20 June, 2013

கலைஞர் தூது போன காதல் ---- மதன் கார்க்கி நந்தினி



நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு... இந்தப் பஞ்சபூதங்களில் எதுதான் காதல்? இவையெல்லாம் கலந்ததுதான் காதல் எனில் அண்ணா பல்கலைகழகத்தில் என்னையும் நந்தினியை ஒரு மணி நேரத்துக்கு மேலாக நனைத்த மழையை ஏன் காதலென்று சொல்லக்கூடாது! எங்களை ஒன்றாக நனைத்த மழையே உன் ஈரத்துக்கு நன்றி. இப்போது பெய்கிற மழையில் அப்போது பெய்த மழையை இனங்காண முடிகிற உணர்வுதானே காதல்.
அண்ணா பல்கலைகழகத்தில் ஐந்தாண்டுகள் படிப்பை முடித்துவிட்டு ஆராய்ச்சிப் படிப்புக்காக நான் ஆஸ்திரேலியாவுக்குப் பறக்கிறவரை என் காதலை நந்தினியிடம் சொல்லவில்லை. அப்போது என் காதலுக்கு வயது ஐந்து. என்.சி.சி.யில் நான் சினியர் மாணவன்; நந்தினி ஜூனியர். இந்தளவில் நிகழ்ந்த எங்கள் அறிமுகத்தை காதலை நோக்கித் திருப்பி வைத்ததெல்லாம் அண்ணா பலகலைகழகத்தில் நான் செக்ரெட்ரியாக இருந்த கம்யூட்டர் சொஸைட்டிதான். அந்தச் சொஸைட்டி, மாணவர்களின் கம்யூட்டர் திறன் மட்டுமல்லாது மற்றத் திறமைகளுக்குமான நாற்றங்கால். அங்கே நந்தினி என் அப்பாவின் கவிதைகளையும் கலீல்ஜிப்ரானின் படைப்புகளையும் பற்றிப் பேசியதும் எழுதியதும் அவளைத் தனித்துக் காட்டியது. அப்போதிருந்தே நான் நந்தினியைக் கவனிக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால் நந்தினிக்குள் நான் காதாலாக அப்போது இல்லை. எனக்கு அவளுக்கும் இடையில் இருந்தது நட்புதான் என்பது அவளது எண்ணம். அப்போதெல்லாம் நந்தினியோடு என்ன பேச வேண்டும் என்பதை ஒரு பேப்பரில் குறிப்பெடுத்துக் கொள்வேன். பிறகுதான் பேசுவேன். குறிப்புகளுக்கு இடையில் இந்த இடத்தில் நந்தினி சிரித்தால், இந்தப் பதில் சிரிக்காவிட்டால் இந்தப் பதில் என்றெல்லாம் காதலை வீட்டுப்பாடமாகச் செய்தவன் நானாகத்தான் இருக்கும். சிரிக்க வேண்டும் என்று நினைத்த இடத்திலெல்லாம் நந்தினி சிரித்தாள். இந்த அனுப்பவத்தைத்தான் காதலில் சொதப்புவது எப்படி படத்தின் அழைப்பாயா பாடலில் இப்படிப் பதிந்து வைத்தேன்.
நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன்
நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தேன்
நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன்
நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்

ஆஸ்திரேலியாவில் இருந்த ஒருநாளில் நந்தினிக்கு நான் சாட்டில்தான் என் காதலைச் சொன்னேன். ’’நான் மத்தியத்தர வகுப்பு. உங்களோடது பெரிய குடுபம் ஒத்துவராது என்று முதலில் மறுத்தவளுக்கு முற்றாக மறுக்க மனமில்லை. ஆஸ்திரேலியாவில் என் படிப்பு எனக்குக் கொடுத்த அழுத்தம், லட்சியம் எல்லாம் என்னை நந்தினியிடமிருந்து விலக வைத்தது. நந்தினிக்கும் அப்படித்தான். அவள் மேல்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டாள். பிறகு ஐந்து வருடங்கள் என் படிப்பு, பாடங்கள், லட்சியங்கள், தேடல்கள் என்று ஓடிக்கொண்டிருந்தேன். நந்தினியும் அப்படித்தான் அமெரிக்காவில் ஓடிகொண்டிருந்திருக்கிறாள்.
 என் ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் நான் முடித்துவிட்டு இந்தியா வருகிற சமயத்தில் என் அப்பா என்னைப் பற்றி குமுதத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். என் தோள்வரைக்கும் வளர்ந்துவிட்ட என் மகனை, தோளைவிட்டுக் கீழிறக்கிவிடும் காலம் வந்துவிட்டது. இனி அவன் திசை; அவன் வானம்; அவன் சிறகு... திருமணம் செய்து வைக்கலாம் என்றிருக்கிறேன் பார்க்கலாம் எந்தத் தேவைதைக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ என்றெல்லாம் அந்தக் கட்டுரையில் எழுதிருந்தார். அப்போதுகூட என் மனசில் நந்தினியின் ஞாபக நிழல் இல்லை. திருமணத்துக்குத் தீவிரமாக பெண் தேடும் மும்முரத்தில் ஒரு நாள் என் அப்பா கேட்டார்.
‘’உன் மைண்ட்ல யாரும் இருக்காங்களா? சொல்லுப்பா”
‘’அப்படியெல்லாம் ஒருத்தருமில்லை. நீங்க பொண்ணு பாருங்க’’ என்று சொல்லிவிட்டேன். பின்பு எதேச்சையாக ஆர்குட்டில் நந்தியைப் பிடித்தேன்.
எப்படி இருக்கீங்க’’ -நான்தான் மீண்டும் ஆரம்பித்தேன்.
‘’நான் நல்லாருக்கேன். அமெரிக்காவில் வேலையில் இருக்கேன்.” – என்றாள் நந்தினி.
கல்யாணம் ஆகிடுச்சா’’
‘’கல்யாணம் பண்ணிக்கறதா ஐடியா இல்லை. நிறைய பயணம் போகணும். உலகத்தை அப்சர்வ் பண்ணனும். விரிந்து பரந்த உலகத்தில் விடை தெரிய விஷயங்கள் நிறைய இருக்கே!’’ என்றெல்லாம் பேசிக்கொண்டு போன நந்தினியிடம்,
’’நான் இண்டியா வந்துட்டேன் வீட்டுல பொண்ணு பாத்துட்டு இருக்காங்க. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப் படறேன். நீங்க என்ன சொல்றீங்க’’ – சாட்டில் தட்டிவிட்டுவிட்டு, நந்தினியின் பதிலுக்காகக் காத்திருந்த நொடிகள் மிகக் கனமானவை. சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு,
‘’எனக்கு சரி. நீங்களும் நானும்சேர்ந்து வாழற வாழக்கை அர்த்தமுள்ளதா இருக்கும்னு மனசு சொல்லுது. நான் இன்னும் ஒரே வாரத்துல உங்களைப் பாக்கறேன்’’ என்று நந்தினி சொன்னதும் எனக்குள் நந்தினிக்காக ஆகாயம் விரிய ஆரம்பித்தது. ஆகாயம் பழசுதான் ஆனால் சிறகு புதிதல்லவா. நந்தினி என்னை வந்து பார்ப்பதாகச் சொன்ன நாள் என் பிறந்தநாள் மார்ச் 110010 அன்று.

மீண்டும் அப்பாவிடம் வந்து நின்றேன். நந்தினியைப் பற்றி சொன்னதும் அவருக்குப் பயங்கர கோபம். என் காதலை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையில் அம்மாவை நந்தினியோடு பேச வைத்து அவரது சம்மதத்தைப் பெற்றிருந்தது மட்டும் எனக்குப் பலமாக இருந்தது. தன் கனிவான பேச்சால் என் அம்மாவின் இதயத்தை வென்றிருந்தாள் நந்தினி.
’’ஏன் ஆரம்பத்தில் சொல்லவில்லை. நான் நண்பர்களிடம் சொல்லி உனக்காகப் பெண்ணெல்லாம் பார்த்துவிட்டேனே முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் ஏன் இப்படி?’’ என்ற அப்பாவின்  வாதத்தில் தந்தைக்குரிய கவலையும் மகனின் வாழக்கை நலமாக இருக்க வேண்டுமே என்ற எண்ணமுமே இருந்தன.
‘’அப்பா, என் விருப்பம் நந்தினிதான். உங்கள் சம்மதுக்காகக் காத்திருக்கிறோம் இருவரும்’’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். தம்பியைத் தூதனுப்பினேன். தாயை அனுப்பினேன். நண்பனையெல்லாம் பேசவைத்தேன். என் அப்பா கவிதைகளில் பாடல்களில் மட்டுமல்ல, கோவத்திலும் பிடிவாதத்திலும் பேரரசு. எனக்கு வேறு வழித் தெரியவில்லை. என் காதலைத் தூக்கிக்கொண்டு கலைஞரிடம் போய்விட்டேன்.
தயாளு அம்மாள் அவர்களிடம் விசயத்தைச் சொல்லிவிட்டு கலைஞரைச் சந்தித்தேன். என் காதல் பற்றி அவரிடம் சொன்னபோது அவர் தமிழகத்தின் முதல்வர். முதலில் காது கொடுத்துக் கேட்டவர், கவலைப்படதே என் குடும்பத்தில் அனைவரும் காதலித்து கல்யாணம் செய்துகொண்டவர்கள். நான் உன் அப்பாவிடம் பக்குவமாகப் பேசுகிறேன் என்று பிறகு  கைகொடுத்தார்.
மறுநாள் காலையில் அப்பா எப்போதும்போல கலைஞருக்கு ஃபோன் போட நான் என் காதலுக்காக கலைஞரைப் பார்த்துவிட்டு வந்த விஷயத்தை என் அப்பாவின் காதுக்குப் போட்டுவிட்டார். கலைஞரோடு அப்பா பேசி முடித்ததும், என் வீட்டில் கோவ அலை வீச ஆரம்பித்தது.
‘’கலைஞர் வரைக்கும் உன்னைப் போக வைத்தது யார்? எப்படிப் போகலாம் என்றெல்லாம்...” தந்தைக்குரிய பொறுப்போடும் அவருக்கே உரிய கோவத்தோடும் பொரிந்து தள்ளிவிட்டு,
சரி நந்தினியை வரச் சொல். பேசிப்ப் பார்க்கிறேன்’’ என்றதும், எனக்கு சந்தோஷம்.
நந்தினியை வரவைத்து அப்பாவோடு அரைமணிநேரம் பேச வைத்தேன்.
காதலைப் பற்றிப் பேசவந்தவள், அப்பாவின் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலையும் ரிதம் படத்தின் பஞசப்பூதப் பாடல்களைப் பற்றியும் பேசிய தைரியசாலி நந்தினி. அப்போதுகூட அப்பா இறங்கி வரவில்லை.
‘’எங்கேயும் வெளியே சுற்றாதீர்கள்’’ என்று கட்டளைப் போட்டுவிட்டு கவிதை எழுதப் போய்விட்டார். அவர் சொன்னதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. அமெரிக்காவிலிருந்து என்னைப் பார்க்க நந்தினி இந்தியா வருவதற்குள் அந்த மாத ஃபோன் பில் மட்டும் எழுபத்தைந்தாயிரம் கட்டினேன். அப்போது எனக்கு அண்ணா பலகலைகழகத்தில் பார்ட் டைம் வேலையில் மாதச் சம்பளமே இருபதாயிரம்தான்.
ஒரு வாரத்துக்கே இந்த நிலைமை என்றால் வருடக் கணக்காக இருந்திருந்தால் என் அப்பா சம்பாதித்தெல்லாம் ஃபோனுக்கே போயிருக்கும்.

நந்தினியோடுதான் என் திருமணம் என்றதும் அதன் நியாயத்தை அப்பா புரிந்துகொண்டார்.  கலைஞர் நடத்தி வைத்த என் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது. எங்கள் காதலின் உயிர்ச்சாட்சியாக மகன் ஹைக்கூ வந்துவிட்டான். என் பாடல்களும் கவிதைகளும் நந்தினிமீது கொண்ட காதலில் பதிவுகள்தான். ஒரு பிரசனையை ஒரு நாள் ஆறப் போட்டுப் பேசுவது என் பழக்கம் ஆனால் நந்தினி அப்போதே அதனை விவாத்தித்து தீர்வு கண்டுவிட்டு வெளியே வந்துவிட வேண்டுமென்று நினைப்பாள். நாளாக நாளாக அது சரிதான் என்று புரிய வைத்தது. 

பயணமும் உணவும்தான் எங்களுக்கான புரிதலை காதலை இன்னும் அதிகப் படுத்தி இருக்கிறது. டாஸ்மேனியாவில் நானும் நந்தினியும் காரில் சுற்றிய 3000 கி.மீ. பயணம்தான் அவளை அவளது ரசனைகளை ஏக்கங்களை இன்னும் நெருக்கமாக உணர வைத்தது.  உலக இசைகள் விவாதம், நாவல்கள், எங்களுக்குள் வரும் சண்டைகள் எல்லாம் எங்கள் காதலன்றி வேறில்லை. என் பாடல்களை ஆங்கிலத்தில் நந்தினி மொழிபெயர்க்கும்போது வந்து விழும் வார்த்தைகளில் இன்னும் எங்கள் காதல் அடர்த்தியாகிக் கொண்டிருக்கிறது.
மொழியை நம்பி ஓடிக்கொண்டு இருப்பவனுக்குக் காதல் நல்ல ஆசுவாசம்தான். அதுவும் திரைத்துறையில் ஓடிக்கொண்டிருக்கிற எனக்கும் என் லட்சியத்தியத்தும் ஆசுவாசமாக காதல் இருக்க வேண்டிய இடத்தில் நந்தினியை நிற்கவைத்திருக்கிறது காலம். 
கடல் படத்தில் நான் எழுதிய கீழ்கண்ட பாடலைப் போல.

மனச தொறந்தாயே... நீ
எங்கிருந்து வந்தாயோ நீ?அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?


கல்கி யில் பிரசுரமான பிரபலங்களின் காதல் 4

கதிர்பாரதி