25 February, 2023

கவிஞர் பா.ராஜா `உயர்திணைப் பறவை`க்கு எழுதிய கடிதம்...

இனிய நண்பர், திரு. கதிர்பாரதி, அவர்களுக்கு இதய வணக்கம். நலம், நலமறிய ஆவல்.

 நீங்கள் அன்புடன் அனுப்பி வைத்த உங்கள் கவிதைத்தொகுப்பை, அகச்சேரன் மூலம் பெற்றுக்கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. உயர்திணைப்பறவை என்ற அந்த கவிதை நூலைப்பற்றி உங்களோடு சில சொற்களை பகிர்ந்து கொள்வதிலும் மகிழ்கிறேன்.

 கதிர்பாரதி கவிதையின் முதல் வரி எழுதுகிறான், பிறகு அதனோடு என்னை ஒப்புக்கொடுப்பதைத்தவிர வேறு வழியில்லை என்கிறார் பாக்கியம் சங்கர்.

 சற்று அன்னாந்து…. என்றொரு கவிதை ( பக்கம் எண் :25)  அப்போது நான் பாலகன். தறித்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் என் தாய் வியர்வை காரணமாய் கூந்தலை அள்ளி இரண்டாய்ப்பிரித்து இரு கொண்டைகள் இட்டுக்கொண்டு வேலை செய்வார்கள். ஒருமுறை குடிகார அப்பா வீட்டிலில்லாதபோது கொடுத்த கடனை வசூலிக்க வந்த ஒருவன், தாயை வசை பாடுகிறான். என்னவென்றே புரிபடாத கெட்ட வார்த்தைகள். ரெண்டு இது தேவையா என்கிறான்.

  கவிதை

 தொண்டைக்குழிக்குள் கத்தி இறங்கியதுபோல்

இருந்தது அம்மா,  என்று முடிகிறது. அன்றைய தினம் என் தொண்டைக்குள்ளும் கத்திதான் இறங்கியது. ஆனால் தொண்டைக்குள் கத்தி இறங்குவது அதுதான் என்றும், தொண்டைக்குள் கத்தி இறங்கினால் அப்படித்தான் இருக்கும் என அப்போது தெரியவில்லை.

இதோ இந்த வரிகளை வாசித்தபோது, அன்று தொண்டைக்குள் குத்திய கத்தியிலிருந்து ரத்தம் கசிவதை உணர்ந்த போது, பாக்கியம் சங்கர் சொன்னதைப்போல, அதனோடு என்னை ஒப்புக்கொடுப்பதைத்தவிர எனக்கும் வேறு வழியில்லை.

 தாலாட்டு.  ( பக்கம் எண் :210)

 சிறந்த கவிதை. குறிப்பிட்ட ஒரு நாளை கவிதைக்குள் கொண்டு வருவதும், இறுதியில் காலால் தாலாட்டி அந்த நாளைத்தூங்க வைப்பதுமாய் அருமையாய் இருக்கிறது கவிதை.

 அவன் கால்தான்

அவனைத்தூங்க வைத்தது.

 என்று எழுதியுள்ளீர். நான் எனக்களிக்கப்பட்ட வாசகச்சுதந்திரத்தோடு, அவன் கால்தான் அந்த நாளை தூங்க வைத்தது, என்று வாசித்துப்பார்த்தேன். இன்னும் சிறப்பாக இருந்தது.

 நெற்றி, கன்னம் என்று புறங்கையால் தொட்டுப்பார்த்து ஜொரமடிக்குது டாக்டரிடம் போ, என்று சொல்வதற்கும் ஆளில்லாது தன்னந்தனிமையில் இருப்பவர்கள், கால் மீது கால் போடுப்படுக்கும்போது அதுதான் ஜொரமடிக்குது டாக்டரிடம் போ எனவும் சொல்லக்கூடும்.

 இந்த கவிதையைப்படிக்கும்போது, சு. வெங்குட்டுவன் அவர்கள் எழுதிய ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது. இசையோடு வாழ்பவன், என்ற தொகுப்பில் இருக்கும் கவிதையது

 போர்வைக்குச்சிக்காத வலதுகாலின் பெருவிரல்மேல்

கவிழ்ந்திருக்கிறது வானம்

அடி நின்று அண்ணாந்து நோக்கின்

விரலுச்சி மேவியிருப்பது

ஆகாயமல்லாது வேறென்ன…. இப்படியாக தொடங்கும் அவரின் கவிதை நினைவிலாடியது.

 வசந்த முல்லை. ( பக்கம் எண் : 130)

 காலங்கள் கடந்தும் காற்றில் சாகாவரம் பெற்றுவிடும்படியான கலையுழைப்பைச்செலுத்தியவர்களை மெச்சும் வகையில் அமைந்திருக்கும் இக்கவிதை , பாடலை மாற்றிப்போட்டுக்கொண்டால் யாவருக்கும் பொதுவான கவிதையாய் உருவம் கொள்ளும். எனக்கு மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன…. போல் வேறு சிலருக்கு, வேறு சில பாடல்கள்ஆனால் கவிதை உணர்த்துவது காதுடையவன் காணக்கடவன் என்பதையே.

 இடமும் ஊரும். கவிதை…(பக்கம் எண் :164)

மிகச்சிறந்த ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியுள்ளது. இந்த கவிதையில் மட்டும் என்றில்லாமல் மற்ற சில கவிதைகளிலும் சில வரிகளில் அல்லது கவிதையின் முடிவில் அந்த மாயாஜாலம் நிகழ்ந்திருக்கிறது.

 எனது தூரத்தை

அழைத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.

உனது அண்மையைக்

கூட்டிக்கொண்டு வாஎனும் போதும் சரி….

 

தலையில் விழுந்திருக்கும்

தூங்கமூஞ்சி இலைகளைத்தட்டிவிடுகிறோம்.

எவ்வளவு

பிரமாதமாக நடிக்கிறோம்எனும் போதும் சரி

 

சத்தியம் முன் போகிறது. வண்டி பின்போகிறது. எனும் போதும் சரி….

 

உன் ஒரு சுற்றில் 60, நிறுத்தங்கள்

நன்றி விசுவாசமில்லாமல்

எல்லோரும் இறங்கிக்கொள்கிறார்கள் தெரியுமா. எனும் போதும் சரி

 

அங்குதான் இருக்கின்றன

நாம்

ஏற வேண்டிய உயரம்

மற்றும்

இறங்க வேண்டிய உயரம். எனும் போதும் சரி….

 

திறக்கமாட்டாங்களா? என்று கேட்டான் கபிலன்.

அதற்குத்தான்

இளையராஜா இசையமைத்துக்கொண்டிருக்கிறார். எனும் போதும் சரி…..

மாயாஜால விளக்கொளி சட்டென்று ஒளிர்ந்து மறைந்து, அந்த கவிதையை கவனிக்கவும், கவனித்து ரசிக்கவும் வைத்திருக்கின்றன.

நிஜத்தில் மாயாஜாலத்தின் முறைமைகளை, அதன் சூத்திரத்தை மறைப்பது மரபு. இங்கு கவிதைகளில் அந்த மாயாஜாலம் எப்படி நிகழ்ந்தன என்பதை அழகாய் விவரிப்பது போல, பாருங்கள் இங்க ஒரு முயல் இருக்கா.. அதை ஏற்கனவே இந்த தொப்பிக்குள்ள மறைச்சி வச்சிட்டேனாஇந்தத்துணிய அது மேல போத்துனேனாஎன்று விவரிப்பதைப்போல

எனக்கொரு அம்மா இருந்தாங்களாஅயிரை மீன் என்றால் அம்மாவுக்கு கொள்ளை பிரியமாஅப்பறம் ஒரு அன்பு  கண்ணீர் பளபளக்கும் கண்களை தூக்கிக்கொண்டு வாராதே, ன்னுச்சா….இன்று சிறிய குற்றம் செய்தேனா…..என்று விவரிக்கும் போது அது மேலும் கவிதைகளுக்கு மெருகூட்டி, அழகுபடுத்தியதோடு நில்லாது கவனிக்கவும் செய்திருக்கிறது.

இன்னும் நிறைய பிடித்த, பாதித்த, நெகிழ்த்திய, கவிதைகள் தொகுப்பு நெடுக நிறைய உள்ளது.பென்சில் கொண்டு டிக் அடித்து வைத்துள்ளேன்.

உதாரணமாக

 

1 ஒரே ஒரு ஹலோ..

2 அப்பா என்கிற் காலக்க்ல்.

3 அலைவுறுதல்.

4 நிம்மதியின் முக்காலி.

5 குற்றத்தின் பிறந்த நாள்.

6 தோன்றும் துணை.

7 வழி தவறிய சாவி.

8 பாண்டிச்சேரி தனிமை.

9 படிக்கட்டு ஜாக்கிரதை.

10 மேஜை நாற்காலி மற்றும் லாட்டி. 

11 ஒரு சுற்றுக்கு பிறகு வருபவன்.

12 ஆவரேஜ் சூசை.

13 நொடிப்பழங்கள்.

14 உயர்திணைப் பறவை.

15 ஒன்றுமில்லையின் குவியாடி.

16 சட்டை விதி.

17 துள்ளளவு….. என இன்னும் சொல்லிக்கொண்டேப்போகலாம்.

 

எண்களால் வரிசைப்படுத்திய கவிதைகளில் பல.கவிதைகள் சிறப்பாக உள்ளது.

 சிறப்பான தொகுப்பு. வாழ்த்துக்கள். இதிலுள்ள சில கவிதைகளை நாம் ஏன் எழுதவில்லை, என்ற பொறாமை ஏற்படுகிறது.

 

ரொம்ப ரொம்பப்பிடித்த ஒரு கவிதையோடு இந்த கடிதத்தை முடிக்கிறேன்.

 `மனை நீங்கி மனையாள் நீங்கி

சுகம் நீங்கி சுற்றம் நீக்கி

வெளிநாட்டுப் வேலைக்குப்போனவன்

விடுமுறைக்கு வீடு வந்ததும்

அழுகிறான்.

அவன் அழட்டும். அதற்காகத்தான்

இந்த விடுமுறை.`

 


             

மிக்க அன்புடன்….

_ பா. ராஜா_

4:2:2021

 

16 April, 2022

தேடலின் சிறகுகள் படபடக்கும் ‘உயர்திணைப் பறவை’: கதிர்பாரதியின் கவிதை நூல் விமர்சனம் – க.ரகுநாதன் நூல் விமர்சனம் | வாசகசாலை

 கவிதையின் குறியீடுகளும் படிமங்களும் சாத்தியமல்லாத உலகையும் காட்சிப்படுத்தி மனக்கண் முன் நிறுத்தும் வல்லமை கொண்டவை. நம்மை அயராது கேள்விகளின் முனையில், ஆழத்தின் ஆழத்தில், உச்சியின் உச்சத்தில், விரிவின் விரிவில்  வைத்திருக்க கவிதையின் ஒற்றைச் சொல்லால் முடியும். முதல் கவிதையில் தன் பயணத்தைத் துவங்கும் கவிஞர் கதிர் பாரதியின்  ‘உயர்திணைப் பறவை’ கடைசிப் பக்கம் முடிந்தும் இந்நூலில் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது.

கட்புலனாகாத ஒன்றின் தீவிரம் நிரம்பிய இக்கவிதைகள் கவிதைக்கான பாடுபொருள் அரசியல், அழகியல், காதல் தாண்டி பெருமளவில் பரந்து விரிந்து கிடக்கிறது என்பதன் உள்ளர்த்தம் பொதிந்தவை. ஒரு புள்ளி அதிகமானாலும் அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும் கணினிக் கட்டளை போல ஒரு சொல்லில் அடுத்த தளத்தினுள் தள்ளிவிட்டு அகம் நோக்கும் இக்கவிதைகள், கையில் வைத்துள்ள ஒரு படிகத்தின் வழியே நுழைந்து எண்ணற்ற வண்ணத் துகள்களாகச் சிதறி கட்டற்ற காட்சிப் படிமங்களாக ஒளிர்கின்றன.

வாழ்வென்பதன் பொருளை தத்துவத்தில் தேடலாம். தத்துவத்தையோ கவிதையில் தேடலாம். கவிதையோ வாழ்வாக தத்துவமாகப் பிரதிபலிக்கிறது. //ஒரு மாங்கனியைத் தீண்டும் போது ………. அதன் வழி பூமியின் ஆழத்தைத் தீண்டுகிறாய். பகலை இருளை அதன் மூலம் வெளியைத் தீண்டுகிறாய்….

// எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பதைப் போல எல்லா உயிரும் பொருளும்
பிரபஞ்சத்தின் மாறுபட்ட வடிவங்களே என்பதன் உட்பொருள் பொதிந்த கவிதை.

 //ஓர் அரிசிக்கும் ஒரு பருக்கைக்கும்
இடையிலான தூரம்//

காலத்துக்கும் அகாலத்துக்குமான அலைதலே அதை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றுகிறது எனில் வாழ்வுதான் என்ன? யார் இயக்குகிறார் இதை என கேள்வி எழுப்புகிறது “அலைவுறுதல்” கவிதை. பேரங்காடிகளில் கால்கடுக்க வேலை பார்க்கும் பெண்ணின் கால்வலி தீர்க்கும் ஒரு கணநேர நாற்காலி அமர்தல் தரும் நிம்மதி அவளின் பிரியமானவனின் தோள் புதைதலுக்குச் சமம் ஆக்குகிறது ஒரு கவிதை. எல்லோரும் ஏதோவொரு உயரத்தையே தேடிக் கொண்டிருக்கிறோம். பணம், பதவி, அதிகாரம், கடவுள் என.

 //உயரத்தில் இருப்பவற்றுக்கு
உயரத்தில் ஒரு வேலையும் இல்லை.//

எனில் உயரத்தில் உள்ள எவருக்கும், ஏன் கடவுளர்களுக்கும் வேலை இல்லைதானோ என சிந்திக்க வைக்கிறது ‘உயரத்தின் சரிதம்’. தேநீருக்கும் ஜென்னுக்கும் உள்ள தொடர்பைப் போல் ஒரு கோப்பைத் தேநீரில் ஏற்பட்ட ஏகாந்த அனுபவத்தைத் தேடுகிறது ‘அதிகாலையில் தித்தித்தல்’ கவிதை. “ஒரே ‘ஒரே’வுக்குள்” கவிதை பேசும் பொருள் எல்லாம் ஒன்றுக்குள், ஒன்றுக்குள்ளே எல்லாமும் என்பதே. எதுவுமற்றதுள் எல்லாமும் இருப்பது என்பது போலவும்தான். ஆசை அறுமின் என்கிறோம். ஆனால் பிணமும் ஆசையோடுதான் கங்கையில் மிதக்கிறது. பிணத்திற்கும் உண்டு கடைசி ஆசை என்கிறது ஒரு கவிதை. புள்ளி என்பதில் உருவானதே அனைத்தும். பிறகு அனைத்தும் புள்ளியில் இயைவதே காலவிதியா? காலம் 60 ‘நொடிப் பழங்கள்’ ஆன கவிதையாகிறது இவர் காலச் செடியில். ஞாபகம் ஒரு சர்வாதிகாரி. அது சொல்வதை நாம் கேட்டாக வேண்டும். ஒரு தம்பியின் ஞாபகம் இப்படியாக இருக்கிறது.

//மாடக் குழியில்
காற்றுக்கேற்ப அசைந்து மினுங்கும்
அகலின் கீற்றுக்கு,
கற்பூரமாகப் பற்றிக் கொண்டு
கரைந்த
அக்காவின் ஞாபகம்.//  



‘அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருக்கிறது’ என்ற கவிதையை வாசிக்கையில் நெஞ்சில் உருகிய உணர்ச்சிகள், பாலூட்டும் போது எப்படி நெஞ்சாங்கூட்டினுள் அவள் பொங்கித் ததும்பிருப்பாளோ அப்படி உணர வைக்கிறது. அம்மாவின் இருப்பை, அவள் வாழ்வை எல்லாமும் அவளே, அவளே எல்லாமும் என்பதாக 30 சிறுகவிதைகளாக ஒரு பெரும் வாழ்வைப் படைத்துள்ளார்.

 //சாரையும் நாகமும்
பிணையல் போடும் வைக்கோல்போர்த் தோட்ட
சீமைக்கருவேல மரத்தடியில்
அழுதபடி
ஓரிரவு முழுக்க
தனித்துப் படுத்திருந்தாயே
ஏன் அம்மா?
நீயும் பார்த்தாய் தானே நிலவே…//

பாம்பு நடமாடும் இடத்தில் விடிய விடிய ஏன் தனித்துப் படுத்தாள் அம்மா? என்ன கசப்பு அவள் மனதில்? தெரியவில்லை. இக்கவிதை பாரி மகளிரின் பாடல் நினைவூட்டும் துயரம் நிறைந்தது. உயிரை ஈந்த அன்னை வாழ்வின் இனிமையை மட்டுமல்ல கசப்பையும் சேர்த்தே அமுதவிஷமாக ஊட்டுகிறாள்.

//பால்குடி மறக்க
கற்றாழைச் சாற்றைக் காம்பில் இழுவி
முலை ஈந்த அம்மா
வாழ்வின் முதற்கசப்பையும்
உன் உடலில் இருந்தே
அருந்தப் பெற்றேன்
என்பதையாவது சொல்லிவிடுகிறேன்.//

அன்னையருக்கு வரும் துன்பங்களை செய்வதறியாது திகைத்து நின்று பார்க்கும் குழந்தைகள் ஏராளம். அதற்கான தீர்வு ஏற்படுத்தும் நிலை வாழ்வில் வரும்போது பிரச்சினைகள் மறைந்திருக்கும் அல்லது அன்னையரே…! முதலாக அமைந்த கடைசிக் கவிதையைப் படிக்கையில் கண்கள் துளிர்த்தால் அதில் நம் தாயின் பிம்பம் தெரிவதைக் காணலாம்.

 //கக்கடைசியில் ஏர்வாடி தர்காவில்
அம்மாவைச் சேர்த்தோம்.
சங்கிலி பிணைத்து
அழைத்துப் போகையில்
என் தலை தடவினாள்.
அப்போது கலைந்த முடியை
எத்துணை முறை சீவியும்
ஒழுங்குபடுத்த முடியவில்லை.//

கலைந்த வாழ்வை, நினைவை எந்த அலங்காரமும் நேர்த்தியாக்கி விடமுடியாது.  எத்தனை ஆசை, ஆணவம், அதிகாரம்…எல்லாமும் பிரபஞ்சத்தின் முன் தூசிதான்.

//பேசு தூசியே பேசு
உன் புஜபல பராக்கிரமத்தை//

//கங்கையில் பிணம் மிதக்கிறது.
பிணம்தான்
ஆசை ஆசையாக மிதக்கிறது
கங்கை ஒன்றும் சுமக்கவில்லை.//

இதைவிட வாழ்வைச் சிறப்பாகப் பார்க்க, உணர வைக்க கவிதையைத் தவிர  வேறு எதனால் முடியும்?          

அம்மாவைப் பிரிந்து பறந்தலைந்த பின் தாயிடம் சேரத் துடிக்கும் பறவையின் குரல், மனம் திருந்தி தன் தாயிடம் உருகும் ஊதாரி மைந்தனின் குரல் என்ற படிமம் ஒரு கணம் சிலிர்க்கச் செய்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகாரத்திற்கு பயன்படுகின்றன. அல்லது அதிகாரம் அறிவியலைக் கைக்கொள்கிறது. நவீன அறிவியல் தனிமனிதனின் சுதந்திரத்தைக் கைப்பற்றும் அதே வேளையில் அவனைக் கட்டுக்குள்ளும் வைத்திருக்கிறது என்பதற்கு “எல்லாம்வல்ல சிசிடிவி கேமிரா” கவிதையே சான்று.  இதில் வரும் கேமிரா சபலத்தை, பாவத்தை, ஆணவக் கொலையை, உணவு கொண்டு செல்பவனின் பசியை, மனைவியை சந்தேகிப்பவனின் மனதில் சுழலும் சிவப்பு விளக்கைக் கண்காணிக்கிறது.

//பூமி தன்னைத் தானே
சுற்றிக் கொண்டு
சிசிடிவி கேமிராவையும்
சுற்றி வருகிறது.//

ஆம். பல்லாயிரம் கண்கொண்ட டிஜிட்டல் மாரி அது. ஒரு குழந்தைக்கு இரு தாய்மார்கள் உரிமை கோரும் அக்பரின் தர்பார் கவிதை நோபல் பரிசு பெற்ற லூயி க்ளக் கவிதையை நினைவூட்டுகிறது. “ஆனந்தன் போல ஆனந்தன்” நகுலனின் ராமச்சந்திரன் கவிதையின் கண்ணாடி பிம்பம். ‘கிருஷ்ண நிழல்’ தரும் உபதேசம் இயற்கையின் பொருட்டு மலர்ந்த கவிதை. ஞானத்தின் வாசலை நமக்கு அறிமுகம் செய்கிறது “ஆமை+நத்தை=ஜென்” கவிதை. ஏறும் உயரம் மட்டுமல்ல இறங்கும் உயரமும் ஞானத்திற்கு இட்டுச் செல்லும்தான். //ஒன்பது துவாரங்கள் ஒன்றிலும் வடியாது ஒன்பதையும் தாண்டி நிற்கிறது ஒன்று// கூழாங்கல்லுக்குள் இருக்கும் அமைதி ஒரு பாறைக்குள்ளும் அதன் வழியே வெளியேறும் புத்தனுக்குள்ளும் தெரிகிறது எனில் அமைதியாய் இருப்பனவற்றின் அனைத்துள்ளும் நிறைந்திருப்பது புத்தனின் புன்முறுவல்தானா என வியப்படையச் செய்யும் கவிதையின் தொடர்ச்சியாக, தனித்து வந்துவிட்ட இறகு ஒன்றின் நிம்மதியில், புத்தனின் அமைதியையும் நாம் உணரலாம்.




 “தனிச்சுற்றுக்கு” கவிதை ஏற்படுத்துவது மெய்த்தேடலின் ஒரு சிறு துகள். ஒரு மலரை எல்லோரும் கைகளில் ஏந்தி உள்ளோம். எத்தனை முறை மலர்ந்தோம்? எத்தனை முறை உணர்ந்தோம்? என்பதுவே நம் தேடலின் முடிவாகப் பெறும் ஞானமாக இருக்கும். எதுவொன்றாகவோ நாம் இருப்பதாக நினைக்க அதுவாக நாம் இல்லை என நம் இயல்பு உணரும் தருணத்தை “சருகு சருகாகும் தருணம்” தருகிறது. 

பெண் வாழ்வின் துயரமெல்லாம் ஒன்றி நிற்கும் குறியீடுகள் இலக்கியத்தில் பிரபலம். சீதையின் துயர் கணையாழியிலும் கண்ணகியின் துயர் சிலம்பிலும் சகுந்தலையின் துயர் மோதிரத்திலும் காணப்படுகிறது. ஆறறிவு கொண்ட பறவை. ஆனால் தன் துயரை வெளிப்படுத்த முடியாத உயர்திணைப் பறவை. மழைத் துளிக்கு அசையும் உதிர்ந்த அரசிலைக்கு பழைய உயிராசை துளிர்க்கிறது. உடல் என்பது கல் அடுக்கப்பட்ட கட்டடம் எனில் அதன் மூலைக்கல் எது எனக் கேட்கும் கவிஞர், யாருடைய சுக்கிலத் துளி கடல் என்று கேட்கிறார். ஒரு வரியில், ஒரு படிமத்தில் காலத்தில் இருந்து வெகுதூரம் தூக்கி எறியும் கவிதைகள் இவை. கடலை மட்டுமல்ல. பூமியை, கோள்களை, பால்வெளி அனைத்தும் பிரபஞ்சத்தின் சுக்கிலம் என விளங்கிக் கொள்கிறேன். நெருஞ்சி வேரின் எண்ணவோட்டத்தையும் சிறுத்தை புகுந்த பசித்த வீட்டையும் வண்ணத்துப் பூச்சியை உண்டு தற்கொலை செய்தவனின் மனதையும் தொட்டுக் காட்டும் கவிதைகளில் தெரிகிறது மானுடத்தின் துயரம். 

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் உள்ள பிறவா வரம் பெற்ற புளிய மரம் பூத்தும் காய்க்காதது. அங்கே இறவா பனையும் உண்டு.

 //அதன் நிழலில் 
அதே புளியமரக் குளிர்ச்சி
பெற்றால் தான் தாயா?//

//கடவுளுக்கும் நிழல் இல்லை
பசிக்கும் நிழல் இல்லை
பசியே ஒளியே
நீயே அருட்பெருஞ்ஜோதி// 

//கரையும் மெழுகுவர்த்தியை
அணைத்துவிடுவதே
நல்ல ஜெபம்//

எனும் கவிதைகளில் மானுடத் துயர் நோக்கி இயற்கையின் பேரொளி வீசுகின்றது. ஓவியத்தில் ஒரு மலர் மலர, ஒன்று உதிர்கிறது. அது தினமும் நடப்பது மாபெரும் வியப்பு. 450 ஆண்டுகளையும் காந்தியையும் அன்னி பெசன்ட்டையும் மறந்த அடையாறு ஆலமரம் ‘அமரம்’ ஆகி ஜே.கிருஷ்ணமூர்த்தியை மட்டும் நினைவு கொள்வதன் மூலம் அமரத்துவம் ஏற்படுத்துகிறது. வாழ்க்கை, பிரபஞ்சம் எல்லாம் ஒரு வட்டம் அதாவது பூஜ்யம். அதிலிருந்து ஏறிச் சென்று அடையும் உயரம் வேறு. திரும்பி இறங்கி வந்தபின் அடையும் பூஜ்யம் வேறு எனும் ஒரு கவிதை, உண்மை வேறு – உண்மையான உண்மை வேறு என்றாகிறது மற்றொரு கவிதையில். ‘இரவில் மினுக்கும் தனிமம்’ கவிதை உயிரை ஒரு சுடராக பாவிக்கிறது.


//கைமாறிக் கைமாறி
கடைசியில் மாடக்குழிக்குள்
வந்துவிட்டது
உயிர்// 

‘கைப்பிடியளவு’ கவிதையில் இதயத்தின் பெருமையையும், பூமியின் பெருமையையும் கைப்பிடி அளவு கொண்டைக் கடலைக்கு ஆசைப்படும் பசி உண்டுவிடுகிறது. அமைதியைக் குலைப்பது எதுவோ அதுவே அமைதி தந்த போதிமரத்தையும் கொத்தும் மரங்கொத்தி ஆகிறது. கவிஞர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் யாரிடம் உள்ளது? வானம் நோக்கி கைவிரித்து சரணடைவது மரம் மட்டுமா? நாமும் தானே. மரங்களாகிய மனங்கள். தாமரை, மல்லிகை, முல்லை எல்லாம் பூ எனில் நாய்வாலும் பூ என்கிறார் கவிஞர். நெஞ்சில் ஒரு மென்மயிர் பூவொன்று உரசிச் செல்கிறது ‘உன் பூ எது’ கவிதையில்.

//மார்கழி முதல் வாசலில்
சிக்குக்கோலம் இடுபவள்
நெற்றியில் இருந்து
ஒரு முத்து உதிர்கிறது
புள்ளியாகும் ஆசையில்.//

ஒவ்வோர் அனுபவமும் கவிதையில் ஒரு வரியாகும் ஆசையில் முட்டி மோதுகிறது. குழந்தையின் ஓவியத்திலிருந்து பறக்கும் கிளியல்லாத கிளி கிளை அல்லாத கிளையில் அமர்கிறது. அது ஒரு அதிசயக் கிளி மற்றும் அதிசயக் கிளையாகிறது. அதில் அமர அழைக்கிறது ஒரு கவிதை. யார் எதற்கு ஆசைப்படுவர், யார் எதற்கு மதிப்புத் தருவர் என்பது கொடுப்பவனை விட பெறுபவன் தான் முடிவு செய்கிறான் ‘பதறி எழுதல்’லில். சதுரத்துக்கு தானொரு ஜென் துறவி என்று நினைப்பு என்கிறார் ‘கவிஞனின் கணக்கு வழக்குகள்’ கவிதையில். தான் எல்லாப் பக்கமும் சமமாக இருப்பதாக நினைக்கும் நம் மனம் ஒரு  சதுரமா? ஆழத்தில் அது ஒரு வட்டத்துள் அல்லது நீள அகலங்களுக்குள் அல்லாடுகிறதா? பெரும்பாலான தொடர் கவிதைகளுக்கு இறங்கு வரிசை எண்ணிட்டுள்ளார். அதை எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்கிறார். அது வாசகனின் சுதந்திரம். ஒரு உச்சகாட்சியில் இருந்து அமைதியான முதல் துவக்க காட்சிக்கு செல்வது போல உள்ளது. அது ஒரு நினைவு திரும்பலாக கவிஞருக்கு உள்ளது. இன்றிலிருந்து நேற்றைப் பார்ப்பது போல.

 //புத்தன் தன் ஞாபகங்களை
வேடிக்கை பார்க்கிறான்.
ஞாபகங்கள் சித்தார்த்தனை
கண்டும் காணாமல்
விலகி நடக்கின்றன.// 

கதிர்பாரதியின் தேடல்,  மெய்யியல் நோக்கு,  அழகியல் ஆகியவற்றை கவிதைக்குள் மெய்யியலையும் மெய்யியலை கவிதையாகவும் படைத்துள்ளதன் வழி அறிய முடிகிறது. அன்பும் கவிதானுபவமும் மெய்யறிதலின் தேடலுமே அவரது கவிதைகளாக மலர்ந்துள்ளன.  அவரால் கவிதைகளின் சில சொற்களில் பல கதைகளை, வாழ்வை, மானுட அன்பை, அகநோக்கை எடுத்து வைத்துவிட முடிகிறது. தன் கவிதைகளால் வாழ்வை இல்லாக் கோணத்தில் பார்க்கிறார். வாழ்வோ அவர் கவிதைகளில் இருந்து நம் மனதைக் கண்டுகொள்கிறது. அது எத்தனையாவது பரிமாணமாக மிளிர்கிறது நம்முள்ளே என்பது நம் வாசிப்பைப் பொருத்து மூன்றாகலாம், ஆறாகலாம் அல்லது அது கற்பனைக்கும் எட்டாத பரிமாணமும் ஆகலாம். நம் கண்ணுக்கு, மனதிற்குப் புலனாகாத காரணத்தால் அந்தக் கவியனுபவம், மெய்மை நோக்கு அதன் வழி ஏற்படும் வாழ்வின் தரிசனம் போன்ற பரிமாணங்கள் இல்லவே இல்லை எனக் கூறிவிட முடியாது. எதன் பொருட்டோ  கவிஞன் அந்தப் புள்ளியில் நின்று பேசுகிறான். காதுள்ளவர்கள் கேட்பார்கள். மனதுள்ளவர்கள் அதை அடைவார்கள். 

நூல்: உயர்திணைப் பறவை, 
ஆசிரியர்: கதிர் பாரதி 
பதிப்பு: இன்சொல் பதிப்பகம்
செல் : 6382240354

விலை:  ரூ. 260


Read more at: http://www.vasagasalai.com/book-review-k-ragunathan/