20 September, 2024

கவிதை ~ சிரிப்பை அரிக்கும் கறையான் ~ கதிர்பாரதி

ஓர் இனிய ஆச்சர்யம் தெரியுமா?
கறையான்கள் ஒன்றும் பூச்சியினமல்ல.
அதுவொரு மிக சாதுவான சமூக விலங்கு.
ஆயினும்
விஷ நாகங்கள் வசிக்கும்படி
வலிய புற்றைக் கட்டியெழுப்புகின்றன.

கறையான்கள் சமூக விலங்கு என்பதால்
கூடிவாழுகின்றன. எனவே
குழிபறிப்பதும் இவற்றின் முக்கியப் பணியாகிறது.

தீனியாகும் எதன்மீதும் வாய்வைக்க
கறையான் தயங்குவதில்லை.
நாளுக்குநாள் உடல் நரங்கிய அம்மாவுக்குள்
புற்றுவொன்று வளர்ந்தபோதுதான்
அப்பாவின் சிரிப்பைக் கறையான் அரித்தது.
அவரும் செதில்செதிலாக உதிர்ந்தார்.

ராணிக் கறையானைப் பணியும் ஆண் கறையானுக்கே
கலவிகொள்ளும் வாய்ப்புண்டு.
கண்மண் தெரியாத கலவியில் கண்ணொளி இழக்கும்
ஆணுண்டு கறையானிலும்.

கறையான் ஒரு வேட்டையாடி.
புற்றை ஆக்கிரமித்த பாம்பின் ஞாபத்தை
வேட்டையாடிய கறையானை எனக்குத் தெரியும்.
அன்று முதல் பாதையை மறந்துவிட்டு
பிடாரன் கூடைக்குள் வசிக்கிறது
பாம்பு.

`
வெள்ளை எறும்பு` என்பது
கறையானின் மற்றொரு பண்புப் பெயர்.
கறையான் ஊர காலம் தேய்வதும் அதனாலே.

உண்மை என்னவென்றால்,
கறையான் ஒரு குளிர் ரத்தப் பிராணி.
றெக்கை முளைத்ததும்
தன்னை ஒரு வல்லூறென நினைத்துக்கொள்கிறது.
பறந்து பறந்து சாகிறது.

No comments: