23 November, 2011

ஆம்புலன்சின் பின்புறத்தில் கடவுள்

விதவை மகளின் ஆண்மகவுக்கு
ரத்தமாற்று சிகிச்சையில் உதவுவதற்கெனவே
விலாவில் முளைத்த றெக்கையோடு
திடுமென நிகழ்ந்தான் சாத்தான்

பை நிறைய உதவிகளோடும்
கையே வாஞ்சையாகவும்
அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் அவன்
அனைவருக்கும் தேவையாயிருந்தான்

ஆறுதலைக் கேடயமாக நீட்டும்
அவன் கிருபைக் குறித்து
யாருக்கும் எவ்வித ஐயப்பாடுமில்லை

துயருறுவோரின் காயங்கள் மீது பூச
துளிர்த்துக்கொண்டே இருக்கின்றன
அவனது மொனைக் கண்களில் கண்ணீர்

சம்பாசித்துக்கொண்டிருக்கையிலேயே
சாலையைக் கடக்க சிரமமுற்ற மூதாட்டிக்கு
மாறிப்போனான் கைத்தாங்கலாய்

அவ்வப்போது உலக நலனில்
தோய்ந்தெழுந்த அவனது சிந்தனை
இன்னும் பிற இத்யாதிகள் பொருட்டு
கவலையாய் மாறிற்று

அன்று அவதிக்குள்ளானவர்களை கவனமாக
தம் பிரார்த்தனைப் புத்தகத்தில் பதிந்து
உருக்கமாக ஜெபிக்கவும் துவங்குகிறான்

யாவற்றையும் அவதானித்தபடி...
பாலூட்டிக்கொண்டிருப்பவளின் முலைகளில்
முறுவலோடு லயித்திருந்த கடவுள்
தம் மாட்சிமைமிகு ஒளிபொருந்திய கிரீடத்தை
மார்வாடிக் கடையில் வைத்துவிட்டு
அறுவைசிகிச்சைக்கு விரையும்
ஆம்புலன்சின் பின்புறம் தொற்றியபடி
தாசி வீட்டுக்கு அருகாமையில் நிறுத்தச் சொல்லி
சச்சரவு செய்துகொண்டிருந்தார் கடவுள்

No comments: