15 December, 2010

படர்தல்

யாசித்துக் குரலெலுப்பும்
பிச்சைக்காரன் பொருட்டு
சட்டென்று மனம் கூம்பிக்கொள்ளும் நீ
நிறுத்தி வைத்திருக்கும்
கொல்லைபுற முற்றத்துப் பந்தலில்
குதூகலமாய்ப் படர்கின்றன
யாதொன்றுமறியா கனகாமரமும்
பாரிஜாதமும்

ஐம்பூதங்களின் அதிகாரியாக்குக

கடவுளர்களை அதிகாரம் செலுத்தும் ஐம்பூதங்களே
உம்மிடம் சமர்ப்பிக்கிறேன் என்னை
உம் சக்திகளின் சகல வல்லமையோடும்
எனக்குள் சம்பவியுங்கள்
ஒருபோதும் என்னைக் கை நெகிழ்ந்துவிடாதீர்கள்
எதிரிகளைப் புறங்காணச் செய்யும்
உன்னதங்களையும் எனக்கு ஆசிர்வதியுங்கள்
எனக்கு எதிராய் உங்கள் செங்கோல்
திரும்பாதிருக்கட்டும் எப்போதும்
உம் நீதிபரிபாலனத்தின் சிறுதுரும்பும்
என்னைப் பரிசோதிகாத கொடுப்பினையின்
மகிழ்வைச் சுவீகரிக்கட்டும்
என் ஆசைகளைப் பூர்த்திக்கும்பொருட்டு
பிரயாசைகொள்ளட்டும் உம் ஏவலாளிகள்
பரியாசைக்காரர்களின் பாதங்கள்
தீண்டாதபடிக்கு என் நிலத்தை மீட்டருளும்
சேதமுறாவண்ணம் வதந்திகளிடமிருந்து
என் காற்றைத் தடுத்தாட்கொள்ளும்
வல்லூறுகளின் கூரிய நகங்களில்
கிழிபடாதிருக்க என் வானத்தை இரட்சியும்
தீயனவற்றோடு இணைத்து நன்மைகளையும்
காவுகொள்ளாத சக்தி கொடு என் நெருப்புக்கு
கொடும்வெக்கையிலும் ஈரத்தை இழக்காத
நீர்மை வேண்டும் என் நீருக்கு
இயலுமாயின் என்னைக் குறித்துக் களிகூறுங்கள்
உம் அதிகாரங்களின் பரிணாம நீட்சியாய்

நன்றி: கல்வெட்டுப் பேசுகிறது (ஜனவரி 2011)

11 December, 2010

சேர்வது குறித்த சிந்தனை

வராதுவந்த ஓரிரண்டு வரன்களும்
இரண்டொரு பவுனில் இடறிப்போக
கக்கடைசியில் கன்னிக் கழியாமலே
காலம் கழியலாயிற்று கோமதி அக்காவுக்கு

அவள் பார்வையின் குவிமையத்தில்
விரட்டி விரட்டி சேவலும்
விரண்டு மிரண்டு பெட்டையும்
சேர்வது குறித்துதான்
ஓரே சிந்தனையாய் இருக்கிறது

கோழியை மறுதலித்தல்

மக்கிக்கெட்ட குப்பைகளைக் கிளறி
இங்கிதம் குலைந்து எல்லா இடத்தும்
புணர்ந்து தொலைத்து
குட்டிச் சுவமீதேறி கொக்கரிக்கும் கோழிகள்
உறுத்தல் உதறி சுவைத்து அலைகின்றன
எச்சச் சொச்சங்களை

ஒன்றுக்கும் உதவாதிருத்தல்
ஊர்ச்சுற்றித் திளைத்தல்
புழுதிக் குடைந்தாடி
போதையில் மிதத்தல்...
என்றாயிற்று கோழியின் குணங்கள்

சண்டைக்கோழி, அடைகோழி
வெடக்கோழி, பிராய்லர் கோழி
வகைப்படுத்தலாம் கோழிகளை

எனினும்
மனிதனைக் காவுகொண்டபடிக்கு
பம்மிபம்மி வந்துபோகும்
சாமிக்கென நேர்ந்துவிட்ட கோழிகளை
கோழிகளென ஒத்துக்கொள்ள
மறுதலிக்கிறான் ஜீவானந்தம்

சித்திரையில் கசிந்த மனசு

வேப்பம்பூவிலும் மாம்பூவிலும்
போதமுற்றுச் சரியும் சித்திரையின்
ஏறுவெய்யில் ஊர்ந்துகொண்டிருக்க
மவ்னத்தை ஆரோகணித்தபடி
என் கைபற்றியிருந்தபோதுதான்
தண்ணென்று கசிந்த உன் மனசை
உணர்ந்தன விரல்கள்

நன்றி: கல்கி(23.01.11)

22 November, 2010

வாழ்ந்து கெட்ட சாவி

எடுத்ததும் முதலில் சட்டைப்பையிலும்
பிறகு சுவற்றின் ஆணியிலும்
கனத்துத் தொங்குகிறது
வாழ்ந்து கெட்ட குடும்பத்தின்
மனசில் ஆழ்ந்து கிடக்கும்
சோகத்தைப் போல

யாரோ நழுவவிட்டு
தெருவில் என் கைசேர்ந்த
வீட்டுச் சாவி

நன்றி: புன்னகை -காலாண்டிதழ்

19 November, 2010

யவ்வனத்தைச் சுமக்கும் கோவேறு

உன்னழகின் இருப்பின்
சாநித்தியத்தோடே ஒளிர்கிறது
நீ கைவிட்டுச் சென்ற அறை

உதிர்ந்தவிழ்ந்த உன் வார்த்தைகளை
கொறித்துச் சதிராடும் ஜோடி அணில்கள்
துணுக்குறாவண்ணம் எட்டிப் பார்க்கின்றன
நிகழ்வின் சுகந்தங்கள்

உன் வெக்கையை ஆறவிடாமல்
வெட்கத்தோடு ஒதுங்கும் கதவை
இறுக்கித் தாழிட்டபோது
நிலா முற்றிய கீற்றுகளால் இம்சித்தது

வழமையாய்... விரிப்பின் கசங்களில்
தலையணையின் பிதுங்களில்
பெருநதியென பிரவகிக்கும்
உன் யவ்வனத்தைச் சுமந்துகொண்டு
திரும்பினேன் கோவேறு என

சூன்யத்தில் தொலைந்திடாதிருக்க வேண்டும்
திசைகள் குழம்பிய பாதைகள்

நன்றி: கல்கி (02.01.2011)

12 November, 2010

இளஞ்சூடாய் மழைமுத்தம்

ஒன்றரை அகவை நிரம்பிய
திலீபனின் அடத்தை நினைவுறுத்தியபடி
நசநசக்கும் மழைக்கு
தீஞ்சுவை பாலும்
கொரிக்க குர்க்குரேவும்
தரலாமென்கிறாள் மனைவி
நான் இளஞ்சூடாய் ஒரு முத்தமும்
ஈந்தேன்

10 November, 2010

ஓவியங்களுக்குள் ஊடுருவும் பாதச்சுவடுகள்

ஆதிவாசிகளின் குகை ஓவியங்களுக்கு நிகராய்
மிகு புராதனமான எனது தனிமைக்குள்
உங்கள் சந்தையைப் பரப்பிவிட்டீர்கள

எனது தனிமையை அலங்கரிக்கும் ஆலாபனையை
உங்களால் விளங்கிக்கொள்ள இயலாது
ஆதவனை உள்வாங்கி கிளர்ச்சி தரும்
இரவல் வெளிச்சம் அதிலில்லை

ஆதுரமிக்க வார்த்தைகளின் கதகதப்பில்
கிறக்கமுற்ற கவிஞனின் மோனத்தாலான
எனது தனிமையின் நுழைவாயில்
உங்களுக்கு ஒவ்வாமை தரவல்லது

மின்மினியின் ஒளிப்பிரிகையால்
ஊமத்தம்பூவின் சுகந்தத்தால்
ஓரேர் உழவனின் வியர்வையால்
கிட்டும் கௌரவம் போதுமானது
எனது தனிமைக்கு

ஆசீர்வாதங்களையும் வாக்குத்தங்களையும்
முற்றாக நிராகரித்துவிட்ட எனது தனிமைமீது
படர்ந்திருக்கும் சாபத்தால் ஒரு பலனுமில்லை

உங்களின் ஆக்டோபஸ் வாழ்வதற்குரிய
சீதோஷணமில்லா நிலம்தான்
எனது தனிமையின் ஆளுகை கீழிருப்பது

ஏதேதோ அடைய தவமிருக்கிற
உங்கள் கொக்கின் ஒற்றைக் காலடியில்
அடங்கிவிடும் அதற்குள்தான்
உங்கள் சந்தையைப் பரப்பியிருக்கிறீர்கள்

லாபங்களைக் கணக்கிட்டுச் சோர்வுறுவதற்குள்
நீங்கள் திரும்பிவிடுதலே உத்தமம்
கூடவே பாதச்சுவடுகளையும் அள்ளிக்கொண்டு

நன்றி: காலச்சுவடு (ஜனவரி 2011)


14 October, 2010

கண் பேறு

குழந்தை கொஞ்சும் பலூன்
குழந்தையாகிவிடுவதையும்
திருவிழா நெரிசலினூடே
குழந்தையை ஈர்த்துவிடும் பலூன்
தேவைதையாகி விடுவதையும்
காணும் கண்கள்
பேறு பெற்றவை

மீட்பு

எமக்கு வாய்த்தது நன்னிலம்தான்

நெகிழத் தொடங்கியிருக்கும் இக்கணத்திலிருந்து
அதனியல்பால் எல்லாம் கிட்டும் எமக்கு

எழுதுகோல் முளைக்கும்
கணினியும் கண்டடைவோம்
மரித்திருக்கும் எம் குலசாமிக்கு
உயிர்ப்பு துளிர்விடும்
சாங்கியமும் கொண்டாட்டமும்
மீண்டும் நிறம்கொள்ளும்
நிலத்தின் தாதுக்களால் வண்டல்களால்
செப்பமுறும் எம் மூளை
இருதயம் திடச் சித்தமடையும்
கனவுகள் கள்வெறியூட்டும்
இறுகிக்கிடந்த இச்சைகளுக்கு
றெக்கை அரும்பும்
மூதாதையர் தேடிக் களைப்படைந்த
புதையல்கள் அகழாமல் மேல்வரும்
நீளும் ஆயுள்ரேகைகளில் எம் சந்ததி
வளப்பமுறும்
எல்லாம் கிட்டும் எமக்கு

யாவற்றுக்கும் முன்
உன் பசப்புகளுக்கும் பாசாங்குகளுக்கும்
மயங்கி இருக்கும் நிலத்தை
மீட்டாக வேண்டும்

நன்றி : உயிர்மை - நவம்பர் 2010

12 October, 2010

காலம்காலமாய் காலம்

இரண்டாய் வகுந்து கிடந்த ஒற்றையடிப் பாதையில்
வளைந்தும் நெளிந்தும் புணர்ச்சிக்குப் பிறகான
மயக்கத்திலிருக்கும் வனப்பாம்பாய்
நீண்டு கிடந்த காலம்
வெம்மையைக் குடித்து வெறி பிடித்திருந்தது

ஊடறுத்த என் கால்களின் வயிற்றில்
உப்புப் படலங்களைப் பிரசவிக்கச் செய்த
அதன் முகத்தில் சாதித்த செருக்கு

குளத்தின் அலைகளைக் கட்டிக்கொண்டு
யாத்திரை துவக்கிய காலம்
எதிர்ப்பட்ட கிழவியிடம்
குளுமையைத் திணித்ததில்
தாய்மையின் வாசம்

ஆட்டிடையனின் வளைந்த கொம்பில்
கண்கிறங்கி மணிச் சத்தத்தில்
தரித்த கனவை
நரிகள் கிழித்துப் புசிக்க அலறியது

கணவனோடு சிணுங்கிக்கொண்டு
தனித்திருந்தவளிடம்
நாணம் பூசி அது பருவத்துக்கு வந்த
அந்தக் கணம் முதல்தான்
தென்றலின் சிருங்காரத் தொந்தரவு

புள்ளினங்கள் அலைந்துருகும் அத்துவானத்தில்
பையப் பைய ஓர் ஆக்கிரமிப்பாளனைப் போல்
ஊடுருவும் காலம் குறித்து
எவ்விதப் பிரக்ஞையுமற்று ஊரும்
நத்தையின் முதுகில்
மனசை ஏற்றி அனுப்பிவிட்டு
நரைக்கத் துவங்கிக்கொண்டிருந்தான்
அவன்.

08 October, 2010

விளையாட்டு

விதைப்பு நாள் ஒவ்வொன்றிலும்
வார்த்தைகளில் சந்நதம் உருவேறிக்கொள்ளும்
தாத்தையாவுக்கு

விதைக்கையில் சிரித்தல்
ஆகாதென்று சினப்பார்
விதைக்கும் நிலத்தை விழுந்து
சேவிக்கச் சொல்வார்; செய்வார்
பிரசாதமேந்தும் பக்தனின் பாவனையில்
கையிலேந்திய விதைநெல்லை
குவித்துவைத்துக் கும்பிட்டுக் களிப்பார்
நெல்லோடு சேர்த்து
தம் மனசின் முணுமுணுப்பையும் விதைப்பார்
முடித்த பிற்பாடும்
மறக்காமல் விதைப்பார் எம் மனங்களில்...

மக்கா எனக்குக் களத்துலேயே
கல்லறைக் கட்டுங்கடா
அச்சுப்பிசகாது அப்பாவுக்கும்
அப்படியேதான் வாய்த்தது
மண்ணோடு மல்லுக்கட்டி
மக்கிப்போகும் வாழ்வு

ஏதேதோ தேவைகள் அழுத்த
கைமாறிய மண்ணை மீட்க இயலாமல்
வார்த்தைகள் தொண்டையைக் கிழிக்கும்
சோகம் எனக்கு

முப்போகமும் முங்கித் திளைத்த மண்
வெறுமையாய் விரிந்து கிடக்கிறது
கபடியையும் கிட்டிப்புல்லையும்
ஏங்கவைத்துவிட்டு எங்களூர் இளசுகள்
அதில் ஸ்டெம்ப் நட்டு கிரிக்கெட் ஆடுகிறார்கள்

30 September, 2010

முத்தம்

ஒளி சுவிகரித்துக்கொண்ட
உன் முத்தங்கள்தாம்
விண்மீன்களாயின
சிறகு முளைத்த முத்தங்களில்
தேவதைகள் தரிசனம் தந்தனர்
முத்தங்களைத் திருடி கூடுகட்டி
தேனீக்களாய் பரிணமித்தன குளவிகள்
முத்தங்கள் எட்டாது தலைசுளுக்கவே
நரிகள் சொல்லின்
அந்த முத்தம் புளிக்கும்
உன் முத்தங்களின் ஆழத்தில்
முத்தம் குடித்து முத்தம் குடித்து
முத்தமானான் அவன்

09 September, 2010

ஆயினும் ஆறுதல்

நெருக்கித் தள்ளி வாழ்வு விதிர்விதிர்த்துத்
தளும்புகிற கணங்களைத்
துடைத்துவிடும்படிக்கு உகுக்கிறான்
மூன்றரை வயதான கபிலன்
ஆறுதல்தான் என்று தெரியாமல்
வார்த்தைகளை
''இந்தா அப்பா தண்ணி குடி''
எனினும் அதனால் ஒன்றும்
ஆகவில்லைதான்
ஆயினும் ஆகியிருந்திருப்பின்கூட
இந்தளவு ஆறுதலடைந்திருக்க
மாட்டார் அப்பா

நன்றி: உயிரோசை (27.09.10)


05 September, 2010

நாட்டாமை

மௌனங்கள் நொதித்துக்கிடக்கும் அவ்வூரின்
திசைகள் கூடிக்கொள்ளும் நாற்சந்தியில்
விற்பனைக்கு வந்ததுபோல வந்தன வார்த்தைகள்

அர்த்தங்களின் ஆழ உயரங்களுக்கு ஏற்ப
வீழ்ந்தும் எழுந்தும் கொண்டிருந்தன
வார்த்தைகளின் மதிப்பு

அவரவர் தேவைக்கேற்ப விநியோகமானதில்
மெலிந்த வலிந்த வார்த்தைகள் கலந்தே இருந்தன
வசீகரத்துக்காகவும் மயக்கத்துக்காகவும்

'கடவுள்' வார்த்தையைக் கொள்முதல் செய்தவன்
போதிக்கத் துவங்கினான்
கடவுள் வார்த்தையாய் இருக்கிறார்
வார்த்தைகளனைத்தும் கடவுளிடமிருந்து வருகின்றன
கடவுளன்றி வார்த்தையில்லை
வார்த்தையின்றி கடவுளில்லை

பின்னிப்பின்னி சாம்ராஜ்யத்தையும்
செங்கோலையும் நிர்மாணித்துக்கொண்ட
'கடவுள்' வார்த்தையின் சிம்மாசனம்
'சாத்தான்' வார்த்தையை வாங்கிப் போனவன்
கேட்டக் கேள்வியில் கலகலக்க ஆரம்பித்தது

'சாத்தான்' வார்த்தையின் அந்தரங்கத்தில்
'கடவுள்' வார்த்தை தன் பங்குக்கு ஒளிபீய்ச்சியதும்
அழுக்குகளால் வெட்கமுற்றது அதன் இருட்டு

அந்தரங்கங்கள் வெளிச்சப்பட்டுப் போனதில்
சஞ்சலம் கொண்ட கடவுளும் சாத்தானும்
சந்தித்துக்கொண்டன
இப்போது மௌனங்களால்
ஊர் நொதிக்கத் துவங்கியது


நன்றி: கல்கி தீபாவளி மலர் 2010

17 August, 2010

அவனிடம் ஜாக்கிரதை

அவன் யாதொன்றும் செய்யவில்லை
அப்படிச் செய்கிறவனுமில்லை

உங்கள் வடிவங்களில்
தேங்க இயலாமல் கசிந்தான்
அப்போதே சஞ்சலத்தை
மறைக்கச் சிரமப்பட்டீர்கள்

உங்கள் வார்த்தைகளுக்கு
வளைதல் செய்யும் லாகவமற்று
ஒடிந்ததில் குமைந்து
அசூசைக் கொண்டீர்கள்

நீங்கள் வாரி இறைத்த
நிறங்களைப் பதட்டத்தோடு அதீதமாய்ப்
பூசிக்கொண்டதில்
கடைவிழியில் அன்னியப்பட்டான்

உங்களின் தீவிரத்தில்
ஆழவும் முடியாமல்
கலக்கவும் இயலாமல்
அவன் திணறுதலில் கலக்கமுற்ற நீங்கள்
அயலானிடம் சொல்லிப்போகிறீர்கள்
''அவனிடம் ஜாக்கிரதை"

நன்றி: கல்கி(05.09.10)

15 June, 2010

பக்கத்துப் பக்கத்து வீடு

ஆதியில் எனக்கும் சாத்தானுக்கும்
பக்கத்துப் பக்கத்து வீடு
கொஞ்சமாய் நிரோத்துப் பொட்டலங்களையும்
மிதக்கும்படிக்காய் மதுப்புட்டிகளையும்
கைமாத்தாய் வாங்கிக்கொள்ளும் அளவுக்கு
அவன் எனக்குப் பரிச்சயம்
எப்போது கேட்டினும் இன்முகத்தோடு
அவன் பிரயோகிக்கும் புன்னகை
அந்தி சூரியனாய் மயக்கம் நல்கும்
முலைகனத்த மகளிரோடு
முப்போதும் மோகித்துக்கிடக்கும் அவனுக்கு
பிருஷ்டம் பெருத்த பெண்களோடும்
தொடுப்பு இருந்தது
காமப்பேராறு கரையறுக்கையில்
கரமதுனமும் உண்டு
லாகிரி வஸ்துகள் நீதிபரிபாலனம்
செய்யும் அவனது கொலுமண்டபத்து
அந்தப்புரத்துக்கு தேவகன்னியின் புனைவோடு
சிலபேர் வந்து திருப்தியோடு போவதுண்டு
அவன் அருகாமையின் ஷணங்கள்
பரவசங்களில் தோய்த்து எடுக்கப்பட்டதாயும்
புலன்களை நீவிவிடுவதாயும் தோற்றம் கொள்ளும்
யுவதிகளின் வாசனைகளால் நெய்யப்பட்டிருக்கும்
அவனது இல்லத்திலிருந்து ஊர்ந்துவரும்
இசையின் விச்ராந்தியில் கம்மென்று மணம்
பொறாமையுற்ற காலம்
பொய்யாய் வீசிப்போன வரத்தின்
சாயல் புனைந்த சாபமொன்றில்
வீழ்ச்சியுற்ற சாத்தான்
தீவாந்திரத் தனிமைக்குத் தள்ளப்பட்டு
கடவுளானான்
நான் மனிதனானேன்
நன்றி : சுகன் (ஜூன் 2010)

08 June, 2010

சபிக்கிறது தாபம்

விசிறி எறியப்பட்ட
விலக்கப்பட்ட கனியின் விதையிலிருந்து
வேர்கொழித்துச் செழித்தெழுந்த
ஏதேனூடே வேட்கைகொண்டு போகிற
ஏவாளை பின்தொடர்கிறது
ஸர்ப்பம் வடிவம் வாங்கிய பாவம்

துஷ்டி வீட்டுக்காரனின் தொண்டையில்
திரண்டுருளும் துக்கத்தையொத்த
அவளின் பருவக்கனவுகளை ஊடறுத்துக்
கொட்டுகிறது நிச்சலனமுற்ற அருவி

காய்ந்துதிரும் சருகுகளைப் பற்றி
கீழ்விழும் ஏவாளின் சொற்கள்
பெருந்தனிமையின் கால்களில் மிதிபட
தரையை மெழுகித் திரும்புகிறது
சொற்களின் ரத்தம்

அந்தரத்தில் அலையும் பறவைகளின்
சிறகில் அறைவாங்கி பள்ளத்தாக்கில்
வீழ்ந்துபடுகிறது ஏக்கத்தின் கேவல்

முன்பொருகாலத்தில் ஆதாமை
புசித்த கனிக்கென
பொலிபோட்டுவிட்டார் பிதாவின் பிதா
ஆப்பிள்மரத்துக்கு அடியுரமாய்

தன்னைத்தானே புணரும் ஏவாளின் தாபம்
சபிக்கிறது கடவுளை
'ஏவாளாகக் கடவாய் சாத்தானே'

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

05 June, 2010

சத்யாகாலம்

புதுத்தாலி உடுத்தியிருக்கும் சத்யா
சவூதியிலிருக்கும் கணவனின் நினைப்பில்
தலைக்கு ஊற்றும் நடுநிசிகளால்
நடுக்கமுறுகின்றன இரவுகள்

நன்றி: புன்னகை காலாண்டுதழ்

31 May, 2010

கொள்முதல்

வசீகரச் செல்வாக்கு மிகுந்த
வார்த்தைகளைப் பெய்து
மனத்தை நனைக்குமவன்
கனவுகளின் விற்பனைப் பிரதிநிதி

கண்களின் குணத்துக்கேற்ப
கனவுகளை விநியோகிப்பதிலும்
கனவுகளைக் கைமாற்றிவிடுவதிலும்
கைதேர்ந்த மொழி அவன் நாவுக்கு
சொந்தமானது

கனவுகளை சூல்கொல்வதொன்றே
கண்களின் பிறவி பயனென
அவனுதிர்க்கும் சொல்வாக்கு
சில கண்களில் கனவுகளின் அபிலாசைகளைத்
துளிர்விக்கும்

யாருக்கும் இல்லையென இயம்பாது
இருக்கும் துண்டு கனவுகளைக்கூட
குறுக்கும் நெடுக்குமாய்ப் பிணைத்துவிடும்
அவன் சாமர்த்தியத்தில் சாமான்யத்துக்கேற்ப
சலுகை திட்டமும் உண்டு

கனவுகள் அற்றுப்போகும்
பின்னிரவுப் புழுக்கத்தில்
அக்கம் பக்கம் பார்வை செலுத்தி....
நெளிவுகளை நேர்த்திருத்தி,
சுருக்கங்களை நீவி, முலாம் பூசி
அவன் வைத்திருந்த சாத்தானின் கனவுகளை
கொள்முதல் செய்துகொண்டு போன
கடவுளின் கண்களில்
ஒளி பெருகத் துவங்கியது

ஈரமண்ணின் நேசம்|ஜூலை 2010

16 May, 2010

பிழைப்பு

ஈரமற்று கானல் ஓடும் நதியில்
மூர்ச்சையுற்று மிதந்த பால்யத்தை
சுமந்துவந்து கண்ணம்மாபேட்டையில்
எரிக்கையில் துளிர்த்த வியர்வையில்
சற்றே உப்பு கரிக்கிறது பிழைப்பு

நன்றி: கல்கி(04.07.2010)

13 May, 2010

இழப்பு

கொஞ்ச காலமாய் கூடவே
வசித்துவருகிறது யாரும் கண்டறியாத மவ்னம்

மவ்னம்தானெனினும் அது சம்மதமில்லை
மரணம் விதைக்கும் மவ்னத்தைப் போன்று அது
துக்க நிறத்தைப் பூசிக்கொண்டதுமில்லை

மவ்னம் உடைபடும் பின்னொருசமயத்தில்
அதற்குள் கனலும் வெப்பத்தாலும்
வெடிக்கக் காத்திருக்கும் கேள்விகளாலும்
அதிரக்கூடும் காலத்தின் கள்ள மவ்னம்

போராளியின் கடைசிக்குண்டைப் போல
பிரயோகமாகப் போகும் அம்மவ்னம்
பருந்தை எதிர்த்தடிக்கும் தாய்க்கோழிஎன
தோற்றம்கொள்ள காத்திருக்கிறது

அப்போதெழும் பேரோலத்தில்
வார்த்தைகள் குரலிழந்து போகும்

நன்றி: கல்கி(04.07.2010)

24 April, 2010

கவிகிறது மெழுகின் சாட்சியோடு

தீ தின்னும் மெழுகை சாட்சி வைத்து
தன் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் இரவு
வாதையின் கூடாரமென
சன்னமாய்க் கவிகிறது அவள் மீது

முகமன் சொல்லி வரவேற்கும்
அவள் முறுவலின் பின்புறத்தில்
சலசலக்கும் ரணங்களின் கண்ணீரில்
மேலதிகமாய் இருள்கிறது அவ்விரவு

வடிக்கட்டமுடியாத வக்கிரம்
இயலாமையின் கழிவிரக்கம்
அந்தரங்கத்தின் வெக்கை
கொண்டாட்டத்தின் எச்சம்...
யாவற்றையும் அவளுக்குள் துப்பிவிட்டு
பேய் சிரிப்பில் அதிரும் அவ்விரவை
யார் பார்வைக்கும் படாதவாறு
பதட்டத்தோடு ஒளிக்கவே விழைகிறாள்
தீட்டுத் துணியென

17 April, 2010

ஏக்கத்தில் விழுதல்

வன்நுகர்ச்சிக்குப் பலியான ஊமைச் சிறுமியின்
பீதியை நகலெடுத்த முகத்தோடும்
கட்புலனாகா கிரீடத்தைப் பொருத்தியிருக்கும்
அசௌகரியத்தோடும்
பார்வைக்கு வந்துபோகும் அவர்தான்
கடவுளின் நேரடி வாரிசு என்பதை அறிந்த கணம்
அவன் காலத்தை ஊழியலை தாக்கியிருந்தது

சர்வாதிகாரியின் கொடுங்கரத்தின்கண் சிக்குண்ட
சாமான்யப் பூச்சியைப் போல
பூலோகத்தின் பித்தலாட்டங்களும் துரோகங்களும்
அவரைக் கையாளத் துவங்கியிருந்தன

எழுச்சிக் குறைவான குறியை
வாய்க்கப்பெற்றிருந்தாராகையால்
விசனமுற்ற தாம்பத்யம்
அவ்வளவாய்ச் சேர்ப்பதில்லை என்பது குறித்து
அவருக்குண்டு அவர்மீது கழிவிரக்கம்

மதுவின் கணத்திலன்றி பிற பொழுதுகளில்
தான் கடவுளின் வித்தென்ற கித்தாப்பு
அவர் சிரசுக்குள் நிலைத்ததில்லை

இல்லத்துக்கு அவர் திரும்புகையில்...
நெகிழ்ந்திருந்த உள்ளாடையை திருத்தியபடி
அதரத்தில் நர்த்தனமிடும் முறுவலைச் சிந்தியவாறு
கடைவாயில் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தான்
சாத்தான்

களைத்திருந்த மனைவியின் வியர்வையில்
நிறமிழந்த தமது அந்தரங்கத்தை
என்ன செய்வதென்று அறியாது
சாத்தானாகும் ஏக்கத்தில் விழுந்தார்
கடவுள்

நன்றி: உயிரோசை (27.09.10)

12 April, 2010

கை உதறுதல்

காற்றென்னை கை உதறிய
பொழுதொன்றின் அந்திமத்தில்தான்
பருவத்தைக் கொட்டிச் செய்த ப்ரியத்தை
திரும்பப் பெற்றுக்கொண்டாய்

விண்மீன் உதிர்ந்துவிழுந்த தடத்தின்
வடுவென புகைந்து குமையும் இதயத்தில்
பகல் போல ஒளிரும் எனதன்புக்குள்
பூனைப்பாதம் பொறுத்தி ஊடுருவின
அமாவாசை சபலங்கள்

மலைமுகட்டின்மீதேறி தற்கொலைபுரியும்
அந்திப் பகலவனின் வண்ணம் கொண்டது
பலிகொள்ளப்பட்ட நேசத்தின் ரத்தம்

பழிப்பு செய்கிற காலம்
துவண்டெழும் வார்த்தைகளின்
சுவாசப் பரப்பெங்கிலும்
சுவாதீனத்தைக் கலந்து கெக்கலிக்கிறது

மல்லாந்து துயில முயன்ற
மொட்டை மாடி நிசி ஒன்றில்
உன் பாதரட்சையின் எழிலெடுக்கும் பிரயாசையில்
தோற்றுத்தோற்றுச் சரிகிறது
மூன்றாம்பிறை

யுகமாயினி ஜூலை 2010

30 March, 2010

புதிர்வெளி

புரண்டு துயில்கையில்
கண்களிலிருந்து நழுவிய கனவொன்று
படுத்துக்கொண்டது அவனருகாமையில்
இணையையொத்த குழைவோடு

முதிராத முலையின் ஸ்பரிசத்துக்கீடாய்
குறுகுறுப்பை நல்கிய அதனியல்பால்
புலன்களுக்குள் முளைவிட்ட றெக்கை
மஞ்சத்தை பறவையாக்கிவிட்டதெனில்
அதொன்றும் துர்கனவல்ல

ஆகாசத்தில் நீரருந்தும் சக்கரவாகத்துக்கிணையாய்
நிரம்ப உண்டு சிலாகிப்பதற்கு ---
சாத்தானின் ஆசீர்வாதத்துக்கும்
கடவுளின் சாபத்துக்கும்
அடர்ந்த அன்பின் குரூரத்துக்கும்
கசந்த நேசத்தின் நெகிழ்வுக்குமான
புதிர்வெளியில் இப்போது அலைவுறும்
அந்தக் கனவு குறித்து

எனினும் இத்தோடு கைவிடலாம்
அதன் கழுத்திலும் தொங்கக்கூடும் கொடுவாலாய்
தாம்பத்யத்தின் செங்கோல்

யுகமாயினி ஜூலை 2010

14 February, 2010

காமத்தின் நவரச சிங்காரிப்பு

1
போதும் இம்சிக்காதே
மர்மஸ்தானத்தில் ஊடுருவும்
மனசின் விரல்களைத் திருப்பிக்கொள்
விகாரப்படும் துறவின் இச்சையென
கவிகிற புன்னகை
சபிக்கப்பட்ட பாலையில் வன்மங்கொண்டூரும்
சர்ப்பத்தின் விஷமென நைச்சியமாய்ப் படர்ந்து
ஆன்மாவுக்குள் மரணத்தை விதைக்கிறது

நன்றி : சிக்கிமுக்கி (மார்ச் 2010)

சாத்தானின் மனைவி

தேவகன்னியின் மயக்கத்தில்
நிர்வாணமாய்க் கிடக்கிறார் கடவுள்
அவ்வழியே கடக்கையில்
மனைவியின் கண்களைப் பொத்திக்
கூட்டிப்போகிறான் சாத்தான்

நன்றி : சிக்கிமுக்கி (மார்ச் 2010)

அனுபவம்

யவ்வனம் கட்டியிழுத்துவந்த
ஆயிரம் யானைகள்
கிளப்பிய பெருமூச்சில்
ஒளி தூர்ந்த சூரியனை
வெட்கக் கீற்றனுப்பி
உயிர்ப்பித்தாள்
இப்படியாய் விடிந்தது
அவர்கள் சயன அறையின்
முதல் அனுபவம்

நன்றி : சிக்கிமுக்கி (மார்ச் 2010)

13 February, 2010

ஆம்புலன்சின் பின்புறத்தில் கடவுள்

விதவை மகளின் ஆண்மகவுக்கு
ரத்தமாற்று சிகிச்சையில் உதவுவதற்கெனவே
விலாவில் முளைத்த றெக்கையோடு
திடுமென நிகழ்ந்தான் சாத்தான்

பை நிறைய உதவிகளோடும்
கையே வாஞ்சையாகவும்
அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் அவன்
அனைவருக்கும் தேவையாயிருந்தான்

ஆறுதலைக் கேடயமாக நீட்டும்
அவன் கிருபைக் குறித்து
யாருக்கும் எவ்வித ஐயப்பாடுமில்லை

துயருறுவோரின் காயங்கள் மீது பூச
துளிர்த்துக்கொண்டே இருக்கின்றன
அவனது மொனைக் கண்களில் கண்ணீர்

சம்பாசித்துக்கொண்டிருக்கையிலேயே
சாலையைக் கடக்க சிரமமுற்ற மூதாட்டிக்கு
மாறிப்போனான் கைத்தாங்கலாய்

அவ்வப்போது உலக நலனில்
தோய்ந்தெழுந்த அவனது சிந்தனை
இன்னும் பிற இத்யாதிகள் பொருட்டு
கவலையாய் மாறிற்று

அன்று அவதிக்குள்ளானவர்களை கவனமாக
தம் பிரார்த்தனைப் புத்தகத்தில் பதிந்து
உருக்கமாக ஜெபிக்கவும் துவங்குகிறான்

யாவற்றையும் அவதானித்தபடி...
பாலூட்டிக்கொண்டிருப்பவளின் முலைகளில்
முறுவலோடு லயித்திருந்த கடவுள்
தம் மாட்சிமைமிகு ஒளிபொருந்திய கிரீடத்தை
மார்வாடிக் கடையில் வைத்துவிட்டு
அறுவைசிகிச்சைக்கு விரையும்
ஆம்புலன்சின் பின்புறம் தொற்றியபடி
தாசி வீட்டுக்கு அருகாமையில் சொல்லி
சச்சரவு செய்துகொண்டிருந்தார் கடவுள்

சுகன் (ஆகஸ்ட் 2010)

02 February, 2010

சிறிது

என் சின்னஞ்சிறு திலீபனின்
குறுங்குடை மறைத்துவிடுமளவுக்கு
சிறிதிலும் சிறிது வானம்

நன்றி: கல்கி (28.02.10)

30 January, 2010

உலகம்

ஒளியின் வழித்தடம் அழிக்கப்பட்டு
இருளுறைநிலையில்
ஜன்னல் தாழிடப்பட்ட அவனதறை
ஒன்றுமில்லையென
இயல்பாய் இருக்கிறாள் மனைவி
இயல்பு திரிந்து தேம்புகிறது
அவனுலகம்

நன்றி: கல்கி (28.02.10)

22 January, 2010

நனைதல்

தமது செல்ல பாலகனை
உறக்கத்தில் ஆழ்த்தும்பொருட்டு
அப்பா சொன்ன கதையிலிருந்து
உயிர்கொண்ட ஸர்ப்பம்
புற்று ஒன்றை நிர்மாணிக்க
உறங்கிப்போகிற மகனால்
நனைகிறது அப்பாவின் பால்யம்

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

20 January, 2010

பெரு மழை

உள்ளாடையின் அந்தரங்கம்
சொட்டச்சொட்ட நனைய
அவர்கள் ஆடித்தீர்த்த பெருமழையில்
கிளர்ச்சியுற்று
முளைகொண்ட மாஞ்செடியின்
முதல் காயைக் கொய்கையில்
அவளுக்கு மேலதிகமாக சுரக்கின்றன
மார்புகள்

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

19 January, 2010

பச்சைய பருவம்

நீதான் வழிநடத்திப் போகிறாய்

மறியின் பச்சைய கனவுகளை
முடித்துவைக்கும் மேய்ப்பனைப் போல
எலிகளின் தானிய சபலத்தை
நிவர்த்திக்கும் கழனிகளைப் போல
உன்னை மையமாக்கி
சுழல்கிறதென் உலகம்

உனது கோபுரங்களில் குடியிருக்கும்
ஆசையின் கனவுக் கண்களை
உனது சுனைகளில் நீராட்டிச் சிவக்கவிடுவாயா

காதுகளை உரசித் தொங்கும்
நேர்த்திக் கடனென
காமத்தின் பக்கவாட்டில் ஆடுகின்றன
கொங்கைகளின் மீதான வேட்கை

ஒரு வட்டக் கிணறு போல
குறு அலைபரப்பும் உன் பருவத்தை
நம்பியிருக்கிறது அதன் புன்செய்நிலம்

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

ப்ரியமான உப்பு

எதிர்பார்ப்பு
-விலக்கான நாட்களின் ஈர நசநசப்புக்கு
ஒப்பாய் எரிச்சலூற்றி இருக்கும்

கனவு
-மழலை ஈன்றவளின் பாலூட்டும் ஏக்கம்
அலுவலகக் கழிப்பறையில் பீய்ச்சப்படுதலாய்
துயருறுத்தி இருக்கும்

வார்த்தைகள்
-பிரசவிக்க இயலாது வயிற்றுப் பிள்ளையோடு
மரித்துப்போன தாயின் இயலாமையை
விதைத்திருக்கும்

முன்முடிவுகள்
-திரும்பிப் படுத்துறங்கும் உன்னை
வன்மையாய்த் திருப்பி உன்னனுமதியின்றி
புணரும் வேதனையைத் தந்திருக்கும்

ஆக்கிரமிப்பு
-பிரசவித்த வயிற்றின் கோடுகளென
வலியின் ரேகைகளை உள்ளுக்குள்
ஓடவிட்டிருக்கும்

எல்லாம் விலக்கி

ஓர் உதட்டுச் செடி முத்தப் பூவை புஷ்பிக்கிறது
ஓர் உதட்டுச் செடி கொய்கிறது

உப்பின் சுவை கூடுகிறது

18 January, 2010

துத்தா

பார்க்குமனைத்துக்கும் பார்த்தமாத்திரத்திலேயே
பெயர்சூட்டிவிடும் ஞானம் வாய்த்திருக்கிறது
ஒன்னரை வயது கபிலனுக்கு

அதற்கு முன்பிருந்த பெயர்குறித்தோ
பின்பு வரப்போகும் பெயர் பற்றியோ
அவன் கிஞ்சித்தும் கவலையுறுவதில்லை

களிகூர்ந்து அவன் சூட்டும் நாமகரணம்
ஒருபோதும் மொழியின் கூண்டுக்குள்
நிலைகொள்ளாது மேலாக
அர்த்தத்தைச் சிங்காரிக்கும்

கல்லணையை அவனுக்கு
அறிமுகப்படுத்திய கணத்தின் முடிவில்
தேங்கித் தளும்பிய புனலை
இத்தியென அள்ளியாடினான்

வீடு மீண்டதும் கல்லணையை
பக்கெட்டில் ஊற்றி அவன்
இத்தியாடுகையில் எதிர்பட்ட
எலியின் பொருட்டு
புவ்வாவென்று அலறினான்

கேட்கப்போன அப்பாவாகிய அப்பா
துத்தாவானார்
துத்தா அப்பவானால்
அப்பா என்னவாகும்

நன்றி: கல்கி (28.02.10)

16 January, 2010

ருது

உயிர்ப்பிடித்தெழும் நாட்களின் பிடரி பற்றி
உலுக்கிஎடுப்பதற்கெனவே
ஊட்டி வளர்த்தனுப்புகிறாய்
ருதுவான சொற்களை

விடைத்தலையும் பருவத்தை
செரித்துத் தீர்க்கவே
பசிவிரித்து தவம் கொள்கிறததன்
பிரவேசப் பாய்ச்சல்

ஏறி இறங்கும் ஏக்கப் பெருமுச்சுகளில்
திய்ந்தழிகின்றன அவை உமிழ்ந்துவிட்டுப்போன
கனவுபிம்பங்கள்

அஹிம்சைபுனைந்த அதன்
அர்த்த மையத்திலிருந்து
வெடித்துப்பரவும் சாத்தியக்கூறுளோடு
கனன்றுகொண்டிருக்கும் வன்முறையில்
உன்னழகின் உக்கிரம்

வெள்ளாமையின் கழுத்தறுக்க
கருக்கேந்தி நகரும் அதன் கரத்தில்
உனக்கெழுதிய கவிதையை
ஒப்படைத்ததால் தப்பித்தது காலம்

சொற்களை மனனிப்பதிலேயே
கழிகிறது வாழ்வு