யுவப்புரஸ்கார். விருது பெற்ற Kathir Bharathi கதிர் பாரதி அவர்கள் கவிதை
கிருஷ்ண நிழல்
.----------
கிருஷ்ணர்
கீதோபதேசம் கீழ்வருவன...
அதோ
மரம் தெரிகிறதா?
தெரிகிறது
அதன் பசும்வனப்பும்.
மரத்தில் இருக்கும் பூ தெரிகிறதா?
தெரிகிறது
அதன் மஞ்சள் நிறமும்.
பூவுக்குள் இருக்கும்
காய் மற்றும் கனி தெரிகின்றனவா?
தெரிகின்றன
அவற்றின் துவர்ப்பு
மற்றும் இனிப்பும்.
கனிக்குள் இருக்கும் விதை தெரிகிறதா?
தெரிகிறது
அதன் மழைத்துளி வடிவமும்.
விதைக்குள் இருக்கும்
மரம் தெரிகிறதா?
தெரிகிறது
அதன் மடிநிழலும்.
அம்பாறதூணியைக் கழற்றி
ஓரமாக வைத்துவிட்டு
வா…
`அந்த மரத்தின்` கீழ்
சிறிது நேரம்
உட்கார்ந்துவிட்டு வருவோம்.
-----
உயர்திணைப் பறவை
........
சகுந்தலை என்றால்
`பறவைகள் புடைசூழ வளர்பவள்` என்று பொருள்.
புடைசூழ் பறவைகள் மத்தியில்
உண்மைப் பறவை சகுந்தலை மட்டும்தான்
அதுவும் உயர்திணைப் பறவை.
தாய் பிரிந்த துயர்
காதல் பிரிந்த துயர்
மகன் பிரிந்த துயர்
வாழ்வு பிரிந்த துயர்
யாவற்றையும் பறந்து கடக்கிறாள் பறவைபோல
தண்டகாரண்யத்தை
தனித்த வானத்தை
சலசலக்கும் நதியை.
பலமுறை
மழைமேகம்போல பறந்து கரைய நினைத்தாள்.
ஆனால்
ஓர் எளிய மோதிரத்தின் எடை தாளாமல்
கீழே
கீழே வருகிறாள்.
துஷ்யந்த சாபம்
சகுந்தலைக்குக் காவிய சோகம்.
காதல் ஒரு பெண்ணுக்கு ஒளியூட்டும் என்றால்
சகுந்தலைக்கு இருளூட்டியது.
இருள் தின்று
துயர் தின்று
மாலினி ஆற்று மீனாகப் பரவியவள் சகுந்தலை.
கணையாழி
சிலம்பு
மோதிரம்
எல்லா அணிகலன்களும்
பெண் துயரில் உருவான விலங்குகள்.
அதோ
திசைகளை அழைத்துக்கொண்டு
மோதிரம் போன்ற காற்றுவளையம் புக
தன்னந்தனியே ஒரு பறவை பறக்கிறதே
அது
பறவையல்ல சகுந்தலை
சகுந்தலை அல்ல அவள் துயர்
துயர் அல்ல அவள் வாழ்வு
ஆம்
பெண் வாழ்வு.
**
நூல்: உயர்திணை பறவை
No comments:
Post a Comment