சமூகநலக் கூடங்களுக்குள் நுழைதல் போல
அத்துனை இலகுவானதல்ல மதுக்கூடத்துள் நுழைவது.
கதவைத் திறந்துகொண்டு நுழையும்போது
அங்கு நுரைபூத்துத் ததும்பிக்கொண்டிருக்கும் சொற்களின் மீது
இடித்துக்கொள்ளாமல் நுழைதல் வேண்டும்.
உங்களுக்குரிய இருக்கையை அணுகும்போது கரிசனம் முக்கியம்.
உங்களுக்கு முன்பும் பின்பும் அமர்ந்ததும் அமரப்போவதும்
அதிஉன்னத அனுபவமல்லவே.
மதுசிப்பந்திகளிடம் புன்னகையைக் கொடுத்துவிட்டு
மதுவைப் பெற்றுக்கொள்ளுதலே நல்லப் பழக்கம்.
ஐஸ்கட்டிகளோடு உங்களையும் முக்கிவிடுகையில்
உயிர்த்திரவமென பூரித்துக் கிளம்பும் மதுவை முத்தமிடுங்கள்.
ஒவ்வோர் இருக்கையிலும் வெவ்வேறுலகம் சுழன்றுகொண்டிருக்கும்
எவருலகத்தோடும் ஒட்டாது உரசாது
நீங்களும் சுழலவிடுங்கள் உங்கள் உலகை.
போதையின் பெருங்காதலோடு உலகங்களை அவதானிப்பதுகூட
அடடா எவ்வளவு ஆனந்தம்; எவ்வளவு பேரானந்தம்.
இரண்டாவது, மூன்றாவது, நான்காவது... சுற்றுகளுக்குப் பிறகு
வாழ்க்கை உங்களுக்குக் குமட்டலெடுக்கத் தொடங்கும்.
அப்போது மனதுக்குள் மதுக்கூடத்தைத் தெண்டனிட்டுவிட்டு
வெளியேறிவிடுதலே புத்திசாலித்தனம்.
இல்லையேல் இன்னும் ஒரேயோரு மிடறுக்குப் பிறகு
ஈசானமூலையில் முகம் இருள அமர்ந்திருப்பவனின்
தனிபெரும் விசும்பலில் மதுக்கூடமே தளும்பத் தொடங்கிவிடும்.