08 October, 2010

விளையாட்டு

விதைப்பு நாள் ஒவ்வொன்றிலும்
வார்த்தைகளில் சந்நதம் உருவேறிக்கொள்ளும்
தாத்தையாவுக்கு

விதைக்கையில் சிரித்தல்
ஆகாதென்று சினப்பார்
விதைக்கும் நிலத்தை விழுந்து
சேவிக்கச் சொல்வார்; செய்வார்
பிரசாதமேந்தும் பக்தனின் பாவனையில்
கையிலேந்திய விதைநெல்லை
குவித்துவைத்துக் கும்பிட்டுக் களிப்பார்
நெல்லோடு சேர்த்து
தம் மனசின் முணுமுணுப்பையும் விதைப்பார்
முடித்த பிற்பாடும்
மறக்காமல் விதைப்பார் எம் மனங்களில்...

மக்கா எனக்குக் களத்துலேயே
கல்லறைக் கட்டுங்கடா
அச்சுப்பிசகாது அப்பாவுக்கும்
அப்படியேதான் வாய்த்தது
மண்ணோடு மல்லுக்கட்டி
மக்கிப்போகும் வாழ்வு

ஏதேதோ தேவைகள் அழுத்த
கைமாறிய மண்ணை மீட்க இயலாமல்
வார்த்தைகள் தொண்டையைக் கிழிக்கும்
சோகம் எனக்கு

முப்போகமும் முங்கித் திளைத்த மண்
வெறுமையாய் விரிந்து கிடக்கிறது
கபடியையும் கிட்டிப்புல்லையும்
ஏங்கவைத்துவிட்டு எங்களூர் இளசுகள்
அதில் ஸ்டெம்ப் நட்டு கிரிக்கெட் ஆடுகிறார்கள்

1 comment:

உயிரோடை said...

ஹூம்ம்ம், கிரிக்கெட் என்ன விளைநிலங்களெல்லாம் மனைநிலங்களாகி விட்ட கொடுமை என்ன செய்ய