23 November, 2011

ஆம்புலன்சின் பின்புறத்தில் கடவுள்

விதவை மகளின் ஆண்மகவுக்கு
ரத்தமாற்று சிகிச்சையில் உதவுவதற்கெனவே
விலாவில் முளைத்த றெக்கையோடு
திடுமென நிகழ்ந்தான் சாத்தான்

பை நிறைய உதவிகளோடும்
கையே வாஞ்சையாகவும்
அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் அவன்
அனைவருக்கும் தேவையாயிருந்தான்

ஆறுதலைக் கேடயமாக நீட்டும்
அவன் கிருபைக் குறித்து
யாருக்கும் எவ்வித ஐயப்பாடுமில்லை

துயருறுவோரின் காயங்கள் மீது பூச
துளிர்த்துக்கொண்டே இருக்கின்றன
அவனது மொனைக் கண்களில் கண்ணீர்

சம்பாசித்துக்கொண்டிருக்கையிலேயே
சாலையைக் கடக்க சிரமமுற்ற மூதாட்டிக்கு
மாறிப்போனான் கைத்தாங்கலாய்

அவ்வப்போது உலக நலனில்
தோய்ந்தெழுந்த அவனது சிந்தனை
இன்னும் பிற இத்யாதிகள் பொருட்டு
கவலையாய் மாறிற்று

அன்று அவதிக்குள்ளானவர்களை கவனமாக
தம் பிரார்த்தனைப் புத்தகத்தில் பதிந்து
உருக்கமாக ஜெபிக்கவும் துவங்குகிறான்

யாவற்றையும் அவதானித்தபடி...
பாலூட்டிக்கொண்டிருப்பவளின் முலைகளில்
முறுவலோடு லயித்திருந்த கடவுள்
தம் மாட்சிமைமிகு ஒளிபொருந்திய கிரீடத்தை
மார்வாடிக் கடையில் வைத்துவிட்டு
அறுவைசிகிச்சைக்கு விரையும்
ஆம்புலன்சின் பின்புறம் தொற்றியபடி
தாசி வீட்டுக்கு அருகாமையில் நிறுத்தச் சொல்லி
சச்சரவு செய்துகொண்டிருந்தார் கடவுள்

15 November, 2011

விதைநெல் பிரிக்கும் இக்கோடையில் நிகழாதிருந்திருக்கலாம்

துளிர்ப்பு திகைந்தாயிற்று
வேம்பின் பொன்தளிர்களை
ஆராதிக்கத் துவங்கிவிட்டது கோடை
புளிப்பு சுவைகூட்டிய மாங்காயைக்
கடித்துவிட்டு மிழற்றுகிற கிளிக்காக
இதமிதமாய் பெய்யும் இனி புன்செய் வெயில்
ஊருக்குள் புகுந்து மாயமோகினியென
எழுந்து சுழலும் சூறைக்காற்றைத்
துரத்தியோடி களிப்பார்கள் சிறார்கள்
வாதநாராயணன் தன் சக்கரவடிவ பூக்களை
காற்றின் போக்கில் உதிர்த்து விளையாடும்
மகசூலை களஞ்சியத்தில் சேர்த்துவிட்டு
சோம்பித் திரிகிற குடியானவன் மீது
கொட்டிக் குளிர்விக்கும் பெருமழை
சோபிதம் கொண்டொளிரும் அந்தியிலிருந்து
அசைபோட்டபடி மந்தைக்குத் திரும்பும்
பசுவின் முதுகில் கொண்டலாத்தி குகுகுகுக்கும்
நல்லேர் பூட்டி தானியங்களைத் தூவிவிட்டு வந்து
அடுத்த வெள்ளாமைக்கு விதைநெல் பிரிக்கும்
நல்சகுனங்கள் நிரம்பிய இக்கோடையில்
நிகழாதிருந்திருக்கலாம் உன் பிரிவு

நன்றி: புன்னகை கவிதை இதழ்

01 November, 2011

எங்களூர் பிள்ளையார்

எங்களூரில் கழுதைகள் இரையுண்ணும் பொட்டல் பிராந்தியத்தில்
குவித்து வைத்த ஏதோ ஒன்றென அவரைப் பார்க்கையில்
தெரிவார் பிள்ளையாரென
விரிந்த பிருஷ்டம் வழிந்தொழுகும் தொப்பை
மினுங்கிடும் அகலின் கீற்று உறுதிப்படுத்தும்
அவரை அவர்தானென
வருடத்துக்கொருதரம் கொழுக்கட்டை படையலோடு கூடும் குலப்பெண்களிலிருந்து கண்களின் ஒளியையும்
கொங்கைகளின் கூச்சத்தையும் பூசிக்கொண்டதுபோலிருக்கும் அவர்
அப்போது ஏற்றிருக்கும் அரிதாரம்
பிற்பாடு, திருவிழாவில் தொலைந்த குழைந்தையின் பீதியோடு
கறுத்துப்போன முகத்தைத் தூக்கி நிறுவுவார்
தனிமையின் இருக்கையில் சீந்துவாரற்றும்
மீண்டும் பல்லக்கில் ஏறும் கனவோடும்
பழிச்சாலும் நிந்திச்சாலும் கண்ணை அவிச்சுடும்டா சாமி-
சன்னதமாடும் அப்பத்தாவும் அறியும்
இச் ஷனம்வரைக்கும் ஒன்னுமேயாகாத
ஒத்த காலைத் தூக்கி புள்ளையார் மீது
ஒண்ணுக்குப் பெய்யும் கெடா நாயை

நன்றி : அகநாழிகை (மார்ச் 2010)

29 October, 2011

திலீபன் வைத்த கொலு

தன் முதுகில் வெளிமானைச் சுமந்துகொண்டு

புல் மேயவும் தயாரென்பது போல இருக்கிறது புலி

பசுமாட்டின் நிழலில் சிங்கம் இளைப்பாறிக் கொண்டிருந்தது

கரடியும் குரங்கும் முகத்தோடு முகமுரசிக்

விளையாடும் பாவனையில் இருந்தன

காந்தியின் கையில் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு

புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்

வேட்டைக்காரன் ஒருவன்

காட்டெருமை ஒன்று தாயின் கரிசனத்தோடு

ஓநாய்க்குட்டியை நாவால் தடவிக்கொடுக்கிறது

ஆசியர் பொம்மைக்குப் பாராமுகமாய் நிற்பது

யூகேஜி போகும் கபிலனாகத்தான் இருக்க வேண்டும்

தவயோகி ஒருவர் நடனமாதரில் லயித்திருக்க

தலையை ஆட்டி ஆட்டிச் சிரிக்கிறது

தலையாட்டிப் பொம்மை


22 October, 2011

ஆனந்தியின் பொருட்டு தாழப் பறந்துகொண்டிருக்கின்றன தட்டான்கள்

மணிப்புறாவின் லாகவத்தோடு எழும்பிப் பறக்கிற
என் நிலத்துக்கு ஆனந்தி என்று பெயர்ச் சூட்டியிருந்தேன்
அதனால்தான் அது மேலெழும்பி மிதக்கும்
பாக்கியம் பெற்றதோ என்னவோ
அதனால்தான் அத்தனை வனப்போ செழிப்போ
தட்டான்கள் தாழப் பறந்தால் மழை வரும் தெரியுமா என்ற
ஆனந்தியின் இமைகளிலிருந்து
முதன்முதலில் தட்டான்கள் பறந்தபோது
எனக்குள் மழைவரும் போலிருந்தது
தட்டான்கள் குறுக்கும்நெடுக்குமாகப் பறப்பது
காற்றின் பக்கங்களில் கோட்டோவியம்
வரைவதாகும்போல என்றால்
ஆமாம் அப்படித்தான் என்று
பார்வையாலே தட்டான்மாலை வரைவாள்
பறக்கும் தட்டான்பூச்சிகளுக்குச் சங்கடம் தராமல்
மிதந்துகொண்டிருக்கிறது நிலம்
ஆனந்தி பெயரைச் சொல்லி விதைப்பதும்
ஆனந்தி என்று சொல்லி அறுப்பதும்
மகசூலை அதிகரிக்கச் செய்யும்
விவசாய முறையாயிருந்தது
நிலத்துக்கு நடுவே நட்டுவைக்கப்பட்டிருக்கும்
பொம்மையின் வாயிலிருந்து வைக்கோல் பிதுங்க
தலை தொங்கிக்கொண்டிருக்கிறது
காரணம் ஆனந்தியில் வாத்ஸல்யம்
அந்த நிலத்தின் மீதில்லை இப்போது
நிலத்தின் பொருட்டில்லை
ஆனந்தியின் பொருட்டு அந்த நிலத்தின் மீது
தாழப் பறந்துகொண்டிருக்கின்றன
தட்டான்கள்

30 September, 2011

கிணற்றுக்குள் தழும்பும் கேவல்

எருக்கம்புதர்கள் மண்டிக்கிடக்கும்
இந்த வீடு மட்டும்தான் ஒருகாலத்தில்
வசீகரமிக்கதாக இருந்தது
ஒளிபொருந்தியதாகவும் இருந்தது

அந்தத் தெருவிலேயே
புறா வளர்ந்த அந்த வீடுதான்
ஓர் இறகுபோல மேலெழும்பிப்
மிதப்பதாகவும்
லயத்தோடு கசியும் இசைதான்
வீடாகிவிட்டதாகவும் தோன்றும்

இந்த வீட்டின் துளசி வாசத்தில்
மயங்கிய
பதின்பருவத்துத் தடயங்கள்
இவ் வீட்டைப்போலவே
சிதிலமாகிவிடவில்லை இன்றும்

புறாக்கள் இரையுண்ட
அவ் வீட்டின் கிணற்றடி
எப்படிப் பார்க்கும் தைரியம்
நரைக்குக்கூட இல்லை

அதற்குள்
தேங்கி இருண்டிருப்பது
தண்ணீரல்ல
உன் கேவல்

பசலைக்கொடி

வெயிலுக்குப் பொருக்குத் தட்டிவிட்ட
அறுவடைக்குப் பிறகான விளைநிலத்தில்
வெற்றுப் பாதங்களுடன் நடப்பதற்கு
நிகரானது
அந்தக் கடைசிப் பார்வையின் வேதனை

வெள்ளாமையைத் தின்னவரும்
கால்நடைகளை விரட்டுவதென
புறங்காண செய்துவிட முடியவில்லை
அந்த நினைவின் பட்டாளங்களை

விதைப்புகாலத்தின் வரப்பில்
விழுந்துவிட்ட நெல்மணிகளை
கரிச்சான்கள் கொத்திப்போவதுபோல
உதிர்ந்த உப்புத் துளிகள்
அந்தப் பாதையின் புழுதியில்தான்
உலர்ந்து மறைந்தன

ஊருக்கு வெளியே கணத்து நிற்கும்
சுமைதாங்கிமீது வளரும் துயரமாக
செழித்துப் படர்கிற
பிரிவின் பசலைக் கொடிக்கு
உயிரைப் பந்தலாக்குவதுதான்
சாலப் பொருந்தும்


நன்றி: உயிர்மொழி இதழ்

தரைதட்டுதல்

கார் பொம்மையை உருட்டிக்கொண்டு
நடுசாமத்தோடு விளையாடும்
மகனை அதட்டி
உறக்கத்தில் ஆழ்த்திவிட்ட
அப்பாவுக்குத் தெரியாது

அவன் கனவுக்குள் நிகழ்ந்துவிட்ட
போக்குவரத்து நெரிசலில்
அதே காரில்
தாம் புழுங்கித் தவித்து
தரைத்தட்டி நிற்கிறோம்
என்பது

27 September, 2011

குதிரைக்குக் கொம்பு முளைக்க ஆரம்பித்துவிட்டது

இரண்டு வயது நிரம்பி
வழிந்துவிடத் துடிக்கும்
அந்தச் சின்னஞ்சிறு சிறுவனின்
கண்களிலிருந்து கண்ணீர்
வழிந்துவிடத் துடித்து
கடைசியில் புகாராக
மாறிவிடுகிறது அப்பாவிடம்

அண்ணன்
தன் குதிரை பொம்மை கொண்டு
உதைத்துவிட்டதைச்
சொல்லத் தெரியாது
திணறலோடு இறுதியில் சொல்லிவிடுறான்
மாடு முட்டிவிட்டதாக

குற்ற உணர்ச்சியில்
குதிரைக்குக் கொம்பு முளைக்க
ஆரம்பித்துவிட்டது

13 September, 2011

இருக்கலாம்

உச்சி ஆகாயத்துக்குப் பக்கத்தில்
காற்றுவெளியில் நிச்சலனமுற்று
நீந்திக்கொண்டிருக்கும்
அந்தப் பருந்து,
நடுநெற்றியில் தீயெரிய
போதிமரத்தடியில்
ஆழ்நிஷ்டையிலிருக்கும்
சாக்கிய புத்தனின்
மனமாகவும் இருக்கலாம்

10 September, 2011

அதுவாக இருக்கிறது அது

மூதாதையரடி மூதாதையராக அது
அவனிடம் \ அவளிடம் வந்து சேர்ந்திருக்கிறது

புற்றுக்குள் நுழைந்துவிட்ட எலி
பாம்பு கண்டதும் பதறித் திரும்புமே
அந்தப் பதட்டத்தோடே வைத்திருக்கிறது
எப்போதும்

காய்ந்தெரிக்கும் கோடையின் மாநகரச் சாலையில்
கானலெனப் பிசுப்பிசுக்கிறது
நீருக்கேங்கி வெடிப்புறும் கரம்பையில்
சிலுசிலுவெனக் கசியும் ஈரமாகிறது

மேனியை யாழ்க்கம்பியாக்கி
மீட்டெடுக்கும் இசையில் களிப்புறுகிறது
அந்த இசையில் உலாத்துகையில்
அவன்\அவள் பறவையாவது நிச்சயம்
அல்லது சிறகளாவது முளைக்கும்

கிளையிலிருந்து கழன்றுவிட்டப் பழமாக
உதடுகளுக்கு எட்டாத முத்தமாக
நடுநிசியில் இளம்விதவை தலைக்கு ஊற்றும் நீராக
சீறும் நாகம் கக்கும் முதல் துளி விஷமாக
யாவுமாகவும் இருக்கிறது

இல்லை யாவுமற்று
அதுவாகவே இருக்கிறது அது

30 August, 2011

ஆயிற்றா?

முக்காலத்திலும் கால் பரப்பியிருக்கும்
முனிவனிடம் வந்தது புழுவொன்று
சுவாமி எம்மை கோழி செய்வீரா
கோழிகளெல்லாம் கொத்திக் கொத்தி
சித்திரவதைக்கின்றன
முறுவலித்துக்கொண்டே சொன்னான் முனி
செய்தோம்
ஆயிற்று புழு கோழியாக

கோழியை விரட்டிக் கடித்தது கடுவன்பூனை
மீண்டும் முனிவன் காலடி வந்தது கோழி
சுவாமி எம்மை பூனை செய்வீரா
செய்தோம்
சிறகுகள் உதிர உதிர
மெதுகால்களில் நகங்கள் முளைத்து
பூனை பிரசன்னமானது

பட்டுமேனி உதறி சோம்பல் முறிக்கையில்
கடைவாயில் எச்சிலொழுக நாய் நெருங்கியதும்
விதிர்விதிர்த்தது பூனை
மீண்டும் முனிவனிடம்... மீண்டும் செய்தோமென்றான்
பூனை நாயாகிப் பூரித்தது

நாயின் ராஜநடை மனிதன் எறிந்த கல்லில் இடற
ஓலமிட்டபடி ஓடிவந்த நாய்
எம்மை மனிதனாக்கினால் நல்லது
ஆக்குவீரா முனிவனே என்றது
ஆயிற்று நாய் மனிதனாக

அநாதையாக இறந்துகிடந்தவனை
புழுக்கள் மொய்த்துக் கிடந்தன
பார்த்த மனிதன் பதறினான் முனியிடம்

முனியே...
எம்மை புழுவாக்கிவிடும் என்றபோதே
மனிதன் புழுவானான்

மீண்டும் முறுவலித்தான் முனி
ஆயிற்றா?

25 August, 2011

முறுவல்

நிறைசூலியான பசும்நாற்றுகளில் திகைந்துவிட்ட
புகையான் குறித்து அங்கலாய்க்கும்
விவசாயி போலிருந்தது
வண்டல் வண்டலாய்ப் பெருக்கெடுத்த
உன் சோக முறுவல்

நீர்ப்பெருக்கத்தில் சலசலக்கும் வாமடையென
மனம் சஞ்சலத்தில் சப்தித்துத் திணறுகிறது

தூர்களிடை நெளிந்தூரும் நாகத்தின்மீது
தவறிவிழுந்து அரற்றுகிற தவளையாய்
காற்றில் சிதறியலையும் உன் பார்வையில்
அச்சமுறுகிறேன்

விஷந்தேக்கித் திரியும் நட்டுவாகளிக்கு
வழிவிட்டு வரப்பிலிருந்து இறங்குவதென
இறங்கிவிட முடியுமாவென அறிந்தேனில்லை
உன்னிலிருந்து

பெருங்காற்றுக்கு வீழ்ந்துபட்ட கருவேலத்திலிருந்து
தனித்துக் கிளம்பிவிட்ட தூக்கணாங்குருவியின்
இருப்பை நினைவுறுத்தி ஊசலாடும் கூட்டை
ஆறுதலாக்கிக் கொள்கிறது பொழுது

முதிர்ந்தும்முதிராத முலைகளின்
இளஞ்சூட்டுக்கு இணக்கமாய்
சூடும் சுவையுமுடைய உன் முறுவலைப்
பத்திரப்படுத்துகிறேன்
நடுக்கமுறும் எனது கூதிர்காலத்தை
பொதிந்து வைக்கலாமென்று

21 July, 2011

பிச்சி

பிச்சியாகிச் சுற்றிவருகிறாள் கடல்தேவதை
தஞ்சையின் கிழக்குக் கடற்கரைசாலையில்

சடைத்த தலைமுடிகளில்
ஊழிக்கூத்தின் வெக்கையும் பிசுபிசுப்புமாய்ப்
போய்க்கொண்டிருந்தவள்
சாலையின் வெயிலில் காயும் மச்சங்களுக்காய்
மார்பறைந்து சிந்தினாள்
கண்களிலிருந்து துளித்துளி கடல்களை

முலைகள் அதிர அதிர அலைகளின் முற்றத்தில்
அவள் சமீபிக்கையில்
பயந்து உள்வாங்கியது அந்த நீலப்பள்ளம்

வாய்க் குதப்பி உமிழ்ந்தாள் வசவுகளை
இருண்டு மருண்டிருந்த கடல்மீது
அந்தக் கொடி பொருந்திய கப்பல்
அவளை அதிஉக்கிரமாக்கியது

கடற்காகங்களைத் தடுத்தாட்கொண்டு
சில வார்த்தைகள் உபதேசித்து
அதனைக் கொண்டுசேர்க்கும்படிக்குப்
பிரயோகித்தாள் தமது அதிகாரத்தை

தொடுவானுக்கும் அவளுக்குமிடையில்
தத்தளித்துத் தவித்த கடலை
யாரேனும் ஒருவர் காத்தருளினால்
தேவலாம் போலிருந்தது

சுமக்குமளவுக்கு முந்தானையில்
மணலை முடிந்தவள்
தன் முலைகளுக்கு மத்தியமத்தில் பொதிந்து
கண்ணயர்ந்தாள்

அவள் கால்களைத் தழுவி நழுவியோடியது
ஒரு சிற்றலை

13 July, 2011

தொலைதல்

கரைபுரண்டோடிய
காவிரியோரம்
அன்னிய கம்பெனியின்
தண்ணீர்ப் பாட்டில்
அமோக வியாபாரம்
வாங்கிக் குடித்துத்
தாகம் போக்குகிறான்
வெள்ளாமை தொலைத்த
விவசாயி

28 June, 2011

பறவையின் பாடல்

எனக்குள் வேர்கொழித்து
பசிய அலை வீசும் வனத்தை
புகையிலைத் தேய்த்துருஞ்சும் உனக்குள்
எப்படியாகிலும் கடத்திவிட வேண்டும்
முதலில்

ஈரத்தைக் கொண்டு வர
வாய்க்கால் வெட்டினேன்
வெளிச்சத்திலும் கொஞ்சம் வெப்பத்திலும்
உயிர்கள் ஜனனிக்கும் ஆகையால்
அதனையும் செய்துவைத்தேன்
மகரந்தங்களைக் கடத்தும்வண்ணம்
வண்ணத்துப்பூச்சிகளையும் சிருஷ்டித்தேன்
வனத்துக்குக் கம்பீரமாய் இருக்குமென
மிருக செட்டைகளை உலவவிட்டேன்
பருவங்கள் சிலவும் வந்தன
எதுவும் உன் சுவரைத் துளைக்கவில்லை

எனினும் தெரியுமெனக்கு
வனத்தின் சல்லிவேர்களோடு
சிலவிதைகளைக் கவ்வி வருகிற
பறவையின் பாடலொன்றே போதும்

13 June, 2011

உயரம்

நேற்று...
இப்பெருமலை சிகரத்து உயரம்
அடிவாரத்தில் களைப்பாறும்
இந்தப் பறவையின்
பாதங்கள் கீழிருந்தது


08 June, 2011

மகரந்த அலை

யவ்வனம் சொட்டும் அவள் பார்வையில்
ஒரு குளம் விரிகிறது

வழுக்கும் பாசிகளிலிருந்து
ஒரு பச்சை தேவதை எழும்புகிறாள்
மேனியெங்கிலும் வழிந்து பரவுகிறது
மகரந்தக் காடு

தாழ்ந்துயரும் அவளது பருவ மூச்சு
ஒரு பட்டாம்பூச்சியாய்ச் சிறகசைக்க
உதிர்ந்து நகர்கின்றன
அந்தத் தேவதைத் துகள்கள்

இப்போது குளம் தேவதைக் குளமாக
தேவதையும் குளமாகி
மகரந்தமாய்த் ததும்பிக்கொண்டிக்கிறாள்

தாகம் போக்க குளத்திலிறங்கும்
அவன் கரைந்துபோகலாம்
ஒரு மகரந்த அலையில்

நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011

12 May, 2011

புத்தனின் கனவு

கால் புதைய கனிந்திருக்கும்
அந்த நிலத்தின் அந்தரங்கத்துள்
புதைத்து வைத்திருக்கிறான்
புத்தன் தன் கனவினை

கிளைகளற்ற தருவாக
காய்த்து இறுகிய மலையாக
குளிர்பொருந்திய ஊற்றாக
விடம் கக்கும் பாம்பாக
மேலும் எதுவாகவும்
வெளிப்படலாம் எதிர்பாராதருணத்தில்

கனவுக்கும் புத்தனுக்குமான இடைவெளியில்
ஏக்கம் தொனிக்கக் காத்திருக்கிறது
சலனிக்காத கர்ப்பக் குளத்து இரவு

நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011

03 May, 2011

நெடுஞ்சாலை மிருகம்

வனங்களை ஊடறுத்து
ஊரை ஒதுக்கிவிட்டுச் சலேரென
அதிவேகத்தில் நீளுளுளுளுளுகிற
தேசிய நெடுஞ்சாலைகளில்
உலவித் திரிகிறது மரணம்
வேட்டை மிருகமாக

இரு எதிரெதிர் வாகனங்களைக் குழப்பி
சின்னஞ்சிறு ஜீவனின் இடது விலாவின் மீது
தன் கொலைநகத்தைப் பதியவிட்டு
கனவுகளைப் பதியமிட்டு வளர்க்கும்
மூளையைச் சிதறடித்து
................................................
................................................
எதன் பொருட்டும் துணுக்குறாது
நக்கிச் சுவைக்கிறது
ஒரு கட்டிளங்காளையின் வலியை
வயோதிகத் தாயின் ஓலத்தை
பிஞ்சுக்குருத்தின் சடலத்தை
கணவனை இழந்த புதுப்பெண்ணின்
வெக்கையை

இம்முறை வீழ்த்தப்படுவது
ஒரு பாதசாரியாக... கர்ப்பிணியாக...
இதயநோயாளியாக... இராணுவ வீரனாக...
கன்னியாஸ்திரியாக... பாதிரியாக....

எவர்குறித்தும் இரக்கமில்லை

ஒரு பருவப் பெண்ணின் நளினத்தோடு
வளைகிற ஒவ்வொரு திருப்பத்திலும்
அவளின் வனப்பையொத்த மினுமினுப்புகளில்
வீசும் ரத்தத்தை உதறிக்கொண்டு ஓடுகிறது காலம்

நன்றி: கல்கி 22.05.2011

==============================

(அதிவேகத்துப் பழக்கப்படாத ஒவ்வொரு
கிராமத்தின் புறத்தேயும் நழுவிச் செல்லும்
சாலை ஒன்று இருந்தது.காலத்தை அசைப்போட்டபடி
கால்நடைகளும் பாதசாரிகளும் புழங்கும் காட்சி
மங்கிய ஓவியம்போல் ரம்யமாய் இருக்கும்.
இப்போது அநதச் சாலைகளை மேம்படுத்தி
தேசிய நெடுஞ்சாலையாக்கி விட்டார்கள்.
அந்தச் சாலையின்அதிவேகத்தை
கிராமங்கள் மிரட்சியோடு பார்த்துக்கொண்டு
இருக்கின்றன. மனிதச் சுவடுகளைக்கூடப்
பதியவிடாத குரூரம் அதன் சுபாவமாகிவிட்டது.
இரவில் ஒளிரும் அதன் வெளிச்சத்தின் ஜுவாலை,
வேட்டை மிருகத்தின் கண்களென நடுநடுங்கச்
செய்கிறது. வேட்டையாடப்பட்டு விடுவோமோ
என அச்சத்தோடு புதரடியில் பதுங்கும் எளிய
ஜீவனைப் போல, சாலயோரத்துக் கிராமங்கள்
இரவுக்குள் பதுங்கி விம்முகின்றன நித்தமும்.
வேகத்துள் புழங்காத கிராமத்து ஜீவன்களை
அதிவேகச் சாலை மிருகம் அவ்வப்போது
வேட்டையாடுவது வாடிக்கையாகிவிட்டது.
அப்படி ஒரே இரவில் ஏழு வேட்டைகளைப்
பார்த்ததன் மனவிழிப்புதான் இக் கவிதை)



14 April, 2011

எலி

பற்றி எரியும் புராதன நகரமென
தகிக்கும் தீயுடல்
ஜ்வாலை தாளாது
எலியின் சாயல்பூசி அங்கிங்கெனப்
போக்கிடமற்று மோதிச் சிதைகிற
ஏதோவொன்று
உன் பருவம் மிழற்றும்
இசையின் நீர்மையில் தணிகிறது
தாப விமோசனமாய்

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

05 April, 2011

ஆலகாலம்

சட்டையை உறித்து நழுவுகிற ஸர்ப்பமென நகரும்
நதியின் வலது கரையில் முளைத்திருக்கும் மரம்
ஆலகாலக் கனிகளைத் தரக் காத்திருக்கிறது

கிளைகளில் தொங்குகிற விரியன் குட்டிகள்
காய்த்துத் திரண்ட மரத்தின் மேனியெங்கிலும்
தம் பிளவான நாவுகளால் நீவிவிடப்
புல்லரித்த அதன் நிழலும் துளிர்க்கிறது

பச்சைய காலத்து இலைகளைக் கொய்து
தலைக்கு வைத்துறங்கும் அவளின் கனவுகளில்
நீலம் பாரித்துச் சலசலக்கிறது அந்நதி

மரத்தின் வேர்கள் நீளும் தூரத்துக்கு இணக்கமாய்
புதைத்துவிடுங்கள் நான் உயிர்த்துவிடுவேன்
என்று சபலப்படுகிறான் அவன்

அவன், அவள், விரியன், மரம், நிழல்
யாவற்றையும் இழுத்துக்கொண்டு சுழிக்கையில்
விரியன் மரமாகி அவள் விரியனாகி
அவன் நிழலாகி மரம் அவளாகி
நிழல் நதியாக

காலத்தை அறுத்துக்கொண்டு நுரைக்கிறது
ஆலகாலம்

நன்றி: 361 டிகிரி

29 March, 2011

1

முன்மாலைக்கும்

பின்மாலைக்கும் இடையே

மிதவேகத்தில் செல்கிற ரயில்

ஒரு புள்ளியாகி மறைகிறது அந்திச் சிவப்பில்

பிள்ளைக்குப் பாலூட்டும் ஏக்கத்தில்

பயணிக்கிற

அவளின் முலைகளை

தாலாட்டி தாலாட்டி


2

நிச்சலனமுற்று

இருந்த தெப்பக்குளத்தில்

கொத்துக்கொத்தாய்

பார்வைகளை அள்ளி

வீசிவிட்டு வந்துவிட்டாள்

சலனமுற்ற மீன்களில் சில

நீந்திக்கொண்டிருக்கின்றன

அவனது ஈசான மூலையில்


3

இரவு தளும்பிக்கொண்டு

இருக்கிற குளத்தில்

நெளிந்துகொண்டு

இருக்கிற பௌர்ணமியை

கொத்தும் கொக்கு

றெக்கை விரிக்க

நிலவு பறக்கிறது

நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011

19 March, 2011

ஒலி விளையாட்டு

நாற்புறமும் எழும்பி நிற்கும் சுவற்றின்
சிறு வாயில் வழி உள்நுழைந்து
ஒலியை விசிறி எறிவதும்
அது எதிரொலித்துத் திரும்புகையில்
குதூகலிப்பதுமாய் விளையாடுகிறான் திலீபன்

அண்ணனின் விடுமுறை கழிக்க
அண்ணனோடு திலீபன் ஊருக்குச்
சென்றிருக்கையில்
அவனின் ஒலிவிளையாட்டை
அப்பா ஆட ஆரம்பித்திருந்தார்

இருபத்தெட்டு வயதான ஒலி
எதிரொலித்துத் திரும்புகையில்
ஒண்ணே முக்கால் வயதாயிருந்தது

நன்றி: புன்னகை -காலாண்டிதழ்



10 March, 2011

இருள்தான் எரிந்துகொண்டிருந்தது

ஒளி வருவதற்கு முன்பிருந்தே அந்த அறைக்குள்
இருள்தான் எரிந்துகொண்டிருந்தது
ஒளி வருவது புலனானதே இருளால்தான்

ஒளி வேட்டை மிருகத்தின் சாயலில்
இருளைக் கடித்துத் தின்னத் தொடங்கியபோது
கருப்பாய்ச் சொட்டிக்கொண்டிருக்கும்
இருளின் ரத்தத்தை உறிஞ்சுகிறது அதன் திரி

இருளிலிருந்து உயிர்கொண்ட ஒளியிலிருந்து
தன் புன்னைகையைச் சரிசெய்கிறான் சிவன்

பின்பு சிவனே இருளாகி அவனே ஒளியாகிறான்
அவனொளியில் ஒளிர்கிறது உலகம்

இருளே ஒளியாகி ஒளியே சிவனாகி
சிவனே உலகாகி உலகே இருளாலானால்
இருளே சிவனல்லவா

எல்லாம் இருள் மயம்

04 March, 2011

லாலிபாப் சாபம்

மம்மி... டாடி...
ரெண்டு பேரும் சண்டை போட்டீங்க
லாலிபாப்பை வாயில திணிச்சுடுவேன்
என்னைத் திட்டுனீங்க
உங்களை பஃப்ஃபல்லோவா மாத்திடுவேன்

மூனரை வயதுக்கு வளர்ந்துவிட்ட
கபிலனின் கடும் எச்சரிக்கையைப்
பொருட்படுத்தாததால்
இப்போது இரண்டு பஃப்ஃபலோக்கள்
ஒரு லாலிபாப்பைச் சுவைக்கும்
சாபத்தில் இருக்கின்றன


26 February, 2011

சிறகின் வழியே

மருத்துவமனையிலிருந்து துவண்ட நாற்றென
ஆயாவை வீட்டுக்கு ஏந்திவரும்
அந்தப் புளியமரத்து முடுக்குப்பாதையில்
தலைகுப்புற அசைவற்றுக் கிடந்த
வண்ணத்துப்பூச்சியை இழுத்துப்போகின்றன
கொலைக்கரம் வாய்த்த எறும்புக் கூட்டம்

காற்றுத் தொகுதி ஆராதித்துக்கிடந்த
அதன் வண்ணச் சிறகளிலிருக்கும்
நான்கைந்து ஓட்டைகளின் வழியே
வெளியேற முடிவு செய்துவிட்டது
ஆயாவின் உயிர்


10 February, 2011

காலத்தினாற்செய்த கொலை

துணுக்குற வேண்டாம்
இதில் எவ்வித தவறுமில்லை
இன்னும் சொல்வதென்றால்
இது நானுங்களுக்குக்
காலத்தினாற் செய்த உதவி

நீலம்பாரித்துக் கிடந்த உங்களது நாட்களை
மீட்டெடுக்க அவனுக்கேது உரிமை

வீழ்ச்சியுறுவதற்கெனவே உற்பத்தியாகும்
நதியிலிருந்து ஒரு கை நீரள்ளித்
தாகம்போக்க அவனெப்படிக் கற்றுத் தரலாம்

இறுக்கத்தின் நிலத்தில் நெகிழ்வின் துளிகளைச்
சொட்டுவிப்பது எந்தவகையில் முறை

பிடாரனின் பாம்புக்கூடையை ஆவலோடு
நோக்கிக்கொண்டிருக்கையில்
அழும் உங்கள் குழந்தைக்குப்
பால் புகட்ட பணிக்க இவன் யார்

எனக்குள்ளும் சாணைப் பிடிக்கும்
உங்களுக்கான கேள்விகளிலிருந்து
ஒன்றை உருவிப் பாய்ச்சினேன்
அவன் கழுத்தில்
பசித்திருக்கும் ஓநாயின் பாய்ச்சலாய்

வெளித்தள்ளிய நாவிலிருந்து
ஒழுகும் உமிழ்நீரில் நெளியவிருக்கும்
புழுக்களை அடித்துக்கொள்ளாமல்
பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்

நன்றி: உயிர் எழுத்து(மார்ச்2011)

29 January, 2011

மனுஷ்யகுமாரனின் மறியை பிதாவுக்குப் பலிகொடுத்துவிட்டு...

கக்கடைசியில் கல்வாரிக்கு அடித்திழுத்துப் போகிறாம்
எம் மனுஷ்யகுமாரனை
மனக்கசடு தோய்ந்த பரிகாசத்தோடும் - அவன்
காயங்களில் வழியும் நிணத்துக்கிணையான குரூரத்தோடும்
ஆறுதல் தரமுற்படுவோருக்கும் அவன் பாடுகளின்
துயரம்தான் கிட்டுமென்ற எச்சரிக்கையோடும்

தாளாது துவழும் அவன் காலடிகளைக்
கசையடிகளால் இம்சிக்க மறக்கவில்லை
அவன்பொருட்டு யாரேனும் கண்ணீர் உகுக்க நேர்ந்தால்
இம்சையை இரட்டிப்பாக்கவும் தவறவில்லை

மனுஷ்யகுமாரனின்
அத்தனை துயரங்களையும் கண்ணுற்ற எம் கண்கள்
வேசியின் வசப்பட்ட புலனாய்க் களிப்பால் திளைக்கிறது
அவன் தாகமென்று துவண்டபோது
திராட்சை ரசத்தில் எக்களித்த நாவுகளை இன்றும்
பாதுகாத்துக் கடத்துகிறோம் எம் சந்ததிகளுக்கு

தள்ளாடித் தள்ளாடி மனுஷ்யகுமாரன்
இழுத்துப்போகிற சிலுவைமரத்தின் அடிநுனியின்
தேய்மானத்திலிருந்து கசிந்துகொண்டே இருக்கிறது
எப்போதுபோல எம்மீதான கிருபை

மனுஷ்யகுமாரன் தொட்டுக் குணமளித்த
கரங்களைக் எம்மிடம் கையளித்துவிட்டு
சாந்தசொரூபியாய் முறுவலிக்கையில்
மனசின் வேசை திடுக்கிடுவதை மறைக்க
அடித்து இறக்கினோம் ஆணிகளை

விசணமுற்ற எம் குத்தீட்டிகள்
தூக்கிநிறுவிய சிலுவையில் தொங்கும் மனுஷ்யகுமரனின்
விலாநோகக் குத்தி உயிர்சோதிக்கையில்
பெருக்கெடுக்கும் ரத்தத்தில் நனைகிறது

அங்கலாய்த்த பெண்களையும் அவர்தம்
இறுக்கமுற்ற குழந்தைகளையும்
எம் கொடும் பார்வைகளால் அமர்த்தி
வழித்தவறிய மனுஷ்யகுமாரனின் மறியை
பிதாவின் பெயரால் பலிகொடுத்துவிட்டு
வீச்சமடிப்பது அதன் மாமிசம்தானென்கிறோம்

07 January, 2011

நாளின் பொம்மை

காற்றில் அடித்துக்கொணரப்பட்ட
கிழிந்த நாட்காட்டித் தாளைப் போலவும்
கறுத்துத் திரண்ட பாறையின்மீது
மோதிச் சரிகிற அலையைப் போலவும்
எனக்குச் சம்பவித்திருக்கிற இந்நாளுக்கு
நேற்றைய இயலாமையின் கழிவிரக்கமும்
எதிர்க்கால அச்சமும் முகமாயிருந்தது

எனது வலது பாரிசத்தில் கிடத்தி
ஆசுவாசப்படுத்தத் தாலாட்டினேன் அந்நாளை

நோயுற்ற குழந்தையின் கடவாயில்
மருந்து புகட்டும் சங்கின் வடிவில்
என் சொற்களை வடித்துக்கொண்டு
பருக்கினேன் துளி தைரியத்தை

வாலைக் குமரிகளின் யவ்வனம் கொப்பளிக்கும்
கூடுமிடங்களுக்குக் கூட்டிப்போய்
கிளர்ச்சியூட்ட எத்தனித்தேன்

புராதனமிகு கோயிலுக்குள் நடத்திச்சென்றபோது
அங்கிருந்து விடுபட மறுத்து எதெதையோ இட்டுக்கொண்டு
உதம்பியபடியேயிருந்த அந்த நாளின் மனம்
மார்கழியின் ஈரக்காற்றுத் தீண்டிய
சதைத் துண்டங்களாய் நடுக்கமுறுவதை
அவதானிக்க முடிந்தது

துக்கத்தின்பால் தோய்ந்துகிடக்கும்
துஷ்டிவீட்டைப் போல இருளத் துவங்கிய அந்நாளை
கபிலனிடம் ஒப்படைத்துவிட்டு உறங்கிப்போனேன்

அதிகாலை உறக்கம் விழிக்கையில்
நாளிலிருந்து என் சாயலில்
ஒரு பொம்மையை உருவாக்கிவிட்டு
புன்னகையை அணைத்தபடிக்கு
உறங்கிக்கொண்டிருந்தான்

நன்றி: உயிர் எழுத்து(மார்ச்2011)