28 June, 2011

பறவையின் பாடல்

எனக்குள் வேர்கொழித்து
பசிய அலை வீசும் வனத்தை
புகையிலைத் தேய்த்துருஞ்சும் உனக்குள்
எப்படியாகிலும் கடத்திவிட வேண்டும்
முதலில்

ஈரத்தைக் கொண்டு வர
வாய்க்கால் வெட்டினேன்
வெளிச்சத்திலும் கொஞ்சம் வெப்பத்திலும்
உயிர்கள் ஜனனிக்கும் ஆகையால்
அதனையும் செய்துவைத்தேன்
மகரந்தங்களைக் கடத்தும்வண்ணம்
வண்ணத்துப்பூச்சிகளையும் சிருஷ்டித்தேன்
வனத்துக்குக் கம்பீரமாய் இருக்குமென
மிருக செட்டைகளை உலவவிட்டேன்
பருவங்கள் சிலவும் வந்தன
எதுவும் உன் சுவரைத் துளைக்கவில்லை

எனினும் தெரியுமெனக்கு
வனத்தின் சல்லிவேர்களோடு
சிலவிதைகளைக் கவ்வி வருகிற
பறவையின் பாடலொன்றே போதும்

13 June, 2011

உயரம்

நேற்று...
இப்பெருமலை சிகரத்து உயரம்
அடிவாரத்தில் களைப்பாறும்
இந்தப் பறவையின்
பாதங்கள் கீழிருந்தது


08 June, 2011

மகரந்த அலை

யவ்வனம் சொட்டும் அவள் பார்வையில்
ஒரு குளம் விரிகிறது

வழுக்கும் பாசிகளிலிருந்து
ஒரு பச்சை தேவதை எழும்புகிறாள்
மேனியெங்கிலும் வழிந்து பரவுகிறது
மகரந்தக் காடு

தாழ்ந்துயரும் அவளது பருவ மூச்சு
ஒரு பட்டாம்பூச்சியாய்ச் சிறகசைக்க
உதிர்ந்து நகர்கின்றன
அந்தத் தேவதைத் துகள்கள்

இப்போது குளம் தேவதைக் குளமாக
தேவதையும் குளமாகி
மகரந்தமாய்த் ததும்பிக்கொண்டிக்கிறாள்

தாகம் போக்க குளத்திலிறங்கும்
அவன் கரைந்துபோகலாம்
ஒரு மகரந்த அலையில்

நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011