30 March, 2010

புதிர்வெளி

புரண்டு துயில்கையில்
கண்களிலிருந்து நழுவிய கனவொன்று
படுத்துக்கொண்டது அவனருகாமையில்
இணையையொத்த குழைவோடு

முதிராத முலையின் ஸ்பரிசத்துக்கீடாய்
குறுகுறுப்பை நல்கிய அதனியல்பால்
புலன்களுக்குள் முளைவிட்ட றெக்கை
மஞ்சத்தை பறவையாக்கிவிட்டதெனில்
அதொன்றும் துர்கனவல்ல

ஆகாசத்தில் நீரருந்தும் சக்கரவாகத்துக்கிணையாய்
நிரம்ப உண்டு சிலாகிப்பதற்கு ---
சாத்தானின் ஆசீர்வாதத்துக்கும்
கடவுளின் சாபத்துக்கும்
அடர்ந்த அன்பின் குரூரத்துக்கும்
கசந்த நேசத்தின் நெகிழ்வுக்குமான
புதிர்வெளியில் இப்போது அலைவுறும்
அந்தக் கனவு குறித்து

எனினும் இத்தோடு கைவிடலாம்
அதன் கழுத்திலும் தொங்கக்கூடும் கொடுவாலாய்
தாம்பத்யத்தின் செங்கோல்

யுகமாயினி ஜூலை 2010