22 October, 2024

அஞ்சலி : எழுத்தாளர் எம்.ஜி.கன்னியப்பன்... உங்கள் வண்டி கிளம்பிவிட்டது!

எம்.ஜி.கன்னியப்பன்
நான் 'கல்கி'யில் வேலைபார்த்தபோது அங்கே எனக்கு சீனியராக வேலைபார்த்தவர் இயக்குநர் மு.மாறன். அவரது நண்பராகப் பழக்கமாகி எனது நண்பராகவும் நட்பில் இணைந்தவர் எம்.ஜி. கன்னியப்பன். சினிமா பாடலாசியர், வசனகர்த்தா, கதாசிரியர்... என சினிமாவின் கிரியேட்டிவ் பக்கம் இயங்கியவர். நா.முத்துக்குமார், லலிதானந்த், குகை மா புகழேந்தி, கன்னியப்பன்... எல்லாம் ஒரு குழாம். நா.முத்துக்குமார் தூர் கவிதை மூலம் கவனத்துக்கு வந்ததுபோல, கன்னியப்பன், குமுதத்தில் எழுதிய கூட்டுக்குடும்பத்தில் கலவி குறித்து எழுதிய ஒரு கவிதை மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தவர். பாக்கெட் நாவல் காலத்தில் எழுதவந்து எல்லோரையும் அனபையும் எழுத்தின் மூலம் பெற்றவர். தனி இருக்கை இவரது சிறுகதைத் தொகுப்பு, நான்குக்கும் அதிகமான கவிதைத் தொகுப்பும் எழுதியிருக்கிறார். நிறைய சினிமா கதைகளுக்கு ஸ்கிரிப்ட் டாக்டராக வேலைபார்த்தவர். பத்து நாட்களுக்கு முன்பு எனது நண்பர் இயக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எழுத்தாளராக கன்னியப்பனைச் சிபாரிசு செய்தேன். கன்னியப்பன் எழுத்தை அங்கே அனைவருக்கும் பிடித்துவிட்டது. அதை மகிழ்ந்து பேசினார். இப்போது அதிர்ச்சி செய்தியாகிவிட்டார். சென்னையில் எனது ஆரம்ப நாட்கள் முதல் இருந்துவந்தவர், இப்போது இல்லாமலாகிவிட்டார். உடல் அவரது சொந்த ஊரான சேலம் (அருகில் ஒரு கிராமம்) நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. அஞ்சலி தலைவரே. உங்கள் வண்டி கிளம்பிவிட்டது! 

21 October, 2024

சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது_2013

 மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கவிதைப் புத்தகத்துக்கு ’’சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருது- 2013” வழங்குகிறார் சாகித்ய அகாதெமியின் பிரசிடெண்ட் விஷ்ணு பிரசாத் திவாரி. இடம் : சங்கீத நாடக அகாடெமி- ஜோத்பூர் -ராஜஸ்தான் மாநிலம். தேதி : 05.02.2014 நேரம்: மாலை 5.30 க்கு மேல்..





கவிதை~ ஒரு என்பது எல்லாம்~ எனது கவிதையும் Sivakumar Ambalapuzha_ன் மலையாள மொழிபெயர்ப்பும்

மாட்டுவண்டி செல்கிறது. இல்லை வண்டிப்பாதை அழைத்துப்போகிறது. இல்லை காளைகள் இழுத்துப்போகின்றன. இல்லை சக்கரங்கள் நகர்த்திப்போகின்றன. இல்லை தெப்பக்கட்டை தாங்கிப்போகிறது. இல்லை அரிக்கேன் வெளிச்சம் வழிகாட்டுகிறது இல்லை எட்டுக்கால்கள் இரண்டு சக்கரங்கள் சேர்ந்துபோகின்றன. இல்லை கழுத்துமணிச் சத்தம் கூட்டிப்போகிறது. இல்லை சத்தியம் முன்போகிறது. வண்டி பின்போகிறது ஒரு வண்டிக்காரன் உறங்குகிறான் இவை எல்லாவற்றின் மடியில்.

- கதிர்பாரதி
- உயர்திணைப் பறவை

💚 കതിർ ഭാരതി (തമിഴ്)
കാളവണ്ടി പോകുന്നു
ഇല്ല
വണ്ടിത്താര കൊണ്ടുപോകുന്നു
ഇല്ല
കാളകൾ വലിക്കുന്നു
ഇല്ല
ചക്രങ്ങൾ ഇഴഞ്ഞുരുളുന്നു
ഇല്ല
മാർനുകം താങ്ങിപ്പോകുന്നു
ഇല്ല
റാന്തൽവെട്ടം വഴികാട്ടുന്നു
ഇല്ല
എട്ടുകാലുകളും രണ്ട് ചക്രങ്ങളും ചേർന്നുപോകുന്നു
ഇല്ല
കുടമണിയൊച്ച അലിഞ്ഞുചേരുന്നു
ഇല്ല
സത്യം മുമ്പേ പോകുന്നു
വണ്ടി പിൻതുടരുന്നു
ഇവയെല്ലാറ്റിന്റെയും മടിയിൽ
വണ്ടിക്കാരനുറങ്ങുന്നു
🔴

கவிதை : கதிர்பாரதி ~ குடலைமட்டை நத்தை ~

ப்பத்தா ஒரு நத்தை வேட்டையாடி.
மழையீரக் குடலைமட்டை அணிந்து
அவள் வேட்டையாடக் கிளம்பினால்
நத்தைகள் ஓடி ஒண்டும்.
நத்தைகள் மீது சிலுவைகள் வரைந்து மயக்குவாள்.
`மண்ணக வாழ்விலும் மேலான மறுமை வாழ்வு
உங்களுக்கு எம் வயிற்றிலுண்டு` என்று
பிரசங்கிப்பதுபோலிருக்கும்
அவள் வேட்டை.
நடவுபொழுதிலும் களையெடுக்கக் குனிந்தாலும்
நத்தைகளோடே நிமிர்வாள்.
சவ்வுமிட்டாய்க்காரன் பின்திரியும் சிறார்களென
அவளோடு நத்தைகள் வீட்டுக்கு வரும்.
மண்சட்டிக் குளத்தில் நீந்தும் நத்தைக் கனவுகளுக்கு
திருமுழுக்காட்டும் நடக்கும்.
அப்போது விசேஷமாக
தம் உணர்க்கொம்புகளை உயர்த்தி
நத்தைகள் அப்பத்தாவை ஆராதிக்கும்.
என்ன பிரயோஜனம்
கோணூசி குத்தி நெகிழப்படும் நத்தை இறைச்சி
வாழ்வின் அப்பமாக அன்றிரவு மாறும்.
கார் சாகுபடிக் காலையொன்றில்
அப்பத்தா தலையெட்டிப் பார்த்தபோது
அவளொரு வீட்டு நத்தையாய்த் தெரிந்தாள்.
தாத்தாவின் தார்க்குச்சி விளாசலில்
ஊமை நத்தையாய் ஒடுங்கிப் போனாள்.
நத்தை ஓடுகளைத் துளையிட்டு
சலங்கைக் கட்டி ஆடினோம்
அவள் பிணம் முன்பு.
நத்தைகள் கூடி தம் மூதாயை எடுத்துப்போய்
சவப்பெட்டியில் சிலுவை வரைந்து
களத்துமேட்டில் புதைத்தன.
யூரியா சல்ஃபேட் பொட்டாஷியம் பாக்டம்பாஸ்
எல்லாம் செரித்து
தாளடி நடவுக்கால வரப்பில் இழைகிறது
ஒரு புத்தம்புது நத்தை.
அது
அப்பத்தாவேதான்.
_கதிர்பாரதி




09 October, 2024

~ கவிதை : கதிர்பாரதி ~ மேரிகோல்டு உண்ணும் ஸ்ரீயானை

40 வயதுக்குப் பிறகு
இனிக்கமுடிந்தோர் வாழ்வுபெற்றோர்
ஏனெனில்
அவர்களின் கடவுள் இன்சுலினாய் இருக்கிறார்.
இனிக்க முடியாதோர்
சிறுகுறிஞ்சான் கீரையை வேகவைத்து
ஒரு மண்டலம் வெறும்வாயில் உண்டுவர
ரத்தச் சர்க்கரையளவு குறையுமென்ற
கைவைத்தியம் தெரியுமா?
உண்டோருக்குத்தானே தெரியும்
சிறுகுறிஞ்சான் சுவை என்பது
`வாழ்வுகொள்ளாக் கசப்பு` என்று.
அய்யய்ய
கசந்து கசந்து வாழ்வதன் பெயர்தான்
சர்க்கரையா.
ஆமாம்
அதிகாலைக் குடல்குடையும் பசிக்கு
மேரிகோல்டு சாப்பிடுகிறது
ஸ்ரீசாந்தநாயகி சமேத வேங்கீஸ்வரர்
திருக்கோயில் யானை.
_கதிர்பாரதி



08 October, 2024

~கவிதை : கதிர்பாரதி ~ சாந்தசொரூபிகளின் தெய்வம்

னக்குள்ளிருக்கும் நாயை அவிழ்த்து
கையில் பிடித்தபடி காலைநடை போனேன்.
நானொரு நல்ல ஜீவகாருண்யன்
நாயோ சாந்தசொரூபிகளின் தெய்வம்.
அதன் விடிகாலைக் காதுகளில்
`மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன்`
பாடலைச் செருகிவிட்டிருந்தேன்.

அப்போததன் வால்கூடச் சாந்தமாவே குழைந்தது.
வீட்டுத் திருப்பம் மறைந்ததும்
`
மாதா`வைக் கழற்றிப் போட்டுவிட்டு

தெருவோரங்களை மோந்து மோந்து பார்த்தது.
திரைப்படச் சுவரொட்டியைக் கண்டதும்
கால் தூக்கி சிறுநீர் கழித்தது.
`
நாக்கை அப்படித் தொங்கப்போடாதே
அதிலிருப்பவர்கள் அதிரூபங்கள்.
அவர்கள்முன் கால்தூக்குவது நாகரிகமல்ல` என்றேன்.
`எனக்கு எல்லாம் தெரியும்… மூடு` என்று
முகத்தை வைத்துக்கொண்டது.
இன்னொரு திடீர் வளைவில்
என்போல எல்லோரும்
அவரவர் மிருகத்தைக் கையில் பிடித்தபடி
காலைநடை வந்திருந்தனர்.

நாயின் கால் நாயறிந்து, எனைக் கழற்றிவிட்டு
நடையும் துறைந்துவிட்டு
இன்னொரு நாயை இழுத்துக்கொண்டு
முட்டைபோண்டா சுவைக்கப் போய்விட்டது.
பூங்காவில் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு
பெண்நாய்களின் பின்புறங்களைக் கவனித்தது.
`
அடச் சீ நீயொரு நாயா?` எனக் கடிந்து
வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டேன்.
நாயும் முகத்தில் சாந்தத்தை அழைத்துவந்துவிட்டது.

வீட்டு எஜமானி தேநீர் கொடுத்தாள்
`
அருகன் சாறு அருந்தினேன் அம்மா` என்று
வாலைக் குழைத்துவிட்டு
காதுகளில் மறுபடியும் `மாதா`வை மாட்டிக்கொண்டது.
நாயைக் காலைநடை கூட்டிப்போனால்
நமக்குத்தான் ரத்தத்தில் சர்க்கரை 
தாறுமாறாய்க் கூடிவிடுகிறது.

_கதிர்பாரதி