22 March, 2012

வருந்திச் சுமக்கிறவர்களின் ஹிட்லர்


ஆக...

ஹிட்லரின் அந்தபுரத்தை சமாதனத் தூதுவர் ஆக்கிரமித்துக்கொண்டார்.

அவனது காதலியையும் பணிப்பெண்களையும் எடுத்துக்கொண்டது

தூதுவரின் இச்சைக்காக என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மேலும், ஹிட்லரின் சிம்மாசனத்தை உதாசீனப்படுத்தி விட்டு

அந்தபுரத்தை ஆக்கிரமித்ததொன்றும் தற்செயல் நிகழ்வல்ல.

ஹிடலருக்கு ஆதரவாக எழுந்த நாவுகளைக் கொய்ததும்

அவனாற்றிய நலத்திட்டங்களின் பலன்களை எரித்ததும்

திட்டவட்டமாகத் திட்டமிட்டதுதான்.

வீதிகள்தோறும் நிறுவியிருந்த ஹிட்லரின் சிலையிலிருந்து

மீசையை மட்டும் சிராய்த்ததில்

சிலைகள் தூதுவரின் சாயல்கொண்டதே ஆக்கிரமிப்பின் உச்சம்.

விடிகாலை வீதியில் குழப்பத்தில் தவித்த

ஹிட்லரின் மக்களை நோக்கி

சமாதனத்தின் தூதுவர் பேசிக்கொண்டிருக்கிறார்.

வருந்திச் சுமக்கிறவர்களே சத்தியமாய் நம்புங்கள்

நான் சமாதனத் தூதுவர் அல்ல

ஹிட்லர்

21 March, 2012

அன்புள்ள கதிர்பாரதி... உங்கள் கவிதைகள் விஸ்தாரங்கொண்டு படிம அழகுடன், கற்பனை வீரியத்துடன், நல்ல கவிதைக்கான அமைதியுடன் இயங்குகின்றன.

அன்புள்ள கதிர்பாரதி

தொடர்மழை நாட்களில் உங்கள் கவிதைகளை கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து முடித்து, எப்படி எழுதலாமென யோசித்தபடி வெளியை வெறிக்கையில் அடுத்த மழை ஆரம்பித்திருந்தது. விட்டுவிட்டுப் பெய்கிற இந்த மழையைப் போலவேதான் உங்கள் கவிதைகளையும் என்னால் வெவ்வேறு இடைவெளிகளில் அணுகி ரசிக்க முடிந்தது.

நான் மிதவேகத்தில் வாசித்துச் செல்கிறவன். மிகுந்த நேசத்துடன் தேர்வு செய்த புத்தகத்தை ஒரு இரவில், ஒரு அமர்வில் என்னால் வாசிக்க முடிந்திருக்கிறது. அப்படி வாசித்தவை எல்லாம் புதினங்களாகவோ, கதைகளாகவோ இருந்திருக்கின்றன.

ஒருபோதும் ஒரேமூச்சில் கவிதைகளை வாசித்த நினைவில்லை எனக்கு. அவ்வாறு எளிதில் அனுபவித்துக் கடந்து சென்றுவிட முடியாத கலை வடிவம் கவிதை.

ஒரு நல்ல கவிதையை வாசித்துத் துய்ப்பதைக் காட்டிலும் பேரின்பத்தை எனக்கு மதுவோ, வேறு வகையான லாஹிரிகளோ, இளம் பெண்ணொருத்தியின் அருகாமையோகூட உணர்த்தியதில்லை.

கவிதைகளிலிருந்து கிளம்பி வந்தவன் நான். என் பள்ளிப் பிராயம் நெடுக கவிதைகளே வழிந்து கொண்டிருந்தன. அந்த ஈரப் பிசுபிசுப்பு காயாமல் என் எழுத்துக்களின் மேல் அந்த வீச்சம இன்றைக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது.

ரொம்ப நாளாச்சு

கவிதையைத் திரும்பிப் பார்த்து

வெள்ளையே நீளமான

தாளைப் பார்க்கும்போதெல்லாம்

நினைவுகளில் நனைந்த கவியம்மா

குப்புறப் படுக்கிறாள்

நெளிகிறாள்

மதமதவென மாரை நிமிர்த்தி

பெருமூச்செறிகிறாள்

ஒருதுளி கண்ணீர் வேணுமாம்

மையாய் கண்பிறைச் சிமிழிலிருந்து

பார்வைச் சீர் ஒன்று வேணுமாம்

உணர்ந்து சொட்டும் ஒரு துளி வியர்வை

வறுமை பிணி கோபதாபம்

துணிச்சல் வேணுமாமே

என்ன இருக்கு என்னிடம்

பேனாவைத் தவிர...

என்று தஞ்சை ப்ரகாஷ் கேட்கிற மாதிரித்தான் எனக்கு உங்களிடம் கேட்கத் தோன்றுகிறது. என்னவோ கவிதைக்கும் எனக்கும் ஒரு இடைவெளி விழுந்தமதிரியும், அப்படியெல்லாம் இல்லை இல்லை என்று ஒரு குரல் மறுக்கிற மாதிரியும்தான் இதோ உங்கள் கவிதைகள் அச்சு அசலாய் வாழ்க்கையின் கனவுகளைக் கண்ணீரை காமத்தை ஒருவித யவ்வனமான மொழியில் பகிர்ந்தபடி எனக்கு முன்னால்...

இத்தனை அனுபவங்களை இத்தனை இதழ்களில் எழுதிப் பார்த்திருக்கிற நீங்கள், “பத்தாண்டுகளாக எழுதியவற்றைக் கிழித்துப் போட்டுவிட்டேன். இவை புத்தம் புதியவைஎன்று சொன்னபோது என் மனசு பதறியது. ஏன் அவற்றையெல்லாம் நீங்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது புரியவில்லை. புதியவை என்று நீங்கள் சொல்வதைக் காட்டிலும், புதியவை ஒன்றிரண்டேனும் அதில் இருந்திருக்கக் கூடுமென்றே எனக்குத் தோன்றுகிறது. இவற்றை வாசித்து முடித்த கையோடு உங்கள் பழைய கவிதைகளையும் வாசிக்க வேண்டுமென்ற ஆவல் தோன்றுகிறது. நீங்கள் எப்படித் தரப்போகிறீகள்? நானோ, கவிதையில் அகரம் எழுதிப் பார்த்தவற்றையெல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். நடந்து பழகிவிட்டோம் என்று நடைவண்டியை முறித்துப் போடுவது உகந்ததாக எனக்குப் படவில்லை.

2000 வாக்கில் நாம் தஞ்சையில் ஒரு இலக்கிய நிகழ்வில் சந்தித்ததாய்க் கூறினீர்கள். நிச்சயம் சந்தித்திருப்போம். உங்கள் பழைய கவிதைகளை நீங்கள் அழித்துவிட்டதைப் போலவே ஒரு பத்து வருடங்களுக்கு முந்தைய உங்கள் முகம் என் ஞாபகத்திலிருந்து நீங்கி, இன்றைய உங்கள் முகம் என்னுள் தெளிவாகப் பதிந்திருக்கிறது.ஏற்கனவேயும் இப்போதுமான நீங்கள்தானே உங்கள் கவிதைகள். எனவே முகம் இடம் நிகழ்வு தருகின்ற நியாபகங்களைக் காட்டிலும் இந்தக் கவிதைகள் உங்களை காட்டித் தருகின்றன. நீங்கள் யார்? உங்கள் நதிமூலம் எது எல்லாமும் எனக்கு இப்போது தெளிவு. இந்தக் கவிதைகள்தான் நீங்கள். இவைதாம் கடைசிவரைக்குமான உங்களின் அடையாளம்.

கடவுளின் அந்தப்புரம் கவிதைகளில் பெரும்பாலானவை எனக்குப் பிடித்திருக்கிறது. இவற்றுள் கம்யூனிஸப் பின்னணி கொண்ட தஞ்சை வட்டார விவசாயக் குடும்பத்தின் இளம் உறுப்பினர் ஒருவரின் கலாபூர்வமான வாழ்க்கைப் பார்வை விரிகிறது. ஒவ்வொன்றும் உயிர்த்துடிப்புடன் அன்றைக்கு ஜெனித்த சிசுவாய், ஈர நிலம் கீறி முளைவிட்ட தளிராய் பரவசமான அனுபவங்களைத் தந்து நிற்கின்றன.

வெயிலுக்குப் பொருக்குத் தட்டிவிட்ட அறுவடைக்குப் பிறகான விளைநிலத்தில் வெற்றுப் பாதங்களுடன் நடக்கும் விவசாயியாக, பிரிவின் பசலைக் கொடிக்கு உயிரைப் பந்தலாக்கும் காதலனாக, கார் பொம்மையை உருட்டிக்கொண்டு நடுசாமத்தோடு விளையாடும் குழதைக்குத் தகப்பனாக, நம் பெண்களின் கற்பைப் போல பெலன் தந்த நிலத்தை மீட்கத் துடிக்கும் பாரம்பரியப் போராளியாக, அதிரப் புணர்கையில் எழும்பும் இசையை மாரிக்கால குளத்துத் தவளை தத்திச் செல்வதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் காமுகனாக (மலையாளத்தில் காமுகன் என்றால் காதலன், கணவன் என்றெல்லாம் நல்ல பொருள் உண்டு) பல ரூபங்களில் உங்கள் கவிதைகள் விஸ்தாரங்கொண்டு படிம அழகுடன், கற்பனை வீரியத்துடன், நல்ல கவிதைக்கான அமைதியுடன் இயங்குகின்றன.

உங்கள் பிச்சி என்னை மிகவும் பாதித்திருக்கிறாள்.

முலைகள் அதிர அதிர அலைகளின் முற்றத்தில்

அவள் சமீபிக்கையில்

பய்ந்து உள்வாங்கியது அந்த நீலப்பள்ளம்

........

சுமக்குமளவுக்கு முந்தானையில்

மணலை முடிந்தவள்

தன் முலைகளுக்கு நடுவில் பொதிந்து

கண்ணயர்ந்தாள்

என்றெல்லாம் நீங்கள் எழுத எழுத ஒரு மகத்தான கதாபாத்திரத்தை என்னால் காட்சி ரூபமாக தரிசிக்க முடிந்தது.

ஈரமற்று கானல் ஓடும் நதியில்

மூர்ச்சையற்று மிதந்த பிம்பத்தை

சுமந்து வந்து கண்ணம்மாபேட்டையில்

எரிக்கையில் துளிர்ந்த வியர்வையில்

சற்றே உப்பு கரிக்கிறது பிழைப்பு

என்று வாசிக்கையில் பெருநகரப் புகை நெரிசலில் மூச்சுத்திணரும் ஒவ்வொருவருக்குமான அனுபவமாக உறைக்கிறது.

நீங்கள் தொடர்ந்து நிறைய எழுதலாம் கதிர்பாரதி. சிறுகதைகளிலும் கவனம் செலுத்தலாம் என்று தோன்றுகிறது. கதைகளும் கவிதைகளுமாய் நீங்கள் இடைவெளியில்லாது பயணிக்கையில் தமிழின் புதிய தலைமுறைப் படைப்பாளிகளில் கவனத்துக்குரியவராய் வெகு சீக்கீரமே மாறிவிடுவீர்கள்.

மறுபடியும் சந்திப்போம்.

கீரனூர் ஜாகிர்ராஜா

15.12.2011

20 March, 2012

அரவான் விமர்சனம்


களவுக்குப் போகும் ஒரு சமூகத்தை காவல்காரர்களாக்குகிற பதினெட்டாம் நூற்றாண்டு வாழ்க்கைதான் அரவான். களவை விட்டுவிட்டுக் காவலுக்குப் போவதன் பின்னணியில் ஒருவன் உயிர்ப்பலி கொள்ளப் பட்டதன் ரத்தமும் கண்ணீரும் வேதனையும் நெகிழ்ச்சியும் வெக்கையும் காதலும்... நிறைகட்டி நிற்கின்றன கதையில். மகாபாரதக் காலத்து அரவான் என்கிற புராணத் தொன்மத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் பாளையக் காலத்து சின்னாவைப் பொருத்திப் பார்த்து ஆரவாரமில்லாத வெற்றியை ருசித்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். சாகித்ய அகாதெமி விருது வென்ற சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலிலிருந்து உருவப்பட்ட கதை என்பதால் ஏற்பட்ட எதிர்பார்ப்புக்குக் கர்வபங்கம் இல்லை. ஆனாலும், வசந்தபாலனின் முந்தைய படைப்பான அங்காடித்தெரு, வெயில்... படங்களோடு அரவானை ஒப்பிட்டுப் பார்க்கும் ரசிகன் உள்ளுக்குள் உடைந்துதான் போவான்.

கதையின் நாயகன் ஆதி, ஆளை அசத்தும் ஆஜானபாகு; புஜ பல பராக்கிரமத்திலும் ஜல்லிக்கட்டுக் காளைக்கு நிகரானத் துள்ளல். சின்னாவாக காவல்காப்பதைவிட வரிப்புலியாகக் களவுக்குப் போகும்போது அதிவசீகரம். மிருகம் படத்துக்குப் பிறகு நடிக்கக் கிடைத்த வாய்ப்பைப் பக்கென்று பற்றிக்கொண்டது புத்திசாலித்தனம். அதிலும் காளைமாடுகள் சகிதம் வந்து பசுபதியைக் காப்பாற்றும் சீனில் திரைமுழுக்க விரிகிறது ஆதித் தாண்டவம்.

கொம்பூதி பசுபதிக்கு ஆந்தை போல பகலில் உறங்கி இரவில் விழிக்கும் களவு வாழ்க்கை. கையில் வைத்திருக்கும் மூங்கில் கம்பைப் போல நடிப்பிலும் துடிப்பிலும் பதினெட்டாம் நூற்றாண்டு கரடுமுரடு. களவுக்கு முன்பும் பின்பும் என அவர் நடத்தும் பாடங்கள் படத்தின் சுவாரஸ்யப் பக்கங்கள். கதையை கொண்டு செலுத்தும் முக்கியமான பாத்திரம் தாம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

குறிசொல்லும் குறத்தி அர்ச்சனா கவிக்கு அச்சச்சோ தக்குணூண்டு வேடம். குறி சொல்வதும், காதில் பூச்சுற்றுவதெல்லாம் ஓகே. அதுக்காக ஆதியிடம் காதல்வயப் படுவதில் ஒரு காட்சி நியாயம் வேண்டாமா?

முப்பது நாளில் சாகப்போகும் ஒருவனை மணக்கும் தன்ஷிகா கேரக்டரில் மட்டுமில்லை, நடிப்பிலும் அந்தோ பரிதாபம். குரலும் முகபாவமும் கட்டி இழுத்து வந்தாலும் வெட்டிக்கொண்டு போகின்றன எதிரெதிர்த் திசையில். வழக்கமான கோடம்பாக்கத்து நாயகிகள்போல நாயகனைக் கட்டிப்பிடிப்பதும் நெட்டி முறிப்பதும் தனிஷிகா மூலம் இந்தப் படத்திலும் தொடர்கிறது.

கலகலப்புக்கும் சிங்கம்புலியும், கதையின் வேகத்துக்கு பரத்தும் அஞ்சலியும் அணிலாக இருந்து உதவியிருக்கிறார்கள்.

நிலா... நிலா, உன்னைக் கொல்லப் போறேன்... பாடல்களில் காதுகளைத் தொட்ட கார்த்திக்கின் இசை, மலையளவு கனக்கும் கதையைத் தூக்கிச் சுமக்க முடியாமல் பின்னணில் நொண்டுகிறது கல்லடிப்பட்ட குதிரைப் போல. கதைக்கு நியாயமாக உழைத்திருக்கும் கலை இயக்குனர் விஜய் முருகனின் கரங்களுக்கு பாராட்டுக் குலுக்கல்கள் பலபல. பதுங்கும் சிங்கத்தின் பவ்யம்; எதிர்தடிக்கும் சிறுத்தையின் வேகம்; நிலவின் குழுமை; நிலத்தின் தன்மை... என பதினெட்டாம் நூற்றாண்டைக் காட்டுகிறது சித்தார்த்தின் காமிரா.

இப்போது இயக்குனர் வசந்தபாலனிடம் வருவோம்?

களவுக்குப் போய்விட்டு வரும் பசுபதி குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சும்போது செல்லங்களா என்கிறாரே செல்லம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டு வார்த்தையா? காவல் சமூகத்திலிருந்து வந்த ஆதி, அவ்வளவு நகைகளைத் திருடி மரத்தின் அடியில் எதற்காக ஒளித்துவைத்திருக்கிறார்? கொலை செய்த பாளையக்காரர் அறையில் ஆதியும் அவரும் மோதிக்கொள்ளும்போது பாளையக்காரர் சிம்னிவிளைக்கைத் தூண்டிவிடுகிறாரே மண்ணெண்ணெய் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டடைந்த திரவம் அல்லவா? ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்று சொன்னவனாயிற்றே தமிழன். ஏன் பசுபதி உள்ளிட்ட அத்தனை பேரும் பல்கறையோடு சிரிக்கிறார்கள்? ஆதிக்குப் பதிலாக ஏற்கெனே ஒருவர் பலிகொள்ளப்பட்டப் பிறகும் ஆதி பலிவாங்கப்படுவது படத்தின் டைட்டிலுக்காக இழுத்துவைத்து அடிக்கப்பட்ட ஆணி என்பதை ஒருவர்கூடவா சொல்லவில்லை? கொல்வதென்றால் சட்டென்று வெட்டிக் கொன்றுவிடாமல் இயேசுநாதர் ஸ்டைலில் சிலுவைச் சுமக்க வைத்து ஆதியைக் கொள்வது கதையோடு ஒட்டவில்லையே கவனித்தீர்களா...? இப்படி கேள்விகள் முட்டி எழுந்தாலும் ரத்தமும் சதையுமாய் காலத்தால் நமக்கு முன்னால் வாழ்ந்த வாழ்வை திரையில் தந்ததற்காக உங்களுக்கும், அர்த்தம் புரிந்து தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுக்கும் அடர்த்தியான பாராட்டுகள்.

அரவான் - விதையாய் விழுந்தவன்

நன்றி கல்கி 18.03.2012