31 December, 2024

கவிதா பாரதி பரிந்துரை | அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது | கதிர்பாரதி 4வது புதிய கவிதை நூல்|


 ங்களுக்குக் கவிதைகள் பிடிக்காதென்றாலும் பரவாயில்லை,

கதிர்பாரதி எழுதிய
'அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது' என்னும் கவிதைப்புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் நீங்கள் இதுவரை காணாத உங்கள் அம்மாவை இதில் காண்பீர்கள்
#
வயலில் கால்கள் புதைய
நாற்று நடும் அம்மாவைப் பார்த்திருக்கிறேன்
தன்னைப் பியத்துப் பிய்த்து
சேற்றில் ஊன்றுவாள்.
பின்னொரு பருவத்தில்
அவள் உடலை அறுவடைசெய்து பசியாறுவோம்
அவள்
ஒரு விளைந்த கதிர் அசைவதுபோல
தலைகுனிந்து வருவாள்
அந்தியில் இருந்து.
#
நாற்பது நாட்கள்
தவக்காலம் முடியும் முன்பு
பெரிய வெள்ளி அன்று
யேசுவை கசையடியாக அடித்து தலையை முள் மொழியால் கிழித்து பாதங்களையும் கரங்களையும்
கூர் ஆணிகளால் துளைத்து சிலுவையிலேற்றி
விலாவை ஈட்டியால் குத்தியபோது ரத்தமும் நிணமும் பீறிடுகின்றன பாஸ்கா நாடகத்தில்
அப்போது
சிலுவைக்காரனைப் பார்த்து
குலுங்கி குலுங்கி அழுகிற அம்மாவே அழாதே நீ அழாதே
சிலுவையில் தொங்குபவன்
உன் மகனும் அல்ல
சிலுவைச் சாவும் அவனுக்குமல்ல இதோ உன் பின்பக்கம் அமர்ந்து நானும் நாடகம் காண்கிறேனே தெரியாதா உனக்கு
சட்டென்று எனை அருகணைத்து பதற்றம் ஆறினாள்
சிலுவைக்காரனை முத்தமிட்டு முப்பது வெள்ளிக்காசுக்காக
காட்டிக் கொடுத்த இந்த யூதாஸ் இஸ்காரியோத்தின் அம்மா
#
கக்கடைசியில்
ஏர்வாடி தற்காவில்
அம்மாவைச் சேர்த்தோம்
சங்கிலி பிணைத்து அழைத்துப் போகையில்
என் தலை தடவினாள்.
அப்போது கலைந்த முடியை எத்துனை முறை சீவியும் ஒழுங்குபடுத்த முடியவில்லை
தன்னுடலுக்குத் தானே தீ வைத்துக் கொள்ளும் அந்திக்கு
இந்த வேதனை புரியும்
#
இப்படியாக அறுபது கவிதைகளில்
அம்மாவைப் பிரசவித்திருக்கிறார் கதிர்பாரதி
பின்னுரையில் கவிஞர் கரிகாலன் கூறுகிறார், "கதிர்பாரதி காட்டும் அம்மா அவருடைய அம்மா மட்டும் அல்ல அவர் தமிழ் பிள்ளைகளின் தாய் அடையாளம்.."
#
அண்மையில் எந்தக் கவிதைப் புத்தகமும் இந்தளவுக்கு என்னை உலுக்கியதில்லை..
என்னை நம்புபவர்களுக்கு இந்தப் புத்தகத்தை வன்மையாகப் பரிந்துரைக்கிறேன்
#
அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது
வெளியீடு: நாதன் பதிப்பகம்
விலை ரூ.100
📞 98840 60274
அரங்கு எண்: 664

All react

28 December, 2024

பேனாவில் சுரக்கும் தாய்ப்பால் | பித்தன் வெங்கட்ராஜ் | கதிர்பாரதியின் அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது கவிதைத் தொகுப்புக்கு எழுதிய விமர்சனம்

ரு சொல்லாக அணுகையில் அம்மா என்பது ஒரு விளிச்சொல். அம்மன் என்பதன் விளி. அது தன் மீது கவனத்தைத் தரச்சொல்லிக் கேட்கும் ஓர் அழைப்பு. சொல்லாக மட்டுமே பார்க்கவியலாத சொற்களுள் முதன்மை பெறுவது 'அம்மா'. இப்பூமியில் மக்கள் இல்லாத உயிர்கூட இருக்கலாம். ஆனால், 'அம்மா' இல்லாமல் ஓர் உயிர் உருவாகமுடியாது. அம் என்றால் அழகிய என்று பொருள். அம்மா என்றால் அழகினில் மாப்பெரிது என்றும் சொல்லலாம்.

அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது என்று கூறும் கதிர்பாரதி அவர்கள், சிலநேரங்களில் நம் கண்ணில் மறைந்திருக்கும் ஓர் அம்மாவையும், சிலநேரங்களில் நாம் கண்ட அம்மாவின் கண்டிராத வேறொரு
பரிமாணத்தையும் காட்டுகிறார்.
வானத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருக்கலாம். கடற்கரையில் ஆயிரம் சிப்பிகள் இருக்கலாம். ஆயிரம் பறவைகள் பாடித் திரியலாம். ஆயிரம் பனித்துளிகள் விடியலை வரவேற்கலாம். ஆனால், உலகம் முழுமைக்கும் தேடினாலும் ஒரே அம்மாதான் என்றார் அமெரிக்கக் கவிஞர் கூப்பர். அப்படித்தான் எல்லா அம்மாக் கவிதைகளும் எல்லாருக்கும் பொருந்துவனவாகவே இருக்கின்றன.
'மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்' என்று தொடங்கி, தாம் தாய் வயிற்றில் கடந்து வந்த ஒவ்வொரு மாத இடர் நிலையையும் பட்டியலிடுகிறார் மாணிக்கவாசகர். கதிர்பாரதி அவர்களின் 'இரத்தமும் சதையுமான' கவிதையை அந்தத் திருவாசகத்துக்கு ஈடான ஒருவாசகமாகக் கருதுகிறேன்..
கடவுளின் கையில் காற்றற்ற துவண்ட பலூனாயிருந்தது தொடங்கி, தன்னை ஈன்றெடுக்கத் தாய் தன்னைத் தானே கிழித்துக்கொண்ட வரை என அவர் கூறும் துன்பம், 'தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்' என்ற திருவாசக வரிகளுக்கு ஒரு குறைவுமில்லாத வரிகளே என்கிறேன்.
ஒரு கவிதையில் டாஃபொடில்ஸ் மலர்களைக் காட்டுகிறார் கவிஞர். பொதுவாக டாஃபொடில்ஸ் மலர்கள் வளமை மற்றும் மீண்டெழுதலின் குறியீடு என்கிறார்கள் அறிஞர்கள். மஞ்சள் புடைவை கட்டி விரதமிருக்கும் அம்மாவுக்கு அம்மலரை ஒப்புமை கூறியிருப்பதைப் பார்க்கும்போது, அம்மலருக்கு அம்மாவினும் சிறந்த ஒப்புமை இருக்கவேமுடியாது என்று தோன்றுகிறது.
இன்னொரு கவிதையில் 'அம்மா அமைதியாகிவிட்டால்
யார்தான் அமைதியாக இருக்கமுடியும்' என்ற வரிகள் மிகவும் கனமானவை.
'தாயிற்சிறந்த கோவிலுமில்லை' என்றாள் ஔவை. 'ஈன்றாளின் எண்ணக் கடவுளும் இல்' என்றார் விளம்பிநாகனார். தாயைத் தெய்வமென மதி என்ற அறவுரைகள் ஒருபக்கமிருக்க, தாய் தன் பிள்ளையைத் தெய்வமாகக் கருதிப் போற்றுகிறாள் என்பதை ஒரு கவிதையில், 'எந்நேரத்திலும் பிள்ளையைக் கடவுளாக்க முடிகிறது அம்மாவால்' என்று எழுதுகிறார் கவிஞர்.
குழந்தை வெளிவரும் காலம் நெருங்கியதும்தான் தாய்க்குப் பால் சுரக்கத் தொடங்குகிறது. எத்தகு வறுமையிலிருந்தாலும் பிறந்த குழந்தையின் பசி தீர்க்க இயற்கை வழங்கும் கொடை அது. 'வயிறாரத் தாய்முலையுண்ணாக் குழவி நல்குரவில் அதாவது வறுமையில் வாடுகிறது' என்கிறது திரிகடுகம்.
ஒரு கவிதையில், 'குழந்தை தூங்கிவிட்டாலும் தாய்க்குப் பால் ஊறிக்கொண்டுதானே இருக்கும்' என்னும் வரிகளில் தாயையும் தாய்ப்பாலையும் மீறியதொரு தரிசனம் தருகிறார் கவிஞர்.
'பேதையா அவ இருப்பா
மேதையா ஒன்ன வளர்ப்பா' என்ற ஐயன் வாலியின் வரிகளை‌ எண்ணி,..
'அவள் உடலை அறுவடை செய்து
பசியாறுவோம்.
அவள்
ஒரு விளைந்த கதிர் அசைவது போல்
தலைகுனிந்து வருவாள்
அந்தியில் இருந்து'
என்ற இந்தக் கவிதை வரிகளை அடிமறிமாற்றுப் பொருள்கொண்டும் நினைத்துப் பார்க்கிறேன். 'அந்தியில் இருந்து வருகிறாள்' என்பதை இன்னும் ஆழமாக உணர்கிறேன்.
தலைகுனிந்த கதிராய் இருந்த தாய்
தலைநிமிர்ந்த கதிர்பாரதியைத் தந்திருக்கிறார். அதைத்தான் இன்னொரு கவிதையில் 'அவள் குருதியிலிருந்து பெருகியதுதான் எல்லா வார்த்தைகளும்' என்று எழுதுகிறார் கதிர்பாரதி அவர்கள். உண்மைதானே.. அவள் குருதியிலிருந்து பெருகியதுதான் ஒவ்வொரு உயிரும் ஆகிய புதிய புதிய உலகங்கள்...
வாழ்த்துகள் Kathir Bharathi அண்ணா.

27 December, 2024

திருத்தம் | எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் | அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது கவிதைப் புத்தகத்துக்கு எழுதிய விமர்சனம்|

திர் பாரதியின் புதிய கவிதை நூல்

அம்மா என்பவள் குடும்பத்தில் ஒருத்தி... முக்கியமானவள் மற்றும் நாட்டை அம்மா என்று அழைக்கிற வழக்கமும் நம்மிடம் உண்டு. பாரதமாதா அப்படித்தான்.

ஆனால் பிரபஞ்சத் தாயாகி அம்மா எல்லோரையும் அணைக்கும் அனுபவங்களால் இந்த தொகுப்பை நிறைத்திருக்கிறார் கதிர் பாரதி அவர்கள்
இன்றைய நவீன கவிதை உலகம் இறுக்கமும் படிமக்குவியல்களும் தெளிவின்மையும் பல மாய ரூபங்களும் கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிகிற போது தெளிவான அனுபவங்களால் அமைக்கப்பட்ட இக் கவிதை வரிகளை பார்க்கிறபோது ஆறுதலாகவே இருக்கிறது. அவையெல்லாம் நல்ல கவிதைகள் அடையாளமாக இருக்கின்றன.
காட்சிகளை விவரிப்பது, உணர்ந்த ஒரு அனுபவத்தை பதிவு செய்வது, , தேவையான வார்த்தைகள் . அது எளிமையானதொரு பகிர்வாய். இருத்தல் வேண்டும் என்ற அணுகுமுறையில் இவை உச்சம் பெறுகின்றன.
இப்படி அம்மாக்களை வாய்த்தவர்கள் அதிஷ்டசாலிகள். இப்படி அம்மாக்கள் அமையாது போனவர்களை எண்ணி கண்ணீர் விட ஒரு சந்தர்ப்பம் கூட இது .
நிகழ்கால சம்பவங்கள் ஊடே ஒரு பேண்டஸித் தன்மையும் பல பகுதிகளில் வந்து விடுவது இன்னொரு பரிமாணமாக இருக்கிறது அம்மா மாடு முதல் குழந்தைகள் வரைக்கும் பலருக்கு ஆறுதல். உயிர் தண்ணீர் என்று இருப்பது போல் இருக்கிறவள் ஏர்வாடியில் கொஞ்சம் இருக்கிற அனுபவங்களும் வந்து எதார்த்தத்தைத் தொட்டுப் போகிறது. கொஞ்சம் பைபிளும் உலவும் குருவிகளும் கற்றாழைச் செடிகளும் இந்த கவிதைகளுக்கு ஒரு அரணாக அமைந்து விடுகின்றன. மாந்திரீகமாய் முளைப்பாரிக்கு தலை துவட்டும் சந்தர்ப்பங்களும் பல அமைகின்றன பொன் மூக்குத்திகளுக்கு மத்தியில் வேப்பம்பூக்கள் பளபளக்கும் தருணங்களை கவிதைகளில் பார்க்க முடிகிறது. மேகம் கூட அனாதையாய் விடக்கூடாது என்று துயரம் படும் அம்மா யாரையும் அனாதையாக விட்டதில்லை. ஆனால் அவள் கதி என்னவென்று பல சமயம் யோசிக்க வைக்கிறது
அம்மாவின் குருதியில் இருந்து கிளம்பிய வார்த்தைகளால் இக்கவிதைகள் அமைந்துள்ளன. விளைந்த கதிர் அசைவது போல வலம் வரும் அவளது உடலை கூறாக்கி பசியாற்ற முடிகிறது . சமூகத்தில் அவள் தன்னை மனதால் நிலைநிறுத்திக் கொண்ட அனுபவங்களால் இந்த கவிதைகள் நிரம்பி இருக்கிறது உலகத்தையே அணைத்துக்கொள்ளும் இது போன்ற அம்மாவின் உள்ளங்களால் கவிதை வாசகர்களை அணைத்துக் கொள்ள முடிகிறது கதிர் பாரதியால்.
( ரூ 100 நாதன் பதிப்பகம், சென்னை )

சென்னைப் புத்தகக் கண்காட்சி -48 | டிசம்பர்27, 2024 - ஜனவரி12, 2025 | கதிர்பாரதி கவிதைப் புத்தகங்கள் |





 

நேரடித்தன்மை கொண்ட கவிதைகள் | எழுத்தாளர் ஜெயதேவன் | கதிர்பாரதியின் ‘’அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது’’ கவிதைத் தொகுப்புக்கு எழுதிய விமர்சனம்|

வீன கவிதை புரியவில்லை என்று சொல்பவர்கள் சாகித்ய அகாடமி வழங்கிய "யுவபுரஸ்கர்" விருதுபெற்ற கவிஞர் கதிர்பாரதியின் Kathir Bharathi "அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது" என்ற 60 கவிதைகள் கொண்ட அழகிய பனுவலை வாசித்துவிட்டால், நவீன கவிதையை நோக்கி வர ஆரம்பித்துவிடுவார்கள் அல்லது குறைந்தபட்சம் கதிர்பாரதி எழுதிய மற்றத் தொகுப்புகள் எங்கே கிடைக்கும் என்று தேட ஆரம்பித்துவிடுவார்கள். அவ்வளவு அருமையான தொகுப்பு.

மற்றத் தொகுப்புகளில் இல்லாத எளிமையை இந்தத் தொகுப்பில் வைத்துள்ளார் கதிர்பாரதி. தவிர நூலின் கட்டமைப்பும் அழகாக இருக்கிறது. வழக்கமாக ஏ4 அளவு தாளில் இப்போது புத்தகங்கள் வெளிவருகின்றன.‌ ஆனால், இந்தப் புத்தகம் ஒன்றுக்கு ஐந்து என்ற கச்சிதமான அளவில் இருக்கிறது. கவிதைகளை வரிசைப்படுத்திய விதம் வித்தியாசமாக உள்ளது. ஒன்றிலிருந்து அறுபதுக்கு போகாமல் 60ல் இருந்து ஒன்றுக்கு கவிதைகள் நிரல் படுத்தப்பட்டுள்ளன.‌ இது ஒரு புதுமையான முயற்சி.
பின்நவீனத்துவம் அல்லது அதிதீவிர நவீனத்துவக் கவிதைகள் பேசக்கூடிய மிகையதார்த்தம், கட்டுடைப்பு ,மாயயதார்த்த வாதம் இன்னும் குறியீடு, படிமம், தமிழ் இலக்கணம் பேசும் உள்ளுறை இறைச்சி போன்ற பயமுறுத்தல்கள் எதுவும் இல்லாமல் நேரடித்தன்மை கொண்ட கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.‌ கவிதைகள் முழுவதும் தன் அம்மாவைச் சுற்றிப் பின்னப்பட்ட நூற்கண்டுகள். ஆம்... அதில் ஆனந்தம் இருக்கிறது; அக்கறை இருக்கிறது; கண்ணீர் இருக்கிறது; கவலை இருக்கிறது; அம்மாவின் உழைப்பு இருக்கிறது; அம்மாவின் கொடை உள்ளம் இருக்கிறது... இன்னும் அம்மாவுக்கான என்னென்ன இலக்கணம் உண்டோ அத்தனையும் ஒவ்வொரு கவிதையிலும் ஊடாடி விரைவியிருக்கின்றன.
என்னுடைய வாசிப்பில் விரல்விட்டு எண்ணக்கூடிய கவிதைத் தொகுப்புகள் மட்டுமே எடுத்தவுடன் வாசிக்கக்கூடியன. இரண்டு மூன்றுமுறை வாசிக்கக்கூடியன. அவ்வாறு மூன்று முறை வாசித்த கவிதைத் தொகுப்பு "அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது" என்ற இந்தச் சிறிய ,அழகிய தொகுப்பு.
லாக் பால் சார்த்தர், பிரடெரிக் நீட்சே, தஸ்தவேஸ்கி போன்ற இலக்கிய மேதைகள் உலகுக்குத் தந்த "இருத்தலியல்" excestennialism என்ற கோட்பாட்டில் நின்று இந்தக் கவிதைத் தொகுப்பு பேசுகிறது. இருத்தலியல் என்பது மனித இருப்பு பிரச்னையை ஆராயும் தத்துவ விசாரணையின் ஒரு வடிவமாகும். இருத்தலியல் தத்துவவாதிகள் மனித இருப்பின் பொருள், நோக்கம் மற்றும் மதிப்பு தொடர்பான கேள்விகளை ஆராய்கின்றனர். அவ்வாறு கதிர் பாரதி அவர்கள் தன்னுடைய அம்மாவின் இருப்பை, வாழவைப் பல்வேறு விதத்தில் ஒரு மகனாக, ஒரு படைப்பாளியாக நுணுக்கமாகப் பதிவுசெய்கிறார். வரிக்கு வரி அம்மாதான் இந்தக் கவிதையை நகர்த்திச் செல்கிறார். கதிர்பாரதி ஒரு கருவி மட்டுமே. சென்னைப் புத்தகக் கண்காட்சி_48-ல் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் என்று விருப்பு, வெறுப்பற்று இந்த நூலைப் பரிந்துரை செய்கிறேன்.
•••••••••••••
மாதிரிக்கு ஒரு கவிதை
••••••••••••••
நான்
அதிகம் பாலகனாக இருந்தபோது வானம் மிகவும் கீழிருந்தது
அம்மா என்னைத் தோளில் சுமந்தபோது தலையில் இடிக்கும் அளவுக்கு....
"மானம் தலையில இடிக்குதம்மா" என்றேன்.
வானத்தை அண்ணார்ந்து பார்த்து "மேலே போ" என்றாள்.
அது மேலுக்கு மேலாக போய்விட்டது. பூமி அவள் காலுக்கும் காலாகக் கீழிருக்க சம்மதித்துவிட்டது.
••••••••••••••••
அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது |
கதிர்பாரதி • புதிய கவிதை நூல் |
நாதன் பதிப்பகம் |
9884060274
சென்னைப் புத்தக கண்காட்சி_48
அரங்கு எண் : 664 •

மொழி போர்த்தியிருந்த அலங்காரங்களைக் கலைத்து | எழுத்தாளர் கரிகாலன் | கதிர்பாரதியின் ’’அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது’’ கவிதைத் தொகுப்புக்கு எழுதப்பட்ட பின்னுரை |

அட்டைப்படம் :
ஓவியர் மணிவண்ணன்

நாம் அருந்திய முலைப்பாலின் கவுச்சியை  சொற்களாகக் கொண்டவை கதிர்பாரதியின் இக்கவிதைகள். அம்மாவோடு 'ள்' சேர்த்தால் அம்மாள். அதுவே பின் அம்பாள் ஆனது. பேயுருவில் நெருங்கிய காரைக்காலம்மையாரை, ஈசன் 'அம்மை' என்றான்.  கதிர்பாரதி காட்டும் அம்மா , அவருடைய அம்மா மட்டும் அல்லர்.  தமிழ்ப் பிள்ளைகளின் தாய் அடையாளம் அவர்.  ஈன்ற மகவைக் காக்க,  தெய்வமாக மட்டுமல்ல, பேயாகவும் மாறும் அம்மா அவர். 

தாயைப் போற்றும் நெடிய மரபைக் கொண்டது தமிழ். அக இலக்கியங்கள் 'அன்னாய் வாழி' எனத் தாயைப் போற்றின. 'தாயிற் சிறந்த கோயிலும் இல்லை' என்றாள் ஔவை. 'மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்' என்றது உலகநீதி.  ஈன்றாளை முதன்மைப்படுத்தி அறம் பழக்கினார் வள்ளுவர். 

உலக அளவில் சில்வியா பிளாத், பிலிப் லார்க்கின், ரூட்யார்ட் கிப்ளிங், எட்கர் ஆலன் போ, கிறிஸ்டினா ரோசெட்டி, என எத்தனையோ கவிகள் அன்னையைப் பாடியிருக்கிறார்கள். ஆனாலும், கதிர்பாரதி காட்டும்  அம்மா சற்று வேறுபட்டவர். இதுவரை அம்மா மீது மொழி போர்த்தியிருந்த, அலங்காரங்கள் அனைத்தையும் கலைத்து , ஓர் அசல் கிராமத்து அம்மாவை தன் கவிதைவழி காட்டுகிறார் கதிர்.  அறியாமையோடும் வெகுளித்தனத்தோடும் குழந்தையே உலகென, உலகை மற்றமையென நினைக்கிறவர் கதிர்பாரதியின் அம்மா. 

வாசிக்கிறவர்கள் கண்ணீர் பட்டு கரைந்துபோகவும், பின் இதயத்தில் நீங்காத வலியாக தேங்கிவிடவுமான சொற்கள் கொண்டு  இக்கவிதைகளை எழுதியிருக்கிறார்  கதிர்பாரதி. அம்மாவை எழுதி, எழுதி,  இவர் விரல்கள் தாய்ப்பால் சுரக்கத் தொடங்கிவிட்டனவோ?  என எண்ண வைக்கிற ஈரக் கவிதைகள் இவை. கதிருக்கு ஒரு அம்மாதான். இந்தக் கவிதைகளால் இவர் பிள்ளைகட்கு இரண்டு அம்மாக்கள் கிடைத்திருக்கிறார்கள். 
இத்தொகுப்பைப் படித்து முடித்தபிறகு,  ஒரு பெரிய கருப்பையாகத் தோன்றுகிறது நாம் வாழும் உலகம்.

25 December, 2024

இரவோடி • நாவல் • என்.ஸ்ரீராம்


ன்.ஸ்ரீராம் எழுதியிருக்கும் மூன்றாவது நாவல் அல்லது சற்றே பெரிய முதல் நாவல் "இரவோடி". சென்னைப் புத்தகக் காட்சி 48_ல் பரிசல் வெளியீடாக வெளிவர இருக்கிறது.

கொங்கு நிலத்தின் அமராவதி ஆறு பாயும் / பாயாத நிலவாழ்வின் நவீனச் சங்கச் சித்திரப் பனுவலாக விரிகிறது "இரவோடி".

அமராவதி ஆற்று குத்துப் பாறையின் மீது நின்றுகொண்டு கொங்குவெளி யின் பொழுதுகளை, வாழ்வை, அஃறிணை - உயர்திணைகளின் ஒத்திசைவுகளை, சடங்கு - சாங்கியங்களை சிற்றுடுக்கையை இசைத்துக்கொண்டு பாடுகிறார் என்.ஸ்ரீராம். அமராவதி ஆறு ஓர் உயிரினம்போல நிலத்தையும் பொழுதையும் வாழ்வையும் சுற்றிவளைக்கிறது நாவல் எங்கும்.
இந்தப் பிரதியின் முதல் வாசகனாக இருந்து இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன்... "தமிழ் நாவல்களின் கிளாசிக் வரிசையில் சேரத் தகுதியுள்ள ஒரு முக்கியமான நாவல் 'இரவோடி'." நல்ல நாவலைப் படிக்க தமிழ் வாசகர் தயாராக இருக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்போதைக்கு "இரவோடி" முகப்பு அட்டையை இங்கே பகிர்கிறேன். நாவல் வெளியானதும் நிறையப் பேசுவோம்.
வெளியீடு: பரிசல்