17 August, 2010

அவனிடம் ஜாக்கிரதை

அவன் யாதொன்றும் செய்யவில்லை
அப்படிச் செய்கிறவனுமில்லை

உங்கள் வடிவங்களில்
தேங்க இயலாமல் கசிந்தான்
அப்போதே சஞ்சலத்தை
மறைக்கச் சிரமப்பட்டீர்கள்

உங்கள் வார்த்தைகளுக்கு
வளைதல் செய்யும் லாகவமற்று
ஒடிந்ததில் குமைந்து
அசூசைக் கொண்டீர்கள்

நீங்கள் வாரி இறைத்த
நிறங்களைப் பதட்டத்தோடு அதீதமாய்ப்
பூசிக்கொண்டதில்
கடைவிழியில் அன்னியப்பட்டான்

உங்களின் தீவிரத்தில்
ஆழவும் முடியாமல்
கலக்கவும் இயலாமல்
அவன் திணறுதலில் கலக்கமுற்ற நீங்கள்
அயலானிடம் சொல்லிப்போகிறீர்கள்
''அவனிடம் ஜாக்கிரதை"

நன்றி: கல்கி(05.09.10)

15 June, 2010

பக்கத்துப் பக்கத்து வீடு

ஆதியில் எனக்கும் சாத்தானுக்கும்
பக்கத்துப் பக்கத்து வீடு
கொஞ்சமாய் நிரோத்துப் பொட்டலங்களையும்
மிதக்கும்படிக்காய் மதுப்புட்டிகளையும்
கைமாத்தாய் வாங்கிக்கொள்ளும் அளவுக்கு
அவன் எனக்குப் பரிச்சயம்
எப்போது கேட்டினும் இன்முகத்தோடு
அவன் பிரயோகிக்கும் புன்னகை
அந்தி சூரியனாய் மயக்கம் நல்கும்
முலைகனத்த மகளிரோடு
முப்போதும் மோகித்துக்கிடக்கும் அவனுக்கு
பிருஷ்டம் பெருத்த பெண்களோடும்
தொடுப்பு இருந்தது
காமப்பேராறு கரையறுக்கையில்
கரமதுனமும் உண்டு
லாகிரி வஸ்துகள் நீதிபரிபாலனம்
செய்யும் அவனது கொலுமண்டபத்து
அந்தப்புரத்துக்கு தேவகன்னியின் புனைவோடு
சிலபேர் வந்து திருப்தியோடு போவதுண்டு
அவன் அருகாமையின் ஷணங்கள்
பரவசங்களில் தோய்த்து எடுக்கப்பட்டதாயும்
புலன்களை நீவிவிடுவதாயும் தோற்றம் கொள்ளும்
யுவதிகளின் வாசனைகளால் நெய்யப்பட்டிருக்கும்
அவனது இல்லத்திலிருந்து ஊர்ந்துவரும்
இசையின் விச்ராந்தியில் கம்மென்று மணம்
பொறாமையுற்ற காலம்
பொய்யாய் வீசிப்போன வரத்தின்
சாயல் புனைந்த சாபமொன்றில்
வீழ்ச்சியுற்ற சாத்தான்
தீவாந்திரத் தனிமைக்குத் தள்ளப்பட்டு
கடவுளானான்
நான் மனிதனானேன்
நன்றி : சுகன் (ஜூன் 2010)

08 June, 2010

சபிக்கிறது தாபம்

விசிறி எறியப்பட்ட
விலக்கப்பட்ட கனியின் விதையிலிருந்து
வேர்கொழித்துச் செழித்தெழுந்த
ஏதேனூடே வேட்கைகொண்டு போகிற
ஏவாளை பின்தொடர்கிறது
ஸர்ப்பம் வடிவம் வாங்கிய பாவம்

துஷ்டி வீட்டுக்காரனின் தொண்டையில்
திரண்டுருளும் துக்கத்தையொத்த
அவளின் பருவக்கனவுகளை ஊடறுத்துக்
கொட்டுகிறது நிச்சலனமுற்ற அருவி

காய்ந்துதிரும் சருகுகளைப் பற்றி
கீழ்விழும் ஏவாளின் சொற்கள்
பெருந்தனிமையின் கால்களில் மிதிபட
தரையை மெழுகித் திரும்புகிறது
சொற்களின் ரத்தம்

அந்தரத்தில் அலையும் பறவைகளின்
சிறகில் அறைவாங்கி பள்ளத்தாக்கில்
வீழ்ந்துபடுகிறது ஏக்கத்தின் கேவல்

முன்பொருகாலத்தில் ஆதாமை
புசித்த கனிக்கென
பொலிபோட்டுவிட்டார் பிதாவின் பிதா
ஆப்பிள்மரத்துக்கு அடியுரமாய்

தன்னைத்தானே புணரும் ஏவாளின் தாபம்
சபிக்கிறது கடவுளை
'ஏவாளாகக் கடவாய் சாத்தானே'

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

05 June, 2010

சத்யாகாலம்

புதுத்தாலி உடுத்தியிருக்கும் சத்யா
சவூதியிலிருக்கும் கணவனின் நினைப்பில்
தலைக்கு ஊற்றும் நடுநிசிகளால்
நடுக்கமுறுகின்றன இரவுகள்

நன்றி: புன்னகை காலாண்டுதழ்

31 May, 2010

கொள்முதல்

வசீகரச் செல்வாக்கு மிகுந்த
வார்த்தைகளைப் பெய்து
மனத்தை நனைக்குமவன்
கனவுகளின் விற்பனைப் பிரதிநிதி

கண்களின் குணத்துக்கேற்ப
கனவுகளை விநியோகிப்பதிலும்
கனவுகளைக் கைமாற்றிவிடுவதிலும்
கைதேர்ந்த மொழி அவன் நாவுக்கு
சொந்தமானது

கனவுகளை சூல்கொல்வதொன்றே
கண்களின் பிறவி பயனென
அவனுதிர்க்கும் சொல்வாக்கு
சில கண்களில் கனவுகளின் அபிலாசைகளைத்
துளிர்விக்கும்

யாருக்கும் இல்லையென இயம்பாது
இருக்கும் துண்டு கனவுகளைக்கூட
குறுக்கும் நெடுக்குமாய்ப் பிணைத்துவிடும்
அவன் சாமர்த்தியத்தில் சாமான்யத்துக்கேற்ப
சலுகை திட்டமும் உண்டு

கனவுகள் அற்றுப்போகும்
பின்னிரவுப் புழுக்கத்தில்
அக்கம் பக்கம் பார்வை செலுத்தி....
நெளிவுகளை நேர்த்திருத்தி,
சுருக்கங்களை நீவி, முலாம் பூசி
அவன் வைத்திருந்த சாத்தானின் கனவுகளை
கொள்முதல் செய்துகொண்டு போன
கடவுளின் கண்களில்
ஒளி பெருகத் துவங்கியது

ஈரமண்ணின் நேசம்|ஜூலை 2010

16 May, 2010

பிழைப்பு

ஈரமற்று கானல் ஓடும் நதியில்
மூர்ச்சையுற்று மிதந்த பால்யத்தை
சுமந்துவந்து கண்ணம்மாபேட்டையில்
எரிக்கையில் துளிர்த்த வியர்வையில்
சற்றே உப்பு கரிக்கிறது பிழைப்பு

நன்றி: கல்கி(04.07.2010)

13 May, 2010

இழப்பு

கொஞ்ச காலமாய் கூடவே
வசித்துவருகிறது யாரும் கண்டறியாத மவ்னம்

மவ்னம்தானெனினும் அது சம்மதமில்லை
மரணம் விதைக்கும் மவ்னத்தைப் போன்று அது
துக்க நிறத்தைப் பூசிக்கொண்டதுமில்லை

மவ்னம் உடைபடும் பின்னொருசமயத்தில்
அதற்குள் கனலும் வெப்பத்தாலும்
வெடிக்கக் காத்திருக்கும் கேள்விகளாலும்
அதிரக்கூடும் காலத்தின் கள்ள மவ்னம்

போராளியின் கடைசிக்குண்டைப் போல
பிரயோகமாகப் போகும் அம்மவ்னம்
பருந்தை எதிர்த்தடிக்கும் தாய்க்கோழிஎன
தோற்றம்கொள்ள காத்திருக்கிறது

அப்போதெழும் பேரோலத்தில்
வார்த்தைகள் குரலிழந்து போகும்

நன்றி: கல்கி(04.07.2010)

24 April, 2010

கவிகிறது மெழுகின் சாட்சியோடு

தீ தின்னும் மெழுகை சாட்சி வைத்து
தன் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் இரவு
வாதையின் கூடாரமென
சன்னமாய்க் கவிகிறது அவள் மீது

முகமன் சொல்லி வரவேற்கும்
அவள் முறுவலின் பின்புறத்தில்
சலசலக்கும் ரணங்களின் கண்ணீரில்
மேலதிகமாய் இருள்கிறது அவ்விரவு

வடிக்கட்டமுடியாத வக்கிரம்
இயலாமையின் கழிவிரக்கம்
அந்தரங்கத்தின் வெக்கை
கொண்டாட்டத்தின் எச்சம்...
யாவற்றையும் அவளுக்குள் துப்பிவிட்டு
பேய் சிரிப்பில் அதிரும் அவ்விரவை
யார் பார்வைக்கும் படாதவாறு
பதட்டத்தோடு ஒளிக்கவே விழைகிறாள்
தீட்டுத் துணியென

17 April, 2010

ஏக்கத்தில் விழுதல்

வன்நுகர்ச்சிக்குப் பலியான ஊமைச் சிறுமியின்
பீதியை நகலெடுத்த முகத்தோடும்
கட்புலனாகா கிரீடத்தைப் பொருத்தியிருக்கும்
அசௌகரியத்தோடும்
பார்வைக்கு வந்துபோகும் அவர்தான்
கடவுளின் நேரடி வாரிசு என்பதை அறிந்த கணம்
அவன் காலத்தை ஊழியலை தாக்கியிருந்தது

சர்வாதிகாரியின் கொடுங்கரத்தின்கண் சிக்குண்ட
சாமான்யப் பூச்சியைப் போல
பூலோகத்தின் பித்தலாட்டங்களும் துரோகங்களும்
அவரைக் கையாளத் துவங்கியிருந்தன

எழுச்சிக் குறைவான குறியை
வாய்க்கப்பெற்றிருந்தாராகையால்
விசனமுற்ற தாம்பத்யம்
அவ்வளவாய்ச் சேர்ப்பதில்லை என்பது குறித்து
அவருக்குண்டு அவர்மீது கழிவிரக்கம்

மதுவின் கணத்திலன்றி பிற பொழுதுகளில்
தான் கடவுளின் வித்தென்ற கித்தாப்பு
அவர் சிரசுக்குள் நிலைத்ததில்லை

இல்லத்துக்கு அவர் திரும்புகையில்...
நெகிழ்ந்திருந்த உள்ளாடையை திருத்தியபடி
அதரத்தில் நர்த்தனமிடும் முறுவலைச் சிந்தியவாறு
கடைவாயில் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தான்
சாத்தான்

களைத்திருந்த மனைவியின் வியர்வையில்
நிறமிழந்த தமது அந்தரங்கத்தை
என்ன செய்வதென்று அறியாது
சாத்தானாகும் ஏக்கத்தில் விழுந்தார்
கடவுள்

நன்றி: உயிரோசை (27.09.10)