10 February, 2011

காலத்தினாற்செய்த கொலை

துணுக்குற வேண்டாம்
இதில் எவ்வித தவறுமில்லை
இன்னும் சொல்வதென்றால்
இது நானுங்களுக்குக்
காலத்தினாற் செய்த உதவி

நீலம்பாரித்துக் கிடந்த உங்களது நாட்களை
மீட்டெடுக்க அவனுக்கேது உரிமை

வீழ்ச்சியுறுவதற்கெனவே உற்பத்தியாகும்
நதியிலிருந்து ஒரு கை நீரள்ளித்
தாகம்போக்க அவனெப்படிக் கற்றுத் தரலாம்

இறுக்கத்தின் நிலத்தில் நெகிழ்வின் துளிகளைச்
சொட்டுவிப்பது எந்தவகையில் முறை

பிடாரனின் பாம்புக்கூடையை ஆவலோடு
நோக்கிக்கொண்டிருக்கையில்
அழும் உங்கள் குழந்தைக்குப்
பால் புகட்ட பணிக்க இவன் யார்

எனக்குள்ளும் சாணைப் பிடிக்கும்
உங்களுக்கான கேள்விகளிலிருந்து
ஒன்றை உருவிப் பாய்ச்சினேன்
அவன் கழுத்தில்
பசித்திருக்கும் ஓநாயின் பாய்ச்சலாய்

வெளித்தள்ளிய நாவிலிருந்து
ஒழுகும் உமிழ்நீரில் நெளியவிருக்கும்
புழுக்களை அடித்துக்கொள்ளாமல்
பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்

நன்றி: உயிர் எழுத்து(மார்ச்2011)

3 comments:

பா.ராஜாராம் said...

oops!

என்ன சார்.. இந்த போடு போடுறீங்க!

ரொம்ப பிடிச்சுருக்கு கதிர்பாரதி சார்.

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப பிடிச்சுருக்கு.

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்குங்க