20 September, 2024

கவிதை ~ தலைக்கீழ் மசைக் கோழி ~ கதிர்பாரதி

ஆனால் இட்ட முட்டைகள் அத்தனையும் கூமுட்டைகளாகிவிட்டன. கருவிலேயே அழுகிவிட்ட முடை நாற்றம் வேறு. எடுத்து முச்சந்தியில் வீசியெறிந்து காறி உமிழ்ந்துவிட்டு வந்தாள் அம்மா ச்சீ தூத்தேறி மூதேவி.

கூமுட்டைக் கோழிக்கு அவையெல்லாம் தெரியாது.
வெண்கற்களை முட்டைகளாக்கி
அடிவயிற்றுச்சூட்டில் சிறகணைத்துக் கிடக்கிறது
மசைக் கோழி.
தலைக்கேறிய மசை வடியவேண்டி
வேலிக்கருவை முள்கிளையில்
கோழியைத் தலைக்கீழாய்க் கட்டித் தொங்கவிட்டாள்
பிள்ளைபெற்ற மகராசி.
கோழியின் பிளவுண்ட அன்னத்திலிருந்து
அன்னம் முடியும் தொண்டையிலிருந்து
தொண்டையாய்த் தவிதவிக்கும் அடிவயிற்றிலிருந்து
அடைகாக்கும் தாபம் வழிகிறது
சொட்டுச்சொட்டு மசையாய்.
தலைக்கீழின் அடியில் உட்கார்ந்து பார்க்கிறேன்
மசையும் என்னைப் பார்க்கிறது.
``தாயே
உன் கூமுட்டைக் குஞ்சு நான்தான்.``

No comments: