15 June, 2010

பக்கத்துப் பக்கத்து வீடு

ஆதியில் எனக்கும் சாத்தானுக்கும்
பக்கத்துப் பக்கத்து வீடு
கொஞ்சமாய் நிரோத்துப் பொட்டலங்களையும்
மிதக்கும்படிக்காய் மதுப்புட்டிகளையும்
கைமாத்தாய் வாங்கிக்கொள்ளும் அளவுக்கு
அவன் எனக்குப் பரிச்சயம்
எப்போது கேட்டினும் இன்முகத்தோடு
அவன் பிரயோகிக்கும் புன்னகை
அந்தி சூரியனாய் மயக்கம் நல்கும்
முலைகனத்த மகளிரோடு
முப்போதும் மோகித்துக்கிடக்கும் அவனுக்கு
பிருஷ்டம் பெருத்த பெண்களோடும்
தொடுப்பு இருந்தது
காமப்பேராறு கரையறுக்கையில்
கரமதுனமும் உண்டு
லாகிரி வஸ்துகள் நீதிபரிபாலனம்
செய்யும் அவனது கொலுமண்டபத்து
அந்தப்புரத்துக்கு தேவகன்னியின் புனைவோடு
சிலபேர் வந்து திருப்தியோடு போவதுண்டு
அவன் அருகாமையின் ஷணங்கள்
பரவசங்களில் தோய்த்து எடுக்கப்பட்டதாயும்
புலன்களை நீவிவிடுவதாயும் தோற்றம் கொள்ளும்
யுவதிகளின் வாசனைகளால் நெய்யப்பட்டிருக்கும்
அவனது இல்லத்திலிருந்து ஊர்ந்துவரும்
இசையின் விச்ராந்தியில் கம்மென்று மணம்
பொறாமையுற்ற காலம்
பொய்யாய் வீசிப்போன வரத்தின்
சாயல் புனைந்த சாபமொன்றில்
வீழ்ச்சியுற்ற சாத்தான்
தீவாந்திரத் தனிமைக்குத் தள்ளப்பட்டு
கடவுளானான்
நான் மனிதனானேன்
நன்றி : சுகன் (ஜூன் 2010)

08 June, 2010

சபிக்கிறது தாபம்

விசிறி எறியப்பட்ட
விலக்கப்பட்ட கனியின் விதையிலிருந்து
வேர்கொழித்துச் செழித்தெழுந்த
ஏதேனூடே வேட்கைகொண்டு போகிற
ஏவாளை பின்தொடர்கிறது
ஸர்ப்பம் வடிவம் வாங்கிய பாவம்

துஷ்டி வீட்டுக்காரனின் தொண்டையில்
திரண்டுருளும் துக்கத்தையொத்த
அவளின் பருவக்கனவுகளை ஊடறுத்துக்
கொட்டுகிறது நிச்சலனமுற்ற அருவி

காய்ந்துதிரும் சருகுகளைப் பற்றி
கீழ்விழும் ஏவாளின் சொற்கள்
பெருந்தனிமையின் கால்களில் மிதிபட
தரையை மெழுகித் திரும்புகிறது
சொற்களின் ரத்தம்

அந்தரத்தில் அலையும் பறவைகளின்
சிறகில் அறைவாங்கி பள்ளத்தாக்கில்
வீழ்ந்துபடுகிறது ஏக்கத்தின் கேவல்

முன்பொருகாலத்தில் ஆதாமை
புசித்த கனிக்கென
பொலிபோட்டுவிட்டார் பிதாவின் பிதா
ஆப்பிள்மரத்துக்கு அடியுரமாய்

தன்னைத்தானே புணரும் ஏவாளின் தாபம்
சபிக்கிறது கடவுளை
'ஏவாளாகக் கடவாய் சாத்தானே'

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

05 June, 2010

சத்யாகாலம்

புதுத்தாலி உடுத்தியிருக்கும் சத்யா
சவூதியிலிருக்கும் கணவனின் நினைப்பில்
தலைக்கு ஊற்றும் நடுநிசிகளால்
நடுக்கமுறுகின்றன இரவுகள்

நன்றி: புன்னகை காலாண்டுதழ்