30 September, 2011

கிணற்றுக்குள் தழும்பும் கேவல்

எருக்கம்புதர்கள் மண்டிக்கிடக்கும்
இந்த வீடு மட்டும்தான் ஒருகாலத்தில்
வசீகரமிக்கதாக இருந்தது
ஒளிபொருந்தியதாகவும் இருந்தது

அந்தத் தெருவிலேயே
புறா வளர்ந்த அந்த வீடுதான்
ஓர் இறகுபோல மேலெழும்பிப்
மிதப்பதாகவும்
லயத்தோடு கசியும் இசைதான்
வீடாகிவிட்டதாகவும் தோன்றும்

இந்த வீட்டின் துளசி வாசத்தில்
மயங்கிய
பதின்பருவத்துத் தடயங்கள்
இவ் வீட்டைப்போலவே
சிதிலமாகிவிடவில்லை இன்றும்

புறாக்கள் இரையுண்ட
அவ் வீட்டின் கிணற்றடி
எப்படிப் பார்க்கும் தைரியம்
நரைக்குக்கூட இல்லை

அதற்குள்
தேங்கி இருண்டிருப்பது
தண்ணீரல்ல
உன் கேவல்

பசலைக்கொடி

வெயிலுக்குப் பொருக்குத் தட்டிவிட்ட
அறுவடைக்குப் பிறகான விளைநிலத்தில்
வெற்றுப் பாதங்களுடன் நடப்பதற்கு
நிகரானது
அந்தக் கடைசிப் பார்வையின் வேதனை

வெள்ளாமையைத் தின்னவரும்
கால்நடைகளை விரட்டுவதென
புறங்காண செய்துவிட முடியவில்லை
அந்த நினைவின் பட்டாளங்களை

விதைப்புகாலத்தின் வரப்பில்
விழுந்துவிட்ட நெல்மணிகளை
கரிச்சான்கள் கொத்திப்போவதுபோல
உதிர்ந்த உப்புத் துளிகள்
அந்தப் பாதையின் புழுதியில்தான்
உலர்ந்து மறைந்தன

ஊருக்கு வெளியே கணத்து நிற்கும்
சுமைதாங்கிமீது வளரும் துயரமாக
செழித்துப் படர்கிற
பிரிவின் பசலைக் கொடிக்கு
உயிரைப் பந்தலாக்குவதுதான்
சாலப் பொருந்தும்


நன்றி: உயிர்மொழி இதழ்

தரைதட்டுதல்

கார் பொம்மையை உருட்டிக்கொண்டு
நடுசாமத்தோடு விளையாடும்
மகனை அதட்டி
உறக்கத்தில் ஆழ்த்திவிட்ட
அப்பாவுக்குத் தெரியாது

அவன் கனவுக்குள் நிகழ்ந்துவிட்ட
போக்குவரத்து நெரிசலில்
அதே காரில்
தாம் புழுங்கித் தவித்து
தரைத்தட்டி நிற்கிறோம்
என்பது

27 September, 2011

குதிரைக்குக் கொம்பு முளைக்க ஆரம்பித்துவிட்டது

இரண்டு வயது நிரம்பி
வழிந்துவிடத் துடிக்கும்
அந்தச் சின்னஞ்சிறு சிறுவனின்
கண்களிலிருந்து கண்ணீர்
வழிந்துவிடத் துடித்து
கடைசியில் புகாராக
மாறிவிடுகிறது அப்பாவிடம்

அண்ணன்
தன் குதிரை பொம்மை கொண்டு
உதைத்துவிட்டதைச்
சொல்லத் தெரியாது
திணறலோடு இறுதியில் சொல்லிவிடுறான்
மாடு முட்டிவிட்டதாக

குற்ற உணர்ச்சியில்
குதிரைக்குக் கொம்பு முளைக்க
ஆரம்பித்துவிட்டது

13 September, 2011

இருக்கலாம்

உச்சி ஆகாயத்துக்குப் பக்கத்தில்
காற்றுவெளியில் நிச்சலனமுற்று
நீந்திக்கொண்டிருக்கும்
அந்தப் பருந்து,
நடுநெற்றியில் தீயெரிய
போதிமரத்தடியில்
ஆழ்நிஷ்டையிலிருக்கும்
சாக்கிய புத்தனின்
மனமாகவும் இருக்கலாம்

10 September, 2011

அதுவாக இருக்கிறது அது

மூதாதையரடி மூதாதையராக அது
அவனிடம் \ அவளிடம் வந்து சேர்ந்திருக்கிறது

புற்றுக்குள் நுழைந்துவிட்ட எலி
பாம்பு கண்டதும் பதறித் திரும்புமே
அந்தப் பதட்டத்தோடே வைத்திருக்கிறது
எப்போதும்

காய்ந்தெரிக்கும் கோடையின் மாநகரச் சாலையில்
கானலெனப் பிசுப்பிசுக்கிறது
நீருக்கேங்கி வெடிப்புறும் கரம்பையில்
சிலுசிலுவெனக் கசியும் ஈரமாகிறது

மேனியை யாழ்க்கம்பியாக்கி
மீட்டெடுக்கும் இசையில் களிப்புறுகிறது
அந்த இசையில் உலாத்துகையில்
அவன்\அவள் பறவையாவது நிச்சயம்
அல்லது சிறகளாவது முளைக்கும்

கிளையிலிருந்து கழன்றுவிட்டப் பழமாக
உதடுகளுக்கு எட்டாத முத்தமாக
நடுநிசியில் இளம்விதவை தலைக்கு ஊற்றும் நீராக
சீறும் நாகம் கக்கும் முதல் துளி விஷமாக
யாவுமாகவும் இருக்கிறது

இல்லை யாவுமற்று
அதுவாகவே இருக்கிறது அது