15 December, 2010

படர்தல்

யாசித்துக் குரலெலுப்பும்
பிச்சைக்காரன் பொருட்டு
சட்டென்று மனம் கூம்பிக்கொள்ளும் நீ
நிறுத்தி வைத்திருக்கும்
கொல்லைபுற முற்றத்துப் பந்தலில்
குதூகலமாய்ப் படர்கின்றன
யாதொன்றுமறியா கனகாமரமும்
பாரிஜாதமும்

ஐம்பூதங்களின் அதிகாரியாக்குக

கடவுளர்களை அதிகாரம் செலுத்தும் ஐம்பூதங்களே
உம்மிடம் சமர்ப்பிக்கிறேன் என்னை
உம் சக்திகளின் சகல வல்லமையோடும்
எனக்குள் சம்பவியுங்கள்
ஒருபோதும் என்னைக் கை நெகிழ்ந்துவிடாதீர்கள்
எதிரிகளைப் புறங்காணச் செய்யும்
உன்னதங்களையும் எனக்கு ஆசிர்வதியுங்கள்
எனக்கு எதிராய் உங்கள் செங்கோல்
திரும்பாதிருக்கட்டும் எப்போதும்
உம் நீதிபரிபாலனத்தின் சிறுதுரும்பும்
என்னைப் பரிசோதிகாத கொடுப்பினையின்
மகிழ்வைச் சுவீகரிக்கட்டும்
என் ஆசைகளைப் பூர்த்திக்கும்பொருட்டு
பிரயாசைகொள்ளட்டும் உம் ஏவலாளிகள்
பரியாசைக்காரர்களின் பாதங்கள்
தீண்டாதபடிக்கு என் நிலத்தை மீட்டருளும்
சேதமுறாவண்ணம் வதந்திகளிடமிருந்து
என் காற்றைத் தடுத்தாட்கொள்ளும்
வல்லூறுகளின் கூரிய நகங்களில்
கிழிபடாதிருக்க என் வானத்தை இரட்சியும்
தீயனவற்றோடு இணைத்து நன்மைகளையும்
காவுகொள்ளாத சக்தி கொடு என் நெருப்புக்கு
கொடும்வெக்கையிலும் ஈரத்தை இழக்காத
நீர்மை வேண்டும் என் நீருக்கு
இயலுமாயின் என்னைக் குறித்துக் களிகூறுங்கள்
உம் அதிகாரங்களின் பரிணாம நீட்சியாய்

நன்றி: கல்வெட்டுப் பேசுகிறது (ஜனவரி 2011)

11 December, 2010

சேர்வது குறித்த சிந்தனை

வராதுவந்த ஓரிரண்டு வரன்களும்
இரண்டொரு பவுனில் இடறிப்போக
கக்கடைசியில் கன்னிக் கழியாமலே
காலம் கழியலாயிற்று கோமதி அக்காவுக்கு

அவள் பார்வையின் குவிமையத்தில்
விரட்டி விரட்டி சேவலும்
விரண்டு மிரண்டு பெட்டையும்
சேர்வது குறித்துதான்
ஓரே சிந்தனையாய் இருக்கிறது

கோழியை மறுதலித்தல்

மக்கிக்கெட்ட குப்பைகளைக் கிளறி
இங்கிதம் குலைந்து எல்லா இடத்தும்
புணர்ந்து தொலைத்து
குட்டிச் சுவமீதேறி கொக்கரிக்கும் கோழிகள்
உறுத்தல் உதறி சுவைத்து அலைகின்றன
எச்சச் சொச்சங்களை

ஒன்றுக்கும் உதவாதிருத்தல்
ஊர்ச்சுற்றித் திளைத்தல்
புழுதிக் குடைந்தாடி
போதையில் மிதத்தல்...
என்றாயிற்று கோழியின் குணங்கள்

சண்டைக்கோழி, அடைகோழி
வெடக்கோழி, பிராய்லர் கோழி
வகைப்படுத்தலாம் கோழிகளை

எனினும்
மனிதனைக் காவுகொண்டபடிக்கு
பம்மிபம்மி வந்துபோகும்
சாமிக்கென நேர்ந்துவிட்ட கோழிகளை
கோழிகளென ஒத்துக்கொள்ள
மறுதலிக்கிறான் ஜீவானந்தம்

சித்திரையில் கசிந்த மனசு

வேப்பம்பூவிலும் மாம்பூவிலும்
போதமுற்றுச் சரியும் சித்திரையின்
ஏறுவெய்யில் ஊர்ந்துகொண்டிருக்க
மவ்னத்தை ஆரோகணித்தபடி
என் கைபற்றியிருந்தபோதுதான்
தண்ணென்று கசிந்த உன் மனசை
உணர்ந்தன விரல்கள்

நன்றி: கல்கி(23.01.11)