19 June, 2013

மலர் உங்களைக் கொலை செய்தாலும் ஆச்சர்யமில்லை....

காலம் எப்போதும் அகோரப் பசியோடு ஓடிக்கொண்டிருக்கும் ஓர் அரூப மிருகம். அதன் பசிக்கு எவன் தீணி இடுகிறானோ அவனையும் தோள்களில் தூக்கிக்கொண்டு ஓடும்; கொண்டாடிக் களிக்கும். தீணி இடுகிற திராணி இழந்துபோகிற கணத்தில் அவனைத் தூக்கி எறிந்துவிட்டு வேறொருவனை திறமையாளனை, தீணியாளனைச் சுமந்து ஓட ஆரம்பிக்கும். கால மிருகத்துக்கு நல்லவன் - கெட்டவன்; நியாயவாதி - அநியாயவாதி ஈரமானவன் – மூர்க்கமானவன்... என்கிற தர்ம கணக்கெல்லாம் தெரியாது. காலத்துக்கு மட்டுமல்ல காதலுக்கும் இது பொருந்தும். நிதானமாகச் சலசலத்து ஓடுகிற கிராமத்து வாழ்விலிருந்து பரபரப்பான நகரத்து வாழ்வுக்குள் வந்து விழுந்ததும் இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு சென்னை நகரம் எனக்குத் தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கி இருந்தது.

திருவண்ணாமலை அரசர் கல்லூரியில் கணிதம் படித்துவிட்டு கவிதைகளோடு கோடம்பாக்கத்துக்கு வந்த ஐந்தாம் ஆண்டு அது. வடபழநி சிக்னலுக்குக் காத்திருக்கிற ஒரு பேருந்தைப் பார்க்கிறேன். எனக்குள் ஆழ ஆழப் புதைந்திருந்த அதே முகம். என்னை உறங்கவிடாமல் பதறித் திரிய வைத்த நேசத்துக்குச் சொந்தமான முகம். என்னோடு கல்லூரியில் பயின்ற முகம். என் பேச்சுப்போட்டியில் நான் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைகளையும் மனனம் செய்து உசரித்த உதடுகளைக் கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். சிக்னல் கிடைத்து அந்தப் பேருந்து கிளம்பும்போது என்னை அறியாமல் ஓடிப்போய் பின் படி வழியாக ஏறுகிறேன். நெரிசலில் பிதுங்கி ஒதுங்கி முன்னேறி அவளருகே போகும் பக்கத்தில் ஓர் ஆண். கணவனாக இருக்கலாம் அல்லது அண்ணனாகக்கூட இருக்கலாம். என்னை அந்த முகம் பார்க்கவில்லை. இதயத்தைப் பிடித்துக்கொண்டு நான்காவது நிறுத்தத்தில் இறங்கிவிட்டேன். ஆனால் அந்த நினைவுகளை என்னைச் செய்வதெனத் தெரியாமல் என் பாடல்களில் இறக்கி வைத்துக்கொண்டு இருக்கிறேன். அவளைப் பார்ப்பதற்காக அவளிருக்கும் தெருவுக்குப் போய்விட்டு தெருவை மட்டுமே பார்த்திருந்து வந்த ஞாபகங்கள் எல்லாம் என் நெஞ்சை வலிக்க செய்தது அந்த இரவு. மல்லாந்து படுத்திருந்தபோது என் கண்களில் அந்த நினைவுகள் உருகி வழிந்ததை மொட்டைமாடி அறியும்.
அவளிடம் ஆரம்பத்தில் காதலைச் சொல்லாமல் தவித்த நினைவுகளைத்தான்...
சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது என்று என் பாடல் ஒன்றில் அந்த அவஸ்தையை இறக்கி வைத்தேன். என் சுமைகளை இறக்கி வைக்க பாடல்கள் கவிதைகள் என்கிற சுமைதாங்கியை காலம் தந்திருக்கிறது. இன்னும் எத்தனையோ எத்தனை ஜீவன்களுக்கு காலம் தன் இரக்கமற்ற கோர முகத்தைத்தானே காட்டுகிறது.
நமது சமூகம் காதலுக்குப் போட்டிருக்கும் வேலி மிகமிக மோசமானது. அதை இன்னும் புதைபொருளாகத்தான் பாக்கிறது. கேட்பாரற்று கிடக்கிற இரும்புத் துண்டு ஒன்றை காந்தச் சக்தி தீண்டியதும் அது மின்சாரத்தைக் கடத்துவதைப் போல மனசைக் காதல் தீண்டுகிறபோது அதை ஆக்கபூர்வமாக மாற்றிக்கொள்ளும் மனநிலையை சமூகம் சரிவரக் கற்றுத் தரவில்லை. அதனாலதான் பிஞ்சிலே சில குருத்துகள் தங்களைத் தற்கொலையில் கருக்கிக்கொள்ளும் அவலம் நேறுகிறது. திரையில் ரசிக்கிற காதலை குடும்பத்துக்குள் அனுமதிக்க மறுக்கிற மனம் சரியான மனம்தானா என்பது சந்தேகத்துக்கு உரியது.

இப்படி வலிக்கச் செய்யும் காதல் ஒன்று இருந்தாலும் நினைத்தவுடன் நான் சிரித்துவிடுகிற நேசம் எனக்குள் இன்றும் பசுமையாக இருக்கிறது.
ஏழாவது வரைதான் நான் என் பூர்விகக் கிராமம் வேடங்குளத்தில் படித்தேன். பின்பு எங்கள் படிப்புக்காகவே சாத்தனூர் அணைக்கு வயல்கள் சூழ்ந்த இடம் ஒன்றை வாங்கி வீடு கட்டிக்கொண்டு வந்து விட்டோம். அங்கிருந்தான் நான் கல்லூரிக்குச் செல்வேன். அணையைப் பராமரிக்கும் பணிக்காக ஒரு வட இந்திய குடும்பம் ஒன்று எங்கள் ஊருக்கு வந்தது. அந்தக் குடும்பத்தின் அழகான பெண் ஒருத்தியால எங்கள் ஓரே அழகானது. இப்போதும் மனம் அவளை அழகி என்றுதான் சொல்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதற்காக எங்களூர் பள்ளியில் அவள் சேர்ந்தபோது ஆசிரியர்கள் கூட அழகாக உடை அணிய ஆரம்பித்தார்கள். மணமாகாத ஒரு ஆசிரியர் அவளுக்கு காதல் கடிதம் கொடுத்ததாகக் கூட பின்னர் எனக்குத் தெரிய வந்தது. எனக்கு எப்படி தெரிய வந்தது என்கிறீர்களா? நானும் காதல் கடிதம் கொடுத்தேனே.

அவள் பள்ளிக்குச் செல்வது எங்கள் வீட்டு வழியாகத்தான். பேருந்தின் வலது பக்க இருக்கையில் உட்கார்ந்தால் ஜன்னல் வழியாக எங்கள் வீட்டைப் பார்க்கலாம். அப்படி யதார்த்தமாக பார்க்கும்போதுதான் எங்கள் பார்வைகள் பற்றிக்கொண்டன. எங்களுக்கு பறவைகள் சடசடத்துப் பறந்து அலைகள் சடார்சடார் என மோதி, மான்களின் கூட்டம் துள்ளிக்குதித்து, பாரதிராஜா படத்தின் வெள்ளுடைத் தேவதைகள் வந்து பூமாறி தேன்மாறி பொழிந்தார்கள்.

காதல் நெருப்பை ஊதி வளர்த்து விடுவதற்கென்றே இயற்கை செய்து வைத்திருக்கும் ஏற்பாடுதான் நண்பர்கள்போல. என் நண்பன் கோவிந்தன். ”டேய் மச்சான் அந்தப் புள்ள உன்னைத்தாண்டா பாக்குது. நீ பட்டிமணர்த்துல பேசுற கேசட்ஸ் எல்லாம் வாங்கி வெச்சுருக்காம்; பத்திரிகையில உன் கவிதைகள் வந்த பக்கத்தையெல்லாம் கட் பண்ணி வெச்சுருக்காம். அதனால அவ லவ் பண்றது கன்ஃபர்ம்” என்று ஊதிவிட்டான். காதல் ஆகுதி எனக்குள் திகுதிகுன்னு வளர எப்படியாவது சொல்லிவிட வேண்டுமென்று திட்டம் போட ஆரம்பித்தேன். முதல்முதலாக ஒரு காதல் கடிதம் எழுதுகிறேன். விடலைக்குரிய கிலுகிலுப்போடு ஆரம்பித்த அந்தக் கடித்தத்தை உன் கன்னங்களில் பதியத் துடிக்கும் உதடுகளின் உரிமையாளன் என்று முடித்து கையெழுத்துப் போட்டிருந்த்ந்ந்ன். அதைக் கொண்டுபோய் கொடுப்பதற்கு மட்டும், ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் ஆனது. காரணம், அவள் குடும்பத்தோடு அநேக சினேகமாக இருந்தார்கள் எங்களூர் போலீஸ்காரர்கள். அவள் அவர்களை அண்ணன் என்று அழைக்கும் அளவுக்கு பழக்கம். அந்த அண்ணன்கள் படுத்திய பாடு காதல் அவஸ்தைக்கு நிகரானது. கோவிந்தன், நான் நாளைகு வர்றேன் மச்சான் வா என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என்று கொம்புசீவி விட்டான். மறுநாள் நான் மட்டும்தான் அவளை பள்ளியில் சந்தித்து கடிதம் தந்தேன். அவள் எனக்குப் பயமா இருக்கு என்று சொல்லிவிட்டாள். மறுநாள் என்னைப் பார்த்த கோவிந்தன் சொன்னான், ”மாப்ள நேத்து நான் வரலாம்னுதான் பார்த்தேன். ஆனா சகுனம் சரியில்லை’’ அப்புறம் அந்த நேசம் காலப் போக்கில் கோவிந்தாவானது வேறு கதை.
வேட்டைக்காரன் படத்தில்

ஒரு சின்ன தாமரை
என் கண்ணில் பூத்ததே.
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி
தைக்கின்றதே..

இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா..
என் தேகம் முழுவதும்
ஒரு வெண்மீன் கூட்டம்
மொய்க்கின்றதே.

இந்த அனுபவம் உண்மை; அது தரும் வலிகளும் உண்மை. இப்படி ஒரு சிரித்துக்கொள்ளவும் வலித்துக் கொள்ளவும் நல்மனம் வாய்க்கப் பெற்ற எல்லாருக்கும் ஒன்றிரண்டு காதல்களை காலம் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

இதோ நதியிலிருந்து ஒரு மலர் தண்ணீரின் போக்கில் மிதந்து வருகிறது. வருகிற வழியெங்கும் சின்னதும் பெரிதுமாக சுழல்களில் சிக்கிக் சுழன்றுகொண்டே வருகிறது. ஏதோ ஓர் படித்துறை நீராடிக்கொண்டிருக்கும் உங்கள் கையில் அந்த மலர் சேர்ந்தால் ஏந்திக்கொள்ளுங்கள் அல்லது நீரின் போக்கில் போகவிடுங்கள். எடுத்துக் கரையில் போட்டுவிடாதீர்கள். பிறகு அந்த மலரைத் தாண்டி ஒருபோதும் உங்களால் கடந்து போக முடியாது; தவிர அந்த மலர் உங்களைக் கொலை செய்தாலும் ஆச்சர்யமில்லை.... 

-கதிர்பாரதி
பிரபலங்களின் காதல் கல்கி யில்  2

No comments: