18 June, 2013

கிளிஞ்சலுக்குப் பெயர் செல்வி. காதலுக்குப் பெயர் செல்வி... சீனு ராமசாமி

அலையாடும் கடற்கரையில் நிற்கிறேன். ஒரு சிற்றலை வந்து கால்களை நனைத்துவிட்டு நழுவி ஓடுகிறது. பின்தொடர்கிறது ஓர் பேரலை. பேரலைக்குப் பின்பு ஒரு சிற்றலை. சிற்றலை அப்புறம் பேரலை. நான் சிற்றலையாக இருக்கிறேன். அவ்வப்போது பேரலை பின்தொடர்ந்து வந்து சிற்றலையைக் கபளீகரம் செய்யப் பார்க்கிறது. கலைச்செல்வி எப்போதும் எனக்கு நீ பேரலைதான். காதலென்னும் கடலின் ஆழத்துக்குள் உனது பெயரைத் தாங்கிய பேரலை ஒன்று எனை இழுத்துக்கொண்டு போகிறது. அதன் அழுத்தமும் உக்கிரமும் எனைத் திக்குமுக்காடச் செய்கின்றன. ஆர்ப்பரித்த உன் நேசத்துக்கு முன்பும் பின்பும் கிளிஞ்சலாக காலத்தின் கரையில் தேங்கிக் கிடக்கிறது நேசம். கிளிஞ்சலுக்குப் பெயர் செல்வி. காதலுக்குப் பெயர் செல்வி... எப்போதும் இதுபோன்ற கனவுகளால், இதுபோன்ற கனவுக்கு நெருக்கமான உணர்வுகளால் என் ஒவ்வோர் அதிகாலையும் விழித்துக்கொள்கிறது செல்வி. கண்களைக் கசக்கி துழாவிப் பார்க்கிறேன். மனசின் ஆழத்தில் இரண்டொரு கிளிஞ்சல்கள் உன் கண்களாக நகர்கின்றன. இப்போதெனக்கு முப்பத்தொன்பதாவது ஆண்டின் அலை அடித்துக்கொண்டிருக்கிறது. உனக்கும் அப்படியே இருக்கலாம். இல்லை இரண்டொன்று குறைந்தும் இருக்கலாம்.
நான் காதலிக்கப்பட்டதைவிட காதலிப்பதற்காகப் பட்ட அவஸ்தைகள் அதிகம். நடுத்தரத்துக்கு கொஞ்சம் குறைவான வாருவாய் கொண்ட குடும்பத்தில் பிறந்த ஆண் பிள்ளைகளுக்கு அனைவருக்கும் வாலிபப் பருவத்தில் முகிழ்க்கும் கூச்சம்தான் எனக்கு அப்போதும். முட்டையிடுவதற்கான கூட்டைத் தயார் செய்யும் முன்பு காகம், தன் அலகில் அதற்கான முள்குச்சியை ஏந்தி அலைவது போலத்தான் என் நேசத்தை கூச்சத்தோடு சுமந்துகொண்டு அலைந்திருக்கிறேன். மதுரையின் புறநகரின் முதுகுபுறத்தில் இருக்கும் திருநகரில் நாங்கள் குடியமர்ந்தபோதுதான் மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரிக்கு கணிதம் பயில வந்தேன். அப்போது நான் சீனிவாசன். கணிதத்தோடு காதலும் இலக்கியமும் பயின்றது இங்கேதான். கூச்சம் கொஞ்சம் விலகி பிரகாசம் மெல்ல மெல்ல என் முகத்திலும் அகத்திலும் வந்தமர்ந்தபோது நான் பட்டிமன்றத்தில் பேசத் தொடங்கி இருந்தேன். பேசப் போன இடத்தில் ஒரு காதல் வரும் என்று எனக்கு அப்போது தெரியாது. தூறல்களுக்கு மட்டுமே மழை பொறுப்பாக இருந்தாலும், தன்னை அறியாமல் மண்வாசனைக்கும் அது காரணமாக இருப்பது போலத்தான் அன்றைக்கு மதுரை பெரியக்குளத்துக்குப் பக்கத்தில் இருக்கும் பெண்கள் கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டி எனக்குள் காதல் மணத்தை எழுப்பி விட்டுப் போனது.
அந்தப் பேச்சுப் போட்டியில்தான் சந்தித்தேன் கலைச்செல்வியை. பெருந்திரளான பெண்கள் கூட்டத்தில் கொஞ்சம் கூச்சத்தோடுதான் மேடை ஏறினேன். போட்டிக்குத் தலைப்பு காதலிக்க தேவை அழகா... அன்பா. நான் அறிவின் பக்கம். அப்போதே அன்பின் பக்கமாகப் பேசினாள் செல்வி. போட்டியில் கூட அவள் எனக்கு எதிர்த்திசையில்தான் இருந்தாள். காதலுக்கும் காதலிக்கவும் தேவை அழுகுதான் என்று கம்பன் கண்ட ராமனை எல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு என் வாதத்தை முன்வைத்தேன். எந்த ஒரு பெண்ணாவது உடல் ஊனமுற்ற ஆணை மணக்க துணிவாளா? அழகற்ற முகம்கொண்ட ஆடவனின் தோள் சாயத் தயாராக இருப்பாளா? தோள் கண்டார் தோளே கண்டார்... அன்னமும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்றுதான் காதல் அரும்புமே தவிர அன்பால அல்ல என்று மேடையில் நிறுவிவேன்; கலைச்செல்வி பேசும்போது அழகைவிட காதலுக்கு முக்கியமானது அன்புதான். Beauty is the skin deep என்ற ஷெக்ஸ்பியரின் வார்த்தைகளையெல்லாம் அவர் வாதத்துக்காக எடுத்துக்கொண்டு மோதினாள். இறுதியில் வெற்றியும் கோப்பையும் எனக்குத்தான். ஆனால், என் மனசு கதறியது. அன்புதானே காதலுக்கு அஸ்திவாரம். அழகும் கவர்ச்சியும் மேல்பூச்சுகள்தானே. நடுவரின் கையிலிருந்து கோப்பையை வாங்கப் போன நான் மைக்கின் முன்னால் நின்று கூட்டத்தைப் பார்த்துச் சொன்னேன். வாதத்தில் நான் வேண்டுமானல் வென்றிருக்கலாம் ஆனால உணமையில் காதலுக்கு தேவை அன்புதான் அதை வலியுறுத்திய கலைச்செல்விக்குத்தான் இந்தப் பரிசு போய் சேரணும் எனவே எனக்கு கிடைத்த இந்த வெற்றிக்கோப்பையை அவருக்கே கொடுத்துவிடுகிறேன் என்று மேடைக்கு கலைச்செல்வியை அவரது கரங்களில் நான் வென்ற கோப்பையை கொடுத்துவிட்டு கேண்டீனுக்கு தேநீர் ஆசுவாசத்துக்காக வந்துவிட்டேன். ஆனால் உண்மையில் அப்போதுதான் என் மனம் காதலால் விசும்பத் தொடங்கி இருந்தது. அழகுக்கே தளும்பிப் போகிற மனமுடைய நான் அழகும் அறிவும் கொண்ட கலைசெல்வி மீது காதல் கொண்டு குழம்பிப் போயிருந்தேன்.
நான் எங்கு போகிறேன் என்று கலைசெல்வி கவனித்திருப்பாள் போல. தேநீர் அருந்திக்கொண்டிருந்த என் காதுகளுக்குப் பக்கத்தில் கலைசெல்வியின் குரல். இது உங்களுக்கு சொந்தமானது எதற்காக எனக்குக் கொடுத்தீர்கள் என்று என்னிடம் கோப்பயை நீட்டினாள். வேண்டுமானால் நீங்கள் கோப்பையை வைத்துக்கொள்ளுங்கள். நான் சான்றிதழை வைத்துக்கொள்கிறேன் என்று சிறு சமாதானத்துக்குத் தயாரானேன். அப்போது எங்கள் பார்வைகளில் பறந்த பட்டாம்பூச்சிகள் காதலாக மாறி இருக்கும். இப்போது எங்கேயாவது கோகுல் சேண்டல் பௌடர் வாசனையை நுகர்ந்தாலும் குட்டிக்குரா வாசனையை உணர்ந்தாலும் மனம் செல்வி என்று பதறித் திரும்பும். பழைய டிரான்சிஸ்ட்ர் ரேடியோவை ஒரு குறிப்பிட்ட திசைக்குத் திருப்பியதும் திரைகானம் தெளிவாக காது நனைக்குமே அதுபோலத்தான் அந்தப் போட்டிக்குப் பிறகு நான் செல்வியின் திசைக்கு என் மனசைத் திருப்பி வைத்தேன்.
கல்லூரி முகவரிகள் பகிர்ந்து கொண்டோம். செல்வி விடுதி ஒன்றில் தங்கிப் படித்த பெண். நான் ஆறேழு அண்ணன் தம்பிகளோடும் இரண்டு அக்கா தங்கையோடும் பிறந்த ஆண். அப்போது ஓர் ஆணுக்கு பெண்ணின் பெயரிலும் பெண்ணுக்கு ஆணின் பெயரிலும் கடிதம் எழுதிக்கொள்வதென்பது இயலாத காரியம். நான் செல்விக்கு பெண்ணின் பெயரிலும் அவள் எனக்கு ஆணின் பெயரிலும் கடிதங்கள் எழுதிக்கொள்வோம். அப்போதெல்லாம் நான் கல்லூரி சென்றது கலைசெல்வியின் கடிதங்களைப் படிப்பதற்காகவும்தான் என்று இப்போது ஒதுங்கி நின்று பார்க்கும்போது உரைக்கிறது. கடித்தத்தைக் கொண்டு வந்து தரும் கல்லூரி ஊழியருக்கு அவ்வப்போது காலாஜ் கேண்டினில் இருந்து தேநீரை லஞ்சமாகத் தந்துகொண்டிருந்தேன். தேநீரின் புண்ணியத்தில் கடிதங்கள் காதலாக காதல் கடிதங்களாகப் பறந்துகொண்டிருந்தன.
திரும்பவும் நாம் மீட் பண்ணலாமே என்று ஒரு கடித்தத்தில் எழுதி இருந்தாள் செல்வி. அது கல்லூரிக்காலம் முடிந்து வீடு செல்லும் தினம். கண்ணியமான இடைவெளியில் பேருந்தில் அவளோடு பயணிக்கிறேன். நான் முதன்முதலாக ஒரு பெண்ணின் பக்கத்தில் அமர்ந்த பயணம் அதுதான். இரக்கமே இல்லாத பேருந்து எங்களை ஒரு கல்லறைத் தோட்டத்தில் இறக்கிவிட்டுப் போய் விட்டது. அவள் என்னை கல்லறையில் முளைத்திருந்த ஆவாரம் செடிகளுக்கு மத்தியில் நிறித்திவிட்டுப் போய்விட்டாள். நான் ஆவாரம் பூக்களின் மஞ்சள் நிறந்ததை அழுகையோடு பார்த்திருந்து விட்டு வந்துவிட்டேன். கல்லறைத் தோட்டம் கண்ணீர்த் தோட்டமானது.
இதற்கிடையில் எனக்கு சினிமா லட்சியம். மீண்டும் சந்தித்தோம். என் கூட வர சம்மதித்தாள். மறுமடியும் கூச்சம் பயம் குழப்பம். என்னோடு நீ வேண்டாம். உன்னோடும் நான் வேண்டாம் என்ற சொல்லிவிட்டு வந்துவிட்டேன். சினிமா பார்க்கப் போவதையே ஏற்றுக்கொள்ளாத என் அப்பா, நான் சினிமா இயக்குனராகப் போகிறேன் என்று கிளம்பிய நாளிலிருந்து சுமார் பத்துவருடங்கள் பேசவே இல்லை. சொந்த வீட்டிலே சுழன்றடிக்கும் புயலில் என்னை நம்பி வந்தவளை நான் எங்கே பாதுகாப்பது?
நிராதரவான உணர்வும், சந்தோசமற்ற குழந்தைப் பருவமும் - பால்ய பருவமும், விரும்பி ஏற்றுக்கொண்ட வறுமையும்... என சுமார் பத்து பதினைந்து வருடங்களை கோடம்பாக்கம் தின்றுவிட்டது. இயக்குனர்கள் சீமான், பாலுமகேந்திரா தந்த ஆதரவில் சினிமா கற்று தேசிய விருது பெறும் அளவுக்கு உயர்ந்த பிறகும்... அந்தப் படங்களில் நிறைவேறாத காதலோடு தவிக்கிற பெண் பாத்திரங்களுக்கு செல்வி என்று பெயர் வைக்கிற அளவுக்குத்தான் இன்று என் மனநிலை இருக்கிறது. மதுரை புறநகரில் வளர்ந்த சீனிவாசன், சீனுராமசாமி ஆகிவிட்டாலும்... குட்டிக்குரா.. கோகில் சாண்டல் பௌடர் வாசனைகளுக்கு முகத்தை வேறு பக்கம் திருப்பி நடக்க வேண்டிய கட்டாயத்துக்கு வாழ்க்கை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. எனக்கே இரு பெண் குழந்தைகள் இருக்கும்போது கட்டாயம் செல்விக்கும் பதினைந்து வயதில் ஓர் ஆணோ பெண்ணோ குழந்தைகளாக இருக்கலாம். அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்கிற உணர்வு மட்டுமே இப்போது எனக்கு அலையாடிக்கொண்டு இருக்கிறது.

தென்மேற்கு பருவக்காற்று படத்துக்காக லொகேஷன் பார்க்க சென்றிருந்த போது அந்தக் கல்லறைத் தோட்டத்துக்குப் போனேன். மௌனமாக நின்றேன். அன்று பூத்திருந்த புளியமரம் அப்போது இலையுதிர்த்து நிற்கிறது. கல்லரைகளில் கட்சிக்கொடிகள் ஆக்கிரமிப்பு அதிகமாகி இருக்கின்றன. பேனர்களும் பிளக்ஸ்களும் அதிக இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் ஆவாரம் செடிகள் மஞ்சள் நிற பூக்களோடு தயக்கமாக என்னை பார்க்கின்றன. அவற்றுக்கு மத்தியில் யார்யாரோ வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். சத்தியமாக அங்கே செல்வி இல்லை. ஆவராம் பூவிலிருந்து சீறிவரும் அலை ஒன்றுக்குத் தப்பித்து ஓடிவருகிறான் பதினெட்டு பத்தொன்பது வயது மதிக்கத்தக்க ஒருவன். அவனைத் தடுத்து நிறுத்தி ஆறுதல் சொல்லி பெயர் கேட்கிறேன் சீனிவாசன் என்கிறான். அவனுக்கு நிச்சயம் ஊர் மதுரையின் புறநகரில் இருக்கும் திருநகராகத்தான் இருக்குமென கேட்காது வந்துவிட்டேன்.   

-
கதிர்பாரதி


கல்கியில் பிரபலங்களின் காதல் அனுபவம் -1

15 May, 2013

நிலவு நிலவுலகின் மீது ஒரு வெள்ளை வண்ணத்துப்பூச்சியைப் போல் என் முன் பறக்கவிட்ட அதிசயம். ====== தமிழ் ஆழி ஏப்ரல் 2013 இதழில் எனது ”மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” கவிதைத் தொகுப்புக்கு கவிஞர் அய்யப்ப மாதவன் எழுதிய விமர்சனம்







கதிர்பாரதியின் கவிதைகள் எளிய சொற்களினால் சுயமான தேர்ந்த அனுபங்களிலிருந்து கட்டப்பட்டவை என்று உணர முடிகின்றது. கவிதைக்கானக் கருப்பொருள்கள் மிகவும் வித்தியாசமானவை. ஊருக்கு மத்தியிலிருக்கும் பிள்ளையாரை வேடிக்கையாகவும் தொலைவான ஊர்களுக்குச் செல்லும் பேருந்துப் பயணத்தினூடே நிகழும் அனுபங்களை மிக நுணுக்கமாகவும் கவனித்து எழுதிவிட முடிகின்றது அவரால்.
மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்ற தன் முதல் கவிதை நூலிலேயே இளம் கவிஞர்களில் தன்னை ஒரு முக்கியமான கவிஞராகத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளத் தோன்றுகிறது.
சொற்களை கவிதைகளில் பயன்படுத்தும்விதம் புதிதாகத் தோன்றுகிறது. மற்ற கவிஞர்கள் போலில்லாது இதுவரை யாரும் பயன்படுத்தாதச் சொற்களைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறாரென்றும் சொல்லத் தோன்றுகின்றது.
பாழடைந்த வீட்டைப் பற்றிய படிமங்கள் நிரம்பிய ஒரு கவிதையில் ஒரு பத்து பக்கத்தில் சொல்லவேண்டிய ஒரு கண்ணீர்க் கதையை பத்துவரிகளில் சொல்லி நம்மை அந்தப் பெண்ணின் கேவல்களுக்குள் அழைத்துப்போய் நம்மையும் கேவ வைத்துவிடுகிறார். ஒரு கவிஞனால்தான் ஒரு கதையைக்கூட சுண்டக் காய்ச்சிய குறுகிய வடிவத்தில் படைத்துப் படிப்போரை ஆழ்ந்த சோகத்துக்குள் ஆழ்த்திவிட முடியும். இந்தக் கலை கைவரப்பெற்ற கவிஞனாக கதிர்பாரதி இருக்கிறாரென்பதற்குச் சாட்சியாக அவருடைய இந்த முதல் கவிதை நூலே இருக்கின்றது என்று சொன்னால் மிகையில்லை.
கவிஞனுக்குரிய அதீதக் கற்பனைகள் கவிதைகளில் நிரம்பிக் கிடக்கத்தான் செய்கின்றன. கொக்கு நீரை தன் அலகால் சீண்டுகையில் பிம்பமாய் நீரிலிருக்கும் நிலவு பறந்துவிடுவதாக ஒரு கவிதையில் எழுதுகிறார். படித்தபோது உண்மையில் பறக்கும் கொக்குக்குப் பதில் நிலவு என் முன் அப்போது பறந்தது. நிலவு நிலவுலகின் மீது ஒரு வெள்ளை வண்ணத்துப்பூச்சியைப் போல் என் முன் பறக்கவிட்ட அதிசயத்தை கவிஞராலேதானே நிகழ்த்திக் காட்ட முடியும். இப்படி இந்தக் கவிதைகள் எண்ணற்ற இடங்களில் இவ்வுலகத்திலிருந்து என்னை எடுத்துச் சென்று எங்கெங்கோ இருக்கச் செய்தன என்பது மிகப் பெரிய உண்மை.
ஒரு பரோட்ட மாஸ்டர் உருவாகிறான் என்ற கவிதையில் ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாத பரோட்டாவும் ஒரு பரோட்டா மாஸ்டரை உருவாக்குவது குறித்து விவாதிப்பதாக ஒரு புனைவை மிக சுவராஸ்யமாக கவிதையாக படைத்திருக்கிறார். இப்படியெல்லாம்கூட புனைவைக் கவிதையிலும் சரியாக நிகழ்த்திக்காட்டிவிட முடியுமென்பதை கவிஞர் கதிர்பாரதி திறம்படச் செய்திருக்கிறார். அந்தப் பரோட்டா மாஸ்டர் எப்படியெல்லாம் பரோட்டாவைச் செய்யவேண்டுமென்பதை அந்தப் பரோட்டா போடும் கலையை மிக நேர்த்தியாக நம் முன்னே காட்சிகளில் நிறுத்தியிருக்கிறார். பரோட்டா போடும் காட்சியின் தத்ரூபத்தைக் கவிதைவழி படைத்திருக்கிறார். அவன் கனவில் பரோட்டா வட்ட வட்ட பெளர்ணமியாக வலம் வந்திருக்க வேண்டுமென்கிற கற்பனை ஆழ்ந்த வியப்பில் ஆழ்த்தியது.
படிப்பவர் ஒவ்வொருவரையும் கவர்ந்திழுக்கும் கவிஞராகவும் தமிழ் கவிதையுலகுக்கு ஒரு சவாலான கவிஞராகவும் தமிழுக்குக் கிடைத்த அருங்கொடையாகவும் திகழ்கிறாரெனவும் பெருமைபடச் சொல்லிக்கொள்ள விழைகின்றேன். இதுபோன்று அவரது கவிதைகள் இன்னும் இவ்வுலகுக்கு வருமென்றும் நம்புகின்றேன்.

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கதிர்பாரதி, வெளியீடு : புது எழுத்

15 April, 2013

, ”நினைவுகள் அழிவதில்லை’’

என் இனிய நண்பர் நா.வே.அருள் செல்பேசியில் அழைத்து, ”நினைவுகள் அழிவதில்லை’’ என்கிற படத்தில் நான் ஒரு பாட்டு எழுதி இருக்கிறேன். என் நண்பர் பகத்சிங் கண்ணன்தான் இயக்குனர். நாளைக்கு (14.04.2013) படம்பார்க்க வரமுடியுமா என்று கேட்டார். நா.வே.அருளின் நட்புக்காகவே தாராளாமாக வருகிறேன் சொல்லிவிட்டுப் படத்துக்கும் போய்விட்டேன். பிரிட்டிஷ் இந்தியாவில் கேரளாவின் கையூர் விவசாயிகள் உள்ளூர் நிலச்சுவந்தார்களை எதிர்த்து நடத்திய போராட்டமும் அதன் விளைவால் நான்கு இளைஞர்கள் தூக்குத்தண்டனைக்கு உள்ளானதைச் சொல்லும் நாவல் நினைவுகள் அழிவதில்லை. அதே பெயரில்தான் படமாக்கி இருந்தார் பகத்சிங் கண்ணன். லண்டன் வரைக்கும் எதிரொலித்த கையூர் விவசாயிகள் போராட்டம்தான் கதை. ஜனரஞ்சக சினிமாவுக்குரிய எந்தத் துருத்தலும் இல்லாத இந்தச் சினிமாவைப் பார்க்க மகிழ்ச்சியாகவே இருந்தது. சுட்டிக்காட்டவும் தட்டிக்கொடுக்கவும் குறை - நிறைகள் நிறைய இருந்தாலும், முந்தைய தலைமுறையின் போராட்ட வாழ்வை படமெடுக்கவும் அதனால் ஏற்படப் படப்போகும் பொருளாதாரச் சிரமங்களை ஏற்றுக்கொள்ளவும் சித்தமாக இருக்கும் இயக்குனர் பகத்சிங் கண்ணனை நினைக்க பெருமையாக இருந்தது. இதுபோன்ற படங்களை பார்வையாளர்கள் கைத்தட்டி ரசித்ததும் வியப்பான அனுபவம். நண்பர் நா.வே.அருள், இயக்குனர் பகத்சிங் கண்ணன் மற்றும் பட்க்குழுவினர் அனைவரும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். நம் முன்னோர்களின் போராட்ட வரலாறுகளை அறிந்துகொள்வதற்கான தூண்டுகோல் இந்தப் படம். (இயக்குனர் சார்.. பண்ணையாரின் அடிபொடியாக நடித்த நண்பர் யார்? அவர் நடிப்பு அட்டகாசம்!)

விமர்சனம் ~ காதலை புறங்கையால் தள்ளிவிடும் கவிதைகளை தீராக் காதலுடன் எழுதித் தீர்க்கிறது கதிர்பாரதி பேனா. ~ எழுத்தாளர் வா.மு.கோ.மு

இயல்பாகவே கவிதை தொகுப்புகளை நான் வருடத்தில் மூன்று மட்டுமே படிக்கும்
வழக்கம் கொண்டவன். படிக்கத்துவங்கிய காலத்தில் கவிதை தொகுப்பு தவிர
எதுவும் படிக்க மாட்டேன். எல்லாம் காலத்தின் கோலம் எனலாம். இவ்வருட
துவக்கத்தில் வே.பாபுவின் “மதுக்குவளை மலர்” படித்து கவிதைகளின் உச்சபட்ச
சாத்தியக்கூறுகளைக் கண்டு அதிசயித்துப் போனேன். அதன் பிரமிப்பிலிருந்து
விடுபடாமல் நான் இருக்கையில் கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுதி கைக்கு
வந்து விட்டது. கவிதைகளை படிக்கத் துவங்குவதற்கு தனித்த வாசிப்பு
மனநிலைக்கு தயாராக வேண்டியது அவசியமாகிறது. மனநிலை ஒத்துவராத சமயத்தில்
வலுக்கட்டாயமாகப் படித்தால் கவிதைகள் வெறும் வார்த்தைகளாகவே பதியும்.
நிர்பந்தத்தின் பேரில் படித்தாலும் கவிதைகள் நமக்கு காட்டும்
பாதைகளுக்குள் நாம் செல்லவே முடியாது.
மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்.. தொகுதிக்குள் நுழைந்த போது முதல்
நான்கைந்து கவிதைகளை வாசித்ததும் இவ்வளவு இறுக்கங்களை சாதாரண வாசகன்
உணர்ந்து ரசிக்க இயலுமா? என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதற்கும் எனக்கு
வழி இருக்கிறது என்று கடைசிக் கவிதையிலிருந்து பின்புறத்தில் இருந்து
வந்தேன்.அவைகள் என் கைப்பிடித்து எளிமையாக முன்புறம் நோக்கி கூட்டி
வந்தன.
மதுக்கூடத்தில் கொண்டாட்டத்திற்கு நுழைந்த கவிஞன் கடைசி
மிடறுக்குப் பிறகு விசும்பத் துவங்குகிறான்...காதலியால் உதாசீனப்படுத்தப்
பட்டவன் விடுதியில் தங்கி அவளின் நினைவலைகளை அழிக்க முயன்று தடுமாறித்
தவிக்கிறான்...
இறப்பை நோக்கியே நகரும் கவிதைகள் காதலின் வலிகளை கசப்பாய்
விசிறியடிக்கின்றன...
கவிஞனாய் இருந்துவிட்ட கவிஞன் லெளகீக வாழ்வில் ஒரு அங்கமாக இருக்க
தடுமாறுகிறான். வாழ்வை கவிதையாய் வாழ முயற்சிக்கும் அவன் சுவரொட்டி மீது
மூத்திரம் பெய்து தன் கோபத்தை வெளிக்காட்டுகிறான்..அதுவும் நடு
இரவில்..கூடவே அவனுக்கு தன் பெயரை சுமந்து கொண்டு திரிவது கூட கனமாய்
இருக்கிறது.
காதலை புறங்கையால் தள்ளிவிடும் கவிதைகளை தீராக் காதலுடன் எழுதித்
தீர்க்கிறது இவரது பேனா. இவர் நமக்கு காட்டும் கடவுள் கூட சாத்தானாகும்
ஏக்கத்தில் வீழ்ந்து கிடக்கிறார்.
தலைப்புக் கவிதையும், மகன்களும் மகன்களின் நிமித்தமும் இரண்டையும்
சிறுகதை வடிவில் வாசித்து மகிழ்ந்தேன்.
முதல் தொகுதி வந்த பிறகு சிலவற்றை கழித்திருக்கலாம் என்று கதிர்பாரதிக்கே
தோன்றி இருக்கலாம்..அவைகள் என் கண்களுக்கும் தட்டுப்பட்டன. ஒரு கவிதை
தொகுதி பாராட்டப் படுவதற்கு அனைத்து கவிதைகளுமே சிறப்பானவைகளாக இருக்க
வேண்டிய அவசியம் எதுவுமில்லை.


- வா.மு.கோமு

08 April, 2013

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் (உயிர் எழுத்து - ஏப்ரல் 2013 இதழில் வசுமித்ர எழுதிய விமர்சனம்)


காயம்பட்டவனை அழைத்து வாருங்கள், களிம்பு தருகிறேன் எனச் சொன்னவன் வலியை முதலில் அறிந்தவனாக இருக்கிறன். துக்கம் வேறோடிய தன் உடலை ஒரு கவிஞன்  இலையெனக் கழித்துவிடத் தயங்குவது எதனால் அன்பர்களே. முத்தத்தைத் திருவோடாக்கிக் காத்திருக்கும் கவிஞனுக்கு தங்களது பசிய உதடுகளால் இரண்டு முத்தங்களைப் பரிசளியுங்கள். உங்கள் உதடுகள் ஆசிர்வதிக்கப்படட்டும்.

கவிஞன் தன் இயலாமையிலிருந்து எழுதுகிறான் என்பதைவிட ஒரு மனிதன் தன் இயலாமையிலிருந்து வார்த்தைகளைக் கண்டுகொள்கிறான் என்றே நான் புரிந்துகொள்ளுகிறேன். ஒரு காலத்தில் கவிதை ஆசிர்வாதமாக இருந்தது. அது பசிக்கு உணவாக, தங்கக்காசுகளுக்கும், யானைகளுக்கும்  மாற்றாக இருந்தது. அதன் பின் கவிதை மொழியின் ஆதிக்கத்திற்குள் போய் கற்றறிந்த மனிதர்களின் முன்னால் ஒரு வேசையாக விபச்சாரகனாக மாறிவிட்டது. தலையாட்டல்களுக்கும் தரகுக்கும் இடையே கவிதை தன் நிர்வாணத்தை மறைக்க மிகுந்த சிரமப்பட்டது. பின் கவிதை வேசைத்தனத்தின் மூலம் அரசியலை அறிந்தது.

கவிதைகள் பெரும்பாலும் தமிழில் பாடல்களாகவே இருக்கிறது. நவீனம் வந்தபிறகே பாடல்கள் கவிதைகள் என இரு கூறாகப் பிளவு கொண்டது. மலையாளத்தின் நவீன கவிதைகளை பாடல்களாகப் பாடுவதும் உண்டு. ஆனால், கவிதையின் இலக்கணத்தைச் சொல்லும் மொழியறியாதவன் இசையின் வழியாக வரிகளை அறிந்துகொள்கிறான். வரிகளுக்குள் ஓடும் இசையில் அவன் துக்கத்தை, துள்ளலை மொழிபெயர்த்தவனாகி விட்டான். ஆனால் இதே கவிதை எந்த நிர்தாட்சண்யமும் இன்றி கவிதையாக இருக்கும்போது அது வாசகர்களுக்கு தேவையில்லாமல் போகிறது.

ஆனால் கவிதை மக்களை நோக்கியதாக இருக்க வேண்டும் என நான் இப்போது நினைக்கிறேன். கவிஞன் மக்கள் இல்லையா. இருக்கலாம், தனக்கென ஒரு உலகத்தை மொழிவழியே விரிக்கும் ஒருவனை மக்கள் என அழைக்கச் சங்கடமாக இருக்கிறது. இதே சங்கடங்களை மக்கள் முன் கவிஞர்களும் கண்டடையவேண்டும்.


கவிதையைக் கவிதை என்று பாராமல் அது மதுப்போத்தல்களாகவும், கள்ளச் சீட்டுக்களாகவும், அடையாள அட்டைகளாகவும், கடவுச்சீட்டுக்களாகவும்  கழுத்தில் தொங்குவதை இப்போது நான் எனது சமகாலத்தில் கண்டு கொண்டிருக்கிறேன். நவீன கவிஞர்கள் கவிதைக்கு முன் தங்கள் விரல்களால் எதை எழுதினார்களோ இல்லையோ தத்துவத்தை, (இங்கு நான் தத்துவம் எனக் குறிப்பிடுவது மார்க்சியத்தை மட்டும்தான். வாழும் காலத்தில் பயன்தரத்தக்க ஒன்றை மட்டுமே என்னால் தத்துவம் என அழைக்க முடிகிறது.) எதிர்த்தார்கள்.

வரிகள் உணர்ச்சி வசப்பட்டவுடனேயே கவிஞர்கள் உனர்ச்சிவசப்பட்டுக் கத்தியது அது கவிதையல்ல கோஷம், இது பிழைப்பு, இது அரசியல். இது அடிப்படை வாதம், துரதிருஷ்டம் இவை மூன்றும் இல்லாது எந்தச் செயலும் இல்லை. இன்று நவீன கவிஞர்கள் கையில் புழங்கும் பலமான சில்லறையாக செலவாணியாவது காதலின் விவரணை வடிவங்களும், இருண்மையின் வெளிச்சங்களும் மட்டுமே. இவையே பெரும்பாண்மையாக நவீன கவிதை முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது.


கவிதை என்றால் என்னவென்று ஒரு நொடியில் சொல்லிவிடமுடியுமா என அகந்தையோடு கேட்கும் கவி உள்ளங்களை நானறிவேன். ஒரு வாசகனாக சாமனியனாக அதே கவிஞர்களிடம் எனக்கும் நிறைய கேள்விகள் இருக்கிறது. பசி என்றால் என்னகாதல் என்றால் என்னகாமம் என்றால் என்ன…. உழைப்பு என்றால் என்ன.. மனிதன் என்றால் யார்…. இவற்றை எல்லாம் தெரிந்துவிட்டா நீங்கள் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். இல்லைநாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அல்லது வாழப் பழகிக்கொண்டிருக்கிறோம்.

கேள்விகள் நிலமெங்கும் தங்களது கனத்த கைகளால் நிலத்தை ஓங்கியறைந்து புழுதியைக் கிளப்புகிறது. இறுதியில், எதிர்பார்ப்பின் முகத்தில் குறைந்தபட்சம் காறியுமிழ்ந்துவிட்டு வாசகனுக்கு ஒரு சேவையையும், தனது அகங்காரத்தையும் இழந்து, பெற்றவற்றின் சுய நோக்கங்களை, சுய புலம்பல்களை, பெற வேண்டியவற்றை ஒரு மந்தைக்கு முன் நின்று கூவுகிறவரையே நான் கவிஞன் என்பேன். அவன் களத்தில் இறங்கினான் என்றால் அவன் எனக்கு மகா கவிஞன்தான். இதுவே என் கவிதை பற்றிய சிறிய புரிதல்.
சிறிய புரிதல் எனச் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. உரையாடுவதன் மூலம் நீங்களோ நானோ ஓர் உத்தேசமான திசையைக் கண்டுபிடிக்கலாம். அல்லது, கவிதை தொன்மத்தில் சுட்டுகிற திசைப்பூண்டாகக் கூட நாம் கால்களை இழுத்து, தன் தலையில் மிதிக்க வைத்து நம்மை அலைய வைக்கலாம். ஆனால் அடிப்படையில் இங்கு நாம் உரையாட வேண்டும். ஆம் கவிதை குறித்து கவிதை எழுதிக்கொண்டே இருக்கமுடியாது. உரையாடித்தான் ஆகவேண்டும். அதுவே கவிதைக்கும் கவிதை வாசகருக்கும் ஒரு கவிஞராக நாம் செய்ய வேண்டிய உதவி. நிச்சயமாக இதை உதவியென்றே அழைக்க வேண்டும் என விருப்பப்படுகிறேன். வழிகாட்ட நான் இருக்கிறேன், நான் கவிஞர் என நெஞ்சை நிமிர்த்துபவர்களும், பாடம் நடத்துபவர்களும் தீர்க்கதரிசிகளாகச் செத்தொழியட்டும்.

ஆனால், கவிஞன் தன்னைச் சூதனாக வைத்து வரிகளை பகடைகளாக உருட்டும் போதுதான் வரலாறு பிறக்கிறது. ( அதில் உள்ள சார்பே அவன் எந்த மக்களைக் குறித்து எழுதுகிறான் என்கிற அரசியலையும் பிறக்க வைக்கிறது) அரசும், ஆண்டியும் தீர்க்கதரியும் அவன் மொழி வழியாகவே இத்தனை ஆண்டுகாலமும் நம்மை வந்தணுகிக் கொண்டிருக்கிறார்கள்.

கவிஞனின் கண் காலத்தின் கண் எனச் சொல்லும் நாம் அதை மதுப்போத்தலின் முன்னாலும், என் பெயர் இதுதான் எனச் சொல்ல ஒரு வாசகமாகவும் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. அவை எனக்கு மிகுந்த சிரமத்தை தருகிறது.

சிரமங்கள் வாழ்க.

மெசியாவின் காயம் எனத் தலைப்பிலிருந்து ஒழுகும் துயரம் கவிதைகள் அனைத்திலும் ஒரு ஊடு நரம்பாகவே ஓடியிருக்கிறது. அன்பை அளவுக்கு மீறிக் கவிஞர் போதிக்கையில் அவர் கவிதைகளை நாம் குரூரத்தோடுதான் வாசிக்கிறோமே என எண்ணத்தோண்டுகிறது. அன்பைச் சொல்லுகையில் கல்லறை மொழியை பார்வைக்குக் கொண்டு வந்துவிடுகிறார் கதிர்பாரதி. இத்தொகுதியில் நான் கண்டடைந்த கவிதைகளென ஒன்றை இங்கே ஞாபகமூட்டுகிறேன் கவிதைத்தலைப்பு சமாதானத் தூதுவர் = ஹிட்லர். (பக்_ 4 ) ஒரு கட்டியங்காரனின் மொழியில் இக்கவிதை தன்னுடலைக் கிடத்தியிருக்கிறது. ஆள்மாறாட்டமும் அரசியல் மாறாட்டமும் நடைபெறுகையில் எல்லாப் பக்கமும் மனிதர்களே காணக்கிடைக்கிறார்கள். மக்கள் தங்கள் கண்களை நம்பி மோசம் போய்க்கொண்டேயிருக்கிறார்கள். இதே தொனியை உடைய அரசியலை உயிர்ப்பந்தல் எனும் கவிதையிலும் வைத்திருக்கிறார். சோரத்தை விரும்பாத குற்றவுணர்ச்சி கொண்ட கவிதையாக இதை முன்மொழிகிறேன்.





ஒரு தோத்திரப் பாடல் ஒன்றும் இத்தொகுதியில் உள்ளது. ஆனால் மதம் கட்டமைத்த மனிதனை மதமே காவு கொண்டு அதை மனிதன் குற்றவுணர்ச்சியின் அடிப்படையில் கேள்வியை முன்வைக்காது குற்றவுணர்ச்சியை அடிப்படையாக வைப்பது எந்த நியதியின் கீழ் எனத் தெரியவில்லை. கடவுள் மனிதர்களின்  பெரும்பாரம் அல்லவா.

தொகுதியில் பத்துக்கவிதைகள் வாசகனின் நேரே விரல் நீட்டி, பற்றிக்கொள் என்கிறது. குறிப்பிட்ட கவிதைகளில் குறிப்பிட்ட வரிகளை நானே துண்டித்திருக்கிறேன். அது கீழ்க்கண்டவாறு


நெடுநாட்கள் கழித்து குடும்பப்புகைப்படம்
ஒன்றைப் பார்க்கையில்
சுடர் விடும் அன்பைத் தரிசிக்கிறீர்கள்

நான்கைந்து நூற்றாண்டுகளின் ரேகைகள் படிந்திருக்கும்
மாளிகைக்குள் நுழைகிறீர்கள்

நீங்கள் நினைப்பது போலில்லை
குவித்து வைத்த ஏதோ ஒன்றெனத்தான் இருப்பார்

இளஞ்சிவப்பு நிறங்கொண்டது
என்கிறீர்களா

இரைக்காக அது மலம் கொத்திக்கொண்டிருந்தது
எனச் சொன்னால் நீங்கள் வாழத்தகுதியற்றவர்

ஆதிவாசிகளின் குகை ஓவியங்களுக்கு நிகராக
மிகு புராதானமான எனது தனிமைக்குள்
உங்கள் சந்தையைப் பரப்பிவிட்டீர்கள்

எருக்கம்புதர்கள் மண்டிக்கிடக்கும்
ஒரு பாழடைந்த வீட்டைக் கடக்கும்போது
உங்கள் இதயத்தாய் உற்றுப்பார்க்கிறீர்கள்

தெருவைக் கடக்கும்போது உணராவிட்டால்
இன்னும் நீங்கள் முழுதாகத் தெருவைக் கடக்கவில்லை


இதோஇதயநோயாளி நோகாவண்ணம்
பேருந்து விரைவதைக் கவனிக்கிறீர்களா

வாழ்த்துக்கள்
நீங்கள் என்னை அழவைத்துவிட்டீர்கள்

கண்ணாடித் தம்ளரில் நீரினை வெளியேற்றி
அவள் சிரிப்பினை நிரப்பி கடகடவெனக் குடிக்கிறீர்கள்

அதைக்கொல்ல நினைத்துத்தான் இப்போது
சாராயத்தால் மிறுமிடறாக எர்ந்துகொள்கிறேன் என்கிறீர்கள்

இவ்வரிகளிலுள்ள தொனியின் ஒற்றுமை, கவிதைக்கு நம்மை வாசகனாக அடையாளம் காட்டுகிறதென நினைக்கிறேன்.

கதிர்பாரதியின் இத்தொகுதியில் எந்த வாசகனும் அதன் உடலில் இருந்து இரண்டு வரிகளைக் கலக்கிக் குடித்து பருக வைக்கும் இயல்பைக் கொண்டதாக இருக்கிறது. முதல் தொகுதியென இதை முன் வைத்திருக்கும் கதிர் பாரதியின் மேல் எனக்கு இன்னும் சில நம்பிக்கைகளை அழுத்தமாக ஏற்றி வைக்கிறது.  அதோடு கவிஞர் தன் வார்த்தைகளின் மேல் கத்தரிக்கோலை வைக்கத் தயங்கக்கூடாது என வேண்டுகோளும் வைக்கிறேன். நல்ல கவிதை எனச் சொல்லுவது, இங்கும் பெரும்பாலும் மொழியின் வழியே நாம் அடைந்த அனுபவத்தை சொல்லுவதுதான். அப்படியென்றால் உளநூல்கள் அனைத்தும் பெரும்பாலும் கவிதை மொழியில் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அதற்கு அறிவியல் மொழியே கையாளப்படுகிறது.

கவிதைக்கென்று ஒரு மொழி இருக்கத்தான் செய்கிறது. அந்த அடிப்படையிலேயே சொல்கிறேன். மொழியைக் கையாளத் தெரிந்த எவரும் கவிஞராகலாம். கொஞ்சம் அளவுகூடிய உழைப்பு அவ்வளவே.

மொழி கைவராத கவிதைகள் சில இத்தொகுதியில் உண்டு. உதாரணத்துக்கு மோகப்பரிபூரணி என்ற ஒன்று, வெறும் மொழிவிளையாட்டுடனேயே கணக்குப் போட்டு தன்னைத்தானே அடையாளப்படுத்தியிருக்கிறது.

இது இத்தனை நிறைளைச் சொன்னவன் ஒரு குறையைச் சொல்லக்கூடாதா என்கிற கருப்புப் புள்ளியல்ல. முதல் தொகுதியில் இத்தனை கவிதைகளை எழுதியவர் கதிர்பாரதி என்ற ஒரு ஆனந்தமான மனநிலையில், ஒரு வாசகனாக நான் வைக்கும் எச்சரிக்கையே. எச்சரிக்கைகள் பாடத்திட்டங்களுக்கு உரியவை. ஆகவே யதார்த்தத்தில் ஒத்துவராதென கதிர்பாரதி நினைக்கலாம். ஆனால் பாடத்திட்டங்களின் படி வாழும் வாழ்க்கைதான் இது.

இறுதியாக ஒரு விவசாய வாழ்க்கையை வாழும் ஒருவன் வயலுக்கு கலையில் எழுந்து மாலைவரை உழுது வீடு திரும்பும் போது அவன் அதிகபட்சம் நூறு வார்த்தைகள் பேசியிருக்கலாம். மாட்டோடும் துணையாக உழுபவனிடமும். அதனால் அவனுக்கு காதல் இல்லையென்றோ உணர்வுகள் இல்லையென்றோ நான் நம்பிவிடக்கூடாது. இதுவே என் வரையறை.

இத்தொகுதியில் மாளாத எரிச்சல் உணர்ச்சியை எனக்கு வழங்கிய கவிதை. மகாகவி கவிதை எழுதுகிறான் என்ற தலைப்பிடப்பட்ட ஒன்று. பக்- 53

உலகை
உன்மத்த தாண்டவமாட வைக்கிற
கவிதையொன்றின் கடைசிவரியை
இயற்றிக்கொண்டிருக்கிற மகாகவியை
அவன் மகனின் மலத்தைக் கழுவிவிட
நிர்பந்திக்கிற கீழ்புத்தியுடைய இச்சமூகம்
அந்தக்கவிதையின் கடைசிவரியைப்
படிக்கையில் மூக்கைப்
பொத்திக்கொள்ளுகிறது

அதோடு மகா கவியை துணி காயப்போடச் சொல்லக்கூடாது, கவிஞரின் எரியும் கவிதையைக் கண்டு பெட்ரோல் மிரள்கிறதுஇப்படியாக பேரிளம் பெண், அடுத்து மனைவி,ஆகக்கடைசியில் டூபிஸ் நடிகை எனத் தாண்டிச்செல்கிறது. இப்படியாக கவிதை நீண்டு செல்கிறது. குண்டி கழுவாத, அதுவும் அவன் மகனுக்குக் கழுவிவிடாத, கவிஞருக்கு உலகைத் தண்டாவமாடவைக்கிற கவிதைகளை எழுதமுடியாது என்பதோடு, அவர் தன் மூக்கையே சம்பந்தப்பட்ட மகாகவிதையை எழுதும்போது  பொத்திக்கொள்ளட்டும்.

ஏனெனில் அவரது வீச்சம் அவரது உடலில் இருந்தே கசிந்து ஊறுகிறது. துவைத்த துணியைக் காயவைக்காத, கறிக்கடையில் நிற்காத, போட்டதை எடுத்துத் தின்று கொழுத்துக் கிடக்கும் பிராணிகளை கவிஞர் என்ற பதத்தைச் சுட்டி எப்படி மன்னிக்கமுடியும். அவர் கவிஞர் எனவும் அவர் எழுதியது மகா கவிதையெனவும் அழைக்க முடியும். இன்னும் ஒன்று இக்கவிதையில் வருகிற மகா கவிஞன் பெண்களை என்னவிதமாக எண்ணுகிறான் என்பதை, தனது பெண்பற்றிய புரிதலை, கவிஞர் கதிரிபாரதி சொல்ல முடியுமா என்று கேட்டால், அதை அவர் ஒரு கேள்வியாகவே எதிர்கொண்டால் போதுமானது.

இத்தொகுதியில் என்னை ஈர்த்த பல கவிதைகள் உள்ளன.
நிற்க

நண்பர்களேஇத்தொகுதியில் உள்ளவைஒரு வாசகனாக எனக்கு கவிதைகளாகவே தன் வரிகளைத் திறந்து போட்டிருக்கிறது. அதோடு முதல் தொகுதியில் இவ்வளவு நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்திய கதிர்பாரதியைக் கவிஞர் என்றே அழைக்க ஆசைப்படுகிறேன். அவருக்கு என் ப்ரியமும். முத்தங்களும்.

வசுமித்ர