01 April, 2016

#ஆனந்தியின்பொருட்டுதாழப்பறக்கும்தட்டான்கள் கவிதைத் தொகுப்புக்கு லிபி ஆரண்யாவின் முன்னுரை

மேவும் அன்பில் அழியட்டும் நிலம்

லிபி ஆரண்யா

பிரியத்துக்குரிய ஒரு பரிசுப்பொருளின் மீது நசநசவெனக் கூடுதலாகச் சுற்றப்பட்ட பளபளப்பான காகிதங்கள்போல, நாம் அன்பு செய்யும் இணை யோடு தனித்திருக்க வாய்க்கும் அரிதான கணங்களில் வந்து நிற்கும் ஒரு ஜந்துபோல, விருப்பத்துக்குரிய ஒரு திரைப்படத்துக்காக திரையரங்க இருக்கை யில் இருக்கும்போது காத்திருக்கும் கணத்தில் ’எவ்வளவு முயற்சி பண்ணியும் முகேஷைக் காப்பாத்த முடியல’ எனக் கவலைப்படும் குரலைப்போல... இப்படிப் பல போலவற்றின் மீது கவிழும் அசுவாரஸ்யத்தின் நிழல்தான் கவிதைத் தொகுப்  புகளின் முன்னுரை மீதும் படிகிறதோ எனத் தோன்றுகிறது. வாசிப்பவர்க ளுக்கும் கவிதைக்கும் நடுவே நின்று பேசுவது அத்தனை சரியா என்றும் தெரிய வில்லை. இந்த இடையூறை தனக்குச் செய்யும்படி நண்பன் கதிர்பாரதி கேட்கும்போது மறுக்க முடியவில்லை.
தனது முதல் தொகுப்பின் வழி தமிழ்க் கவிதைப் பரப்பில் பிரசன்னமான கதிர்பாரதியின் கவிதைகள், பரவலான வாசிப்பையும் கவனத்தையும் பெற்றன. ஆயிரமாயிரம் இலைகள் அசையும் தமிழ்க் கவிதையின் ஆதி விருட்சத்தில் மற்றுமொரு துளிர்ப்பு. ’மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ என்கிற அந்தத் தொகுப்பு பல விருதுகளையும் அங்கீகாரத்தையும் அவருக்குப் பெற்றுத்தந்தது.
இப்போது தனது இரண்டாவது தொகுப்போடு வந்து நிற்கிறார் கதிர்பாரதி. முதல் தொகுப்புக்கும் இதற்கும் உள்ள ஒப்புமை குறித்தோ விலகல் பற்றியோ, வாசிக்கும் ஒருவர் சில வாக்கியங்களை உருவாக்கக்கூடும். நான் கவனப்படுத்த விரும்புவது அதையல்ல. சின்னஞ்சிறு வேர்களால் சின்னஞ்சிறு நிலத்துண்டைப் பற்றியிருந்த நாற்றாங்கால் பயிர் முதல் தொகுப்பு எனில், நிலத்தை இறுகப் பற்றிக்கொள்ள விழையும் விருட்சத்தின் வேர்தான் இந்தத் தொகுப்பு.
வேர்முண்டுகளில் ஒட்டியிருக்கும் ஈர மண்ணின் மணம்தான் இந்தக் கவிதைக ளுக்கும்.
 சமீபத்தில் ’நவீன தமிழ்க் கவிதைகளில் நிலவெளி’ என்கிற தலைப்பில் எழுதவேண்டியிருந்தது. அதற்காக என்னிடமிருந்த எல்லாக் கவிதைத் தொகுப்பு களையும் தரையில் பச்சைக்கடலைபோல குவித்து அதன் முன்பு சம்மணமிட்டு அமர்ந்துகொண்டேன். ஒவ்வொரு கடலையாக எடுத்து அதில் மண் ஒட்டியி ருக்கும் கடலைகளை இடதுப்புறமும், மண் ஒட்டாத கடலைகளை வலதுப் புறமும் ஒதுக்கிக்கொண்டிருந்தேன். வலதுப்புறக் குவியல் உயர்ந்தும் இடதுப்புறக் குவியல் தாழ்ந்தும் இருந்தது. சமீபத்திய தொகுப்புகள் பலவும் வலதுப்புறம் வந்து விழுந்தபடியே இருந்தன. இடதுப்புறம் விழுந்தவற்றிலும் கவிதைக்குள் செயல்படும் நிலம் குறித்த பிரக்ஞை வேறுவேறாக இருந்தது. பெண்களின் கவிதைகளில், தலித் அரசியல் கவிதைகளில்... நிலம் என்னவாக இருக்கிறது என்பதெல்லாம் நுட்பமான அரசியல் திறப்புகளைக்கொண்ட உரையாடல் வெளியாகவே எனக்குப் பட்டது.
இந்த நேரத்தில்தான் கதிர்பாரதி இந்தத் தொகுப்பை எனக்கு வாசிக்கத் தருகிறார். எனக்கு மகிழ்ச்சி. மொத்தத் தொகுப்பும் நிலத்தில் வேரூன்றிக் கிளைத்து நிற்கிறது. வாழ்வின் நினைவாகவும் நினைவின் வாழ்வாகவும் இந்தக் கவிதைகள் நிலத்தையே முன்வைக்கின்றன.
  கழிந்த மாதத்தின் ஒர் இரவில் குடியின் சன்னதத்தில் என் கைகளைப் பற்றிக்கொண்டார் ஒரு நண்பர். அவரை பல ஆண்டுகள் கழித்து அன்றுதான் பார்க்கிறேன். ’நமது சாலைகள் வளைகிற இடங்களிலெல்லாம் ஒரு காங்கிரஸ் நிலச்சுவான்தாரின் நிலம் இருக்கும்’ என நான் எப்போதோ அவரிடம் சொன்னதாகவும், அதை அவர் பல இடங்களில் சொல்லிவருவதாகவும் தனது நினைவைக் கிளர்த்தினார். நான் அவரது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டேன். ’நண்பா... நமது சந்திப்புகளின் இடையிலான இந்தக் காலத்தில் வளைவுகளைத் தட்டித்தட்டி நமது சாலைகளை நேர்செய்துவிட்டனர். நமது புதிய எஜமானர்களின் செங்கோல்போல அவை வளையாது போய்க்கொண்டி ருப்பதை நீ கவனிக்கவில்லையா? பன்னாட்டு எஜமானர்களுடன் அதானிகளும் அம்பானிகளும் உலாப்போகும் தேர்க்காலின் சக்கரம், வளைவுகளில் எதிர்ப்பட்ட பழைய நிலச்சுவான்தார்களின் புட்டத்தில் ஏறிப்போய்க்கொண்டி ருக்கும்போது செத்துப்போன ஒரு வாக்கியத்தை வைத்துக்கொண்டு நாம் திரிய முடியாது. தவிர, ’வளைவுகள் அழகு’ என்பதுகூட அரதப் பழசான ரசனை தானே’ எனச் சொன்னேன். ’ஒருவனது போதைக்கு எதிராக இயங்குபவனுக்கு நல்ல சாவு கிடைக்காது’ என்றான் உடனிருந்த இன்னொருவன். வாஸ்த வம்தான்.
  நிலம்தான் வாழ்வு; நிலம்தான் அடையாளம்; நிலம்தான் அதிகாரம்; நிலம்தான் போராட்டம்; நிலம்தான் யுத்தம்; நிலம்தான் இன விடுதலை; நிலம்தான் வரலாறு; நிலம்தான் சகலமும். நீங்கள் நம்பாவிட்டால் போங்கள். நமது எஜமானர்கள் இதைப் பரிபூரணமாக நம்புகிறார்கள். அதனால்தான் நமது நிலங்களிலிருந்து நம்மை முற்றாகத் துரத்தியடிக்க விரும்புகிறார்கள். அந்த வட்ட வடிவக் கட்டடத்தில் இருக்கும் அவர்களது வளர்ப்புப் பிராணிகளும் நம்மை விரட்டிப் பத்திவிட, சட்டபூர்வமான குரைப்பொலிக்கு முயன்று முயன்று சோர்கின்றன.
  இந்த நேரத்தில் நமது நிலம் குறித்து, நிலத்தின் மீதான நமது வாழ்வு குறித்து, அதன் விழுமியங்கள் குறித்து யாரேனும் பேசினால் அவரை அன்பு செய்யத் தான் வேண்டும். அந்த வகையில் கதிர்பாரதி அன்புக்குரியவராகிறார்.
 நிலத்தோடு தொடர்புள்ள வாழ்வின் சில அறங்கள், மனித இயல்புகள் நிலத்தோடு தொடர்பற்ற கார்ப்பரேட் வாழ்வில் சிதைந்துபோகும் துயரை மாநகரப் பூங்காவில் இறகுப்பந்து விளையாடும் இருவரை முன்வைத்துப் பேசுகி றார். தவிர, போட்டி நிறைந்த வாழ்வு என்ற கற்பிதத்தின் வழி நிகழ்த்தப்படும் குரூரம் ஒரு பனிச்சறுக்கு விளையாட்டின் பின்னணியில், ’பின்தங்கியவர்களின் உயரம்’ என்னும் கவிதையில் காட்சிப்படுத்தப்படுகிறது..      
...........................
திருப்பமொன்றில் கவனம் பிசகியவன்
               முழங்கால் முறிந்து வீழ்கிறான்
               அவன் தொண்டைக்குழிக்குள் உந்துக்குச்சை ஊன்றி
               முன்னேறுகிறான் பின்வருபவன்.

  ’என் நிலமும் சொற்களும் வேறுவேறல்ல’ என்று அறிவிக்கிற கதிர்பாரதியின் கவிதைகள் அதற்கு நியாயம் செய்கின்றன. நெற்பயிரின் பனிமொட்டுகளில் பின்னங்கால்களை ஊன்றும் வெட்டுக்கிளிகள் பறந்துலவும் நிலம் தனது என்கிறார்.
   தனது கரம்பை நிலத்தில் உதிர்ந்து விழுந்துவிட்ட தென்னங்குரும்பைகளைக் கடித்துச் சதிராடும் ஜோடி அணில்கள் குறித்த சித்திரம், மயக்கமுற்று நிலத்தின் மடியில் வீழ்ந்த தனது தாத்தாவுக்கு, டமக்கரான் போத்தலில் தண்ணீர் கொண்டுவந்த நினைவு என எல்லாம் நிலத்தின் பாடல்கள்தான்.
              …....................................
நடக்கும்போது பெயர்ந்துவிட்ட கால் பெருவிரல் நகத்தில்
சிக்கும் அருகம்புல் சொடுக்கிய வலி.
என்றொரு வரி போதும். இந்தக் கவிதைகளின் பாதங்கள் பாசாங்கற்று  நிலத்தை அளந்தவை என்பதை ருசுப்படுத்த.

உழுது பயிர்செய்திருக்கிறேன் உன் யவ்வனத்தை
நீர்க்கால் ஓரத்து மரங்களென
அது தளிர்க்கத் தொடங்கியிருக்கிறது
-நிலத்தை நேசிப்பவன் தனது காதலைக்கூட இப்படித்தான் சொல்லவேண்டியி ருக்கிறது.
  கதிர்பாரதியின் இரண்டு தொகுப்புகளின் கவிதைகளிலுமே விவிலிய மொழியின் கிருபை இறங்கியிருப்பதை அவதானிக்க முடியும்.  பழைய - புதிய ஏற்பாடுகளை நெக்குருகப் படித்ததால் கதிருக்கு வந்த ஞானம் இது எனச் சொன்னால் தெய்வக் குத்தமாகிவிடும். பைபிளை அணைத்தபடி தேவாலயம் செல்லும் தேவதைகளின் அருட்கொடையது. உண்மையில் அது ஒரு ஞாயிற்றுக்  கிழமைப் பின்தொடரலின் ரட்சிப்பு. இந்த விவிலிய மொழிமயக்கம் கொண்ட மொழிதல், கவிதைக்கு அணுக்கமாயிருக்கிறது.
  ’நான்’, ’எனது’ என சதா சுயம் துருத்திக்கொண்டிருக்கும்படியான கவிதைகள் இல்லாதது ஆறுதலானது. இதில் வரும் சுயமும்கூட தனது பொடனியில் தானே பல்பு மாட்டி ஒளிவட்டம் போடும் துர்செயலில் இறங்கவில்லை. பாசாங்குகள் தடுக்கிக் கிளை முறிந்து தனது சுயம் கிடக்கிறது என்பன போன்ற குற்ற உணர்வின் ஒப்புதல் வாக்கியங்களும், மாநகரச் சாலையைக் குறுக்குவாட்டில் கடக்கும் கர்ப்பிணிப் பூனை நான் என்பன போன்ற சுயக்கழிவிரக்க வாக்கியங் களும் வாசிப்பவனை நெருக்கமாக்குகின்றன.
 வேட்டி மட்டுமே உடுத்தும் மாமனுக்கு வாக்கப்பட்டு, மனசுக்குள் பெல்பாட்டம் பேண்ட்டை மடித்துவைத்திருக்கும் அத்தை போன்ற பெண் களும், கைப்பிரம்போடு அலையும் ஹெட்மிஸஸ்களைக் குரங்காக்கித் திரிய விடும் மன உலகம்கொண்ட குழந்தைகளும் கவிதைக்குள் இயல்பாக இருக்கி றார்கள்.
 தனது கண்ணில் கிடந்து உறுத்தும் தூசியில் பிரியத்துக்குரியவளது கெண்டைக்கால் முடியின் சாயலைப் பார்க்கிற மனம் எத்தனை காதலானது.

’என் எண்சாண் உடம்பு
உன் நினைவன்றி வேறென்ன’
எனக் காதலாகிக் கசிந்துருகும் கதிர்பாரதியின் கவிதைகளுக்கு, காதல் வேறு காமம் வேறு இல்லை. காமம் இல்லாத தூய காதல் என்பது போன்ற பம்மாத்து கள் இல்லாமல் மனத்தடையற்றுப் பேசுகின்றன இந்தக் கவிதைகள்.
..............................................................
சொத்தென்று தலையில் விழுகிற புளியம்பழத்துக்கு
உன் கீழுதட்டின் சுவை
ஆகவே
பழம் தின்று கை மீந்த புளியங்கோதுக்கு
உன் பெண்ணந்தரகத்துப்
பொன்னிற முடிகளின்
சுவை.

  சக மனிதர்களின் மீதான கரிசனமும் கவித்துவமும் கூடிவந்திருக்கும் கவிதை களைச் சொல்லவேண்டும். ஒரே மகனை விபத்துக்கு அள்ளிக்கொடுத்த துக்க வீட்டுக்கு மீண்டும் ஒருநாள் போகிறார்... துக்கம் வடிந்திராத அந்த வீட்டின் சித்திரங்களை யூகித்தபடி. கவிதை இப்படியாக முடிகிறது...
…....................................................
மீண்டும் போகிறேன்  
மரணத்தின்போது துளிர்த்திருந்த
அந்த வீட்டு மாமரத்தின் செந்தளிர்களைப்
பார்க்க வேண்டும் எனக்கு.

  மரண அஞ்சலி சுவரொட்டியில் கண்ணீர் சொட்டும் இரண்டு கண்களுக்கு மத்தியில் இருப்பவனது புன்னகையில் துக்கிக்கும் கவிதை அசலானது. ஆஸ்பெஸ்டாஸ் அம்பாள், அய்யனார் போன்ற சிறுதெய்வங்கள் பற்றிய கவிதைகளிலும், ரயில் என்பது ரயில் இல்லை, சிட்டுக் குருவி தண்டவாளத்தில் விழுந்துவிட்டது என்பன போன்ற கவிதைகளிலும் பாடுபொருள் விஸ்தீரணப் பிரயத்தனம் தொனிக்கிறது.

நிலமே
மதுவே
உனை ஒருவருக்கும் கொடேன்...
என்கிற குரல் நில அபகரிப்பு காலத்தில் ஒட்டுமொத்த உழவர்களின் கலகக் குரலாகிறது. மசோதா வழி நிலத்தைப் பறிப்பவர்களையும் மீத்தேன் வழி நிலத்தைக் கெடுப்பவர்களையும் ‘குள்ள நரி அழைக்கிறது வாரீர்’ என வஞ்சம் தீர்க்க அழைக்கிறது ஒரு கவிதை.
  காதலும் காமமும் மற்றமை மீதான கரிசனமும் பால்பிடித்த கதிராய் நிற்கும் நிலத்தின் பாடல்களே கதிர்பாரதியின் கவிதைகள் எனச் சொல்லலாம்.

நிலத்தின் பொருட்டில்லை
ஆனந்தியின் பொருட்டு நிலத்தின் மீது
தாழப் பறக்கின்றன தட்டான்கள்...
எதன் பொருட்டும் நிலத்தின் மேன்மையை விட்டுத்தராத கவிதை, ஆனந்தியின் பொருட்டு அதைச் செய்யத் துணிகிறது. ஆனந்தியின் பொருட்டு என்பதால் எனக்கும் புகார்கள் இல்லை. உங்களுக்கு?

மதுரை
29, அக்டோபர் 2015