27 February, 2012

வேம்பு

இரு கார்காலத்துக்கு முன்பாக
தோட்டத்தில் ஊன்றிய வேம்பு
செழித்து வளரும் இந்தக் கோடையில்
நேற்றுக்கும் இன்றுக்குமாக
அலைந்துகொண்டிருக்கின்றன பிஞ்சுக்கிளைகள்
இன்றைத் துளைத்துக்கொண்டு
நாளைக்குள் ஊடுருவும் சல்லிவேரொன்றில்
அவள் பிரியத்தைச் சாய்க்கிறாள்.
ஏறுவெய்யில் நிலம் சலிக்கும் ஒரு முன்மாலையில்
பொன்மூக்குத்தி பூக்களால் சிரிக்கும்
வேம்பின் புண்ணியத்தில்
அத்தனை கசப்பாய் இல்லை
இந்தக் கோடை

23 February, 2012

லேகியம்

கிருஷ்ணாபுரத்து ரதியின்
திண்முலை குவிமையத்தில்
மூக்குரசி நைச்சியம் செய்கிறது
கரும்புக்காட்டிலிருந்து மன்மதன்
தூதனுப்பிய சிட்டொன்று.
புரிந்துகொண்டு
அபிநயிக்கும் பாவனையில்
மார்க்கச்சையை நெகிழவிடுகிற
ரதியிடம் பெற்றுக்கொள்ளுங்கள்
சிட்டுக்குருவி லேகியம்

15 February, 2012

ரயில்



ஒரு நாள் அந்த ரயிலில் என் காதலை அனுப்பி வைத்தேன்
தளும்பிச் சிரித்தபடி ஊர்ந்துபோனது.
பிரிதொரு நாளில் புன்னகையைச் சுமந்துபோன ரயிலுக்கு
எல்லா நிலையங்களும் பச்சைக்கொடியோடு தாழ்ந்து பணிந்தன.
கையசைக்கும் சிறுமலர்கள் பயணிக்கும் பெட்டிக்கு
உற்சாகத்தைத் தெரிவித்துவிட்டு
வீடு திரும்பிய கணத்தில் புல்லரித்துப் பூத்திருந்த
செடியிலிருந்து ஒரு பூவைப் பறித்து
தனக்குச் சூடிக்கொண்டது அந்நாள்.
பார்வைகளும் பதட்டங்களும் பயணமான அன்று
ஒவ்வொரு நிலையத்திலும் எதிர்படும் ரயில்களுக்குக் காத்திருந்து
வழிவிட்டுப் புழுங்கவேண்டி இருந்தது.
கணநேரத்தில் தவறவிட்ட ஒரு தினத்தில் 
ரயிலைத் துரத்துக்கொண்டோடும்படி
கோபத்தையும் இயலாமையையும் ஏவிவிட்டிருந்தபோதுதான்
விபத்தில் சிக்கி மரணித்தது.
என்னைக் கடந்துபோகிறவர்கள் பெருமூச்சைச் சொரிந்தபடி
குழந்தைக்குக் கிசுகிசுக்கிறார்கள்
இவன்தான் ரயிலைக் கொன்றவன்

11 February, 2012

அப்பா

துறுதுறுவென நடுநிசிவரைக்கும்
தன் விளையாட்டை
நீட்டித்துக்கொண்டிருக்கும் மகனை
தூங்கலைன்னா டைனோசர் வந்து
தலையைக் கடுச்சுடும் கண்ணா
தூங்கு தூங்கு என
வாயைப் பிளந்து பிளந்து
மகனின் தலையைக் கடிப்பதுபோல
பாவனைக் காட்டுகிற அப்பா
ஒரு கணத்தின் முடிவில்
தூக்கத்தில் ஆழ்கிற மகனுக்கு
டைனோசராகிப் போகிறார்