27 September, 2024

வெப்சீரிஸ் ~ தலைமைச் செயலகம் ~ இயக்குநர் வசந்தபாலன் ~ பார்வை : கதிர்பாரதி (21மே2023 அன்று எழுதியது)

லைமைச் செயலகம்` - எழுத்தாளர் சுஜாதா, மனித மூளையின் தொழில்நுட்பம், வலிமை, விஸ்தாரம் மற்றும் பராக்கிரமம் பற்றியெல்லாம் ஜூ.வி-யில் எழுதி மிகவும் வெற்றியடைந்த கட்டுரைத் தொடர். நான் சொல்லப்போவது அதைப் பற்றியல்ல... இயக்குநர் ஜி.வசந்தபாலன் எழுதி இயக்கி, வெற்றியடைந்திருக்கும் அரசியல் சதுரங்க வெப்சீரிஸ், "தலைமைச் செயலகம்" பற்றி. ZEE5-ல் வெளியாகியிருக்கிறது.

வழக்கமாக... துப்பறிந்து சைக்கோ கொலையாளியைத் தொடர்ந்து ஓடும் போலீஸின் ஓட்டம் இதில் இல்லை. இரண்டு தாதா கூட்டங்கள் மோதிக்கொண்டு, திரையையே ரத்தச் சகதியாக்கும் பகை - வன்மம் கதை இல்லை. ரெட்டை அர்த்த வசனமோ, சோனாகாச்சி சீன்களோ இல்லை. குறிப்பாக நேரிடையான கெட்டவார்த்தை வசவுகள் இல்லை. ஓர் அரசியல்வாதிக் குடும்பத்துக்குள் நிகழ்ந்தேறும் குடும்ப அரசியல் எவ்வளவு குரூரமானது என்பதைச் சொல்கிறது; மேலாக, ஒரு துப்பாக்கிப் போராளி, தன் புத்திச்சாதுர்யத்தால் ஜனநாயகத்தை ஆயுதமாகக் கையிலேந்துவது எப்படி எனச் சொல்கிறது இயக்குநர் ஜி.வசந்தபாலனின் "தலைமைச் செயலகம்" வெப்சீரிஸ்.
பொதுவாகவே அரசியல் சார்ந்த புனைவுகள், வரலாற்றுப் பனுவல்கள், காட்சி ஊடக ஆக்கங்கள் என்னை உள்ளிழுத்துக்கொள்ளும். சுஜாதாவின் "பதவிக்காக" நாவல், தமிழ்மகனின் ``வெட்டுப்புலி`` நாவல், சசிதரூர் எழுதிய "இந்தியாவின் இருண்ட காலம்" புத்தகம், ராமச்சந்திரா குஹாவின் ``இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு (இரண்டு பாகங்கள்)``, ஜெயமோகனின் "வெள்ளையானை" நாவல், எஸ்.ராமகிருஷ்ணனின் "இடக்கை" நாவல்... (இவையெல்லாம் வரிசைகள் அல்ல சற்றென்று நினைவுக்கு வந்தவை) அப்படியான வரிசையில் இப்போது சேர்ந்திருக்கிறது வசந்த பாலனின் "தலைமைச் செயலகம்" வெப்சீரிஸ்.
இதற்கு முன்பு ஹாட்ஸ்டாரில் வெளிவந்த ``City of Dream`` வெப்சீரிஸ், சயீப் அலிகான் நடித்த ``தாண்டவ் (பெயர் சரியாக நினைவில்லை)``, ப்ரைமில் வெளியான ``The man in the high castle``... இன்னும் சில அரசியல் கதை வெப்சீரிஸ்களையும் ரசித்தது உண்டு.
பல வெப்சீரிஸ்கள் பெர்சனல் வியூ-க்கானதுதான். மிஞ்சிப்போனால், நண்பர்களோடு இணைந்து பார்க்கலாம். குடும்பத்தினரோடு பார்க்கமுடியும் என்பது மிகக் குறைவு. ஆனால், வசந்தபாலனின் "தலைமைச் செயலகம்" அரசியல் சதுரங்க வெப்சீரிஸைக் குடும்பத்தினரோடு, பெரிய ஹீரோக்கள் படங்களைப் பார்க்கும் கொண்டாட்ட மனநிலையோடு பார்க்க முடிகிறது.
கதை, இயக்கம், ஒளிப்பதிவு... இவற்றோடு சேர்ந்து என்னை மிகவும் கவர்ந்த இன்னொன்று, `வசனம்`. "நீதி என்பது என்ன? மக்கள் மீதான காதல்தான் நீதி" என்று ஓரிடத்தில் வசனம் வருகிறது. இன்னோரிடத்தில், "ஜனநாயகத்தின்
இயக்குநர் வசந்தபாலன்
விளைவுதான் ஊழல் என்பீர்கள். அதனால் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பீர்கள். உங்கள் நோக்கம் ஊழல் ஒழிப்பு அல்ல. ஜனநாயக ஒழிப்பின் மூலம் பாசிசத்துக்கு இட்டுச்செல்வது" என்கிற ரீதியில் ஒரு வசனம் வரும். "பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களும், அரசாங்கம் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட ஊழல்தான்" என்று ஒரு வசனம் வரும். அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சீயம்... போன்றவற்றைப் பெயரளவிலாவது உச்சரித்த தமிழ் ஜனரஞ்சக வெப்சீரிஸ் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ``மாநில அரசை நசுக்காத ஒன்றிய அரசு வேண்டும்`` எனவும் பேசுகிறது தலைமைச் செயலகம். "பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" போன்ற மக்கள் அரசியல் பேசும் புத்தகங்களை எல்லாம் திரையில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
வெக்கை நிலத்து மனிதர்களின் ஈரமான வாழ்வை திரையில் கிளாசிக்-கலாகச் சொல்லி ஜெயித்தவர் இயக்குநர் வசந்தபாலன். அதில் தேசிய விருது பெற்று கவனம் ஈர்த்தவரும்கூட. அரசியல் என்கிற சூடான களத்தில் குடும்ப உறவும் சமூக உறவும் எவ்வளவு பங்காற்றுகின்றன என்பதை "தலைமைச் செயலகம்" வெப்சீரிஸ் மூலம் சொல்லி கமர்சியலாகவும் வென்றிருக்கிறார்.
இரான் அதிபர் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த செய்தி வந்த நேரத்தில்தான், "தலைமைச் செயலகம்" சீரிஸின் க்ளைமாக்ஸ் எபிசோடு பார்த்தேன். இதிலும் அப்படி ஒரு விபத்து நடக்கிறது. இங்கே `ஹெலிகாப்டர் விபத்து`ம் ஒருவகை அரசியல்தானோ?
ஹெலிகாப்டர் விசிறியாக மனசுக்குள் சுழல்கிறது "தலைமைச் செயலகம்``

No comments: