பிச்சியாகிச் சுற்றிவருகிறாள் கடல்தேவதை
தஞ்சையின் கிழக்குக் கடற்கரைசாலையில்
சடைத்த தலைமுடிகளில்
ஊழிக்கூத்தின் வெக்கையும் பிசுபிசுப்புமாய்ப்
போய்க்கொண்டிருந்தவள்
சாலையின் வெயிலில் காயும் மச்சங்களுக்காய்
மார்பறைந்து சிந்தினாள்
கண்களிலிருந்து துளித்துளி கடல்களை
முலைகள் அதிர அதிர அலைகளின் முற்றத்தில்
அவள் சமீபிக்கையில்
பயந்து உள்வாங்கியது அந்த நீலப்பள்ளம்
வாய்க் குதப்பி உமிழ்ந்தாள் வசவுகளை
இருண்டு மருண்டிருந்த கடல்மீது
அந்தக் கொடி பொருந்திய கப்பல்
அவளை அதிஉக்கிரமாக்கியது
கடற்காகங்களைத் தடுத்தாட்கொண்டு
சில வார்த்தைகள் உபதேசித்து
அதனைக் கொண்டுசேர்க்கும்படிக்குப்
பிரயோகித்தாள் தமது அதிகாரத்தை
தொடுவானுக்கும் அவளுக்குமிடையில்
தத்தளித்துத் தவித்த கடலை
யாரேனும் ஒருவர் காத்தருளினால்
தேவலாம் போலிருந்தது
சுமக்குமளவுக்கு முந்தானையில்
மணலை முடிந்தவள்
தன் முலைகளுக்கு மத்தியமத்தில் பொதிந்து
கண்ணயர்ந்தாள்
அவள் கால்களைத் தழுவி நழுவியோடியது
ஒரு சிற்றலை