30 September, 2011

கிணற்றுக்குள் தழும்பும் கேவல்

எருக்கம்புதர்கள் மண்டிக்கிடக்கும்
இந்த வீடு மட்டும்தான் ஒருகாலத்தில்
வசீகரமிக்கதாக இருந்தது
ஒளிபொருந்தியதாகவும் இருந்தது

அந்தத் தெருவிலேயே
புறா வளர்ந்த அந்த வீடுதான்
ஓர் இறகுபோல மேலெழும்பிப்
மிதப்பதாகவும்
லயத்தோடு கசியும் இசைதான்
வீடாகிவிட்டதாகவும் தோன்றும்

இந்த வீட்டின் துளசி வாசத்தில்
மயங்கிய
பதின்பருவத்துத் தடயங்கள்
இவ் வீட்டைப்போலவே
சிதிலமாகிவிடவில்லை இன்றும்

புறாக்கள் இரையுண்ட
அவ் வீட்டின் கிணற்றடி
எப்படிப் பார்க்கும் தைரியம்
நரைக்குக்கூட இல்லை

அதற்குள்
தேங்கி இருண்டிருப்பது
தண்ணீரல்ல
உன் கேவல்

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

அதற்குள்
தேங்கி இருண்டிருப்பது
தண்ணீரல்ல
உன் கேவல்/

மனக்கிணற்றிலும் கேவல் எதிரொலிக்கிறது!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மனதை அசைக்கும் கவிதை. வார்த்தைகள் ஊதுவத்திப்புகை போல இன்னமும் சுழன்றபடி இருக்கின்றன கதிர்.

'பரிவை' சே.குமார் said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

கார்த்திகா said...

simply superb! u r rocking always