ஒளித் துளி!
“தேடுதல் உள்ளவரை
பொருள் உனக்குக் கிடைக்காது.
தேடுதலை நிறுத்தும் கணம்
நீயேஅப்பொருளாய் இருப்பாய்!”
வாழ்க்கை என்பது நாம் ஓடி எய்தும் இலக்கல்ல; ஓடும் பாதையில் தற்செயலாய் தோள் தொடும் வண்ணத்துப்பூச்சி. இந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது, ஒரு கோப்பைத் தேநீரின் ஆவி பறக்க, அதனுள் கரைந்திருக்கும் சர்க்கரையாய் கவிஞர் மகிழின் உணர்வுகள் மெல்ல விரிகின்றன.
சென்னை- பச்சையப்பன் கல்லூரியின் பழம்பெரும் மைதானங்களில் காற்று சேகரித்த ரகசியங்களை, நா.முத்துக்குமாரின் நிழல் படிந்த பாதைகளில் தேடி அலைந்த ஒரு கவிஞனின் வெளிப்பாடு இது.
இந்தத் தொகுப்புக் கவிதைகள் எப்போதோ பேசி முடித்திருக்க வேண்டிய, ஆனால் பாதியில் நின்ற உரையாடல்களின் நீட்சிகள். ஒரு மின்மினிப் பூச்சியின் உடலில் ஒளிரும் சிறு துளி ஒளி, சூரியனைவிடவும் வெளிச்சமானது என்பதை ஒரு ஜென் மனநிலையில் இந்தத் தொகுப்புக் கவிதைகள் பேசுகின்றன.
அமைதியை சிறு பழம் என நீங்கள் உருவகித்தால், அதற்குள் இருக்கும் விதை இந்தக் கவிதைகள். தொலைந்து போன சிறுவயதைத் தேடும் மிதப்பில், ரயில் தண்டவாளங்கள் போலச் சேரப்போவதில்லை எனத் தெரிந்தும், கூடவே பயணிக்கும் உறவுகளின் வலியை இவைஅழகியலாய் மாற்ற முயல்கின்றன. எதிர்ப்பார்ப்புகள் அற்ற ஒரு புள்ளியில் அமர்ந்து, வாழ்வின் ஓட்டத்தைக் கவனிக்கும் ஒரு சாட்சியாக இங்கே கவிஞர் மகிழ் உருவெடுக்கிறார்.
பெய்யாத மழையிலும் நனைந்து கொண்டிருக்கும் ஒரு மனதின் ஈரம் இந்தக் கவிதைகளின் அந்தராத்மாவாய் உறைந்திருக்கின்றன. பூவின் மீது முட்கள் கொண்ட காதலைப் புரிந்துகொள்ளும் கணத்தில், முட்களும் பூவாய் மலரும் அந்த மாயம் நிகழ்கிறது. இந்தப் படைப்பு வாசிப்பவர் கைகளில் ஒரு புத்தகம் மட்டுமல்ல; அது உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் தெரியும் உங்கள் பிம்பம்.
இந்தப் புத்தகத்தைஅமைதியாக அமர்ந்து வாசியுங்கள்... உங்கள் வாழ்வையேஒரு கவிதையாக உணரலாம்.
அன்புடன் ,
கதிர்பாரதி
சென்னை
07 மார்ச் 26
.jpeg)
No comments:
Post a Comment