மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கவிதைப் புத்தகத்துக்கு ’’சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருது- 2013” வழங்குகிறார் சாகித்ய அகாதெமியின் பிரசிடெண்ட் விஷ்ணு பிரசாத் திவாரி. இடம் : சங்கீத நாடக அகாடெமி- ஜோத்பூர் -ராஜஸ்தான் மாநிலம். தேதி : 05.02.2014 நேரம்: மாலை 5.30 க்கு மேல்..
21 October, 2024
கவிதை~ ஒரு என்பது எல்லாம்~ எனது கவிதையும் Sivakumar Ambalapuzha_ன் மலையாள மொழிபெயர்ப்பும்
மாட்டுவண்டி செல்கிறது. இல்லை வண்டிப்பாதை அழைத்துப்போகிறது. இல்லை காளைகள் இழுத்துப்போகின்றன. இல்லை சக்கரங்கள் நகர்த்திப்போகின்றன. இல்லை தெப்பக்கட்டை தாங்கிப்போகிறது. இல்லை அரிக்கேன் வெளிச்சம் வழிகாட்டுகிறது இல்லை எட்டுக்கால்கள் இரண்டு சக்கரங்கள் சேர்ந்துபோகின்றன. இல்லை கழுத்துமணிச் சத்தம் கூட்டிப்போகிறது. இல்லை சத்தியம் முன்போகிறது. வண்டி பின்போகிறது ஒரு வண்டிக்காரன் உறங்குகிறான் இவை எல்லாவற்றின் மடியில்.
கவிதை : கதிர்பாரதி ~ குடலைமட்டை நத்தை ~
11 October, 2024
10 October, 2024
கவிதை : கதிர்பாரதி ~ பேசு பேசு ¬ உயர்திணைப் பறவை
09 October, 2024
~ கவிதை : கதிர்பாரதி ~ மேரிகோல்டு உண்ணும் ஸ்ரீயானை
08 October, 2024
~கவிதை : கதிர்பாரதி ~ சாந்தசொரூபிகளின் தெய்வம்
எனக்குள்ளிருக்கும் நாயை அவிழ்த்து
கையில்
பிடித்தபடி காலைநடை போனேன்.
நானொரு
நல்ல ஜீவகாருண்யன்
நாயோ சாந்தசொரூபிகளின்
தெய்வம்.
அதன்
விடிகாலைக் காதுகளில்
`மாதா உன்
கோயிலில் மணி
தீபம் ஏற்றினேன்`
பாடலைச் செருகிவிட்டிருந்தேன்.
அப்போததன் வால்கூடச் சாந்தமாகவே குழைந்தது.
வீட்டுத்
திருப்பம் மறைந்ததும்
`மாதா`வைக் கழற்றிப் போட்டுவிட்டு
தெருவோரங்களை மோந்து மோந்து பார்த்தது.
திரைப்படச்
சுவரொட்டியைக் கண்டதும்
கால்
தூக்கி சிறுநீர் கழித்தது.
`நாக்கை
அப்படித் தொங்கப்போடாதே
அதிலிருப்பவர்கள்
அதிரூபங்கள்.
அவர்கள்முன்
கால்தூக்குவது நாகரிகமல்ல` என்றேன்.
`எனக்கு எல்லாம் தெரியும்… மூடு` என்று
முகத்தை
வைத்துக்கொண்டது.
இன்னொரு
திடீர் வளைவில்
என்போல
எல்லோரும்
அவரவர்
மிருகத்தைக் கையில் பிடித்தபடி
காலைநடை
வந்திருந்தனர்.
நாயின் கால் நாயறிந்து, எனைக் கழற்றிவிட்டு
நடையும்
துறைந்துவிட்டு
இன்னொரு
நாயை இழுத்துக்கொண்டு
முட்டைபோண்டா
சுவைக்கப் போய்விட்டது.
பூங்காவில்
ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு
பெண்நாய்களின்
பின்புறங்களைக் கவனித்தது.
`அடச் சீ
நீயொரு நாயா?` எனக் கடிந்து
வீட்டுக்கு
அழைத்துவந்துவிட்டேன்.
நாயும் முகத்தில் சாந்தத்தை
அழைத்துவந்துவிட்டது.
வீட்டு எஜமானி தேநீர் கொடுத்தாள்
`அருகன்
சாறு அருந்தினேன் அம்மா` என்று
வாலைக்
குழைத்துவிட்டு
காதுகளில்
மறுபடியும்
`மாதா`வை மாட்டிக்கொண்டது.
நாயைக்
காலைநடை கூட்டிப்போனால்
நமக்குத்தான்
ரத்தத்தில் சர்க்கரை
தாறுமாறாய்க்
கூடிவிடுகிறது.
_கதிர்பாரதி
01 October, 2024
விமர்சனக் குறிப்பு : கதிர்பாரதி ~ ஜார் ஒழிக சிறுகதைத் தொகுப்பு ~ சாம்ராஜ் (15 பிப் 2023 அன்று எழுதியது)
கவிஞர் - இயக்குநர் சாம்ராஜின் இரண்டாம் சிறுகதைத் தொகுப்பு 'ஜார் ஒழிக!'. எழுதித் தீராத மதுரையை நிகழ்விடங்களாகக் கொண்ட கதைகள் பெரும்பாலும்; ஒன்றிரண்டு கேரளா மற்றும் திருச்சியில்.'வாழ்வை இடையறாது முடுக்கும் இயக்கி பெண்கள்தான். அது நேர்மறை அல்லது எதிர்மறை என்ற எந்த விளைவாக இருக்கட்டும். அவர்களின் தலையீடு குறைவான எதிலும் சூடும் சுரணையும் கொஞ்சம் மட்டம்தான்...' என்ற முடிவுக்கு இலகுவாக நகர்ந்துவிடக்கூடிய வாய்ப்பைத் தரும் கதைகள்.
ஆனால், அதே அவர்கள்... வாழ்வின் தீரா இன்னலுக்கு உள்ளாவது ஏன்? நெஞ்சுக்கு நெஞ்சாகத் துயர் வந்து அவர்களைத் தாக்குவது எப்படி? இடிவாங்கி பிளவுண்ட மரம்போல கொதிமனம் கொண்டு அலைவது எதனால்? கண்ணீருக்குத் தெரியாமல் தேம்புவது யாரால்?
என்றெல்லாம் கேட்டுக்கொண்டால் சமூகம் அவர்களுக்கு அப்படித்தான் முகம் காட்டுகிறது எனவும் பதில் சொல்கின்றன இந்தக் கதைகள். காவியம் தொட்டு நவீனக் காலம் வரை இதுதான் பெண் கதி; வாழ்வு.
சாம்ராஜ் |
நளாயினிக்கு நிகர் துயர்கொண்ட பாத்திரம் செவ்வாக்கியம். அவளுக்கு எதிர்நிற்க முடியாமல் நடுங்குகிறது முத்திருளாண்டி ஆண் தனம். பாலியல் சுரண்டலுக்கு எதிரான பரமேஸ்வரியின் தாட்டியம், சீண்டலுக்கு இன்முகம் காட்டும் லட்சுமி அக்காளின் அலட்சியம், மல்லிகாவின் சினிமா மோகம், மரியபுஷ்பத்தின் தீராத்தேடல், கோமதியின் மந்தகாசம்... யாவும் சொட்டச் சொட்டத் துயரங்கள். எனினும் சகித்துக் கடக்கிறார்கள்.
காயமுற்றவர் பக்கம் கருணையாக இருங்கள். ஏனெனில் அதுதான் அவர்கள் வரலாறு. உடைந்தவர் ஒன்றும் ஒடிந்துபோவதில்லை; துளிர்க்கிறார்கள். வெறுங்காலோடு நடந்து கடக்கிறவர்கள் எழுப்பும் புழுதிக்கு வலிமை அதிகம்... என்பனவெல்லாம் இந்தக் கதைகளின் உள்ளோடும் உண்மைகள்.
இவை எல்லாம் தாண்டி அவர்களைத் தூண்டி துலங்கச் செய்வது எது? 'அவர்கள் நகர்த்தியாக வேண்டிய கட்டாய வாழ்க்கை' என்கிறார் சாம்ராஜ். வானம் இல்லாத ஊருக்கு யாராலும் போய்ச் சேர முடியாது எனப் புரிந்துகொள்கிறேன் நான்.
வேறு ஒன்றும் இல்லையா என்றால்... இடதுசாரிப் புரட்சி இந்திய மண்ணில் எப்படித் தொழில் படுகிறது? அதைச் சொந்த வீட்டுக்கு ஒட்டடை அடிக்கும் அவஸ்தையோடு சொல்லப்படும் கதைகளும் இருக்கின்றன.
பிரியத்துக்குரிய ஆசிரியை நம் காதுமடல் திருகித் தண்டிக்கும்போது வலியில் ஒரு சூடு பரவும் அல்லவா... அப்படி கதை சொல்கிறார் சாம்ராஜ். அதில் எள்ளல் துள்ளல் பகடி எல்லாம் அவர் இழுத்தவாக்கில் வந்துபோகின்றன.
'பட்டாளத்து வீடு' சாம்ராஜின் முதல் சிறுகதைத் தொகுப்பு.