01 February, 2013

இரதி மணாளன் கவிதை உலகம் ============================== (கதிர்பாரதியின் ”மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” கவிதைத் தொகுப்பை முன் வைத்து) -இளஞ்சேரல் http://elancheral-elancheral.blogspot.in/2013/01/kathir-bharathis-book-review.html?spref=fb


       உலகத்தின் வளங்களையெல்லாம் கன்னம் வைத்து அபகரித்துக் கொள்ள முனைகிற வல்லாதிக்க மேலாண்மையைத் தகர்க்கிற மொழியின் வீரியத்துடன் நவீன கவிதை இயங்கி வருகிறது. புத்தாயிரத்தின் உலக கவிகள் சந்திக்கும் மைக்ரோ க்ரைம் சைபர் கிரைம் அச்சுறுத்தல்களும் அதிகம். எல்லா மறைமுக நெருக்கடிகளையும் தன் கவிதைகளால் கடந்தும் எழுந்தும் பரவி வருகிறார்கள்.
       நவீன கவிதையின் புதிய நூற்றாண்டின் தேவைக்கான வடிவத்தை செழுமித்துத் தந்தவர்களில் ஒருவராக யுமா.வாசுகியும். ஜே.பிரான்சிஸ் கிருபாவும் இளைய தலைமுறையை பாதித்தவர்கள். தண்ணீருக் காகப் பிச்சை கேட்டுக் காத்துக்கொண்டிருக்கிற தமிழ் நிலத்தின் வறண்ட இதயங்களுக்காகக் கண்ணீர் சிந்தியவர்கள். தேய்ந்த சொற்களை மீண்டும் உருக்கி உருக்கி அணிகலன்களாக மாற்றி நமக்கு அணிவித்தவர்களில் முக்கியமானவர்கள்.
        அவர்கள் தான் தேவாதி தேவனாம் கருணா மூர்த்தியாம் இரட்சகப் பெருமாள் கிருத்துவை வரவழைத்து விடமுடியுமா அல்லது இங்கிருக்கும் ஒரு நவீன கவிஞனை கிருத்துவாக மாற்றி இந்த நிலமெங்கிலும் நடந்து சிலுவை சுமக்க வைத்து பாறைகளை வெடிக்க வைத்து நீருற்றை பீய்ச்ச வைக்க முடியுமா? தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க முடியுமா என்று யாசிக்கிறார்கள். நவீன கவிஞனின் கிருத்தும் மற்ற சமயத்தின் உருவாரச் சிலைகள் யாவும் அவனுடைய செல்லப்பிள்ளைகள். ஒரு வகையில் அவர்கள் தான் கொஞ்சம் தீர்க்க முடிகிற ஷரத்து விதிகளை கைவசம் வைத்திருக்கிறார்கள். கதிர்பாரதியும் தன் தொகுப்பில் முன் வைக்கும் கவிதையின் வழியாக  கிருத்துவிடம் பிரார்த்திக்கிறார்..

என் தேவனே...என் தேவனே..

திசைகளைப் பதற்றத்துள்ளாக்கி
மாநகர சாலையில் விரையும்
ஞாயிற்றுக் கிழமை கசாப்புக் கடைக் காரனின்
இருசக்கர வாகனத்தில்
\குறுக்கு வட்டாகக் கிடந்துக் கதறுகிற
மறியைப்பாத்ததும்
நீங்கள் என்ன செய்வீர்கள்
என் பிதாவே என் பிதாவே
ஏன் என்னைக் கைவிட்டீரென
கல்வாரி மலையில் அரற்றிய
என் தேவனே..என் தேவனே..என்று
கைத்தொழுவேன்
நான்
பக்-68
        யேசுவைப் போலொருவரைக் காண்பதோ அன்றியும் பிறர் போலிருக்கும்  அவரைப் பின் தொடர்ந்தோ செல்கிறோம். செல்லுதலும் கூட யார்க்கும் எளிய வழி அவ்வழியல்லவா.
          அவர்களின் சிகரெட் புகையின் வழியாகவாவது இந்திரனின் தேவதைகளை நசுக்கிவீசும் துண்டு சிகரெட்டினிலிருந்து உயிர்ப்பித்து ஜீன்ஸ் டிசர்ட் அணிவித்து, இரட்டை ஜடை போட்டு சீருடை அணிவித்து, அல்லது வடநாட்டு அழகியாக மாற்றி கொசுவம் வைத்து சுங்கிடிச் சேலை கட்டுவித்து குளிர்க் கண்ணாடி அணிவித்து வெண்கலத் தூக்குப் போசியில் கொஞ்சம் கருவாடு தந்து கோவில் நிலத்தின் வயலில் இறக்கி விடுகிறார்கள்.
    ஐநூறு கோடி சொத்துள்ள கதாநாயகன் வயலில் இறங்கி (டுப் போடாமல்) நாற்றுப் பெண்கள் மடி பார்த்துக் கொண்டிருக்கிறவனுக்கு உதவிட வைக்கிறார்கள்.
         வறண்டு கொண்டிருக்கும் அணைகள் தன்னுடைய  எல்லைகள் களவு போகும் தேசத்தின் குழந்தைகளுக்காக முகுந்த நாகராஜனும் வேலு சரவணனும் முருக புபதியும் புது எழுத்து மனோன் மணியும் இன்ன பிற சங்கல்ப விமோசினிகளும் இயங்குகிறார்கள். மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறகு நமக்குள்..





உன் பாசாங்குக்கும் பசப்புகளுக்கும்
மங்கியிருக்கும் நிலம்

எமக்கு வாய்த்தது நன்னிலம்தான்
நெகிழத் தொடங்கியிருக்கும் இக்கணத்திலிருந்து
அதனியல்பால் எல்லாம் கிட்டும்
எழுதுகோல் முளைக்கும்
கணனியும் கண்டடைவோம்
மரித்திருக்கும் குலசாமிக்கு உயிர்ப்பு துளிர்விடும்
சாங்கியமும் கொண்டாட்டமும் மீண்டும் நிறம் கொள்ளும்
நிலத்தின் வண்டல்களால் செப்புறும் மூளை
இருதயம் திடச்சித்தம் கொள்ளும்
கனவுகள் கள்வெறியுட்டும்
இறுகிக்கிடந்த இச்சைகளுக்கு  றெக்கை அரும்பும்
மூதாதையர்கள் தேடிக் களைப்படைந்த புதையல்கள்
அகழாமல் மேல்வரும்
நீளும் ஆயுள் ரேகைகளில் எம் சந்நதி வளப்பமுறும்
எல்லாம் கிட்டும் எமக்கு
யாவற்றுக்கும் முன்
உன் பசப்புகளுக்கும் பாசாங்குகளுக்கும்
மயங்கி இருக்கும் நிலத்தை மீட்டாக வேண்டும். –
பக்-31-
        இந்தக் கவிதையின் விசாலம் உண்மையின் தடித்த தழும்பை மேன் மேலும் கீறிவிடுகிறது. தன் நிலம் இழந்தவனுக்கு ஆதரவாக கவிதை தன் மொழியின் அதீத ஆற்றல் கொண்டு முழங்கியும் ஆர்ப்பரித்தும் பேசுகிறது.
ஒரு சங்கல்பம். ஒரு தீட்சண்யம். எழுச்சி.
     
         மகன்களும் மகன்களின் நிமித்தமும்-பக்-21 நெடுங்கவிதைகள் ஒன்பது காட்சி சித்திரங்களாகப் பதிவாகியிருக்கும் கவிதைகளில் கதிர்பாரதியின் மொழி ஆவணமாக மாறியிருக்கிறது. தொகுப்பில் திரும்பத்திரும் பவும் அந்த மொழியின் அடர்த்தியும் எளிமையான. இயற்கையான கிராமத்தின் அழுக்கு வண்ணங்களில் மிளிரும் சித்திரங்கள். விவசாய மக்களின் தினக்காட்சிகள் நெடுங்கவிதையினூடே வந்து போகும் நகைமுரண் அணியின் சொல்லாட்சியும் அபாரம்.
        நம் காலத்தின் அரசியலும் வாழ்வின் நிமித்தம் மைதானத்தில் மழையும் நீரும் பொய்த்து,தற்கொலைக்கு முன்பு சாணம் திண்ணும் மக்கள் கூட்டத்தினுள் அரங்கேறும் வினோதமான காட்சிகள் இவை. நவீன கவிதையின் ருத்ரதாண்டவ நடனம் நிகழும் காலமும் சூழலும் இவைதான்.
     
       ஆழந்த குகைகளுக்குள் இறங்கும் முன்பு சில படிகள் போல சில வெட்டுத் தடங்களை உருவாக் கியிருப்பார்கள் முன்சென்றவர்கள். எனினும் போகப் போக ஒன்றும் தென்படாது. அவர்கள் அந்தப் பாதைகளின் வழியாக சென்றார்களா அல்லது பாதியில் திரும்பினார்களா தெரியாது. எனினும் பின் செல்லும் யோகியோ துறவியோ பின் தொடர்ந்து கொஞ்சம் ஆழம் போகவே விரும்புவான். நவீன தமிழ் கவிதையின் இயக்கத்திற்கு குகைகளும் அருவிகளும் பிடியில்லாத மாயக்கயிறுகளும் கயிற்றரவம் போன்ற பிரமைகளும் சாதாரணமாகவே தோன்றும் படிமங்கள். கவிஞனுக் குள்ளாக சொல்லும் காட்சிப்பிறழ்வும் வடிவம் செய்து கொள்ளும் அணிச்சை அபுர்வமான செயல்கள்.
 
        இந்த வரிகளை வாசிக்கலாம். ஏற்கெனவே இந்திராவின் எமர்ஜென்சி காலத்தில் 74-77 வரையிலான இந்திய தமிழ்க் கவிதைகளில் உருவாக்கிய படிமங்களாக இருந்தாலும் மரபின் உருவகத்தில் அற்புதமாக முழு கவிதையும் எழுதப்பட்டிருக்கிறது.

திலீபன் வைத்த கொலுவில்
வெளிமானை முதுகில் சுமந்து கொண்டு
புல் மேயத் தயாராக இருக்கிறது புலி்
பசுமாட்டு நிழலி்ல் சிங்கம் இளைப்பாற
கரடியும் குரங்கும் முகத்தோடு முகமுரசி
விளையாடும் பாவனையில் இருக்கின்றன
காந்திஜி கையில் துப்பாக்கி கொடுத்துவிட்டு
புல்லாங்குழல் வாசிக்கிறான் வேட்டைக்காரன்.

       கவிதைகளுக்குள் கவிதையின் பிரச்சனையை உள்ளடக்க பிம்பங்ளையும் படிமங்களையும் கலைத்துக் கலைத்துப் பின் வேறொன்றின் வழியாக புதிய பொருளை உணர்த்தும் கவிதைகளும் வரிகளும் சிறப்பு. ஒரே மாதிரியான வடிவொத்த கவிதையின் பொருள் உணரப் பட்டாலும் ஒவ்வொரு கவிஞனின் வாழ்வு வேறுவேறானது. சமகாலத்தில் நவீன கவிஞனும் தீவிர இலக்கியவாதியும் எதிர்கொள்ள நேர்கிற விமர்சனம் ஒரேமாதிரியாக ஒன்று போலவே எழுதுகிறீர்கள் என்பதுதான். முதலில் புரியவில்லை என்று சொன்னவர்கள் தான் இப்போது ஒரே மாதிரி என்கிறார்கள். கொஞ்சம் அவர்கள் முன்னேறி வந்ததற்காக மகிழ்ச்சி கொள்ளத்தான் வேண்டும்..
        நவீன கவிஞன் ஒருவர் விவசாயத்தில் ஈடுபடுவார். ஒருவர். நகரமாயமான வாழ்வின் நெருக்கத்தில் இருப்பார். ஒரு பாரம்பரியம் மிக்க தொழில் செய்து கொண்டிருப்பார். ஒருவர் நிதிபரிவர்த்தனை செய்து கொண்டிருப்பார். ஒருவர் தினசரி வியாபாரியாக இருப்பார்கள் இப்படியாக சில நவீன கவிஞர்களின் வாழ்வு கழிந்து கொண்டிருக்கும். எனினும் அவர்களின் மொழியும் காட்சியும் உணர்த்தும் பொருளும் சித்திரத்தையும் நீ்ங்கள் எப்படி ஒரே மாதிரி எழுதுகிறார் என்று சொல்வீர்கள்.
   
       ஒரு காலத்தில் கடல் வணிகத்தில் தமிழ் சமூகம் கொடிகட்டிப்பறந்தது. இன்று கடல் நிலம் தரைநிலம் முழுவதும் அந்நிய நாட்டினரின் ஆளுகையின் பிடியாக மாறப்போவதை காட்சிப்படுத்தியிருப்பதை வரவேற்கவும்..

வைகல்தோறும் அசைவின்றி,உலகு செய்க்
குறைபடாது, நீரில் நின்று நிலத்தேற்றவும்,
நிலத்தில் நின்று நீர்ப்பரப்பவும்,அறந்தறியாப்
பலபண்டம்,வரம்பறியாமை வந்து ஈண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்,வலியுடைவல்
லணங்கினேன்,புலிபொறித்துப் புறம் போக்கி
மதி நிறைந்த மலிபண்டம்-
பட்டிப்பாலை-124-136
    மேற் கவிதையில் கப்பலில் வந்த பொருள் கரையில் இறக்கியும்,கப்பலில் ஏற்றியும் அம்மூட்டைகளின் மேல்
சோழன் முத்திரையை வைத்தும்,சுங்கம் வாங்கும் குறைவில்லாத பண்டங்கள் என்பதால் அயல் நாட்டு  வணிகம் அறிந்தோம்.ஒரு சந்தை ஒழுங்கு இருந்தது.
         நம் நவீன காலத்தின் கவிஞன் கதிர்பாரதியின் லாபங்களின் ஊடுருவல் பக்-17 கவிதையில் உள்நாட்டுச் சந்தைகளுக்குள் நுழைந்த அந்நியர்களின் சந்தைப் படுத்தலை விமர்சிக்கிறார்.        
  ஆயினும் கோடாணுகோடி முதலீ்டு செய்யப்பட்டு கட்டப்பட்டு வெறுமையாகக் காட்சியளிக்கும் காலியாக இருக்கும் டைடல்பார்க் அறைகள் எத்தனை. இது பற்றிய ஆரம்ப சித்திரங்கள் எப்படியிருந்தது. மூவாயிரம் பேர் வேலை செய்த ஆலையை இழுத்து மூடி அந்த நிலத்தை இடித்துத்தள்ளி அங்கு இப்போது 6000 பேர் குடியிருக்கும் விதமாக அடுக்குமாடிக்குடியிருப்பு கட்டப்பட்டு தற்போது அங்கு அருபது குடும்பங்கள் மட்டும் வசிக்கும் சித்திரத்தை நவீன கவிஞன் பேசாமல் எழுதாமல் இருக்க முடியுமா.  நவீன கவிஞர்கள் மன அவசங்களையும் தன் முனைப்பின் நீர்மையையும் காமத்தையும் உடலை மட்டுமே பேசுகிறார்கள் என்று மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து இலக்கியப் பணியாற்றும் பிரபல கவிஞர்கள் பேசுகிறார்கள். புத்தி மதி சொல்கிறார்கள்.
     
        ந.முத்துசாமி.ஞானக் கூத்தன், ஆத்மாநாம், அபி.
எஸ்.வைத்தீஸ்வரன்,கிருஷாங்கினி,அம்பை, இரா.மீனாட்சி நாரணோ ஜெயராமன் போன்ற மூத்த தலைமுறையின் ஆளுமைகள் ஃபார்வாட் கம்யுனிட்டியாக  இருந்தாலும் மாறிவரும் தமிழின் புதிய தலைமுறையின் எழுத்து, கவிமொழியின் எதிர்காலச் சித்திரங்களைக் குறித்துப்  பேசியிருக்கிறார்கள்.
        சங்கக் கவிதைகள் ஒரு கவிதை நான்கு மாற்று ஈட்டுப் பொருளைத் தரும். நவீன கவிதைகள் இருபது வகையான ஈட்டுப் பொருளைத் தருகிறது. சங்ககாலத்தின் இருப்பும் ஒலியும் அச்சமும் துரத்தல்களும் இப்போது ஓய்ந்திருக்கிறது. குதிரைகள் இல்லை. கழுதைகள் இல்லை. புலிகள் இல்லை, கிராமத்தில் குரங்குகள் இல்லை. மனிதக்குரங்குகள் இல்லவே இல்லை.
      ஒரு அறை உலக உருண்டையாக மாறியிருக்கிறது தற்பொழுது. அதற்குள் காற்று இல்லை. ஒரு சொல் உலகத்தை நீர்க்குமிழியாக்கியிருக்கிறது. ஒரு கிராம் மாத்திரை அவனை நான்கு நாட்கள் அசைவற்று கிடக்கப் பண்ணுகிறது. முதல், இடை, கடைச் சங்கத்தில் இவை இருந்திருக்கிறதா.
   
          கவிதை நூல்களுக்கு விமர்சனம் எழுதும் போது எனக்கு அவசியமாக வேண்டியது, கொஞ்சம் சன்னமான இரைச்சல்,காற்றாடியின் இரண்டாவது நிலை சுழல், ராக்கோழிகள் மூன்று கட்டைச் சுருதியில் கிர்ர் சத்தம் வேண்டும். ரயில்கள் குறுக்கும் நெடுக்குமாகக் கடக்க வேண்டும். அல்லது ரயில் இன்ஜின் தேவையில்லாமல் உறுமிக்கொண்டே இருக்கவேண்டும்.
           ரயில் பாதைகளில் சிந்திய தானியங்களை காகம்,குருவி,புறாக்கள் கொத்திக்கொண்டிருக்கவேண்டும்.

       தன் இதழ்களையே இரும்பாக்கிக் கைவிரல்-கைகளாக்கிக் கொண்ட பறவைகளைப் போலவேதான் நவீன கவிஞன்-கவிதையின் நிலையும். வயதான யானையின் தும்பிக்கையாக, சரியான நேரத்தில் ஓய்வுதியம் பெற முடியாத, அர்ச்சனைக்கு போக முடியாத மலராக, இறுதியில் மிச்சமாகி யாருக்கும் உபயோகமில்லாது தண்ணீரோடு கறைந்து போகும் உணவாகவும் கவிஞனின் வாழ்வு இருக்கிறது. எப்போதும் கற்புரம் அவித்து “நான் மனிதனின் சொல்” என்று சத்தியம் செய்யத் தயாராகவும்  இருக்க வேண்டும்.
     
         தொகுப்பில் உள்ள சில கவிதைகளில்  காலத்தின் ஆர்ப்பரிப்பு கூச்சல் பின் துரத்தல் இருக்கிறது.
காலத்தை அறுக்கும் ஆலகாலம், லாபங்களின் ஊடுருவல்,கடக்க இயலாத தெரு, காலத்தினாற் செய்த கொலை, ஆமாம் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள், கனவிலிருந்து எழுந்து போய் சிறுநீர் கழித்தேன் ஆகிய கவிதைகள் எனக்குப் பல சிந்தனைகள் கீழ்கண்டவாறு தோன்றிட வைத்தது என்பதைப் பகிர்ந்து கொள்கிறேன்.
 
       குடை ரிப்பேர்க்காரரிடம் ஒரு குடையிருக்கும். அந்தக் குடையை அவர் மழைக்கு உபயோகப்படுத்த மாட்டார். வெயிலுக்கும் நிழலுக்கு மட்டுமேயானது அது. ஒரு கணம் விரும்பி  அந்தக் குடையைக் கேட்டேன். அழகிய வேலைப்பாடு கொண்ட பிரம்புக் கொண்டையணிந்த குடையது. இந்தப் புதுசை வெச்சுக்கங்க என்றேன். அவரோ “வற்புறுத்தாதீங்க“ என்றார். சாவி ரிப்பபேர், பூட்டு ரிப்பேர்க்காரர்கள் எல்லாம் ஒரு குடையின் கீழ் அமர்ந்திருப்பார்கள்.
        சமகாலத்தில் அக்குடை போலவே இன்றும் வண்ணக் குடைகளை மல்டி பிராண்ட் வீட்டு உபயோகப் பொருட்கள். கணணி விற்பவர்கள், கார் விற்பவர்கள் உபயோகப் படுத்துகிறார்கள். காவலர்கள் குடைக் காரர்களை விரட்டுகிறார்கள். வண்ணக் குடைக் காரர்களிடம் இளநீர் வாங்கி அருந்துகிறார்கள்.
       
         மேலும் நூலில் மற்ற கவிதைகளில் சில ஒரு வார்ப்பு அச்சின் உருவக் குமிழ்களில் சுண்ணக்களிமண் மாவும் களிம்பும் வார்க்கப்பினூடாகத் திணிக்கப்பட்டு அப்படியே தலைகவிழ்த்துக் கொட்டினால் ஒரு கடவுள் உருவம் கிடைக்கும்.அல்லது பொம்மைகள் கிடைக்கும். அப்படியாக கவிதைகள் உள்ளது. அதனின் கவிமொழி வாசிக்க ஏதுவாக சிறு உள்ளக்கிளர்ச்சி தருவதானாலும் அடுத்த நிலைக்கு கவிஞனை அனுப்ப மறுக்கும் கவிதைகள். அக்கவிதைகளை கதிர்பாரதியால்  மேலும் செழுமைப்படுத்த வேண்டியவை.
     
       கதிர்பாரதியின் முதல் தொகுப்பு என்பதை நம்ப முடியாமையின் காரணம் அதன் விலாசமான காலப்பரப்பு, கலை அனுபவத்தின் நேர்த்தி, கால ஒழுங்கின் வளம். ஒரு நிலைக்குள்ளாக தன்னை ஒழுங்கு படுத்திக் கொள்ள முனையும் ஆவல். தன் எழுத்திற்கும் தமக்குமான உடமையை வலியுறுத்தும் முயற்சி. ஆகியவையால்  தெளிவாக உணரமுடிகிற வலிமை.
   
சமகாலத்தின் அச்சு வரைகலையுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நூலாகவும் வெளியிட்டுள்ள புது எழுத்து பதிப்பகத்திற்கும் மனோன்மணிக்கும் வாழ்த்து சொல்லவேண்டியிருக்கிறது. வாய்ப்பிற்கு நன்றி...


வெளியீடு
புது எழுத்து
பக்-68
விலை –ரூ.60-
ஆசிரியர்-கவிஞர்-கதிர்பாரதி
Kathirbharathi@gmail.com
Cell-98417 58984


Puthuezuthu
2-205 anna nagar
Kaveripattinam-635112
Krishnagiri Dist
90421 58667
pudhuezuthu@gmail.com