முடிவாகப் பெறும் ஞானமாக இருக்கும். எதுவொன்றாகவோ நாம் இருப்பதாக நினைக்க அதுவாக நாம் இல்லை என நம் இயல்பு உணரும் தருணத்தை “சருகு சருகாகும் தருணம்” தருகிறது. 

பெண் வாழ்வின் துயரமெல்லாம் ஒன்றி நிற்கும் குறியீடுகள் இலக்கியத்தில் பிரபலம். சீதையின் துயர் கணையாழியிலும் கண்ணகியின் துயர் சிலம்பிலும் சகுந்தலையின் துயர் மோதிரத்திலும் காணப்படுகிறது. ஆறறிவு கொண்ட பறவை. ஆனால் தன் துயரை வெளிப்படுத்த முடியாத உயர்திணைப் பறவை. மழைத் துளிக்கு அசையும் உதிர்ந்த அரசிலைக்கு பழைய உயிராசை துளிர்க்கிறது. உடல் என்பது கல் அடுக்கப்பட்ட கட்டடம் எனில் அதன் மூலைக்கல் எது எனக் கேட்கும் கவிஞர், யாருடைய சுக்கிலத் துளி கடல் என்று கேட்கிறார். ஒரு வரியில், ஒரு படிமத்தில் காலத்தில் இருந்து வெகுதூரம் தூக்கி எறியும் கவிதைகள் இவை. கடலை மட்டுமல்ல. பூமியை, கோள்களை, பால்வெளி அனைத்தும் பிரபஞ்சத்தின் சுக்கிலம் என விளங்கிக் கொள்கிறேன். நெருஞ்சி வேரின் எண்ணவோட்டத்தையும் சிறுத்தை புகுந்த பசித்த வீட்டையும் வண்ணத்துப் பூச்சியை உண்டு தற்கொலை செய்தவனின் மனதையும் தொட்டுக் காட்டும் கவிதைகளில் தெரிகிறது மானுடத்தின் துயரம். 

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் உள்ள பிறவா வரம் பெற்ற புளிய மரம் பூத்தும் காய்க்காதது. அங்கே இறவா பனையும் உண்டு.

 //அதன் நிழலில் 
அதே புளியமரக் குளிர்ச்சி
பெற்றால் தான் தாயா?//

//கடவுளுக்கும் நிழல் இல்லை
பசிக்கும் நிழல் இல்லை
பசியே ஒளியே
நீயே அருட்பெருஞ்ஜோதி// 

//கரையும் மெழுகுவர்த்தியை
அணைத்துவிடுவதே
நல்ல ஜெபம்//

எனும் கவிதைகளில் மானுடத் துயர் நோக்கி இயற்கையின் பேரொளி வீசுகின்றது. ஓவியத்தில் ஒரு மலர் மலர, ஒன்று உதிர்கிறது. அது தினமும் நடப்பது மாபெரும் வியப்பு. 450 ஆண்டுகளையும் காந்தியையும் அன்னி பெசன்ட்டையும் மறந்த அடையாறு ஆலமரம் ‘அமரம்’ ஆகி ஜே.கிருஷ்ணமூர்த்தியை மட்டும் நினைவு கொள்வதன் மூலம் அமரத்துவம் ஏற்படுத்துகிறது. வாழ்க்கை, பிரபஞ்சம் எல்லாம் ஒரு வட்டம் அதாவது பூஜ்யம். அதிலிருந்து ஏறிச் சென்று அடையும் உயரம் வேறு. திரும்பி இறங்கி வந்தபின் அடையும் பூஜ்யம் வேறு எனும் ஒரு கவிதை, உண்மை வேறு – உண்மையான உண்மை வேறு என்றாகிறது மற்றொரு கவிதையில். ‘இரவில் மினுக்கும் தனிமம்’ கவிதை உயிரை ஒரு சுடராக பாவிக்கிறது.


//கைமாறிக் கைமாறி
கடைசியில் மாடக்குழிக்குள்
வந்துவிட்டது
உயிர்// 

‘கைப்பிடியளவு’ கவிதையில் இதயத்தின் பெருமையையும், பூமியின் பெருமையையும் கைப்பிடி அளவு கொண்டைக் கடலைக்கு ஆசைப்படும் பசி உண்டுவிடுகிறது. அமைதியைக் குலைப்பது எதுவோ அதுவே அமைதி தந்த போதிமரத்தையும் கொத்தும் மரங்கொத்தி ஆகிறது. கவிஞர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் யாரிடம் உள்ளது? வானம் நோக்கி கைவிரித்து சரணடைவது மரம் மட்டுமா? நாமும் தானே. மரங்களாகிய மனங்கள். தாமரை, மல்லிகை, முல்லை எல்லாம் பூ எனில் நாய்வாலும் பூ என்கிறார் கவிஞர். நெஞ்சில் ஒரு மென்மயிர் பூவொன்று உரசிச் செல்கிறது ‘உன் பூ எது’ கவிதையில்.

//மார்கழி முதல் வாசலில்
சிக்குக்கோலம் இடுபவள்
நெற்றியில் இருந்து
ஒரு முத்து உதிர்கிறது
புள்ளியாகும் ஆசையில்.//

ஒவ்வோர் அனுபவமும் கவிதையில் ஒரு வரியாகும் ஆசையில் முட்டி மோதுகிறது. குழந்தையின் ஓவியத்திலிருந்து பறக்கும் கிளியல்லாத கிளி கிளை அல்லாத கிளையில் அமர்கிறது. அது ஒரு அதிசயக் கிளி மற்றும் அதிசயக் கிளையாகிறது. அதில் அமர அழைக்கிறது ஒரு கவிதை. யார் எதற்கு ஆசைப்படுவர், யார் எதற்கு மதிப்புத் தருவர் என்பது கொடுப்பவனை விட பெறுபவன் தான் முடிவு செய்கிறான் ‘பதறி எழுதல்’லில். சதுரத்துக்கு தானொரு ஜென் துறவி என்று நினைப்பு என்கிறார் ‘கவிஞனின் கணக்கு வழக்குகள்’ கவிதையில். தான் எல்லாப் பக்கமும் சமமாக இருப்பதாக நினைக்கும் நம் மனம் ஒரு  சதுரமா? ஆழத்தில் அது ஒரு வட்டத்துள் அல்லது நீள அகலங்களுக்குள் அல்லாடுகிறதா? பெரும்பாலான தொடர் கவிதைகளுக்கு இறங்கு வரிசை எண்ணிட்டுள்ளார். அதை எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்கிறார். அது வாசகனின் சுதந்திரம். ஒரு உச்சகாட்சியில் இருந்து அமைதியான முதல் துவக்க காட்சிக்கு செல்வது போல உள்ளது. அது ஒரு நினைவு திரும்பலாக கவிஞருக்கு உள்ளது. இன்றிலிருந்து நேற்றைப் பார்ப்பது போல.

 //புத்தன் தன் ஞாபகங்களை
வேடிக்கை பார்க்கிறான்.
ஞாபகங்கள் சித்தார்த்தனை
கண்டும் காணாமல்
விலகி நடக்கின்றன.// 

கதிர்பாரதியின் தேடல்,  மெய்யியல் நோக்கு,  அழகியல் ஆகியவற்றை கவிதைக்குள் மெய்யியலையும் மெய்யியலை கவிதையாகவும் படைத்துள்ளதன் வழி அறிய முடிகிறது. அன்பும் கவிதானுபவமும் மெய்யறிதலின் தேடலுமே அவரது கவிதைகளாக மலர்ந்துள்ளன.  அவரால் கவிதைகளின் சில சொற்களில் பல கதைகளை, வாழ்வை, மானுட அன்பை, அகநோக்கை எடுத்து வைத்துவிட முடிகிறது. தன் கவிதைகளால் வாழ்வை இல்லாக் கோணத்தில் பார்க்கிறார். வாழ்வோ அவர் கவிதைகளில் இருந்து நம் மனதைக் கண்டுகொள்கிறது. அது எத்தனையாவது பரிமாணமாக மிளிர்கிறது நம்முள்ளே என்பது நம் வாசிப்பைப் பொருத்து மூன்றாகலாம், ஆறாகலாம் அல்லது அது கற்பனைக்கும் எட்டாத பரிமாணமும் ஆகலாம். நம் கண்ணுக்கு, மனதிற்குப் புலனாகாத காரணத்தால் அந்தக் கவியனுபவம், மெய்மை நோக்கு அதன் வழி ஏற்படும் வாழ்வின் தரிசனம் போன்ற பரிமாணங்கள் இல்லவே இல்லை எனக் கூறிவிட முடியாது. எதன் பொருட்டோ  கவிஞன் அந்தப் புள்ளியில் நின்று பேசுகிறான். காதுள்ளவர்கள் கேட்பார்கள். மனதுள்ளவர்கள் அதை அடைவார்கள். 

நூல்: உயர்திணைப் பறவை, 
ஆசிரியர்: கதிர் பாரதி 
பதிப்பு: இன்சொல் பதிப்பகம்
செல் : 6382240354

விலை:  ரூ. 260


Read more at: http://www.vasagasalai.com/book-review-k-ragunathan/

திரிசங்கு வெளிச்சம் - `விண்ணைச் சூடியாடும் இரு நீல வளையங்கள்` கவிஞர் கார்த்திக் திலகன் கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரை....

 

``கவிதை என்பது மகாநதியில் மிதக்கிற ஒரு தோணி என்று சொன்னால்
ஓர் அளவில் கவிதை குறித்து நான் சொல்லிவிட்டேன் என்றே தோன்றுகிறது’’ என்கிறார் கவிஞர் தேவதேவன், தனது `மகாநதி` கவிதைத் தொகுப்பு முன்னுரையில்.

``கவிதைகள் என்பது எதற்கு என்றால் எல்லாவற்றில் இருந்தும் நம்மைக் காக்கவும், கட்டக் கடைசியில் நம்மிடம் இருந்து நம்மைக் காக்கவும்தான்’’ என்கிறார் சார்லஸ் புக்கோஸ்கி.

இந்த இரண்டு ஸ்டேட்மெண்ட்டுகளுக்கும் இடையில் திரிசங்காகி நிற்கிற கவிதைகளாக `விண்ணைச் சூடியாடும் இரு நீல வளையங்கள்` என்கிற தலைப்பைக் கொண்ட கவிஞர் கார்த்திக் திலகனின் இந்தக் கவிதைத் தொகுப்பைப் பார்க்கிறேன். இது எனது பார்வை. யாரையும் அப்படிப் பாருங்கள் என நிர்பந்திப்பது அல்ல.

மேற்சொன்ன இரண்டு ஸ்டேட்மெண்ட்டுகளிலும் `தொட்டும்தொடாத` `அகலாது அணுகாது தீய்க்காய்கிற` தன்மை இருப்பதை ஆழ்ந்து வாசிக்கும் வாசகர் உணரக்கூடும். கார்த்திக் திலகனின் இந்தத் தொகுப்புக் கவிதைகளின் பண்பு இவை என்கிறேன்.

மகாநதியில் பிடிப்பற்று மிதக்கிற தோணிக்கு தனித்த பாதை என்று ஒன்று இல்லை; அதேநேரத்தில் இப்படி யோசித்துப் பாருங்கள்…`தோணிக்கு என்று உய்த்துணரும் மனம் ஒன்று இருந்து, அது தான் செல்ல விரும்புகிற பாதையைத் தேர்ந்தெடுக்கிறது என்று வைத்துக்கொண்டால், அந்தப் பாதை நதி செல்கிற பாதையாகத்தானே இருக்கும்.’ நான் சொல்லவருவது கார்த்திக் திலகனுக்கும் விளங்கும் என்று நம்புகிறேன்.  

 

எது எதுடம் இருந்தோ கவிதை நம்மைக் காக்கிறதுதான். அதில் சந்தேகம் இல்லை. அப்படிக் காத்துத் தருகிற `நம்மை`, நம்மிடம் இருந்தும் காக்கிறதா என்றால்… ஆம் காக்கிறதுதான். இதைத்தான் கவிஞர் யூமா வாசுகி ஒவ்வொரு நேர்ப்பேச்சிலும் இப்படிச் சொல்வார்… ``தம்பி, இந்த வாழ்வை உயிர்ப்போடு நகர்த்திக்கொண்டுபோவது எது என்று நினைக்கிறாய்… அது கவித்துவம்.’’

தன்னியல்பில் இல்லாமல் மிதக்கிற தோணி போன்ற `நாம்` – நம்மிடம் இருந்து நம்மைக் காக்கிற `நாம்`… இந்த இரண்டுக்கும் இடையில் நிற்கிறவையாக இருக்கின்றன இந்தத் தொகுப்புக் கவிதைகள்.

 

அதனால்தான் …
……………………
…………………..

நான்
கொஞ்சம் தூங்கிக்கொள்ளட்டுமா
ஒரு சிலைக்கும்
அதன் மீது படிந்திருக்கும்
நம்பிக்கைக்கும் இடையில்
கடவுள் தூங்குவதைப்போல…

என்று ஒரு கவிதையில் எழுதுகிறார் கார்த்திக் திலகன்.

 

சிலைக்கும் நம்பிக்கைக்கும் இடையில் உள்ள திரிசங்கில் உறங்கும் கடவுளைப் போல என்கிற படிமத் தன்மையை யோசிக்கிறபோது `அடடா…’ என்று மனசில் ஒரு வெளிச்சம் தோன்றுகிறது அல்லவா… அதுதான் எதனோடும் சேர்ந்துவிட இயலாத திரிசங்கு வெளிச்சம். இந்த வெளிச்ச விளையாட்டு `விண்ணைச் சூடியாடும் இரு நீல வளையங்கள்’ என்கிற தொகுப்பின் தலைப்பில் இருந்தே ஆரம்பமாகிவிடுகிறது. இந்தக் கவிதைகள் முழுக்க அந்த வெளிச்சம் இருக்கிறது என்பதைத்தான் நான் இவ்வளவு நேரமும் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிவந்திருக்கிறேன் நண்பர்களே

இந்த வெளிச்சம் உள்ள இன்னொரு கவிதையைப் பாருங்கள்…

தரையில் இருந்து
ஒரு பாதை மேலேறிப்போய்
மலைமீது குடிகொண்டிருக்கும்
அதுல்ய நாதேஸ்வரரையே
பார்த்துக்கொண்டு நிற்கிறது.
மலைக்கு அந்தப் புறம்
ஒரு பாதை
கீழே இறங்கிவருகிறது
அதன் முகத்திலும்
அவரைப் பார்த்த அதே அமைதி.

அதுல்ய நாதேஸ்வரரைப் பார்த்த பாதைக்கும் பார்க்காத பாதைக்கும் இடையே சமமான திருப்தி, அமைதி, வெளிச்சம்.

இப்படி புறவயச் சித்திரிப்புகள் மூலம் அகத்தைத் தூண்டுகிற வெளிச்சங்கள் இந்தத் தொகுப்பில் நிறையவே இருக்கின்றன. சின்னச் சின்ன வார்த்தைகளில் வாழ்க்கை அததன் அழகுகளோடு அர்த்தம்கொள்ளவைக்கும் வரி வெளிச்சங்கள். என்ன ஒரு விடுதலை என்றால், அவை தத்துவச் சோகையோடு இல்லாமல் படைப்பூக்கப் புஷ்டியோடு கவித்துவமாக இருப்பதுதான்.

உதாரணங்களாக…

`விநாடி என்பது ஒரு சித்தலிங்கப் பூ`

`வானம் நமக்காகப் படைக்கப்பட்ட மலர்’ 

`வெட்டவெளிதான் என் தாய்
ஆசையோடு அம்மா என்று அழைத்தேன்’

`முதன்முறையாக என் மனதைச் சுற்றிப் பார்க்கிறேன்.’

`உடலை மனம் வழி
இன்னோர் உடலுக்குள் செலுத்துவது
காதல்’

`இமைகளால் காற்றில் மேளம் கொட்டினேன்.’

`கண்ணுக்கு எட்டியும் எட்டாத தூரம் வரை
வெட்டவெளியாய்க் கிடப்பது
நீதான்’

`முகத்தை எட்டாத உயரத்துக்குள் தூக்கி வைத்துக்கொள்’

இன்னொரு முக்கியமான விஷயம்… பெண்மையின் மீது தீராத பிரேமை கொண்ட கவிதைகள் இந்தத் தொகுப்பில் சற்றே அதிகமாக இருக்கின்றன. அறிவும் உணர்வும் அற்ற அதீத நிலைக்கு மனதைக் கொண்டுசென்று தன்னைத்தான் எழுதிக்கொள்ளும் உயிரின் வேட்கை அது. ஒரு கவிதையில் பெண்ணை `பூமியின் சதைச் சுடர்` என்கிறார் கார்த்திக் திலகன். இதைப் படிக்கும்போது காற்றில் நடுங்கும் சுடர்போலவே பெண்மையின் பேராற்றலை நினைத்து மனம் நடுங்குகிறது.

பூமியின் மீது ஒரு சதைச் சுடர்
மெத்தென்றெழுந்தாடினாற் போலவள்
நின்ற திருக்கோலம் கண்டு
அவளது
அகல் வடிவப் பாத நிழலில்
திரியாக என்னை ஏற்றிவைத்தேன்.

இந்த வரிகளைப் படிக்கும் மனம் நடுங்கிறதா… இல்லையா?!

இந்த நடுக்கம் உன்மத்தம் ஆகும்போது, கார்த்திக் திலகன் கவிதையில் பெண், கவிதையாகிறாள், சுடராகிறாள், தீயாகிறாள், பூமி ஆகிறாள், காளியாகி ஆணுக்குத் தீரவே தீராத ஆன்மிக அனுபவமாகி, புரிந்தும் புரியாத பேரண்ட வெளிச்சம் ஆகிறாள்.

மேல் உள்ளவற்றை ஆண்பாலாக்கியும் வாசிக்கலாம்… ஆண் பெண்ணுக்கு கவிதையாகிறான், சுடராகிறான், தீயாகிறான், பூமியாகிறான், காளியாகி பெண்ணுக்கு தீரவே தீராத ஆன்மிக அனுபவமாகி புரிந்தும் புரியாத பேரண்ட வெளிச்சம் ஆகிறான்.

அந்தச் சுடரோடு, அர்த்தமின்மையோடு, அந்தக் காளியோடு, எதனோடும் ஒட்டாத அதன் பேரண்ட வெளிச்சத்தோடு போராடுகிற நிலைதான் மனித குலத்துக்கு. காலமும் வாழ்வும் முயங்கி இயங்குகிற நிலை இது. வாழ்வுக்கும் காலத்துக்கும் ஆண் என்ன பெண் என்ன எல்லாம் வாழ்வுதான்; எல்லாம் காலம்தான்.

என்
முத்தங்களை
கனிகளில் பதுக்கியிருக்கிறேன்
இளமையை
வேர்களில் பதுக்கியிருக்கிறேன்
முத்தங்களைப் பெறுவதற்கு
என்மீது கல்லெறிந்தால் போதும்
இளமையைத் தரிசிக்க
எனை வேரோடு சாய்த்தாக வேண்டும்
நீ.


என பித்தேறிய அடிமுடி தேடும் பிரேமையோடும் இயங்குகிற மனமும் அதுதான்.

இருண்மையில் இருந்து படிமம், காட்சிகள், கவித்துவம், புனைவு, என்ற பண்பு நிலைகளில் தமிழ்க் கவிதை நகர்ந்து, தற்போது உரைநடையில் கவித்துவம் கட்டி எழுப்புதல் என்ற இடத்தில் வந்திருப்பது குறித்தெல்லாம் கார்த்திக் திலகனுக்கு அக்கறை இல்லைபோல அல்லது அவர் அக்கறைபடுவதாக இல்லைபோல. மொழியை அவர் நிலத்துப் பாறைகளைப் போல அல்லது சுண்டக் காய்ச்சிய மந்திரம்போல பயன்படுத்துகிறார். அப்படித்தான் இந்தக் கவிதைகளில் அவரிடம் தொந்தரவுக்கு உள்ளாகிறது மொழி. அது கவிதை தற்காலத்தில் இல்லையோ (இருக்க வேண்டுமா? அதுதான் கவிதையா?) எனத் தோன்றுகிறது. இந்தக் கவிதைகளில் குறை – நிறை இரண்டும் இதுதான்.

ரட்சகி
உன் ஆயிரம் கால்களால்
எனை எட்டி உதை
நான்
தோல்விக்கும் வெற்றிக்கும்
அப்பால் போய்
விழ வேண்டும்


என்று கார்த்திக் திலகன் அவரது ரகசிய ரட்சகியிடம் விமோசனம் வேண்டுகிறார் ஒரு கவிதையில்.

இந்தத் தொகுப்பின் கவிதைகளும் அப்படித்தான் தோல்விக்கும் வெற்றிக்கும் அப்பால் போய் விழுந்திருக்கின்றன. முதுக்குக்குப் பின்னால் போய் விழும் நிழலை முகத்துக்கு முன்னால் இழுத்துப்போட முடியாது.

கார்த்திக் திலகனின் முகத்து வெளிச்சத்துக்கு வாழ்த்துகள்


நிறைய அன்புடன்
கதிர்பாரதி

14, நவம்பர் 2021

சென்னை - 17

 

27 March, 2022

உன்னை அறிந்தால்

ஓர் இலை உதிர்வதை
உன்னால் ஒன்றும் செய்ய இயலாது
அது
தன்னிஷ்டமாக இலையுதிர் காலம் மீது
அலைந்து ஆடி உதிரும்.
ஒரு மரம் வளர்வதை
உன்னால் ஒன்றும் செய்ய இயலாது.
அது
தன்னியல்பாக வேர்களை நீட்டிவிட்டு
பூமியின் மர்மங்களில் ஊடுருவும்.
ஒரு தண்டு அசைவதை
உன்னால் ஒன்றும் செய்ய இயலாது.
அது
சூரியனோடு உறவுகொண்டு
பச்சையமாக எழுந்து வசந்தம் காட்டும்.
ஒரு முளை முண்டுவதை
உன்னால் ஒன்றும் செய்ய இயலாது.
அது
ஓர் இருண்டக் காலத்தைத் துளைத்து
வெளிச்சம் பருகி வளரும்.
ஒரு விதையை
உன்னால் ஒன்றும் செய்ய இயலாது.
அதை
யாருக்கும் தெரியாமல் எதற்கு அடியிலாவது புதைக்கலாம் நீ.
ஆனால் அறியமாட்டாய்
அது
விதை உனக்கு வழங்கிய வாய்ப்பு.

-கதிர்பாரதி

21 March, 2022

இன்று உலகக் கவிதைத் தினம். எனது ``உயர்திணைப் பறவை`` கவிதைப் புத்தகத்தில் இருந்து ஒரு கவிதை...


பீர்பால் மூன்று ஆமைகள் வளர்த்தார்
...........................,.......................

1
அக்பருக்கு சந்தேகம்...
ஏழைகளை
எப்படி நடத்தவேண்டும்?
வணிகர்களோடு
எப்படிப் பேச வேண்டும்
பீர்பால்?

முதலில்

பூவாளியை எடுத்து
செடிகளுக்குத் தண்ணீர் ஊட்டினார்
பீர்பால்.

இரண்டாவதாக

மௌனமாக
இருந்தார்.

2
நெஞ்சுக்கு நெருக்கமாக
நிதமும் ஒரு மலரை
அணிய விரும்புகிறேன்
நவரத்தின மந்திரிகளே
உங்களின் சிபாரிசு என்ன?
கேட்டது அக்பர் பாதுஷா.

தாமரை - திருவின் உறைவிடம்
சூர்யகாந்தி - சூர்யத் தோழி
ரோஜா - மலர்களின் ராஜா
சாமந்தி - ஏழை ரோஜா
அல்லி - ஏரியின் செல்லம்
மல்லிகை - மன்மதம்
முல்லை - தேர்கொண்ட பூ
............
............
ஆளுக்கொரு மலரோடு
அவை வந்தனர்.

நத்தை கொண்டுவந்தார்
பீர்பால்.
அதன் 'அமைதி'யைச் சூடிக்கொண்டார்
அக்பர்.

3
பீர்பால்
வீட்டில் மூன்று ஆமைகள் வளர்த்தார்.
அவை அவரை
அறிவூட்டி வளர்த்தன.
அந்த அறிவு சொல்ல
மூன்று ஆமைகளையும்
யமுனையில் நீந்த விட்டுவிட்டார்.
அக்பர்
மூன்று புறாக்களை
வானில் பறக்கவிட்டார்.

4
'பீர்பால்
இது என் ஆசைக்குதிரை
நன்கு வளர்த்துவாருங்கள்' எனக்
கொடுத்தார் அக்பர்.

'மன்னிக்க வேண்டும் பாதுஷா
உங்கள் ஆசையை
நான் எப்படி வளர்க்க முடியும்' என்றார்
பீர்பால்.

'ஆம்
என் தாகத்துக்கு இன்னொருவர்
தண்ணீர் குடிப்பது
எங்ஙனம்?
மேலும்
என் உதையின் பொருள்
பீர்பாலுக்கு
எப்படி விளங்கும்?'என்றது
அக்பரின் ஆசை.

அக்பருக்குப் பேராசைதான்.

5
பீர்பால் செய்யாத குற்றத்துக்காக
ஒரு மூட்டை உப்பைக் கழுவி
சுத்தமாக்கும் தண்டனை அளித்தார்
அக்பர்.

மறுநாள்
வெறும் சாக்கோடு
அவைக்கு வந்தார் பீர்பால்

எங்கே உப்பு?

உப்பு அதன் தவறுகளோடு
இருக்கச் சம்மதித்துவிட்டது
அரசே.

அக்பர் புன்னகைத்தார்.

பீர்பால் செய்யாத
தவறும் புன்னகைத்தது.

6
அக்பர் பாதுஷா கேட்டார்...
'யமுனை அழுகிறது' என்று
என் மனைவி சொல்கிறாள்.
நாட்டில்
எனக்குத் தெரியாமல்
என்ன நடக்கிறது பீர்பால்?

இமையம் என்கிற பிறந்த வீட்டிலிருந்து
வங்கம் என்கிற புகுந்த வீட்டுக்கு
யமுனை செல்கிறது
அதனால் அழுகிறது அரசே.

உண்மை சொல்லுங்கள் பீர்பால்.

தெய்வக் குற்றம் ஏதாவது நடந்திருக்கும்
அதனால்
யமுனை அழுதிருக்கும்
நேர்ச்சை அளித்துவிடலாம் அரசே.

பீர்பால்...
நான் கேட்டது 'உண்மை'.

உங்கள் மனைவிதான்
கண்ணீருக்குத் தெரியாமல் அழுகிறார்.
அவர் மனதைத் தீர விசாரித்து
சமாதானம் செய்யுங்கள்
அரசே.

7
மொத்த பற்களும் உதிர்ந்து
ஒற்றைப் பல் மட்டும் மீந்திருக்கும்
விநோதக் கனவுகண்டார்
அக்பர் பாதுஷா.

'உங்கள் உறவினர்கள்
உங்களுக்கு முன்
இறப்பர்' எனக் கனவுப்பலன்
சொன்னான்
அரண்மனை நிமித்திகன்.

அக்பர் கோபத்தில்
அரண்மனை சிவந்தது.
நிமித்திகனுக்குக்
கசையடிப் பரிசு.

பீர்பாலும்
அதையேதான் சொன்னார்
அவருக்கோ பரிசு.
ஆனால், இப்படி...

'அரசே
உறவினர்களைக் காட்டிலும்
உங்களுக்கு ஆயுள் அதிகம்.'

8
ஒரு குழந்தைக்கு
இரு தாய்கள் உரிமைகோரும் கதை.
பீர்பால் தலையீடு இல்லாமல்
நீதி வழங்க நினைத்து
கதையில் இருந்து
அவரை வெளியேற்றினார்
அக்பர் பாதுஷா.
தர்பார் தொடங்கியது...
'இது என் குழந்தை கிடையாது' என்றாள்
உண்மைத் தாய்.
'என் குழந்தையும் அல்ல' என்றாள்
பொய்த் தாய்.
'இவர்கள் என் தாய் இல்லை' என்றது
குழந்தை.
இது
அக்பர் எதிர்பாராத குழப்பம்; திருப்பம்.
சுற்றும்முற்றும் கதைக்குள் பீர்பால் இல்லை.
வேறு வழியின்றி
அவரைக் கதைக்குள் அழைத்தார்கள்.
'கதையை இரு துண்டாக்குங்கள்' என்றார் பீர்பால்.
'அய்யா இது என் குழந்தை' என
பார்வையாளர் பக்கம் இருந்து வந்தாள்
கதை எழுதியவள்.
'ஆகா அற்புதம்' என பீர்பாலைப் பாராட்டி
பரிசில் வழங்கினார் அக்பர்.
பீர்பாலிடம் இருந்து
கதைக்கு சன்மானம் பெற்றுக்கொண்டாள்
குழந்தையின் தாய்.

தர்பார் முற்றிற்று.

#கதிர்பாரதி #உயர்திணைப்_பறவை #இன்சொல்_பதிப்பகம் 

உயர்திணைப் பறவை கவிதைத் தொகுப்புக்கு கவிஞர் பூவிதழ் உமேஷ் எழுதியது....

 வரிகளுக்கு இடையில் தன்னை அதிகப்படியாக நிரப்பிக்கொள்ளும் கவிதையின் தனித்த ஆற்றல், அகத்தை உணர்வதில் கண்மூடித்தனம் கொண்டவர்களுக்கு அதை மீட்டெடுப்பதற்கான பயன்படுத்தப்படாத ஆற்றலாக இருக்கிறது . அத்தகைய ஆற்றல் நிரம்பிய கவிதைகளோடு நல்லதொரு தொகுப்பாக வந்துள்ளது கதிர் பாரதி அவர்களின் உயர்திணைப் பறவை தொகுப்பு.

ஒரே சொல்லால்/ ஒரு சில சொற்களால் / ஒரே வரியால் மாயம் செய்வது கவிதையின் வழமையான குணம் அதை தொகுப்பு முழுவதும் கதிர் பாரதி நேர்த்தியாகக் கையாள்கிறார். அவருடைய முந்தைய இரண்டு தொகுப்பில் இருந்து வேறொரு தளத்திற்கு இக்கவிதைகள் நகர்ந்துள்ளன.
இக்கவிதைகளில் உள்ளே சிதறி இருக்கும் இடையீட்டு வெளி அவற்றின் விரிவு ஆகியவை ஏகத்துக்கும் யோசிக்க வைப்பதுதான் இதிலுள்ள கவிதைகளின் மிகப்பெரிய வெற்றி. காட்டிலிருந்து வீடு திரும்பாத நாளில் கரடிகளை வசியம் செய்து மெத்தைகளாக்கி தூங்கிவிடும் வேடன் போல நம்மை மாற்றிவிடும் வசியம் இக்கவிதைகளில் உள்ளது.
//பிறந்த நாளுக்கு மறுநாள் வரும் சூரியனுக்கு வயது ஒரு நாள்// (ப – 90) என்று பிரமாண்டத்தை சுருக்கிவிடும் பண்பு, //அது பாம்பு அல்ல வீடு பழகிய தாபம்// (ப-160) என்று கண்முன்னே தெரிவதை மனதின் அரூபத்திற்கு இடம் பெயர்ப்பது ஆகட்டும், //மனம் உறங்கி விட்டதா என தலை உயர்த்தி பார்க்கிறது உடல்// (ப-183) என நனவு நிலையின் நீட்சியாகட்டும் எங்கு நோக்கினாலும் கவித்துவம் குறையாது வாசிப்பு இன்பம் தரும் கவிதைகளாக இருக்கின்றன.
கவிதை தனக்குள் வைத்திருக்கும் சித்திரம் தான் அதன் ஆயுளை நீட்டிக்கும் அந்த வகையில் அம்மாவை மனைப் பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது (ப-20) இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. 30 கவிதைகளில் 28வது தவிர அத்தனை கவிதைகளையும் என் அம்மாவின் படங்களோடு ஒரு அரங்கம் முழுக்க நிரந்தரமாகக் காட்சிப்படுத்தினால் கூட என் ஆசை தீர்ந்து விடாது .
// நீ போ இந்த அனாதை மேகத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வர்றேன்// இப்படி அற்புதமான குரலாக இருந்தாலும்
"யாரோ ஒரு அம்மா" என்றாலும் "என் அம்மா பக்கத்தில் குந்தி கொண்டதுபோல " இப்படி அற்புதமான உணர்வாக இருந்தாலும் எல்லாவற்றிலும் செழுமை குறையாமல் எழுதியுள்ளார். இது போன்ற எண் வரிசையிட்ட கவிதைகள் தன்னளவில் தனித்துவம் மிக்கதாக உள்ளன. இவை பெரும்பாலும் தனித்தனி கவிதைகளாக விளங்கும் தன்மையோடும் இருக்கின்றன.
மகிழ்ச்சி மாறுவேடத்தில் சுற்றும் (ப-64) தன்மையை நகர்த்திவிடும் அவர், இது வாழ்க்கையின் வட்டம் (ப-69) என்று நம்மை ஒப்புக்கொள்ள வைத்து, எல்லா கவிதையிலும் எளிமையை தன் கவிதைகளின் வெளிச்சமாக்கி கைக்கொள்கிறார்.
//இரவில் மினுங்கும் தனிமம்
உன் காமம்// (ப-174) என்று சொல்வது அழகின் உச்சம்.
ஆவர்த்தன அட்டவணை வெளிவந்து நூற்றி ஐம்பது ஆண்டுகள் (2019) முடிந்துவிட்டன. இதுவரை 118 தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கதிர்பாரதி அவர்கள் 119-ஆவது தனிமமாக காமத்தைக் குறிப்பிடுவது புதுமையாக உள்ளது. அதுவும் இரவில் மினுங்கும் அதன் தன்மை கவிதையை ஒளிரச் செய்கிறது.
//ஒரு முறை
தன் மீது தானே ஏறி
மாடிக்கு மெதுவாக நடந்து போனது படிக்கட்டு// (ப-73) இதில் படிக்கட்டுக்கு பதிலாக எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பதிலீடு செய்து கொள்ளலாம். கடைசியில் நல்லவேளை என்று எவற்றுக்கும் பொருத்தி விட்டு போகலாம்.
கல்லின் மீது
உன் அமைதியை எறிந்து
அதற்குள் இருக்கும்
சிலையை எழுப்பினால்
அது
தன்னை கடவுள் என்று நினைத்துக்கொண்டு
அமைதியை
அதட்டி உருட்டி மிரட்டுகிறது
பார்
(ப- 186) என்று அமைதியை உளியாக மாற்றும் அற்புதம் வெயிலோடு மழையோடு மரம் பேசுவது போல ஒரு பேச்சு கடவுளோடு கூட பேசி விட முடியாது (ப-88) என்ற இயற்கை ரகசியம் உட்பட , மனதுக்கும் ஒரு டூ- லெட் பலகை மாட்டுவது (ப - 102) என நல்லதொரு வாசிப்பு அனுபவத்திற்கு கட்டியம் கூறுகிறது இத் தொகுப்பு.
ஆமை + நத்தை= ஜென் (ப- 108 ) என்ற கவிதை மிக புத்திசாலித்தனமான கவிதை. இதிலுள்ள உரையாடல் கவிதைகள் அனைத்தும் மிக அறிவுப்பூர்வமான வகையில் உருவான கவித்துவம் நிரம்பியதாக உள்ளன. (ப 74,92,107-163, 189 )
சொல்ல வேண்டும் என்று தோன்றியது கேட்க வேண்டும் என்று அவசியமில்லை (ப-101)- என்ற நீண்ட தலைப்பில் உள்ள கவிதை ஒரு கலைடாஸ்கோப் பார்வையைத் தருகிறது. இது போன்ற கவிதைகள் ஆழமான தீவிரமான கவிதை மனம் வாய்க்கப்பெறும்போது உருவாகும் பிரதிகள் என்று சொல்லலாம்.
//ஆறு விரைவாக வற்றிவிட்டது மீன் எலும்புகளாக // மீனைத் தின்று முள்ளை எறிவதுபோல ஆற்றைத் தின்று எறிந்தது யார்? என்ற மிகப்பெரிய கேள்வியை சுமந்த கவிதை உள்ளது.
முண்டி முளைத்து மூன்று இலை விட்டது// ப_113 / ஓரிலை / ஈரிலை தாவரம் தானே உண்டு அதெப்படி மூன்று இலை தாவரம் ஒன்று இருக்கும் என்ற கேள்வி நமக்குள் எழுவது இயல்பு காலம் – அகாலம் இதற்கு இடையில் துளிர்க்கும் மனம் என்று மூன்றாவது இலையைப் பொருள் கொள்ளலாம்.
துறவி போவது ஒரு குழந்தை போன பாதை (ப-125) மலர்நீட்டம் (ப – 146 ) ஆம் (169) சிட்டு (ப-141) இவை போன்ற கச்சிதமான கவிதைகள் தொகுப்பு முழுவதும் பல இருக்கின்றன.
மொத்த பற்களும் உதிர்ந்து ஒற்றை பல் மட்டும் மீந்திருக்கும் வினோத கனவு கண்ட (ப-78) அக்பர் பாதுஷா போல திசைகளை அழைத்துக்கொண்டு மோதிரம் போன்ற காற்று வளையம் புக தன்னந்தனியே ஒரு பறவை (ப-110 ) என இந்தத் தொகுப்பு முழுவதும் ஒரு உயர்திணை பறவை பறக்கிறது.
இந்த தொகுப்பில் மற்றொரு சிறப்பம்சம் எனக்கு தெரிகிறது நீளமான தலைப்புகள் எல்லாமே தனக்குள் ஒரு கவிதையை ஒளித்து வைத்துள்ளன. உன் காற்றுக்குமிழை அழைத்துக் கொண்டு போ(ப-142) ப-100 ஆனால் பல கவிதைகளுக்கு தலைப்பிடுவதற்கு அவர் மெனக்கெடவில்லையோ என்று நினைக்கவும் தோன்றுகிறது.
புளியம்பூவை நித்திய மலர் (ப-80) என பல மலர்களைக் (ப-84) கொண்டாடும் இத்ததாகுப்பிற்கு தமிழ் இலக்கிய பரப்பில் எப்படியும் விழுந்துவிடும் தாயம் இந்த கவிதை தொகுப்புக்காக ஏனென்றால் டீ குடிப்பதற்கும் தேநீர் அருந்துவதற்கும் நிரம்ப உண்டு வித்யாசங்கள் (ப-44 ) என்று கதிர் பாரதி சொல்வது போல இத் தொகுப்பு தரும் அனுபவங்களைப் உணர்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் வித்யாசங்கள் நிரம்ப உண்டு.
//மாட்டு வண்டி செல்கிறது இல்லை வண்டிப்பாதை அழைத்துப் போகிறது// (ப-226 ) என்ற கடைசி கவிதை தரும் தத்துவ விசாரணை தொகுப்பை மிக அழகாக கவிஞரின் அடுத்த தொகுப்பை நாம் வாசிப்பதற்காக தொடரும்..... என்று சொல்லாமல் சொல்கிறது.
இந்தக் கவிதைகள் உருவாக்கும் மன இடையீட்டையும் உணர்வோட்டங்களையும் அட்டைப்படம் நேர்த்தியாக உணர்த்தி , /தயவு செய்து உன்னிடம் இருந்து என்னைக் காப்பாற்று (ப-124) /என்று அவரே சொல்வதுபோல மன சிதிலங்களையும் விதிர்ப்பையும் ஒரு சேர வெளிப்படுத்தி உணர்த்துவது பாராட்டத்தக்கது
கவிதைகளை உள்வாங்குவதற்கு ஏற்ற White space உடன் நூலை உருவாக்கியுள்ள K.C செந்தில்குமாரின் பணி இதை பொலிவுற வெளியிட்டுள்ள இன்சொல் என அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
6382240354