19 June, 2025

மொழியின் பொலிவு :
‘அம்மாவை மனைப்பாம்பு
பார்த்துக் கொண்டிருந்தது’.
- எழுத்தாளர் நர்சிம்

‘யாயும் ஞாயும்’ என குறுந்தொகையில் ஆரம்பித்து, ‘நற்றாய் கூற்றுகள் வழி தாய்மையின் பதற்றங்கள், தவிப்புகள் கடந்து, அம்மா என்றழைக்காத பாடல் திரையிசை வரை ‘அம்மாக்களால்’ ஆனது இலக்கிய மற்றும் அன்றாடமும் ஆன உலகம். தீரத்தீர அம்மாவையும் தாய்மையையும் தொடர்ந்து புனிதப்படுத்தி,வியந்தோதியபிறகும், அவளின் அன்பைப்போலவே அவ்வுணர்வு உலகம் உயிர்த்திருக்கும்வரை உயிர்ப்புடன் தான் இருக்கும். அப்படியான ஓர் உயிர்ப்பு, இத்தொகுப்பு, ‘அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது’.

இதுவரையிலான நாம் பார்த்த அம்மா, மென்மையன்புக்கவிதைகளை, அல்ல இப்படியும் என்று தலைகீழாக்கிக் கொடுத்திருக்கிறார் கவிஞர் கதிர்பாரதி. அதனால்தான் முதலில் 60 என இறுதிக் கவிதையில் இருந்து நகர்கின்றன, பக்கங்களும் படிமங்களும் நம் எண்ணங்களும். சர்ப்பத் தீண்டலில் சரசரவென கீழிறங்குவது போல் அறுபதிலிருந்து ஒன்றுக்கும் பின்னர் ஏணி ஏற்றம் போல் ஒன்றிலிருந்து அறுபதுக்குமாக இத்தொகுப்பு ஓரு பரமபத ஆட்டம்.
சமீபத்திய நிகழ்வொன்றில் எழுத்தாளார் பா.வெ சொன்னது “கவிதைகள் நிகழ்வுகளில் அல்லாமல் நிச்சலனத்தில் இருந்து எழுந்தவையாக இருந்தன”. மிகப்பிரமாதமான அவதானிப்பு. கதிர்பாரதியின் கவிதைகளில் நிச்சலனம் என்பது படித்து முடித்த பிறகு ஏற்படும் ஒன்றாக, மனம் கனக்கச் செய்யும் ஒன்றாக நிகழ்ந்திருக்கிறது. சொற்களால் ஆனது கவிதை என்றிருந்த பொழுதில், அப்படி அல்ல, கருவில், பாடுபொருளில், நிலத்தில், நிஜத்தில் பட்டுத் தெறித்து எதிர்வெயில் மினுங்க பொலியும் கடல்போல் ஆனது என கவிதைகளோடு வந்தவர்தான் கதிர்பாரதி. ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தொகுப்பில் இப்பொலிவை நீங்கள் கண்டுகொள்ளலாம் எனில் இத்தொகுப்பில் அதை துய்த்துணரலாம்.
‘/அம்மாவை நிரம்பப் பிடித்த
அப்பத்தா சொன்ன சித்திரம் இது’/
மொத்தத் தொகுப்பின் அச்சு இந்தச் சித்திரத்தில் செழுமைகொண்டு சுழல்கிறது, எனக்கு. இன்னதுதான் தாய்மைக்கான கவிதை பாடுபொருள் என்பதையெல்லாம் உதறிவிட்டு, நினைவில் இருக்கும் யாவையும் கச்சிதமான மொழியில் கவிதைகளாக்கிய விதம், மிகப்பிடித்தது. கச்சாப்பொருட்களை எந்த அலங்கரா ஆபரணங்களும் அல்லாமல் குவித்து வைத்தது போல் இருந்தது என்றும் சொல்லலாம்.
தொகுப்பு முழுக்கச் சொற்களின் லாகவம் அறுபதிலிருந்து ஒன்று, மீண்டும் ஒன்றிலிருந்து அறுபது எனப் பயணப்பட வைக்கிறது.
/அந்தி வேறு
எழுத்தாளர் நர்சிம்
அவளைப்போல் பற்றி எரிகிறது/
இப்படிப் பதறிப்பதறி பக்கங்களைத் திருப்பினால், இவ்வரிகள் பதற்றம் போக்கி மனதைத் தண் என்றாக்கியது
/அப்போது
அவள் பொன்மூக்குத்தி
வேப்பம் பூவாக மினுக்கம் காட்டியது/
மிகச்சிறிய தொகுப்பு, வெகுநாட்களுக்குத் தன்னுள் வைத்துக்கொள்ளும், காலம்.
நீங்கள் அம்மாவோடு வசிப்பவர்கள் எனில் தொகுப்பைப் படித்து முடித்ததும் ஏதேனும் பேசவேண்டும் என்ற உந்துதலில் அவர் முன் போய் நிற்பீர்கள், சொற்கள் தொலைத்திருப்பீர்கள். அம்மா ஊரில் இருக்கிறார் எனில் பேருந்தேறி ஊருக்கு விரையலாம், நிற்க,
அம்மா நினைவுகளில் மட்டும் இருக்கிறார் எனில், இத்தொகுப்பு அவரை சற்று நேரம் ரத்தமும் சதையுமாய் உங்களருகில் வலம்வரச் செய்யக்கூடும்.
கவிஞர் ராஜசுந்தர்ராஜனின் ‘முகவீதி’ (தமிழினி) தொகுப்பு தான் இதுவரை நான் பெரும்பாலும் நண்பர்களுக்குப் பரிசாக கொடுத்தப் புத்தகம். இனி இந்த ‘ அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது’ புத்தகமும் அதில் சேர்ந்து கொள்ளும்.
இத்தொகுப்பும் கதிர்பாரதியின் முந்தைய தொகுப்புகளைப் போலவே, நிறைய விருதுகளைப் பெற்றுத்தரும். அதற்கான தகுதியோடு வந்திருக்கும் கச்சிதமான தொகுப்பு இது.
நண்ப கதிர்பாரதி. பொலிந்து திகழ்ந்திருக்கிறது உங்கள் மொழி. வாழ்க.
நாதன் பதிப்பகம் வெளியீடு
9884060274
விலை- ₹100

13 June, 2025

ரமேஷ் கண்ணன் அவர்கள் பகிர்ந்திருக்கும் ``தினம் ஒரு கவிதை`` என்கிற பதிவில் என் கவிதைக்கான வீடியோ பதிவு https://www.youtube.com/shorts/MPWwTMVAEH4

 


கவிஞர் ஜெயதேவன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் எனது ``உயர்திணைப் பறவை`` புத்தகத்தில் இருக்கும் கவிதைகள்!!!

 யுவப்புரஸ்கார். விருது பெற்ற Kathir Bharathi கதிர் பாரதி அவர்கள் கவிதை

கிருஷ்ண நிழல்
.----------
கிருஷ்ணர்
அர்ஜுனனுக்குச் சொல்லவே முடியாத
கீதோபதேசம் கீழ்வருவன...
அதோ
மரம் தெரிகிறதா?
தெரிகிறது
அதன் பசும்வனப்பும்.
மரத்தில் இருக்கும் பூ தெரிகிறதா?
தெரிகிறது
அதன் மஞ்சள் நிறமும்.
பூவுக்குள் இருக்கும்
காய் மற்றும் கனி தெரிகின்றனவா?
தெரிகின்றன
அவற்றின் துவர்ப்பு
மற்றும் இனிப்பும்.
கனிக்குள் இருக்கும் விதை தெரிகிறதா?
தெரிகிறது
அதன் மழைத்துளி வடிவமும்.
விதைக்குள் இருக்கும்
மரம் தெரிகிறதா?
தெரிகிறது
அதன் மடிநிழலும்.
அம்பாறதூணியைக் கழற்றி
ஓரமாக வைத்துவிட்டு
வா…
`அந்த மரத்தின்` கீழ்
சிறிது நேரம்
உட்கார்ந்துவிட்டு வருவோம்.
-----
உயர்திணைப் பறவை ........
சகுந்தலை என்றால்
`பறவைகள் புடைசூழ வளர்பவள்` என்று பொருள்.
புடைசூழ் பறவைகள் மத்தியில்
உண்மைப் பறவை சகுந்தலை மட்டும்தான்
அதுவும் உயர்திணைப் பறவை.
தாய் பிரிந்த துயர்
காதல் பிரிந்த துயர்
மகன் பிரிந்த துயர்
வாழ்வு பிரிந்த துயர்
யாவற்றையும் பறந்து கடக்கிறாள் பறவைபோல
தண்டகாரண்யத்தை
தனித்த வானத்தை
சலசலக்கும் நதியை.
பலமுறை
மழைமேகம்போல பறந்து கரைய நினைத்தாள்.
ஆனால்
ஓர் எளிய மோதிரத்தின் எடை தாளாமல்
கீழே
கீழே வருகிறாள்.
துஷ்யந்த சாபம்
சகுந்தலைக்குக் காவிய சோகம்.
காதல் ஒரு பெண்ணுக்கு ஒளியூட்டும் என்றால்
சகுந்தலைக்கு இருளூட்டியது.
இருள் தின்று
துயர் தின்று
மாலினி ஆற்று மீனாகப் பரவியவள் சகுந்தலை.
கணையாழி
சிலம்பு
மோதிரம்
எல்லா அணிகலன்களும்
பெண் துயரில் உருவான விலங்குகள்.
அதோ
திசைகளை அழைத்துக்கொண்டு
மோதிரம் போன்ற காற்றுவளையம் புக
தன்னந்தனியே ஒரு பறவை பறக்கிறதே
அது
பறவையல்ல சகுந்தலை
சகுந்தலை அல்ல அவள் துயர்
துயர் அல்ல அவள் வாழ்வு
ஆம்
பெண் வாழ்வு.
**
நூல்: உயர்திணை பறவை

அஞ்சலி : கவிஞர் ஜெயதேவன்...


விஞர் ஜெயதேவன் மரணம் அடைந்தது வருத்தமளிக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் பணிப் பங்களிப்பு செய்தவர். ஆனந்த விகடனில் நான் வேலைக்குச் சேர்வதற்கு முன்பு அங்கிருந்து விலகிவிட்ட பத்திரிகையாளரும்கூட.

இளவரசன்(திவ்யா)மரணம் சம்பந்தமாக ஆனந்த் விகடனில் நான் எழுதிய "அது எது?" என்கிற தலைப்பிலான கவிதையைப் படித்துவிட்டு முதன்முதலாக என்னோடு பேசினார். அப்போதே அவர் 70 வயதை நெருங்கியிருந்தார். ஆனாலும் வார்த்தைகளில் மரியாதை தோழமை அன்பு எல்லாம் வெளிப்பட பேச ஆரம்பித்தவர், பிறகு நெருங்கிய உறவினர்போல மாறிவிட்டவர்.
எனது "அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது" கவிதைப் புத்தகத்து முதல் மதிப்புரை எழுதியவர் கவிஞர் ஜெயதேவன். கடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில், அவரது மதிப்புரை என் புத்தகத்துக்கு வாசகத் தொடக்கமாக இருந்தது. அவரது மதிப்புரையைத் தொற்றித்தொடர்ந்து நிறைய விமர்சனங்களும் மதிப்புரை வார்த்தைகளும் வர ஆரம்பித்தன. அப்படி நிறைய ஆதுரமான அன்பான வார்த்தைகளைப் பழகிய தோழர்களோடு பகிர்ந்துகொண்டவர். தனக்குச் சரியென பட்ட வார்த்தைகளை அழுத்தமாக இதமாக உரையாடத் தெரிந்த பண்பாளர். இவ்வளவு சீக்கிரமாக சுமையான நினைவுகளாகிவிடுவார் என நினைக்கவில்லை.
மரணம் என்பது முட்டாள்போல பாசாங்குசெய்யும் புத்திசாலி. ஆனால், ஒருபோதும் அது புத்திசாலித்தனமாக நடந்துகொண்டதே இல்லை. அஞ்சலிகள்!!!

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - எழுத்தாளர் சுபஸ்ரீ முரளிதரன் வாசகசாலை இணையத்தில் வழங்கியிருக்கும் குறிப்பு

 மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்கிற என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை, புது எழுத்து பதிப்பகம் வெளியிட்டு 13_வது வருடம் ஆகிறது. அதன் பிறகு மூன்றாம் பதிப்பை சால்ட் பதிப்பகமும் நான்காவது மற்றும் ஐந்தாவது பதிப்பை இன்சொல் பதிப்பகம் வெளியிட்டது.

முதல் பதிப்பு 2013_ம் ஆண்டு வெளியாகிய இத்தனை வருடங்களில் இந்தத் தொகுப்பு எனக்கொரு முக்கிய அடையாளமாகவும் நித்தம் புதுப்புது வாசகரை எனக்குத் தருவதுமாக இருக்கிறது.
சாகித்ய அகாடமி யுவபுஸ்கார் விருது அங்கீகாரம் முதல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலும் இடம்பெற்றது. விமர்சனங்களும் மதிப்புரைகளும் என இலக்கிய வாசகர்கள் - ஆசிரியர்கள் இதனை வரவேற்றனர்.
இந்தப் புத்தகத்துக்குப் பிறகு மூன்று தொகுப்புகள் வந்துவிட்டன. எனினும் தாய் முதல் பேற்றையும் குழந்தையும் சற்றுக் கூடுதலாகவே நேசிப்பாள். அப்படி என் நேசத்தைப் புதிப்பிக்கத் தூண்டியிருக்கிறது எழுத்தாளர் சுபஸ்ரீ முரளிதரன் வாசகசாலை இணையத்தில் வழங்கியிருக்கும் குறிப்பு. அவருக்கு நன்றி.
அவரது உரை கீழே உண்டு.


..

07 June, 2025

"அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது" கவிதைத் தொகுப்பு குறித்த எழுத்தாளர் ஸ்டாலின் சரவணன் அவர்களின் விமர்சனப் பதிவை இங்கே பகிர்கிறேன். நன்றி ஸ்டாலின் சரவணன்.

கொதிக்கும் உலையில் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மா !

கர்த்தரையே காட்டிக் கொடுத்தாலும் யூதாசை அணைத்துக் கொள்வாள் யூதாசுவின் அம்மா. இந்த அம்மாக்கள் இப்படித்தான் கர்த்தரே !
புதுக்கோட்டையில் 15 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கலை இரவில் 'ஆத்தா உன் சேலை' பாட்டை ஒரு பாடகர் பாடினார் .
தொடர்ந்து உரை நிகழ்த்த வந்த எழுத்தாளர் Tamil Selvan ச.தமிழ்ச்செல்வன், "இதுபோன்ற பாடல்களைப் பாடி அம்மாவை புனிதமாக்கியது போதும். அவரையும் சக மனுசியாகப் பார்க்க எப்போதுதான் முன் வரப் போகிறீர்கள்!?" என்று கேட்ட கேள்வி அம்மா என்பவர் சக மனுசி .அவர் பொய் சொல்வார்- ஞானக்கூத்தன் சாட்சி - யாரும் அறியாமல் காசை ஒளித்து வைப்பார். எல்லாம் செய்யத் துணிபவர்களில் அம்மாவும் ஒருத்தி என்று நம்ப வைத்தது.
கதிர்பாரதி Kathir Bharathi , மீண்டும் அம்மாவை தியாக குருதி ஒழுகும்படி குடும்பத்துக்காக சிலுவையில் தொங்கவிட்டுவிட்டார். கவிதை எனும் ஆணியை மகன்களின், மகள்களின் கைகளில் இறக்குகிறார்.குற்ற உணர்வு கொழுந்துவிட்டு எரியத் தொடங்குகிறது.
"அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது" நூலின் பின்னட்டையில் கரிகாலன் Karikalan R ,"கதிர்பாரதி காட்டும் அம்மா அவருடைய அம்மா மட்டும் அல்ல " என்கிறார்.எல்லாக் கவிதையிலும் ஒரே பாத்திரம் போல அம்மா இத்தொகுப்பில் காட்சி அளிக்கிறார். ஒரு கவிதையில் சிரிக்கிறார். ஒரு கவிதையில் முறைக்கிறார் .அவ்வளவே !
குஞ்சுகளைத் தூக்க வரும் பருந்தைக் கண்டதும் சீறியபடி குதிக்கும் தாய்க்கோழிதான் அவர்.
இத்தொகுப்பில் வரும் அம்மாக்களை அழகூட்டுவது பிள்ளைக்கு ஒன்றெனில் கொள்ளும் பிரத்யேகத் துணிச்சலும் அவர் எதிர்கொள்ளும் துயரங்களும்.
கதிர்பாரதி தன்னுடைய கிராமத்திற்கு சென்றும், நினைவுகளில் பின் ஊர்ந்தும் அம்மாவின் கிட்ட அமர்ந்து, எட்ட நின்று, அவர் முந்தானையைப் பிடித்து நகர்ந்துக் கொண்டே சென்று,
அவருக்கேத் தெரியாமல் தன்னை ஒளித்துக் கொண்டும் இக்கவிதைகளில் பார்த்துள்ளார்.
அதில் எங்கோ ஓரிடத்தில் இருக்கும்போது கதிர் பாரதி எனது கண்களை அணிந்துக் கொள்கிறார். வேறு இடத்தில் உங்கள் கண்களாக இருக்கலாம் .அதனால்தான் இதில் நமது அம்மாக்கள், வந்துக் கொண்டே இருக்கிறார்கள் .

அப்பாவைத் தூரமாக நிறுத்தி விடுகிறார். எப்போதாவது அல்லது பிள்ளைகள் உறங்கிய பிறகு வீடு திரும்பும் அப்பாக்கள், பிள்ளைகளின் கவிதைக்குள் வருவது அரிதுதான். ஒரு சில கவிதைகளில் அப்பா எட்டிப் பார்க்கிறார். அப்போதும் அம்மா முறைத்து விடுகிறார் அல்லது அம்மாவின் துயரங்களில் பங்கெடுக்க முடியாத கையாலாகத்தனத்தில் அப்பா நடையைக் கட்டி விடுகிறார் .
ஒருமுறை தொடர்ந்து வாசித்து இத்தொகுப்பை முடித்து விட முடியவில்லை .பல பக்கங்கள் கடந்த பிறகு முந்தைய கவிதையில் ,பிறந்த வீட்டுக்குப் போகும்போது மை தீட்டிக் கொண்டு செல்லும் அம்மாவின் அழகை மீண்டும் ஒருமுறை தரிசிக்க மனம் பின் செல்கிறது. அதே மனதை பதைபதைப்புடன் ஓடிப் பார்க்க விரட்டுகிறது ,மகனைப் பார்த்தவுடன் தூக்குக் கயிற்றை கழுத்திலிருந்து தளர்த்திக் கொண்டே, "இரு சோறு போடுகிறேன்" என்று இறங்கி வந்த அம்மா ,மூத்த மகன் சாப்பிட்டு உறங்கியப் பிறகு, மீண்டும் கயிற்றைக் கையில் எடுத்துவிட்டால் என் செய்வது!?
மிகை உணர்வெழுச்சிக் கவிதைகள் வாசிப்பவனை ஆழ்த்துகின்றன.விதவிதமான அனுபவங்கள்,எண்ணிலடங்கா உயிர்ப்புமிகு காட்சிகளில் இருந்து சட்டென விலக முடியவில்லை.உண்மையின் கண்களை கவிதைகளில் ஒவ்வொரு முறையும்‌ உற்றுப்பார்க்க முடியவில்லை.குறைந்தது அறுபது முறை வரலாறு தலையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
எனவே அனாதை மேகத்தின் பின் சென்ற அம்மாவை ,அப்படியே சென்று விடக் கூறலாம் போல் உள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை துயரங்களைத்தான் அம்மா தாங்குவாள்!? தனக்காக வாழும் ஒரு அம்மா கூட இல்லையா!? வரலாற்றை மீண்டும் நினைவுறுத்தி அவரை அங்கேயே இருந்து தியாகங்களை செய்யச் சொல்கிறோமா!? என்று நிகழ்காலத்திலும் தொடரும் அம்மாவின் தியாகங்கள் பொருட்டு கவலைகள் உருவாகின்றன.
அதேநேரம் ஊஞ்சலில் அமரவைத்து அம்மாவை பால்ய காலத்திற்கு அழைத்துச் செல்லும் கவிதைகள், வாசகனையும் ஒரு ஊஞ்சலில் ஏற்றி ஆட்டிவிக்கின்றன.மகிழ்வைப் பங்கு வைக்கின்றன.
கதிர் பாரதி, இத்தொகுப்பில் உணர்வின் சேதாரம் இன்றி தனித்த மொழிநடையைப் பின்பற்றி உள்ளார்.
அறுபதாம் கவிதையில் இருந்து முதல் கவிதை வரை உணர்வு சீராகப் பின் செல்கிறது. எனவே கவிதைகள் மனதோடு தங்கி அலைகழிக்கின்றன.
எழுத்தாளர் ஸ்டாலின் சரவணன்

வாசகனை உணர்வின் உச்சத்தில் கொண்டு நிறுத்திவிடுகிறார்.உயரத்திலிருந்து தவறினால் விழுந்துவிடும் பதட்டமும் அவன் பாதத்தில் சேர்ந்து கொள்கிறது.
அம்மா ,ஒரு கவிதையில் கொதிக்கும் அரிசியை உலையில் பார்த்துக் கொண்டு இருப்பார்.அது அவரை அவரே பார்ப்பது போல் இருக்கும்.
இவ்வாறு அம்மாவின் தியாகத்தில் புளங்காகிதம் அடைந்தாலும் ,உறவின் நிர்பந்தங்களை கடந்து தனிமனித வாழ்வை மதித்து அம்மாவை இக்கவிதைகளின் தியாகச் சங்கிலியில் இருந்து அறுத்துவிடவே மனம் விழைகிறது.
இத்தூண்டுதலோடு புத்துணர்வான வாசிப்பனுபவத்தையும், கவிதைக்கான அலமாரியில் தனித்த இடத்தையும் "அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது " தொகுப்பு பெறுகிறது. வாழ்த்துகள்
-ஸ்டாலின் சரவணன்