20 September, 2024

விமர்சனம் ~ கவிஞர் சாய் மீரா ~ கவிஞர் கதிர்பாரதி அவர்களின் மெசியாவுக்கு_மூன்று_மச்சங்கள் கவிதைத்_தொகுப்பு ~

 இந்த வாரத்திற்கான கவிதை #நாளின்_பொம்மை

காற்று அடித்துக்கொணர்ந்த கிழிந்த நாட்காட்டித் தாள் போல
கறுத்துத் திரண்ட பாறைமீது மோதிச் சரிகிற அலை போல
எனக்குச் சம்பவித்திருக்கிற இந்நாளுக்கு
நேற்றைய இயலாமையின் கழிவிரக்கமும்
எதிர்க்கால அச்சமும் முகமாயிருந்தன.
வலது பாரிசத்தில் கிடத்தி ஆசுவாசப்படுத்தினேன் அந்நாளை.
நோயுற்ற குழந்தையின் கடைவாயில் மருந்து புகட்டும் சங்கின் வடிவில்
சொற்களை வடித்துக்கொண்டு பருக்கினேன் துளி தைரியத்தை.
வாலைக் குமரிகளின் யவ்வனம் கொப்பளிக்கும்
கூடுமிடங்களுக்குக் கூட்டிப்போய் கிளர்ச்சியூட்ட யத்தனித்தேன்.
புராதனமிகு கோயிலுக்குள் நடத்திச்சென்றபோது
அங்கிருந்து விடுபட மறுத்து எதெதையோ இட்டுக்கொண்டு
உதம்பியபடியிருந்த நாளின் மனம்,
மார்கழியின் கூதல்காற்று தீண்டிய சதைத் துண்டங்களாய்
நடுக்கமுறுவதை அவதானிக்க முடிந்தது.
துக்கத்தின்பால் தோய்ந்துகிடக்கும் துஷ்டிவீட்டைப் போல
இருளத் தொடங்கிய அந்நாளை,
கபிலன் யூ.கே.ஜி.யிடம் ஒப்படைத்துவிட்டு உறங்கிப்போனேன்.
அதிகாலை உறக்கம் விழிக்கையில்
நாளிலிருந்து என் சாயலில் ஒரு பொம்மையை உருவாக்கிவிட்டு
புன்னகையை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தான்.
மிக அழகாக ஒருநாளைப் பற்றிய தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர்.‌ ஒருநாளின் துவக்கத்தை இப்படியொரு கோணத்திலும் யோசிக்க முடியமா என என்னை ஒரு நொடி நினைக்க வைத்து விட்டார் தனது முதல் வரிகளிலேயே.
"காற்று அடித்துக்கொணர்ந்த கிழிந்த நாட்காட்டித் தாள் போல
கறுத்துத் திரண்ட பாறைமீது மோதிச் சரிகிற அலை போல
எனக்குச் சம்பவித்திருக்கிற இந்நாளுக்கு
நேற்றைய இயலாமையின் கழிவிரக்கமும்
எதிர்க்கால அச்சமும் முகமாயிருந்தன."
முடிந்து விட்ட ஒருநாளிற்குப் பின் நாட்காட்டியின் தேதி நிரம்பிய தாள் வெற்றுத்தாளாக மாற்றமடைந்து விடுகிறது. அதுபோலத்தான் கடந்து போன ஒருநாளினை கருதுகிறார் கவிஞர். மேலும் அன்றைய நாளின் பிணக்குகளை கறுத்துத் திரண்ட பாறையாகவும் தன்னை ஓயாது முயன்று எழுந்து வீறுகொண்டு போராடி விழும் கடல் அலையாகவும் உருவங் கொடுத்தபின் வெளிப்படையாய் கூறுகிறார்... நேற்றைய இயலாமை எதிர்கால அச்சம் நிறைந்த தனது அன்றைய நாளை.
"வலது பாரிசத்தில் கிடத்தி ஆசுவாசப்படுத்தினேன் அந்நாளை.
நோயுற்ற குழந்தையின் கடைவாயில் மருந்து புகட்டும் சங்கின் வடிவில்
சொற்களை வடித்துக்கொண்டு பருக்கினேன் துளி தைரியத்தை."
இவ்விடத்தில் கவிஞர் ஒரு தாயாக மாறி ஒருநாளினை ஆசுவாசப்படுத்த தனது வலப்பக்க மடியில் கிடத்தி விட்டுப் பின் தானே அந்நாளையில் அழுது தவித்த நோயுற்ற குழந்தையாகவும் மாறி மருந்தாக துளி தைரியத்தை தனக்குத் தானே தாயாகிப் புகட்டுவதாக எழுதியிருப்பது நிதர்சனமான ஒரு மனிதனின் செயற்பாட்டை கவிமொழியில் அவர் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பதன் முழுச் சான்று.
தலைக் கோதி நிலையறிந்து நிம்மதிக்கு தன் மடி தந்து நோயுற்ற போது வாஞ்சையாய் மொழி தருவதெல்லாம் எல்லோர்க்கும் வாய்க்காத வாழ்வே. அதை ஏக்கமாக நினைக்காது தன்னம்பிக்கையோடு தன் கைகளே தனக்குதவி என தைரிய மருந்தை வாசகர்களுக்கும் புகட்டுகிறார்.
"வாலைக் குமரிகளின் யவ்வனம் கொப்பளிக்கும்
கூடுமிடங்களுக்குக் கூட்டிப்போய் கிளர்ச்சியூட்ட யத்தனித்தேன்.
புராதனமிகு கோயிலுக்குள் நடத்திச்சென்றபோது
அங்கிருந்து விடுபட மறுத்து எதெதையோ இட்டுக்கொண்டு
உதம்பியபடியிருந்த நாளின் மனம்"
குழந்தைமைக்கு தைரிய மருந்து கொடுத்து வளர்த்தபின் வாலிப வயதான ஒருவராக தன் மரத்தையே பாவித்துக் கொண்டு அந்த மனத்தை ஆற்றுப்படுத்த குமரிகளின் குழைவுப் பருவத்தைக் காட்ட முற்பட, மனம் அதை ஒதுக்கி கோவில்களை அதுவும் புராதானமிகு கோயில்களுக்குள் போகிறது. ஆனாலும் எதையெதையோ நினைவுக் கூர்ந்தபடி தனித்து அலைகிறதாம் அந்நாளின் மனம். அதனை "உதப்பியபடி" என்ற பதத்தின் மூலம் மிக அற்புதமாகவும் தெளிவாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அப்படியான மனமானது நிகழ்வுகளின் நினைவுகளில் சிக்கி நடுக்கமுறுவதை கவிஞர் இப்படியாக எழுதியுள்ளார்.
"மார்கழியின் கூதல்காற்று தீண்டிய சதைத் துண்டங்களாய்
நடுக்கமுறுவதை அவதானிக்க முடிந்தது."
மிகக் கூர்மையான வார்த்தைகள் இவை.
"துக்கத்தின்பால் தோய்ந்துகிடக்கும் துஷ்டிவீட்டைப் போல
இருளத் தொடங்கிய அந்நாளை,
கபிலன் யூ.கே.ஜி.யிடம் ஒப்படைத்துவிட்டு உறங்கிப்போனேன்."
ஒரு கசப்பான நாளோடு போராடிய மனமானது அதே கலக்கத்தோடு உறங்கிப் போதலைவிட உயிர் குடிக்கிற மெது விஷம் (Slow Poison) வேறேதுமில்லை. அதன் பொருட்டு கவிஞர் தன் துக்கம் தோய்ந்து கிடக்கிற துஷ்டியின் வீட்டிற்கு ஒப்பான தன் மனத்தை இலகுவாக்க ஒரு சிறுவனிடம் ஒப்புவித்து விட்டு உறங்கச் செல்கிறார்.
ஆக இருளடைந்த ஒரு மனம் வாலைக்குமரிகளிடம் வாஞ்சையுறவில்லை, தெய்வத்திடம் ஒன்றிடவில்லை. மேலும் மேலும் உதப்பிய துக்கத்தின் ஆவேசங் குறைக்க ஐந்து வயது சிறுவனிடத்தில் சரணடைகிறது‌. இதன் நிதர்சனம் எத்தனை புனிதமானது. என்னளவில் இச்சூழலை அப்படியே என்னால் உள்வாங்கி உணரமுடிகிறது. சில நொடி நானும் கபிலன் யூகேஜியின் முகத்தினை மனத்துள் காண்கிறேன்.
"அதிகாலை உறக்கம் விழிக்கையில்
நாளிலிருந்து என் சாயலில் ஒரு பொம்மையை உருவாக்கிவிட்டு
புன்னகையை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தான்."
கபிலனிடம் சரணடைந்த மனம் நிம்மதியாக உறங்கியது என்பது அதிகாலையிலேயே விழித்ததில் தெளிவாகிறது. கலங்கிய மனம் நுணுங்கிச் சிதறுகிற நள்ளிரவின்பின் அதிகாலை உறக்கங் கலைவுற வழியேது?.
நிம்மதியாக உறங்கி அதிகாலை விழித்த கவிஞர், கபிலனின் கைகளின் தன் நாளின் சாயலில் ஒரு பொம்மையை காண்கிறார். இவ்விடத்தில் நான் இருவிதமாக அந்த பொம்மையை பார்க்கிறேன்.
ஒன்று குழந்தைகளுக்கு பிரியப்பட்ட பொம்மைகள்தான் முதலில் சிதைவுறுகின்றன. ஆக என்னை முன்னிறுத்தி பொம்மையை பார்க்கும் பொழுது சிதைவுற்ற என் கழிந்த நாளின் சாயலில் சிறுவனால் விளையாடி சிதைவுற்ற பொம்மையை அணைத்தபடி அவன் உறங்கிப் போயிருக்கிறான் என்பதாகவும், அதே மற்றொரு பார்வையில் இன்றைய நாளின் துவக்கத்திற்கான தெளிவான அழகான ஒரு பொம்மையை அணைத்தபடி அவன் உறங்குகிறான் என்பதாகவும் பார்க்கிறேன்.
அற்புதமான சொற்களால் நுணுக்கமாக ஒரு அணிகலனை செதுக்குவது போல் உணர்வுகளை பொருத்தமான சொற்களால் செதுக்கி எனது மனதிலும் நீங்காமல் கபிலனை இருத்தி விட்டார் கவிஞர்.
பேரன்பும் பிரியங்களும் வாழ்த்துக்களும் கவிஞர் கதிர்பாரதி அவர்களுக்கு... அற்புதமானதொரு படைப்பினை வழங்கியமைக்காக.

No comments: