23 March, 2013

கதிர்பாரதியின் கவிதை நூலான “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” குறித்து ரசவாதியின் நாட்குறிப்புகள் கவிஞர் இளஞ்சேரல்



                  பிரதியாக்கங்களில் தத்துவங்களுள் முதன்முதலாக கான்ட்டியமே விமர்சன தத்துவம் என அங்கீகரிக்கப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டு பிரஞ்சு தத்துவ அறிஞர் மான்டேன் தத்துவங்களை நம்பிக்கையின்மையின் வாதங்கள் மற்றும்(எதிராக) மதநம்பிக்கை வாதங்கள் என்று பகுத்திருந்தார். கான்ட்டின் நூல்களுள் அடிக்கடி குறிப்பிடப்படுவனவாகியதுய அறிவு திரனின் விமர்சனம்” ”அரசியல் அறவியல் அறிதிறனின் விமர்சனம்“ “அழகியலின் மதிப்பீட்டுத்திறனின் விமர்சனம்எனும் மூன்று நூல்களின் வழியாக விமர்சனம் முக்கியத்துவப்படுத்தப்பட்டது. தலைப்பும் பொருளடக்கமும் சிந்தனை இயக்கமுமாய் மையம் வகிக்கிறது. அந்த வகையில் கவிதை நூல்களுக்கான விமர்சனம் அல்லது அறிமுகங்கள் என்பதாக நாம் இங்கு கூடியிருக்கிறோம். ஏற்பாடு செய்திருக்கும் அகநாழிகை.தக்கை.361.டிகிரி இதழ்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி. பங்கு கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கும் கவிஞர்களுக்கும் மதிப்பிற்குரிய விமர்சகர்களுக்கும் முதற்கண் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

         கதிர்பாரதியின் கவிதை நூலுக்கு இரண்டாவது முறையாக அறிமுக குறிப்புகள் எழுதுவதில் மகிழ்ச்சி. அவருடைய கவிதையிலிருந்து துவங்குவோம்.

வெள்ளையாகச் சலனித்தல்
தண்ணீரைத் துளைத்துத் தொங்கும் தூண்டிலில்
துடிக்கும் புழுவை
முள்ளில் மாட்டிக் கொள்ளாமல்
கவ்வி இழுப்பது போன்ற கனவிலிருந்த சினை மீன்
கொத்தித் தூக்கிய கொக்கின் தொண்டையில்
அடிமேல் அடிவைத்து
வெள்ளையாகச் சலனிக்கிறது
உறைந்திருந்த காலம்
- பக்-28

  தற்கால உலகம் மற்றும் இலக்கிய வகைமைகளில் கவிதையின் வடிவங்கள் தனது இருப்பை தொடர்ந்து தகவமைப்பு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே வருகிறது. நவீன நுகர்வு உலகின் அனைத்து வருவாய்கள் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுவது மாதிரியே நவீன கவிதையின் ஆக்கங்களும் அமெரிக்காவின் அடிமை நாடுகளாக இருக்கிற தேசங்களிலிருந்து தான் நவீன வடிவங்களைப் பெறுகிறது.        அடிமை தேசங்களிலிருந்தும் அவர்கள் இழந்ததைப் பற்றிப் பேசுகிறார்கள் நாம் இழக்கப் போவதைப் பற்றிப் பேசுகிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். அவர்கள் தத்தம் தாய் மொழியை எந்தச் சூழலிலும் திருகித் திருகி உருப்போடுவது இல்லை. அடிமையின் தேசங்களில் ஆழக் கற்றவர்கள் இருக்க வாய்ப்பில்லை. மிகக் குறைந்த வாசிப்பும் மொழி மீது பற்று கொண்டதின் காரணமாகவும் தனது நாட்டில் நிலவும் தன்மை குறித்தும் உலகின் ஜனநாயக வெளிச்சத்தின் நீரோட்டத்திற்கு அறிவிக்கவுமே எழுதுகிறார்கள்அவர்கள் யாசிப்பதுவேண்டும் கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் உனவுஉறங்க இடம் காற்றுக்கும்  மழைக்கும் கொஞ்சம் கூரை. இவற்றையே தனது கவிதைகளில் திரும்பத்திரும்பக் கேட்கிறார்கள். அவற்றை இயற்கையிடம் கேட்கிறார்கள். தன்னை அடிமைப்படுத்திய வல்லாதிக்கத்திடம் கேட்கிறார்கள். கானகம் அழிந்து விட்டது. ரசாயன குண்டுகளால் பறவைகள் இல்லை. அதிகாரம் தன்னுடைய அதீதமான இருப்பையும் பேராசையையும் காட்டியதின் விளைவே இந்த அழித்தொழிப்பு

       கதிர்பாரதியின்மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்தொகுப்பில்  சர்வதேசிய அளவில் இன அழித்தொழிப்பக்கு எதிரான கவிதைகள் சில எழுதியிருக்கிறார். நவீன கவிதை வடிவங்களில் பாசாங்கு அற்ற மொழியில் மனித அறம்  சட்டகமில்லாத எளிய வாழ்வு குறித்து எழுதுபவர்கள் மிகக்குறைவு. மனித அறம் என்பது என்ன எனத் தெரிந்தால் தானே அவர்களுக்கு எழுத வரும். பிரதியின் நோக்கம் பிரதியின் வடிவம் பிரதிகளின் செயலாக்கம் குறித்த கலாபுர்வமான அணுகுமுறையே ஒரு கவிஞனின் ஆக்கத்தையும் சமகாலத்தின் அரசியல் இருப்பையும் தெரிவிக்கிறது.

         உலக கவிதைகளில் மொழிகளில் எண்ணற்ற கவிஞர்கள் என்னதான் எழுதுகிறார்கள் என்று நாம் அறிய பிரியப்படுகிறோம். அறிந்து கொள்ள விழைகிறோம். நீர் நிலைகளின் ஆசீர்வாதத்தில் மனித உயிரினமும் வாழந்து கொள்கிற ஆசீர்வாதம் கிட்டியிருக்கிறது இயற்கையால். நாம் இயற்கையை வைத்துக் கொண்டாடி வாழ்ந்து கொள்ளலாம் என்கிறது ஒரு கூட்டம் இன்னொரு கூட்டம் அரசியலை வைத்து வாழ்ந்து கொள்ளலாம் என்கிறது .

        எனினும் உலக கவிதையியக்கம் நமக்கு முன்பாக மாபெரும் சவாலை முன்னிருத்துகிறது.

            சமகாலத்திலும் இதற்கு முன்பு பதினாராம் நுற்றாண்டுகளில் நிகழ்ந்த பிரஞ்சு புரட்சி,ரஷ்யப் புரட்சி இரண்டு உலகப்போர்கள், பிறகு அடிமைநாடுகள் சுதந்திரம் பெற்றதும் அதன் விளைவாக உள்நாட்டுக் கலவரங்கள் பிறகு எல்லைகள் குறித்தத் தகராறுகளை நம்மை அடிமைப் படுத்திய நாடுகள் தகராறுகளை மறைமுகமாகத் தூண்டிவிடுதல் பிரிவினைவாதிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிவருவதையும் நாம் அறிந்தே பேசாமல் இருக்கிறது என்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

        கதிர்பாரதி சில கவிதைகளை நவீன யதார்த்தவாததில் எழுதியிருக்கிறார். ரியலிசம் பிரான்சில் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய போது இரு உலகப் போர்களின் பின்னணி இருந்தது. ரியலிசம் என்னும் சொல் ஜெர்மானிய சொல்லான ரியல் பொலிடிக் என்ற பதத்திலிருந்து பெறப்பட்டது. இச்சொல்லை முதல் முதலாக ஜெர்மானியரான பிஸ்மார்க் உபயோகித்தார். பொதுவாக கலைக்கு இரண்டு விதமான தன்மைகள் உண்டு. ஒன்று சூழ்நிலையைப் பரிச்சயப்படுத்திக் கொள்வது( cognitive)

இரண்டு பரிச்சயப் படுத்திக் கொண்டதை பிரதிபலிப்பது.(Reflective) இத்தகையத் தன்மையைத் தனது பண்பாகக் கொண்டதே யதாரத்தவியல் ஆகும். பால்சாக் முன்னோடி ஆளுமை.பிறகு வந்த குஸ்தாவ் ப்ளாவே ரியலிசத்தை அதன் உச்சத்திற்கு கொண்டு சென்றார்.ஜார்ஜ் எலியட்,சார்லஸ் டிக்கன்ஸ், பெர்னார்ட்ஷா,செகாவ் முக்கியமானவர்கள்.



கூச்சத்தைப் புசிக் கொள்ளும் பிள்ளையார் -கவிதையில் கதிர்பாரதியின்

யாதார்த்தவாதம் அற்புதமாக சித்தரிக்கப் படுகிறது.

 படையலின் பின்னந்தியில் கைவிடப்படும் அவர்
தனிமையின் இருக்கையில் தூக்கி நிறுவும்
குழந்தையின் பீதியை நகலெடுத்த தம் முகத்தையும்
சீந்துவாரற்ற கண்களில் துளிர்விடும்
பல்லக்கில் ஏறும் கனவையும் பற்றி
உங்களுக்குத் தெரியாதிருப்பதே நல்லது
ஏனெனில் ஒத்தக் காலைத் தூக்கி
அவர் மீது ஒண்ணுக்குப் பெயும் கெடா நாயை
பற்றியும் தெரியவந்தால்
இன்னும் திடுக்கிட்டுத்தான் போவீர்கள். பக்-8

         இக்கவிதை சர்ரியலிசத்தன்மையுடனும் பேசுவதை நாம் உணரலாம். “உலகை நாம் பார்க்கும் பார்வையை மாற்றிக்கொண்டால்  மட்டுமே உலகை மாற்றுவது சாத்தியம்என்று  பேசும் சர்ரியலிசம் என்ற சொற்றொடரை பிரஞ்சு கவிஞர் கில்லாம் அப்போலினர் தனது அபத்தமான நாடகமானலெஸ் மாமே லியாஸ் டே டைர்சியாஸ்எனும் நாடகத்திற்கு துணைத் தலைப்பானடிராமா சர்ரியலிஸ்ட்என்பது. அப்போலினரைப் பொருத்தவரை சர்ரியலிசம் என்பது யதார்த்தத்தை ஒப்பீட்டு அளவில் வெளிப்படுத்துவதாகும். அவருடைய கூற்றின்படிமனிதன் கால்களை நகல் செய்யும் பொருட்டு சக்கரங்களைக் கண்டு பிடித்தான் சக்கரம் என்பது மனிதனின் எந்திரக்கால்கள் ஆகும். அதுபோலவே ஒரு கலைஞன் மனித இருத்தலின் அடிப்படை உண்மைகளை கலைகளில் வெளியிடும்போது அது அப்பட்டமான நேரடி வாழ்க்கையை அப்படியே வெளிப்படுத்துவதாக இல்லாமல் ஒரு கவிஞனின் கற்பனை கலந்த இயல்போடு வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.                

           தற்கால கவிதைகளில் கியுபிசத்தின் தாக்கமும் அதிகமாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. கதிர்பாரதியின் கவிதைகளில் ஒவியங்களின் பாதிப்பும் ஒவியசித்தரிப்புகளின் மீதான லயிப்பும் காணமுடிகிறது. பெரும்பாலான கவிதைகளில் காணப்படும் ஓவியங்களின் தன்மைகள் பிரமிக்க வைப்பவை.

பாரீஸ் நகரத் தெருக்களில் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் திரிந்து கொண்டிருந்த இளைஞன் பாப்லோ பிக்காசோவை பிரஞ்ச் ஓவியர் பால்செஸான் தான் தோன்றியாக வரைந்திருந்த ஓவியங்கள் வசீகரித்தன. பிரஞ்ச் ஓவிய விமர்சகர் லூயி வாக்ஸால் இந்தப் பாணிக்கு சூட்டிய பெயர்தான் கியுபிசம். 1907 முதல் 1914 வரையிலான முதலாம் உலகப் போர் சமயத்தில் தாக்கத்தில் உருவாக்கப்பட்ட காலத்தில் பாப்லோ பிகாசோவும் ஜார்ஜ் பிரெக்கும் இணைந்து இக்கலை மரபு, ஓவியப்பார்வை, தொழி்ல் நுட்பம் மாடல்வைத்து வரைவது, நகலெடுப்பது போன்று எல்லாவற்றையும் முற்றாக நிராகரித்தது.

      புதிய நவீன கலை இலக்கியக் கோட்பாடாக வளர்ந்து கோலோச்சியது பிரான்சில் கில்லாம் அப்போலினேர்,ஜீன் காக்தோ,ரிவர்டி போன்றோர் கியுபிசக் கவிதைகளை எழுதினர்.



       நம் வாழ்வில் யாதார்த்த சர்ரியலிச கியுபிச நிகழ்வுகளை எல்லாம் அடிமை தேசங்களில் சிறப்பாக எழுதுகிறார்கள். தாம் எழுதுவது உலகின் மகத்தான கவிதைகளின்  இசம் சார்ந்தவை என்று அறியாமலே கூட சிறப்பாக எழுதி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். சமகாலத்தின் நவீன கவிஞர்கள். சிறு சிறு நகரம் போன்றிருக்கும் தனித்த தேசங்களில் அடிமைப்பட்டு கவிஞன் தன் கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தியபடியே இருக்கிறான். நாடுகடத்தப்படுதலும் விரட்டப்படுதலுக்குள்ளாகவும் அவனுடைய கவிதைகளும் ஆங்காங்கு கடத்தப்பட்டு இணையங்களின் வழியாக உலக பிற தேச மொழி சார்ந்த மக்களின் பார்வைக்கு  வருகிறது.

    உலக கவிதையின் மொழி என்பதுஇயற்கையின் மகத்தான ஒழுங்குமீதான பிரமிப்பு மொழிதல், பேரழகின் வடிவமாக பரிணமிக்கிற பிம்பம் பற்றி எழுதுதல், அந்த அழகு தரும் பேராணந்தத்தையும் அதனூடாக தனது தனிப் பட்ட வாழ்வை எழுதுதல், அதே இயற்கையின் குருரமான அம்சங்களையும் அதாவது புயல் சீற்றம் பெருமழை மின்னல் பற்றியும் எழுதுதல்.அதற்குப் பிறகு வரும் மலரும் சோலைவனங்களையும் பறவைகளின் உயிர்ப்பை எழுதுவதின் மூலமாக தாமும் இயற்கையின் ஒரு அங்கமே என்றுணர்ந்து கொண்டாடிக் களித்தலுமாக உலக கவிதையின் இயக்கம் இருக்கிறது பொதுவாக.

         பிரபஞ்சத்தின் இடையறாத ஓசையை அதன் ஒழுங்கின்மையில்லாத ஆனாலும் சீரொழுங்கான ஞானத்தை உலக உயிர்களுடன் அதன் துடிப்புடன் அதன் வண்ணங்களுடன் அதன் பயணங்களுடன் வாழ்தல். அப்பிரபஞ்சத்துடன் பன்மை நிலையை அறிந்து தம்முள்ளாக தன்னைக் கண்டடைதல் என்பது.

         மனிதன் தனது ஆற்றலை மேம்படுத்த மேலும் தன்னைப் போல் ஒருவனுடன் அரசியலாக உறவு கொள்ள விரும்புகிறான். அதன் மீதான வன்மத்தையும் இடையிடையே எழும்பும் தடைகளை மீறி இணைவை அறிந்து கொண்டு செயல்படுதல் என்கிற பொதுமையில் எழுதுதல் இயங்குதல் என்றாகவும் உலக கவிதை பேசுகிறது.

          இயற்கையும் தானும் தான் இறுதியில் வாழத்தனிமைப் பட்டவர்கள் என்று உணர்ந்து கொள்கிற தனிமையை அவன் விரும்புகிறான். அவன் அறிவான் ஆயுதங்களால் எந்த உபகாரமும் இல்லையென்பதை. ஆயுதங்கள் தம் சுய விருப்பத்திற்கு உருவாக்கப் பட்டதே அன்றி பிறர் மீது செலுத்த அல்ல என்பதை அறிந்தே இருக்கிறான். திரும்பத்திரும்ப தன் மீது கவிந்து கொள்ளும் தனிமையை அறிய அறிய கவிதைகளாக எழுதுகிறான். அவன் அடையும் தீவிர தரிசனத்தின் விளைவாகவே உலகம் அவனுக்கு பல விடுதலை கீதங்களை எழுத வைக்கிறது. அப்படியாகவே அவன் கவிதைகள் பல தேசங்களுக்கு விடுதலை வாங்கியும் தந்திருக்கிறது. ஒரு எல்லையற்ற எல்லையை விடுவிப்பதற்கு கவிஞனும் அவன் வாழும் காலமும் போராடி முனைந்து கொண்டே இருக்கிறது.

          தமிழுக்கும் தமிழ்க்கவிதைக்கும் பொற்காலம் வாய்த்தது என்றால் அது கடைச்சங்க காலம் தான். இந்த சங்ககாலத்திற்குப் பின்னர் மீண்டும் தமிழுக்குப் பொற்காலம் ஏற்பட்டிருக்கிறது. சோழர்களுகளுடைய காலத்தில் முதல் குலோத்துங்க சோழன் முதலாக மூன்றாம் குலோத்துங்கன் வரையிலும் சோழரவையில் புலமையாளர்கள் பலர் வீற்றிருந்து தமிழ் நலத்தைப் பெருக்கியிருக்கிறார்கள் இலக்கியப் பாங்கு மாற்றம் பெற்றபோதும் தமிழ் எழுச்சி ஓங்கிய காலம் இது. பண்டிதரும் மகத்தான சோழ ஆராய்ச்சியாளரும் சதாசிவ பண்டாரத்தார் ஆய்வுகளின் மூலம் அறியலாம்.

இங்கு கம்பன் வழியாக நம் முந்தைய கவிதையின் காலத்தினை அறியலாம்.

       குலோத்துங்கனின் அம்பும் ஏற்கெனவே அவனால் ஏவப்பட்டிருந்தது. உள்ளத்திலேயுள்ள அம்பும் ஊடுருவியிருந்தது கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு. அம்பு தைத்த புண் தான் வெளியேதான் இருந்தது. ஆறாத மனப்புண் அவரை நலிவித்து விட்டதாகச் சோழன் உணரவில்லை. தம்பால் தைத்த அம்பினைப் பற்றியபடியே கம்பர் சோழனை நோக்குகிறார் அவர் உள்ளக் கொதிப்பு வெளிப்பட்டுச் செய்யுளாக கவிதையாக படிகிறது நம் இருதயத்தின் ஆழத்துள்ளாக.



வில்லம்புஞ் சொல்லம்பும் மேதகவே யானாலும்
வில்லம்பிற் சொல்லம்பே வீறுடைத்து-வில்லம்பு
பட்டிருவிற் றென்னையென் பாட்டம்பு நின் குலத்தைச்
சுட்டெரிக்கும் என்றே துணி

    வில்லம்பும் சொல்லம்பும் ஆகிய இரண்டுமே இவ்வுலகில் சிறந்த தகுதியுடையன என்றாலும் வில்லம்பினும் சொல்லம்பே ஆற்றல் உடையதாகும் சோழனே! வில்லம்பு என் மார்பு உருவிற்று என் பாட்டாகிய இந்தச் சொல்ம்பு நின் குலத்தைச் சுட்டு எரித்துவிடும் என்று  நீயும் துணிவாயாக..என்கிறார். மரணத்தின் தருவாயில் ஒரு கவிச்சக்கரவர்த்தி கம்பரின் சொற்களின் மூலமாக நாம் சொற்களுக்கு எத்தகையை வலிமை உள்ளது என்பதையும் அந்த சொற்களை நாம் மென்மெலும் வலிமையுள்ளதாக ஆக்கவேண்டும் என்பதை இந்த தொகுப்பின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கிறோம்.

   அது போன்றே மகாகவி கவிதை எழுதுகிறான் எனும் கவிதையில் கதிர்பாரதியின் சொற்கள் உருத்திர தாண்டவமாடுகிறது.



கவிதை இயற்றலில் லயித்திருக்கும்
ஒரு வெய்யில் பொழுதில்
நான்காம் அடுக்கின் தலையிலிருக்கும்
மொட்டைமாடியில்
வெளுத்த துணிகளை உலர்த்த
பணிக்கப்படுகிற மகாகவி
இடதுபுறம் ஒருகிளிப்
வலது புறம் ஒரு கிளிப் போட்டு
தன் கவிதையை
சூரியனில் காயவைத்து விட்டு
கிடுகிடுவெனக் கீழிறங்கி வருகிறான் - பக்-53

      இக்கவிதையில் யதார்த்தமும் சர்யலிசமும் கியுபிசமும் ரொமாண்டிசசமும் இணைந்திருக்கிறது. கம்பன் இப்படியாக அவன் அநாயசமாகப் பயண்படுத்தியிருக்கும் படிமங்கள் அளவில்லாதவை. மரபின் அழகில் லயித்தும் தற்காலத்தின் இருப்பியல்புகளைப் பேசுவதும் நவீன கவிஞனுக்கு அவசியமாகிறது.

        கவிஞனுக்கும் தான் எழுதும் கவிதைகளுக்குமான உறவைப் பேணுவதில் இருக்கும் வசீகரங்களை படைப்பவன் மட்டுமே அறிவான். அவனுக்குள் இயங்கும் கவிமனமும் மொழியும் கவித்துவமும் கற்பனையைத் தூண்டி சமூக ஆவல் மிக்கவனாக மாற்றி விடுகிறதுவசீகரத்திற்கும் கவியாழத்திற்கும் போக முனைந்தால் மறுபடியும் நாம் கம்பனிடமே போக வேண்டியிருக்கிறது.

         ஒரு சமயம் புலவர்கள் பலர் கூடியிருந்து காவிரியின் சிறப்பினைப் பற்றிப் பாடி கவிதைகளாக அளவாளாவிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு புலவரும் காவிரியின் ஒவ்வொரு சிறப்பையும் கவிதைகளாக வடித்தனர். கம்பன் அமைதி காத்தே இருந்தான். “கம்பர் பெருமான் தாங்கள் மட்டும் புகழாது இருந்தால் எதனாலோஎன்று கேட்க அவர் திடுமென

எச்சில் நீரான காவிரியைப் புகழ்வதோஎன்று கவியாக்க பலரும் திகைப்புற்றனர்.

மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுவர்
கைகழுவ நீர்போதும் காவிரியே-பொய்கழுவும்
போர்வேற் சடையன் புதுவையான் தன் புகழை
யார்போற்ற வல்லார் அறிந்து..

ஆற்றிலே நீராடி வந்து சடையப்ப வள்ளலின் வீட்டில் கணக்கற்றோர் விருந்துண்டு போகின்றனர். அவர்கள் தம் கைகளைக் கழுவுகின்ற நீரும் காவிரி நீருடன் கலந்து தானே போகின்றது இப்படி மெய்கழுவிய நீரும் கைகழுவிய நீரும் கலந்து போவதால் காவிரி எச்சில் நீராகும் அல்லவோ என்றார் கம்பர். கதிர்பாரதி காவிரி வளநாட்டைச் சார்ந்தவர் என்பதால் இந்தக் கவிதையை அவர்க்கு உணர்த்தி நாமும் மகிழ்கிறோம்.

       எப்படி கம்பன் காவிரி நீரை எச்சில் என்று அதிர்ச்சியளித்தாரோ அதுபோன்று கதிர்பாரதியும் இக்கவிதையி்ல் அதிர்ச்சி தருகிறார்.

கனவிலிருந்து எழுந்து போய் சிறுநீர் கழித்தேன்.
 தலைப்புக் கவிதையில்

 அசோகவன சீதையின் பொருட்டு பத்துதலை காமத்தால்
ராவணின் உடல்வெப்பம் தகிக்கத் தொடங்க
அறையில் எரியும் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தேன்
அகலிகை சபலத்தில் இந்திரன் கௌதமமுனியாக உறுமாற
சாபம் வாங்கி கல்லாக உறைந்து கனத்தது இரவு
தந்தையின் மரண கணத்திலும்
மனைவியோடு ஆலிங்கனத்தில் இருக்கிற மோகன்தாஸ்
காந்தியாக இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்க
கோவணத்தை வரிந்து கட்டியபோது
எழுந்து போய் சிறுநீர் கழித்துவிட்டு வந்தேன்
எவ்வளவு சுகமாக இருந்தது தெரியுமா..

         கதிர்பாரதி பகடியிலும் வித்தார சிலேடையில், சொல்லாட்சி நடையிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். தற்கால நவீன கவிதையில் விமர்சன அமைப்பும் கருத்தியல் அமைப்பும் மேலோங்கி வருகிற நிலை நிலவுகிறதுகேலிச்சித்திர பொம்மைகள் வரைவது போன்று கேளிக்கைக் கவிதைகள் அரசியல் நிகழ்வகளினை பகடியாக்கி அதிகமாக எழுதப்படுகிறது. கற்பனை வறட்சியற்ற பகடியும் வித்தாரமும் இனைந்த சொல்லாட்சியுடன் எழுதப்படும் போதுதான் நவீன பகடி கவிதையும் கவிஞனும் புதுப்பொலிவுடன் மிளிர்கிறார்கள். அந்தக் கவிதைகள் வாசிப்பின் வழியாகவும் கலாச்சார நடவடிக்கைகளின் செயல்பாடுகளின் மூலமாகவும்

சமூக விமர்சனமாகவும் சிலேடையாகவும் அங்கதத்தொனியும் ஒருங்கே அமையுமானால் அக்கவிதை காலத்தால்வெல்ல முடியாத கவிதையாகி விடுகிறது.

        நம் மூத்தமரபின் கவிஞன் காளமேகம் பல விருத்தங்களிலும் வெண்பாக்களிலும் ஆட்சி புரிந்து இருக்கிறார். ஒரு சமயம் காஞ்சிபுரத்திலே விநாயகப் பெருமானுக்கு உற்சவம் நடந்து கொண்டிருக்கிறது பெருமான் பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து செல்கிறார்.”பாவம் இப்படி இந்தப்பிள்ளையை எலி இழுத்துப் போகிறதே“ “சிவனுடைய மழு எங்கே“ “திருமாலின் சக்கரம் எங்கே“ “பிரமனின் தண்டம் எங்கே“ “இதனைத் தடுக்காமல் இருப்பதனால் அவர்களிடமிருந்து அவையாவும் பறி போய் விட்டனவாஎன்று வினவும் காளமேகம்



மூப்பான் மழுவும் முராரித்திருச் சக்கரமும்
பாப்பான் கதையும் பறிபோச்சோ-மாப்பார்
வலமிகுந்த மும்மதத்து வாரணத்தை யையோ
எலியிழுத்துப் போகின்ற தென் -
         இந்தக் கவிதையை நாம் வாசிக்கும் போது முன்பு குறிப்பிட்ட கதிர்பாரதியின் பிள்ளையார் குறித்த கவிதையை நினைவில் கொள்ளலாம்.

         பிரதி தரும் இன்பம் பற்றி ரோலன் பாத் குறிப்பிட்டதை நினைவு கூரலம். இன்பம் என்பது தொடர்ச்சியாக ஏமாற்றத்திற்குள்ளாக்குவது குறைந்துபோவது தீர்ந்து போவது. இன்பம் என்பது ஆசைக்குப் போட்டியாளன். நாம் ஆசையைப் பற்றி அதிக அளவில் எச்சரிக்கப் பட்டிருக்கிறோம். ஆனால் இன்பம் குறித்து எப்போதும் அறிவுறுத்தப்பட்டதில்லை. ஆசைக்காவது ஒரு விதமான கண்ணியத்தன்மை இருக்கிறது இன்பத்திற்கு இல்லை. வாழ்வில் இன்பம் தரத்தக்க பொருட்களில் பிரதியும் ஒன்று ஒரு உணவுப் பண்டம்,ஒரு தோட்டம்,ஒரு சந்திப்பு,ஒரு குரல்,ஒரு தருணம் ஆகியவற்றைபோலவே ஒரு பிரதியும் இன்பம் தரத்தக்கதே.
         கவிதை நூல்கள் தரும் இன்பம் அளவில்லாதது. எழுதும் இன்பம் வாசிக்கும் இன்பம் அவை பற்றி பேசும் இன்பம் உரையாடும் இன்பம் இப்படியாக. யுகம் யுகமாக நீள்வது. இக்கவிதையை வாசிக்கும் போது வரும் இன்பமும் பிறகு வரும் கலித்தொகையின் பாடலையும் அறிவோம்.

ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்- தலைப்பில்

மணிப்புறாவின் லாவகத்தோடு எழும்பி மிதக்கிற என் நிலத்திற்கு
ஆனந்தி என்று பெயர் சூட்டியிருக்கிறேன்
அதனால்தான் மேலெழும்பும் பாக்கியம் பெற்றதோ என்னவோ
அதனால்தான் அத்தனை வனப்போ செழிப்போ
தட்டான்கள் தாழப்பறந்தால் மழை வரும் தெரியுமா என்ற
ஆனந்தியின் இமைகளிலிருந்து
முதன் முதலில் தட்டான்கள் பறந்தபோது
எனக்குள் மழைவரும் போலிருந்தது.

        எத்தனை விதமான கற்பனையும் ஆழமும் விசித்திரம் நிறைந்த நிலம் நம்முன் விரிகிறது. இதுபோன்றே சங்க காலத்தின் பாலைக் கலி பாடிய பெருங்கடுங்கோவின் புகழ்பெற்ற பாடல், காதலன் வெளியுர் செல்கிறான்
என்று அறிந்து கண்ணீர் வடித்த காதலி அவனுடன் தானும் வருவேன் என்று அடம்பிடிக்கிறாள். வெளியுர் செல்கிறேன் என்று சொன்னாலே வீரம் செறிந்த மகளிர் அழுது கண்ணீர் விடுவது ஏன் என்று யோசிப்பதும் பிறகு தான் பயணங்களின் போது படும் துயரங்களைச் சொல்லியும் கேளாமல் தன்னுடன் வருவேன் என்று விடாமல் கட்டாயப்படுத்தும் காதலியிடம் கவி பேசுகிறான்

மரையா மரல் கவர,மாரி வறப்ப-
வரை ஓங்கு அருஞ்சுரத்து ஆர் இடைச்செல்வோர்,
சுரை அம்பு,மூழ்கச் சுருங்கி,புரையோர்தம்,
உள்நீர் வறப்ப புலர் வாடு நாவிற்கு-
தண்ணீர் பெறா அத்தடுமாற்று அருந் துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய,காடு என்றால்,
என்,நீர்,அறியாதீர் போல இவை கூறல்?
நின் நீர் அல்ல சூழாதே,ஆற்றிடை நும்மொடு
துன்பம் துணையாக நாடின்,அது அல்லது
இன்பமும் உண்டோ,எமக்கு?
 “சொல்வதைக் கேள் நான் செல்லும் பாதை மிகவும் துன்பம் ஒரு புறம் மலை ஒரு புறம் காடு இவற்றிற்கு இடையே போகவேண்டும் காலமோ கோடைகாலம் நீர் நிலைகள் வற்றியிருக்கும் நா வறண்டால் குடிப்பதற்கு நீர் கிடைக்காது அத்தகைய வழியி செல்லவேண்டும் இந்தத் துன்பம் எல்லாம் உனக்கு எதற்கு?
அப்படியா துன்பம் உனக்கில்லையோ அதில் பங்கு கொண்டு உன் துயர் துடைப்பது தானே எனக்கு இன்பம் வீட்டிலே சுகமாக இருப்பதா எனக்கு இன்பம் இல்லை இல்லை நானும் வருவேன் அழைத்துச் செல் என்றாள் அவள் அவனுக்கு வேறு வழி?

நன்றி..

16.03.2013, 17.03.2013 அன்று சேலத்தில் தக்கை அகநாழிகை 361 டிகிரி இதழ்கள் நடத்திய 18 புத்தகங்களுக்கான விமர்சன அரங்கில் கவிஞர் இளஞ்சேரல் எழுதி வாசித்த விமர்சனக் கட்டுரை

14 March, 2013

கணையாழி மார்ச் 2013 இதழில் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்கிற என் கவிதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எழுதிய விமர்சனம் இது. நன்றி: கணையாழி இதழ், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்



வளர்பிறை அனுபவங்கள் 
====================
சுப்ரபாரதிமணியன்

கதிர்பாரதியின் திறந்த கவிதைகள் புதிய மொழி, புதிய உணர்வு, புதிய நடையுடன் இருப்பதை அவரின் கவிதைகள அவ்வப்போது படிக்கிறபோது அறிந்திருக்கிறேன். பெரும்பாலும் புதியமொழியும், புதிய உணர்வும், புதிய நடையும் கொண்டவை மூடுண்டு கலவரப்படுத்துவதுண்டு. தொடர்ந்த வாசிப்பில் உள்ள வாசகன் மனம் விரும்பும் பங்களிப்பை கதிர்பாரதி கவிதைகள் எப்போதும் கொண்டிருக்கின்றன.
இத்தொகுப்பின் கவிதைகளில், கவிஞன் பற்றி நிறையவே எழுதியுள்ளார் கதிர்பாரதி. கனவுகளின் விற்பனைப் பிரதிநிதி என்கிறார். எப்படியாகினும் கடத்தி விட வேண்டும் என்கிற ஆசையைச் சொல்கிறார். துப்பாக்கிக்குள் நிரம்புகிறது சிரிப்பென்று. அது துப்பாக்கிக்குள் ரவை நிரப்பியதைப் போலாகிறது. அழவைத்து விட்ட நிறைவும் வந்து விடுகிறது. நவகவிஞனின் தினப்படி வாழ்க்கையின் அவலத்தை ’’மகாகவி கவிதை எழுதுகிறான்” என்று குறிப்பிட்டு அவனின் எதிர்வினையையும் சொல்கிறார். கதிர்பாரதியின் கனவுகளை கொள்முதல் செய்து கொண்டுபோன வாசகனின் கண்களில் ஒளி பெருகத் தொடங்கச் செய்கிறார். இவரின் பாழடைந்த வீட்டைக் கடந்து செல்பவனின் அனுபத்தை வாசகன் கவிஞனைக் கடந்து செல்வதாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். இதற்கு மேல் அவன் என்ன செய்துவிட முடியும் என்பதில் ’’ஆவல்” கவிதையில் கூடக் குறிப்பிடுகிறார். வாழ்க்கையே கொலைக்களமாகி வருவதைச் சொல்லும் அனுபவங்கள் உண்டு. வாழ்க்கையில் கவிதைக்கு இடமில்லாமல் போய் விடுகிற துயரத்தையும் மேலிட்டு எடுத்துக்காட்டுகிறார். யாருடைய அனுபவங்களோ, வார்த்தைகளோகூட தனக்குள் வரித்துக்கொண்டதாகி பின் கவிதை வரிகளா கின்றன்.
நீள் கவிதைகளில் மகாகவி கவிதை ஒருவகை நிகழ் முரண் என்றால் குளத்தில் அலைகின்ற கவிதைகள் அகத்தூண்டுதலாக விரிகிறது. உள்ளுணர் வுடன் தொடரும் கவிதை மனம் சுற்றுச்சூழலையும் நிகழ் காலத்தையும் சரியாகவே கணித்து நகர்கிறது. உருக்கமான காதல் புலம்பலோ பெண்ணிடம் கெஞ்சுவதோகூட சாவை ஒத்த துயரத்தின் உச்சபட்சானுபவமாக எழுதுகிறார்
( மோகினியிடம் இருக்கு மூன்று அரளிப்பூக்கள் )
குழந்தைகள், ஆண்கள், பெண்கள், மிருகங்கள், சாத்தானும் கடவுளும் கவிதை களில் அலைக்கழிந்து அதிகாரத்துக்கு எதிரான குரலாகவும், அன்பினால் வார்த்தைகள் குழைந்ததாகவும் மாறுகிறது. மரண வேட்டை தொடர்ந்து கொண்டி ருக்கிறது. கதிர்பாரதியின் யானை கும்கிகள்தான். ஆனால் ஆசீர்வாதம் வாங்கும், ஆசீர்வாதம் தருபவை. பொம்மையை உருவாக்கிவிட்டு புன்னகையை அணைத்தபடி உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகள், மகன்களும் மகன்களின் நிமித்தமும் தரும் அனுபவங்கள், போன்றவற்றில் உட்சபட்சமான விளையாட் டைத் தொட்டு விடுகிறார்.” மகனால் நனைகிறது அப்பாவின் பால்யம் “ குழந்தை களின் குறும்புகளும், நடவடிக்கைகளும் கதிர்பாரதியின் மனதுக்குள் உட்கார்ந்து கொண்டு வாசிப்பாளனை குழந்தை மனம் கொண்டவனாக்கி விடுகிறது. வாசக் அனுபவங்களையும் நேர்மையானதாக்குகிறது. நேர்மையான அனுபவத்துக்கு கவிதை மொழி அதன் சாத்தியங்களை எல்லையற்றதாக்கிக் கொண்டே போவதற்கு இயல்பான வார்த்தைப் பிரயோகங்களும் நிகண்டிலிருந்து வார்த்தைகளை தேடி எடுக்காததும் சவுகரியப்படுத்துகிறது. உண்மையின் பக்கம் எப்போதும் நின்று கொண்டேயிருக்கிறார் கதிர்பாரதி .கட்டற்ற காதலை உடம்பின் ஏதோ ஒரு பாகமாக்கி நிலை நிறுத்தி விடுகிறார். மச்சங்கள் வழியே மீளும் காதலோ வாழ்வோ ஜீவத்துடிப்புடன் விரிந்து கொண்டே இருக்கிறது. புகைப்பட கலைஞனை கொன்று விட்டு கடவுளாகிக் கொள்கிற சமூகம், ஹிட்லர் சமாதனத் தூதுவராகிறார். இவற்றை அங்கீகரிக்கிற சமூகம் பிரிவைத் துரத்துகிறது. நிலம் பற்றிய சிந்தனைகளும், அக்கறையும் கனவுகளாக அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.” அதனால் உப்புச் செடிகள் இரண்டை வளர்கிறார்” கண்களில். நிலத்துக்கு ஆனந்தி என்று பெயர் சூட்டி ஆனந்திக்கிறார். பசப்புகளும், பாசாங்கு களும் மயங்கி இருக்கும் நிலத்தை மீட்டாக வேண்டும் என்ற அக்கறை இன்னொரு பரிமாணமாக விசுவரூபிக்கிறது. ” வழி தவறிய மனுஷ்ய குமாரனின் மறியை / பிதாவின் பெயரால் பலி கொடுத்து விட்டு / வீச்சமடிப்பது அதன் மாமிசம்தான் என்கிறோம்” கிராமிய அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் எத்தனங்கள் நிறையவே உண்டு. கடவுள் பற்றிய குறிப்புகளில் விலகுதல் பகுத்தறிவுப் பார்வைக்கும் கொண்டு செல்கிறது. நவீன நுகர்வு வாழ்க்கை தந்திருக்கும் பலி பற்றி இது போல் நிறையவே அக்கறையும், பயணப்படவும் முடிகிற இவரால். தனிமையை அடையாளப்படுத்திக் கொள்ளும் போது கூட ஊர் சுற்றுபவனைப்போல் எல்லாவற்றையும் தனக்குள் கொண்டு வந்து விடுகிறார். சமூகத்தின் எந்த அங்கத்திலிருந்தும் பிய்த்துக்கொண்டு போய் விடுகிறவராக இல்லை.
உலகமே காமுறுகிற வகையில் கவிதை எழுதும் எத்தனம் ஆச்சர்யமானது . துரோகம், வஞ்சகம், அதிகாரத்துக் எதிரான குரல் என்று சப்தமிடும்( மெல்லிய குரலில்தான்) கதிர்பாரதியின் எதிர்வினை சிறுநீராக முகத்திலும், வாயிலும் தெறிக்கிறது. அன்றாட நிகழ்வுகளின் உள் ரகசியங்கள் விரித்து வைக்கப்படு கின்றன. கவிதை கேளிக்கையாகி எண்ணற்ற படிமங்களை நிரப்புகிறது. கதிர்பாரதியின் கவிதைகள் என்றைக்கும் புதிதாகவே இருக்கின்றன. கவிதைக்குள் அவர் புதுமைமேதையாகவே இருக்க சாத்தியங்களை இத்தொகுப்பு உருவாக்குகிறது. இவரின் கவிதை மீதான் பலவீனங்கள் சுலபமாகச் சரிபவை.
“ஒரு பிரியம் திரும்பப் பெறப்பட்டதும்
சிறகிலிருந்து உதிர்ந்து வீழ்கின்ற இறகொன்றை
சுட்டு விரலுக்கும் கட்டை விரலுக்கு
இடையே சுழற்றியபடி
மொட்டைமாடி நிசியொன்றில்
மல்லாந்து துயில் முயல்கிறான் அவன்.
அப்போது
அவள் பாதரட்சையின் எழிலெடுக்கும்
பிரயாசையில்
தோற்றுத் தோற்றுச் சரிகிறது
மூன்றாம் பிறை”
கதிர்பாரதியின் கவிதை அனுபவம் நினைக்க நினைக்க வளர்பிறையாகவே மிளிர்பவை. (இது சம்பிரதாயமான வரிகளே என்றாலும்.) ஒரு பத்திரிகையா ளனாக இருக்கும் மனோநிலை மீறி அதன் பிரபல்யம் பூசாமல், நீர்த்துப்போகும் தன்மையுடன் அவசரம் காட்டாமல் அவர் கவிதைகள் உயிப்புடன் தொடர்ந்து இருப்பதற்கு திடமான அசாத்தியமான படைப்பு மனம் வேண்டும்.

(மெசியாவுக்கு மூன்று மச்சங்கள், கதிர்பாரதி,ரூ 60, புது எழுத்து, காவேரிப் பட்டிணம்)

11 March, 2013

வீடு


இரு கைவிரல்நுணிகளை
கோபுரமெனக் குவித்து
”வீடுன்னா இப்படித்தான் இருக்கும்”
என்று சிரிக்கிற திலீபன்
”மழை பெஞ்சா நனைஞ்சுடும்
அப்போ வீட்டை மூடிடணும்’’ என்று
இரு உள்ளங்கைகள் வரை
ஒட்டவைத்துக்கொள்கிறான்.
நனைந்தும்
நினைந்தும்
வாழ்வதற்கு
இந்த வீடு போதுமானதாக இருக்கிறது!

http://saptharegai.blogspot.in/2013/03/blog-post_549.html

07 March, 2013

வானவில்லான மோகப்பரிபூரணி ந.பெரியசாமி



மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்

தாயின் மடியில் கிடத்தி தந்தை கால்களை அமுக்கிப்பிடித்து தங்கள் குழந்தையை தாங்களே வெட்டிச் சந்தோசமாக சமைத்துத் தந்தால்தான் உண்ண வருவேன் உன் இல்லமென்ற அடியாரின் கோரிக்கையை கூற தாயானவள் என்ன இது ஈசனின் சோதனையென கதறி அழும் பாடல். என் தாத்தா வெகு ராகமாக பாடிக்கொண்டிருக்க கட்டில் அடியில் படுத்தவாறு கேட்டு அழுதுகொண்டிருப்பேன். எப்படித்தான் ஒரு மனிதனை அழவைக்கும் அளவிற்கு தாத்தாவால் பாடல் எழுத முடிந்தது என வியந்து நாமும் என்றாவது இப்படி எழுதவேண்டுமென நினைத்துக்கொள்வதுண்டுகாலப்போக்கில்தான் தெரிந்தது அது சிறுதொண்டர் புராணத்தில் வரும் நாடகக் காட்சிப்பாடலென்று. ஏனோ அன்று எழுந்த ஆசையின் விளைவால் யார் எதை எழுதியிருந்தாலும் ஆவலோடு படிப்பதும் அவர்களை கொண்டாடுவதும் இயல்பாகிப்போனது.   அதன் நீட்சிதான் பள்ளிக்கூடத்தில் புதிதாக சேர்ந்தவன் கவிதை எழுதுவான் எனத் தெரிந்ததும் வலியப்போய் அவனோடு நட்பாகி அவனின் நெருங்கிய நண்பனாய் எனைக் காட்டிக்கொள்வதில் அலாதி பிரியம். அன்றைய விதைதான் இன்றளவும் எழுத்தை கொண்டாட்டமாக பார்க்கச் செய்திடுகிறதுசமீபத்தில் கதிர்பாரதியின் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்பை வாசித்தேன். என்னோடு நெருங்கிக் கிடந்த சில கவிதைகளில் நிகழ்ந்த என் பயணத்தை உங்களோடு பங்கிட்டுக் கொள்கிறேன்.
 மீன் குழம்பின் ருசிக்கு தன் முதல் புத்தகத்தை சமர்ப்பணம் செய்யும் கதிர்பாரதியின் எளிமையான மனம் எளிமையான கவிமொழியையே பிறப்பித்திருக்கிறது.
 அரிதாக நடைபெறும் சில நிகழ்வுகள் தனக்கேயான பொக்கிசங்களைக் கொண்டிருப்பது இயல்பு. அப்படியான பொக்கிசத்தை தரிசிக்கலாம்குடும்பப் புகைப்படம்கவிதையில். பெரும்பாலான வீடுகளில் சட்டமிட்டு வரிசையாக புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். எல்லா நாளும் அதை நின்று வேடிக்கை பார்ப்பதில்லை எவரும். என்றாவது பார்க்க புகைப்படத்திலிருக்கும் மாந்தர்கள் அப்புகைப்படம் எடுப்பதற்கான சூழல் அக்கணத்தின் பெருங்கதையென ஏதோவொன்றை சொல்லத் தவிப்பதுபோல் இருக்கும். புகைப்படம் எடுப்பவர், சட்டம் போடுபவர், கண்ணாடி தயாரிப்பவர்கள், வீட்டில் மாட்டிவைப்பதற்கான ஏற்பாடு செய்பவர்கள் என தொழில் சார்ந்த பிழைப்பும் அதில் இருக்கும்அதையெல்லாம் நாம்  கொன்றுவிட்டு இப்போ கடவுளாகிவிட்டோம். கனிணியிலும் அலைபேசியிலும் தடவித் தடவி புகைப்படங்களை நகர்த்திக்கொண்டே இருக்கிறோம்.

துடைத்து துடைத்து பெரும் சுத்தக்காரர்களாக இருப்பவர்களுக்கு ஒட்டடைகளைப் பார்க்க பெரும் ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. ஆனால் கதிர்பாரதிகாலாதிகாலத்தின் தூசிக் கவிதையில் ஒட்டடையை ஒரு மந்திரக்கோலாக்கி நூற்றாண்டகளின் நிழலை காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு முக்கிய கவிதைஉயிர் பந்தல்மீச்சிறு காலமே வாழ எனக்கு நேர்ந்திருந்தாலும் வயலும் வயல் சார்ந்த வாழ்வுக்குமான நாட்களை மழைத்துளிகளாக சேகரிக்கச் செய்தது. பொறுக்குத் தட்டிய விளைநிலம், வெள்ளாமை தின்னும் கால்நடை, விதைப்புக்கால வரப்பு, சுமைதாங்கி மீது வளரும் துயரமென ஒரே கவிதையில் அனுபவ நீர் பாய்ச்ச நிறைய்ய வாய்க்கால்களை வைத்துள்ளார். எவ்வளவுதான் சேந்தினாலும் ஒரு வாய்க்காலில் கூட நீரை ஓட விட முடியாத பெரும் துயர் கணக்க நகர்ந்தேன்.
 எனை பாதிக்கும் ஈர்க்கும் பெண்கள் உடன் பிறப்பெடுப்பார்கள் மதுவாகினியாக. அவர்களின் நிழலாய் மனம் தொடர்ந்தபடி இருக்கும். கதிர்பாரதியும் பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கிறார் ஆனந்தியோடு
 ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் கவிதையின் காட்சியாக்கம் எனை திரும்பத் திரும்ப வாசிக்கச்செய்து தட்டானாக உருமாற்றிக்கொண்டே இருந்தது.
 காலத்தை பந்தென அங்கிட்டும் இங்கிட்டுமாக உருட்டி விட்டு தவ்வித் தவ்வி அவைகளை உயிர்ப்பித்து ரசிக்கும் விளையாட்டை நமக்கு காட்டிக்கொண்டே இருக்கும் குழந்தைகள் உலகு. அவர்களோடு நாம் இருக்கையில் நம் வயதை தொலையச் செய்யும் அதிசயமும் உண்டு. துயர்களை ஆறுதல்படுத்த தண்ணீர் ஏந்தி நின்று, உறக்கத்தில் பால்யம் நனைத்து, பக்கம் பக்கமாய் புகார் நிரப்பி, ஒன்றை ஒன்று அடித்துக்கொள்ளும் வனவிலங்குகளின் குணாதிசயங்களை போக்கி ஒன்றெயொன்று தழுவி விளையாடச் செய்யும்  மந்திரக் குகைக்குள் நுழைத்து பேரதிசயங்களைக் தரிசிக்கச் செய்திடுகிறார்குழந்தைகளும் குழந்தைகள் நிமித்தமும்கவிதையில்.
 ஒரு குளம் ஏழு குளமாக விரிந்து ஏழுவிதமான வண்ணங்களை காட்டி, ஏழுவிதமான ருசியை உணரச்செய்து மனதில் சில்லிப்பை ஏற்படுத்தினகுளத்தில் அலைகின்றன கவிதைகள்’.
 வாசிப்பவனின் மனதில் இருக்கும் கடவுளையும் ஏக்கத்தில் விழச்செய்திடுகிறதுஏக்கத்தில் விழுதல்கவிதை.
 வறுமையும் நிராகரிப்பும் தன்னைச் சுட்டெரிக்க குளிர்ச்சிக்கொள்ள வீழ்ந்து மாண்ட நல்லதங்காள் கிணற்றை நினைவூட்டியதுவீட்டை எட்டிப் பார்த்தல்கவிதை.
 மலைக்குன்றையும் நடுங்கச் செய்யும் வல்லமைகொண்ட கவண்கல்லைத் தூக்கிமலை நடுக்கம்கவிதையை பேசும் கதிர்பாரதி மூன்று மச்சலங்காரத்தில் மிகு கிளர்ச்சி அடைந்து நான்காவது மச்சத்திற்காக நாற்றங்கால் விதைத்து மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என பொய்யுரைக்கிறார்.
 முதல் காமத்தின் இரவு விடிந்ததும் போர்த்திய ஆடையில் தீட்டிய சந்தோசக் கரை பார்த்து சுருட்டிய இரவை கக்கத்தில் வைத்துக்கொண்டு கண்களில் காமவிளையாட்டுகளை சமிக்ஞை செய்து கடந்த வண்ணாத்தியின் மகிழ்வோடு மோகப்பரிபூரனி நீயென ரதியின் மடிசாய்ந்து அமைதிகொள்ளச் செய்தது தொகுப்பின் வானவில்லென வீற்றிருக்கும்மோகப்பரிபூரனி நீ

அப்படித்தான் விழுகிறதுகவிதையில் விழுகின்றனவிழுகிறதுஎனும் வார்த்தைகளை தடதடத்து விழச்செய்து பயணம் முடிய அருகிலிருப்பவனின் முகம் மறந்து போகும் நிலை அக்கவிதைக்குமான நிலையாகிப்போனது
 விட்டேத்தியான மனநிலையில் இருப்பவனிடம் காட்டப்படும் பிரியம் அவனால் அம்மனநிலையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் தேநீர் தயாரித்துத் தரும் பிரியத்தால் அரசாங்கத்தை கலைத்துவிடலாம்தான் என நக்கலடித்து கடக்க நினைக்கையில் பிரியம் அம்மனநிலையின் உயிரை பிளேடால் அரிந்து போக்கச்செய்து ஊர்சுற்றி, எதிர்பாரா கணத்தில் முத்தம் பெற்று, உப்பு மூட்டைத் தூக்கி விளையாடி, ஊடலால் கூடல் அரங்கேறி, அழுது, பதற்றப்பட்டு, பரிசளித்து, கொஞ்சுவதிலிருந்து மீள ஈசல் வார்த்தைகள் என வெறுக்கத் துவங்கினாலும் நிழலாய் உள்ளார்ந்த அன்பைஎன்ன செய்யலாம்கவிதை வெளிப்படுத்தத்தான்  செய்திருக்கிறது.
 செயல்கள்அச் செயல்கள் சார்ந்த ஒப்புமை, அந்த ஒப்புமை உண்டாக்கும் அற்புதமென கவிதையை ரசித்து ரசித்து வாசிக்க முடிவில் திரண்டு புடைத்திருந்த ரசனையை சிரிப்பாக்கி துப்பாக்கியுள் நிரப்பும் லாவகம் மகா உன்னதம்.. ‘துப்பாக்கிக்குள் நிரப்புகிறது சிரிப்புகவிதையில்.
 காமத்தை சிறுநீரில் கழித்து குப்புறப் படுத்துக்கொள்ளும் மகாகவி குறித்த கவிதையாக்கம் தெருக்கூத்திற்காக ராஜா வேஷத்திற்கு அரிதாரம் பூசி ஆடை அணிகலன்களால அலங்கரித்த பின் தன் அழகை தானே ரசித்து ராஜாவாகி கணம் மிளிரும் ஒளி பொருந்திய சூழல்மகாகவி கவிதைதலைப்பிலிருக்கும் ஏழு கவிதைகளிலும் பொருந்தியிருப்பது ரசிக்கத்தக்கதாக இருந்தது. தொகுப்பில் 1,2,3…யென எண்ணிட்டு எழுதியிருக்கும் எல்லா கவிதைகளுமே ஈர்ப்புக்குரியதாக இருக்கிறது.
 மது, மதுக்கூடம் குறித்து எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளுமே மதுவோடு கலவிகொண்ட மயக்க நிலையிலிருந்து வெளிப்பட்டவையாக இருப்பதால் சிறப்பானவையாகவே இருந்திருக்கின்றன. கதிர்பாரதியின்மதுக்கூடங்களோடு புழங்குதல்கவிதையும் அச் சிறப்பை மெருகேற்றியிருக்கிறது தனித்திருப்பவனின் விசும்பலில்மது, மதுக்கூடங்களைப் பார்க்க, வாசிக்க நேர்கையில் மதுக்கூடத்தில் வேலை பார்க்கும் சிறுவனின் பையிலிருந்து சிதறிய கோலிக்குண்டுகளை மது அருந்த வந்தவர்களும் அவனோடு சேர்ந்து பொறுக்கினார்கள் அவரவர்களின் பால்யத்தையும் என முடித்திருக்கும் யூமா.வாசுகியின்  கவிதை இன்னமும் தொடர்ந்து நினைவில் வந்துகொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை.
 ‘கனவிலிருந்து எழுந்து போய் சிறுநீர் கழித்தேன்கவிதையைப் போன்று ரசித்து ரசித்து வாசிக்க தொகுப்பில் நிறைய்ய கவிதைகள் இருப்பதால் படித்து முடித்தோமென தூக்கிப்போட்டு விடாது என்றாவது மீண்டும் வாசிக்க வேண்டும் எனும் மனநிலையை கொடுக்கும் தொகுப்பாக இருக்கிறது கதிர்பாரதியின்மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்…’ கதிர்பாரதிக்கும் தொகுப்பாக்கிய புதுஎழுத்து மனோன்மணிக்கும் என்றென்றும் எனதன்புகள்

01 February, 2013

விமர்சனம் ~ இரதி மணாளன் கவிதை உலகம் ~ மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்~ எழுத்தாளர் இளஞ்சேரல்


       உலகத்தின் வளங்களையெல்லாம் கன்னம் வைத்து அபகரித்துக் கொள்ள முனைகிற வல்லாதிக்க மேலாண்மையைத் தகர்க்கிற மொழியின் வீரியத்துடன் நவீன கவிதை இயங்கி வருகிறது. புத்தாயிரத்தின் உலக கவிகள் சந்திக்கும் மைக்ரோ க்ரைம் சைபர் கிரைம் அச்சுறுத்தல்களும் அதிகம். எல்லா மறைமுக நெருக்கடிகளையும் தன் கவிதைகளால் கடந்தும் எழுந்தும் பரவி வருகிறார்கள்.
       நவீன கவிதையின் புதிய நூற்றாண்டின் தேவைக்கான வடிவத்தை செழுமித்துத் தந்தவர்களில் ஒருவராக யுமா.வாசுகியும். ஜே.பிரான்சிஸ் கிருபாவும் இளைய தலைமுறையை பாதித்தவர்கள். தண்ணீருக் காகப் பிச்சை கேட்டுக் காத்துக்கொண்டிருக்கிற தமிழ் நிலத்தின் வறண்ட இதயங்களுக்காகக் கண்ணீர் சிந்தியவர்கள். தேய்ந்த சொற்களை மீண்டும் உருக்கி உருக்கி அணிகலன்களாக மாற்றி நமக்கு அணிவித்தவர்களில் முக்கியமானவர்கள்.
        அவர்கள் தான் தேவாதி தேவனாம் கருணா மூர்த்தியாம் இரட்சகப் பெருமாள் கிருத்துவை வரவழைத்து விடமுடியுமா அல்லது இங்கிருக்கும் ஒரு நவீன கவிஞனை கிருத்துவாக மாற்றி இந்த நிலமெங்கிலும் நடந்து சிலுவை சுமக்க வைத்து பாறைகளை வெடிக்க வைத்து நீருற்றை பீய்ச்ச வைக்க முடியுமா? தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க முடியுமா என்று யாசிக்கிறார்கள். நவீன கவிஞனின் கிருத்தும் மற்ற சமயத்தின் உருவாரச் சிலைகள் யாவும் அவனுடைய செல்லப்பிள்ளைகள். ஒரு வகையில் அவர்கள் தான் கொஞ்சம் தீர்க்க முடிகிற ஷரத்து விதிகளை கைவசம் வைத்திருக்கிறார்கள். கதிர்பாரதியும் தன் தொகுப்பில் முன் வைக்கும் கவிதையின் வழியாக  கிருத்துவிடம் பிரார்த்திக்கிறார்..

என் தேவனே...என் தேவனே..

திசைகளைப் பதற்றத்துள்ளாக்கி
மாநகர சாலையில் விரையும்
ஞாயிற்றுக் கிழமை கசாப்புக் கடைக் காரனின்
இருசக்கர வாகனத்தில்
\குறுக்கு வட்டாகக் கிடந்துக் கதறுகிற
மறியைப்பாத்ததும்
நீங்கள் என்ன செய்வீர்கள்
என் பிதாவே என் பிதாவே
ஏன் என்னைக் கைவிட்டீரென
கல்வாரி மலையில் அரற்றிய
என் தேவனே..என் தேவனே..என்று
கைத்தொழுவேன்
நான்
பக்-68
        யேசுவைப் போலொருவரைக் காண்பதோ அன்றியும் பிறர் போலிருக்கும்  அவரைப் பின் தொடர்ந்தோ செல்கிறோம். செல்லுதலும் கூட யார்க்கும் எளிய வழி அவ்வழியல்லவா.
          அவர்களின் சிகரெட் புகையின் வழியாகவாவது இந்திரனின் தேவதைகளை நசுக்கிவீசும் துண்டு சிகரெட்டினிலிருந்து உயிர்ப்பித்து ஜீன்ஸ் டிசர்ட் அணிவித்து, இரட்டை ஜடை போட்டு சீருடை அணிவித்து, அல்லது வடநாட்டு அழகியாக மாற்றி கொசுவம் வைத்து சுங்கிடிச் சேலை கட்டுவித்து குளிர்க் கண்ணாடி அணிவித்து வெண்கலத் தூக்குப் போசியில் கொஞ்சம் கருவாடு தந்து கோவில் நிலத்தின் வயலில் இறக்கி விடுகிறார்கள்.
    ஐநூறு கோடி சொத்துள்ள கதாநாயகன் வயலில் இறங்கி (டுப் போடாமல்) நாற்றுப் பெண்கள் மடி பார்த்துக் கொண்டிருக்கிறவனுக்கு உதவிட வைக்கிறார்கள்.
         வறண்டு கொண்டிருக்கும் அணைகள் தன்னுடைய  எல்லைகள் களவு போகும் தேசத்தின் குழந்தைகளுக்காக முகுந்த நாகராஜனும் வேலு சரவணனும் முருக புபதியும் புது எழுத்து மனோன் மணியும் இன்ன பிற சங்கல்ப விமோசினிகளும் இயங்குகிறார்கள். மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறகு நமக்குள்..





உன் பாசாங்குக்கும் பசப்புகளுக்கும்
மங்கியிருக்கும் நிலம்

எமக்கு வாய்த்தது நன்னிலம்தான்
நெகிழத் தொடங்கியிருக்கும் இக்கணத்திலிருந்து
அதனியல்பால் எல்லாம் கிட்டும்
எழுதுகோல் முளைக்கும்
கணனியும் கண்டடைவோம்
மரித்திருக்கும் குலசாமிக்கு உயிர்ப்பு துளிர்விடும்
சாங்கியமும் கொண்டாட்டமும் மீண்டும் நிறம் கொள்ளும்
நிலத்தின் வண்டல்களால் செப்புறும் மூளை
இருதயம் திடச்சித்தம் கொள்ளும்
கனவுகள் கள்வெறியுட்டும்
இறுகிக்கிடந்த இச்சைகளுக்கு  றெக்கை அரும்பும்
மூதாதையர்கள் தேடிக் களைப்படைந்த புதையல்கள்
அகழாமல் மேல்வரும்
நீளும் ஆயுள் ரேகைகளில் எம் சந்நதி வளப்பமுறும்
எல்லாம் கிட்டும் எமக்கு
யாவற்றுக்கும் முன்
உன் பசப்புகளுக்கும் பாசாங்குகளுக்கும்
மயங்கி இருக்கும் நிலத்தை மீட்டாக வேண்டும். –
பக்-31-
        இந்தக் கவிதையின் விசாலம் உண்மையின் தடித்த தழும்பை மேன் மேலும் கீறிவிடுகிறது. தன் நிலம் இழந்தவனுக்கு ஆதரவாக கவிதை தன் மொழியின் அதீத ஆற்றல் கொண்டு முழங்கியும் ஆர்ப்பரித்தும் பேசுகிறது.
ஒரு சங்கல்பம். ஒரு தீட்சண்யம். எழுச்சி.
     
         மகன்களும் மகன்களின் நிமித்தமும்-பக்-21 நெடுங்கவிதைகள் ஒன்பது காட்சி சித்திரங்களாகப் பதிவாகியிருக்கும் கவிதைகளில் கதிர்பாரதியின் மொழி ஆவணமாக மாறியிருக்கிறது. தொகுப்பில் திரும்பத்திரும் பவும் அந்த மொழியின் அடர்த்தியும் எளிமையான. இயற்கையான கிராமத்தின் அழுக்கு வண்ணங்களில் மிளிரும் சித்திரங்கள். விவசாய மக்களின் தினக்காட்சிகள் நெடுங்கவிதையினூடே வந்து போகும் நகைமுரண் அணியின் சொல்லாட்சியும் அபாரம்.
        நம் காலத்தின் அரசியலும் வாழ்வின் நிமித்தம் மைதானத்தில் மழையும் நீரும் பொய்த்து,தற்கொலைக்கு முன்பு சாணம் திண்ணும் மக்கள் கூட்டத்தினுள் அரங்கேறும் வினோதமான காட்சிகள் இவை. நவீன கவிதையின் ருத்ரதாண்டவ நடனம் நிகழும் காலமும் சூழலும் இவைதான்.
     
       ஆழந்த குகைகளுக்குள் இறங்கும் முன்பு சில படிகள் போல சில வெட்டுத் தடங்களை உருவாக் கியிருப்பார்கள் முன்சென்றவர்கள். எனினும் போகப் போக ஒன்றும் தென்படாது. அவர்கள் அந்தப் பாதைகளின் வழியாக சென்றார்களா அல்லது பாதியில் திரும்பினார்களா தெரியாது. எனினும் பின் செல்லும் யோகியோ துறவியோ பின் தொடர்ந்து கொஞ்சம் ஆழம் போகவே விரும்புவான். நவீன தமிழ் கவிதையின் இயக்கத்திற்கு குகைகளும் அருவிகளும் பிடியில்லாத மாயக்கயிறுகளும் கயிற்றரவம் போன்ற பிரமைகளும் சாதாரணமாகவே தோன்றும் படிமங்கள். கவிஞனுக் குள்ளாக சொல்லும் காட்சிப்பிறழ்வும் வடிவம் செய்து கொள்ளும் அணிச்சை அபுர்வமான செயல்கள்.
 
        இந்த வரிகளை வாசிக்கலாம். ஏற்கெனவே இந்திராவின் எமர்ஜென்சி காலத்தில் 74-77 வரையிலான இந்திய தமிழ்க் கவிதைகளில் உருவாக்கிய படிமங்களாக இருந்தாலும் மரபின் உருவகத்தில் அற்புதமாக முழு கவிதையும் எழுதப்பட்டிருக்கிறது.

திலீபன் வைத்த கொலுவில்
வெளிமானை முதுகில் சுமந்து கொண்டு
புல் மேயத் தயாராக இருக்கிறது புலி்
பசுமாட்டு நிழலி்ல் சிங்கம் இளைப்பாற
கரடியும் குரங்கும் முகத்தோடு முகமுரசி
விளையாடும் பாவனையில் இருக்கின்றன
காந்திஜி கையில் துப்பாக்கி கொடுத்துவிட்டு
புல்லாங்குழல் வாசிக்கிறான் வேட்டைக்காரன்.

       கவிதைகளுக்குள் கவிதையின் பிரச்சனையை உள்ளடக்க பிம்பங்ளையும் படிமங்களையும் கலைத்துக் கலைத்துப் பின் வேறொன்றின் வழியாக புதிய பொருளை உணர்த்தும் கவிதைகளும் வரிகளும் சிறப்பு. ஒரே மாதிரியான வடிவொத்த கவிதையின் பொருள் உணரப் பட்டாலும் ஒவ்வொரு கவிஞனின் வாழ்வு வேறுவேறானது. சமகாலத்தில் நவீன கவிஞனும் தீவிர இலக்கியவாதியும் எதிர்கொள்ள நேர்கிற விமர்சனம் ஒரேமாதிரியாக ஒன்று போலவே எழுதுகிறீர்கள் என்பதுதான். முதலில் புரியவில்லை என்று சொன்னவர்கள் தான் இப்போது ஒரே மாதிரி என்கிறார்கள். கொஞ்சம் அவர்கள் முன்னேறி வந்ததற்காக மகிழ்ச்சி கொள்ளத்தான் வேண்டும்..
        நவீன கவிஞன் ஒருவர் விவசாயத்தில் ஈடுபடுவார். ஒருவர். நகரமாயமான வாழ்வின் நெருக்கத்தில் இருப்பார். ஒரு பாரம்பரியம் மிக்க தொழில் செய்து கொண்டிருப்பார். ஒருவர் நிதிபரிவர்த்தனை செய்து கொண்டிருப்பார். ஒருவர் தினசரி வியாபாரியாக இருப்பார்கள் இப்படியாக சில நவீன கவிஞர்களின் வாழ்வு கழிந்து கொண்டிருக்கும். எனினும் அவர்களின் மொழியும் காட்சியும் உணர்த்தும் பொருளும் சித்திரத்தையும் நீ்ங்கள் எப்படி ஒரே மாதிரி எழுதுகிறார் என்று சொல்வீர்கள்.
   
       ஒரு காலத்தில் கடல் வணிகத்தில் தமிழ் சமூகம் கொடிகட்டிப்பறந்தது. இன்று கடல் நிலம் தரைநிலம் முழுவதும் அந்நிய நாட்டினரின் ஆளுகையின் பிடியாக மாறப்போவதை காட்சிப்படுத்தியிருப்பதை வரவேற்கவும்..

வைகல்தோறும் அசைவின்றி,உலகு செய்க்
குறைபடாது, நீரில் நின்று நிலத்தேற்றவும்,
நிலத்தில் நின்று நீர்ப்பரப்பவும்,அறந்தறியாப்
பலபண்டம்,வரம்பறியாமை வந்து ஈண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்,வலியுடைவல்
லணங்கினேன்,புலிபொறித்துப் புறம் போக்கி
மதி நிறைந்த மலிபண்டம்-
பட்டிப்பாலை-124-136
    மேற் கவிதையில் கப்பலில் வந்த பொருள் கரையில் இறக்கியும்,கப்பலில் ஏற்றியும் அம்மூட்டைகளின் மேல்
சோழன் முத்திரையை வைத்தும்,சுங்கம் வாங்கும் குறைவில்லாத பண்டங்கள் என்பதால் அயல் நாட்டு  வணிகம் அறிந்தோம்.ஒரு சந்தை ஒழுங்கு இருந்தது.
         நம் நவீன காலத்தின் கவிஞன் கதிர்பாரதியின் லாபங்களின் ஊடுருவல் பக்-17 கவிதையில் உள்நாட்டுச் சந்தைகளுக்குள் நுழைந்த அந்நியர்களின் சந்தைப் படுத்தலை விமர்சிக்கிறார்.        
  ஆயினும் கோடாணுகோடி முதலீ்டு செய்யப்பட்டு கட்டப்பட்டு வெறுமையாகக் காட்சியளிக்கும் காலியாக இருக்கும் டைடல்பார்க் அறைகள் எத்தனை. இது பற்றிய ஆரம்ப சித்திரங்கள் எப்படியிருந்தது. மூவாயிரம் பேர் வேலை செய்த ஆலையை இழுத்து மூடி அந்த நிலத்தை இடித்துத்தள்ளி அங்கு இப்போது 6000 பேர் குடியிருக்கும் விதமாக அடுக்குமாடிக்குடியிருப்பு கட்டப்பட்டு தற்போது அங்கு அருபது குடும்பங்கள் மட்டும் வசிக்கும் சித்திரத்தை நவீன கவிஞன் பேசாமல் எழுதாமல் இருக்க முடியுமா.  நவீன கவிஞர்கள் மன அவசங்களையும் தன் முனைப்பின் நீர்மையையும் காமத்தையும் உடலை மட்டுமே பேசுகிறார்கள் என்று மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து இலக்கியப் பணியாற்றும் பிரபல கவிஞர்கள் பேசுகிறார்கள். புத்தி மதி சொல்கிறார்கள்.
     
        ந.முத்துசாமி.ஞானக் கூத்தன், ஆத்மாநாம், அபி.
எஸ்.வைத்தீஸ்வரன்,கிருஷாங்கினி,அம்பை, இரா.மீனாட்சி நாரணோ ஜெயராமன் போன்ற மூத்த தலைமுறையின் ஆளுமைகள் ஃபார்வாட் கம்யுனிட்டியாக  இருந்தாலும் மாறிவரும் தமிழின் புதிய தலைமுறையின் எழுத்து, கவிமொழியின் எதிர்காலச் சித்திரங்களைக் குறித்துப்  பேசியிருக்கிறார்கள்.
        சங்கக் கவிதைகள் ஒரு கவிதை நான்கு மாற்று ஈட்டுப் பொருளைத் தரும். நவீன கவிதைகள் இருபது வகையான ஈட்டுப் பொருளைத் தருகிறது. சங்ககாலத்தின் இருப்பும் ஒலியும் அச்சமும் துரத்தல்களும் இப்போது ஓய்ந்திருக்கிறது. குதிரைகள் இல்லை. கழுதைகள் இல்லை. புலிகள் இல்லை, கிராமத்தில் குரங்குகள் இல்லை. மனிதக்குரங்குகள் இல்லவே இல்லை.
      ஒரு அறை உலக உருண்டையாக மாறியிருக்கிறது தற்பொழுது. அதற்குள் காற்று இல்லை. ஒரு சொல் உலகத்தை நீர்க்குமிழியாக்கியிருக்கிறது. ஒரு கிராம் மாத்திரை அவனை நான்கு நாட்கள் அசைவற்று கிடக்கப் பண்ணுகிறது. முதல், இடை, கடைச் சங்கத்தில் இவை இருந்திருக்கிறதா.
   
          கவிதை நூல்களுக்கு விமர்சனம் எழுதும் போது எனக்கு அவசியமாக வேண்டியது, கொஞ்சம் சன்னமான இரைச்சல்,காற்றாடியின் இரண்டாவது நிலை சுழல், ராக்கோழிகள் மூன்று கட்டைச் சுருதியில் கிர்ர் சத்தம் வேண்டும். ரயில்கள் குறுக்கும் நெடுக்குமாகக் கடக்க வேண்டும். அல்லது ரயில் இன்ஜின் தேவையில்லாமல் உறுமிக்கொண்டே இருக்கவேண்டும்.
           ரயில் பாதைகளில் சிந்திய தானியங்களை காகம்,குருவி,புறாக்கள் கொத்திக்கொண்டிருக்கவேண்டும்.

       தன் இதழ்களையே இரும்பாக்கிக் கைவிரல்-கைகளாக்கிக் கொண்ட பறவைகளைப் போலவேதான் நவீன கவிஞன்-கவிதையின் நிலையும். வயதான யானையின் தும்பிக்கையாக, சரியான நேரத்தில் ஓய்வுதியம் பெற முடியாத, அர்ச்சனைக்கு போக முடியாத மலராக, இறுதியில் மிச்சமாகி யாருக்கும் உபயோகமில்லாது தண்ணீரோடு கறைந்து போகும் உணவாகவும் கவிஞனின் வாழ்வு இருக்கிறது. எப்போதும் கற்புரம் அவித்து “நான் மனிதனின் சொல்” என்று சத்தியம் செய்யத் தயாராகவும்  இருக்க வேண்டும்.
     
         தொகுப்பில் உள்ள சில கவிதைகளில்  காலத்தின் ஆர்ப்பரிப்பு கூச்சல் பின் துரத்தல் இருக்கிறது.
காலத்தை அறுக்கும் ஆலகாலம், லாபங்களின் ஊடுருவல்,கடக்க இயலாத தெரு, காலத்தினாற் செய்த கொலை, ஆமாம் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள், கனவிலிருந்து எழுந்து போய் சிறுநீர் கழித்தேன் ஆகிய கவிதைகள் எனக்குப் பல சிந்தனைகள் கீழ்கண்டவாறு தோன்றிட வைத்தது என்பதைப் பகிர்ந்து கொள்கிறேன்.
 
       குடை ரிப்பேர்க்காரரிடம் ஒரு குடையிருக்கும். அந்தக் குடையை அவர் மழைக்கு உபயோகப்படுத்த மாட்டார். வெயிலுக்கும் நிழலுக்கு மட்டுமேயானது அது. ஒரு கணம் விரும்பி  அந்தக் குடையைக் கேட்டேன். அழகிய வேலைப்பாடு கொண்ட பிரம்புக் கொண்டையணிந்த குடையது. இந்தப் புதுசை வெச்சுக்கங்க என்றேன். அவரோ “வற்புறுத்தாதீங்க“ என்றார். சாவி ரிப்பபேர், பூட்டு ரிப்பேர்க்காரர்கள் எல்லாம் ஒரு குடையின் கீழ் அமர்ந்திருப்பார்கள்.
        சமகாலத்தில் அக்குடை போலவே இன்றும் வண்ணக் குடைகளை மல்டி பிராண்ட் வீட்டு உபயோகப் பொருட்கள். கணணி விற்பவர்கள், கார் விற்பவர்கள் உபயோகப் படுத்துகிறார்கள். காவலர்கள் குடைக் காரர்களை விரட்டுகிறார்கள். வண்ணக் குடைக் காரர்களிடம் இளநீர் வாங்கி அருந்துகிறார்கள்.
       
         மேலும் நூலில் மற்ற கவிதைகளில் சில ஒரு வார்ப்பு அச்சின் உருவக் குமிழ்களில் சுண்ணக்களிமண் மாவும் களிம்பும் வார்க்கப்பினூடாகத் திணிக்கப்பட்டு அப்படியே தலைகவிழ்த்துக் கொட்டினால் ஒரு கடவுள் உருவம் கிடைக்கும்.அல்லது பொம்மைகள் கிடைக்கும். அப்படியாக கவிதைகள் உள்ளது. அதனின் கவிமொழி வாசிக்க ஏதுவாக சிறு உள்ளக்கிளர்ச்சி தருவதானாலும் அடுத்த நிலைக்கு கவிஞனை அனுப்ப மறுக்கும் கவிதைகள். அக்கவிதைகளை கதிர்பாரதியால்  மேலும் செழுமைப்படுத்த வேண்டியவை.
     
       கதிர்பாரதியின் முதல் தொகுப்பு என்பதை நம்ப முடியாமையின் காரணம் அதன் விலாசமான காலப்பரப்பு, கலை அனுபவத்தின் நேர்த்தி, கால ஒழுங்கின் வளம். ஒரு நிலைக்குள்ளாக தன்னை ஒழுங்கு படுத்திக் கொள்ள முனையும் ஆவல். தன் எழுத்திற்கும் தமக்குமான உடமையை வலியுறுத்தும் முயற்சி. ஆகியவையால்  தெளிவாக உணரமுடிகிற வலிமை.
   
சமகாலத்தின் அச்சு வரைகலையுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நூலாகவும் வெளியிட்டுள்ள புது எழுத்து பதிப்பகத்திற்கும் மனோன்மணிக்கும் வாழ்த்து சொல்லவேண்டியிருக்கிறது. வாய்ப்பிற்கு நன்றி...


வெளியீடு
புது எழுத்து
பக்-68
விலை –ரூ.60-
ஆசிரியர்-கவிஞர்-கதிர்பாரதி
Kathirbharathi@gmail.com
Cell-98417 58984


Puthuezuthu
2-205 anna nagar
Kaveripattinam-635112
Krishnagiri Dist
90421 58667
pudhuezuthu@gmail.com