29 March, 2011

1

முன்மாலைக்கும்

பின்மாலைக்கும் இடையே

மிதவேகத்தில் செல்கிற ரயில்

ஒரு புள்ளியாகி மறைகிறது அந்திச் சிவப்பில்

பிள்ளைக்குப் பாலூட்டும் ஏக்கத்தில்

பயணிக்கிற

அவளின் முலைகளை

தாலாட்டி தாலாட்டி


2

நிச்சலனமுற்று

இருந்த தெப்பக்குளத்தில்

கொத்துக்கொத்தாய்

பார்வைகளை அள்ளி

வீசிவிட்டு வந்துவிட்டாள்

சலனமுற்ற மீன்களில் சில

நீந்திக்கொண்டிருக்கின்றன

அவனது ஈசான மூலையில்


3

இரவு தளும்பிக்கொண்டு

இருக்கிற குளத்தில்

நெளிந்துகொண்டு

இருக்கிற பௌர்ணமியை

கொத்தும் கொக்கு

றெக்கை விரிக்க

நிலவு பறக்கிறது

நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011

19 March, 2011

ஒலி விளையாட்டு

நாற்புறமும் எழும்பி நிற்கும் சுவற்றின்
சிறு வாயில் வழி உள்நுழைந்து
ஒலியை விசிறி எறிவதும்
அது எதிரொலித்துத் திரும்புகையில்
குதூகலிப்பதுமாய் விளையாடுகிறான் திலீபன்

அண்ணனின் விடுமுறை கழிக்க
அண்ணனோடு திலீபன் ஊருக்குச்
சென்றிருக்கையில்
அவனின் ஒலிவிளையாட்டை
அப்பா ஆட ஆரம்பித்திருந்தார்

இருபத்தெட்டு வயதான ஒலி
எதிரொலித்துத் திரும்புகையில்
ஒண்ணே முக்கால் வயதாயிருந்தது

நன்றி: புன்னகை -காலாண்டிதழ்



10 March, 2011

இருள்தான் எரிந்துகொண்டிருந்தது

ஒளி வருவதற்கு முன்பிருந்தே அந்த அறைக்குள்
இருள்தான் எரிந்துகொண்டிருந்தது
ஒளி வருவது புலனானதே இருளால்தான்

ஒளி வேட்டை மிருகத்தின் சாயலில்
இருளைக் கடித்துத் தின்னத் தொடங்கியபோது
கருப்பாய்ச் சொட்டிக்கொண்டிருக்கும்
இருளின் ரத்தத்தை உறிஞ்சுகிறது அதன் திரி

இருளிலிருந்து உயிர்கொண்ட ஒளியிலிருந்து
தன் புன்னைகையைச் சரிசெய்கிறான் சிவன்

பின்பு சிவனே இருளாகி அவனே ஒளியாகிறான்
அவனொளியில் ஒளிர்கிறது உலகம்

இருளே ஒளியாகி ஒளியே சிவனாகி
சிவனே உலகாகி உலகே இருளாலானால்
இருளே சிவனல்லவா

எல்லாம் இருள் மயம்

04 March, 2011

லாலிபாப் சாபம்

மம்மி... டாடி...
ரெண்டு பேரும் சண்டை போட்டீங்க
லாலிபாப்பை வாயில திணிச்சுடுவேன்
என்னைத் திட்டுனீங்க
உங்களை பஃப்ஃபல்லோவா மாத்திடுவேன்

மூனரை வயதுக்கு வளர்ந்துவிட்ட
கபிலனின் கடும் எச்சரிக்கையைப்
பொருட்படுத்தாததால்
இப்போது இரண்டு பஃப்ஃபலோக்கள்
ஒரு லாலிபாப்பைச் சுவைக்கும்
சாபத்தில் இருக்கின்றன