31 December, 2012

கவிஞர் நரன், ஆசிரியராக இருந்து கொண்டு வரும் இலக்கிய காலாண்டிதழ் இதழ் சால்ட்.., சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறது.




27 December, 2012

கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பு மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் வெளியீடு....

வணக்கம் நண்பர்களே...
22.12.2012 அன்று எனது முதல் கவிதைத் தொகுப்பு மெசியாவுக்கு மூன்று மச்சங்கள், நண்பர் நிலாரசிகனின் மீன்கள் துள்ளும் நிசி நண்பர் இயற்கை சிவம் ஆசிரியராக இருந்து, கொண்டு வரும் வெயில் நதி சிற்றிதழ் அறிமுகங்கள் நிகழ்ந்தன. நிறைவான விழாவாக இருந்தது. முகப்பு புத்தகம் செல்போன் வழியாக பார்த்துக்கொண்ட நிறைய நண்பர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. விழாவில் கவிதைப் புத்தகங்கள் பேசிய அத்துனை பேரும் தயாரிப்போடு வந்திருந்திருந்தது ரசிக்க தக்கவையாக இருந்தன. விழாவை ஒருங்கிணைத்து நடத்திய யாவரும் டாட் காம் குழுவுக்கும் விழாவில் கலந்துகொண்ட அத்துனை தோழமைகளுக்கும்இடம் தந்து உதவிய டிஸ்கவரி புக் நிலையத்தாருக்கும் எனது நன்றி. விழாகுறித்த புகைப்படத்துளிகளை நான் பதிகிறேன். விழாகுறித்து நண்பர்கள் எழுதுங்கள்... அறியத் தாருங்கள். படிக்க ஆவல்... என் புத்தகம் குறுத்தும் உங்கள் கருத்துகளைத் தாருங்கள்

அன்புடன்
கதிர்பாரதி
9841758984



அய்யப்பமாதவன், யூமா.வாசுகி, நான்



"மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்" - யூமா.வாசுகி வெளியிட
வா. மணிகண்டன் பெற்றுக்கொள்கிறார்

நிலாரசிகனின் "மீன்கள் துள்ளும் நிசி" - அய்யப்பமாதவன் வெளியிட வெளியிட ஆத்மார்த்தி பெற்றுக்கொள்கிறார்.


வெயில்நதி சிற்றிதழ் அறிமுகம்... அய்யப்பன் அறிமுகப்படுத்த வசுமித்ர வழிமொழிகிறார்.


என் புத்தகத்தை வெளியிட்டு யூமா பேசுகிறார்.


யூமாவின் நெகிழவான பேச்சு


நிலாவின் தொகுப்புக்கு ஆத்மார்த்தி பேச்சு


யூமா வாசுகி, கதிர்பாரதி


வசுமித்ர, வேல்கண்ணன், இயற்கை சிவம், வா.மணிகண்டன்



விழாவுக்கு வந்த நண்பர்கள்



நிலாவின் தொகுப்புக்கு கவிஞர் வெயில் விமர்சனத்தை ஜீவகரிகாலன் வாசிக்கிறார்


தூரண் குணா, கணேசகுமாரன், வசுமித்ர, ஸ்ரீநிவாசராகவன்

என் கவிதை குறித்து வா.மணிகண்டன் பேசுகிறார்.


நிலா, சீனுராமசாமி



அய்யப்பமாதவன் என் கவிதைத் தொகுப்புக்கு  ஆற்றிய அன்புரை...


நெட்டையான நிகழ்ச்சி தொகுப்பாளர் வேல்கண்ணன்



என் கவிதைத் தொகுப்பு குறித்து சீனுராமசாமி பேசுகிறார் அல்லது நெகிழ்கிறார்.

தாராகணேசன், அய்யப்பமாதவன், சீனுராமசாமி


தாராகணேசன் என் கவிதைத் தொகுப்பு குறித்துப் பேசுகிறார்..


தாராகணேசன் என் கவிதைத் தொகுப்பு குறித்துப் பேசுகிறார்..




நண்பன் நரன்... என் கவிதைகள் நீளும் திசைகளில் இவனின் இருப்பு இருக்கும்


18 December, 2012

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் == கதிர்பாரதியின் கவிதை புத்தக வெளியீடு


வணக்கம் நண்பர்களே...


எனது முதல் கவிதைத் தொகுப்பு மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்
புது எழுத்து பதிப்பக வெளியீடாக வந்துவிட்டது. புத்தகத்தினை மிகவும் நேர்த்தியாக
கொண்டு வந்திருக்கிறார் புது எழுத்து பதிப்பாளர் திரு. மனோன்மணி. அட்டைப்படத்தை
கவிதைத் தனத்தோடு வடிவமைத்துக் கொடுத்த ஓவியர் மணிவண்ணன் அவர்களுக்கு
என் அன்பும் நெகிழ்வும். பின்னட்டைக் குறிப்புகளை மிகவும் வாஞ்சையோடு எழுதித் தந்திருக்கும்
கவிஞர் நரன் என் கவிதைகள் நீளும் திசைகளில் எல்லாம் இருக்கிறார்.

எதிர்வரும் 22.12.2012 சனிக்கிழமை அன்று எனது புத்தகத்தை கவிஞர் யூமா வாசுகி அறிமுகப்படுத்துகிறார்.
என் நண்பர் கவிஞர் வா.மணிகண்டன் புத்தகத்தைப் பெற்றுகொண்டு அறிமுகத்தை வழிமொழிகிறார்.
விழாவினை யாவரும்.காம் (அய்யப்பமாதவன், வேல்கண்ணன், ஜீவகரிகாலன்.... ) & புது எழுத்து பதிப்பகம் இணைந்து நடத்துகிறது.
விழாவில் கவிஞர் நிலாரசிகனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு மீன்கள் துள்ளும் நிசி வெளியீடும்
வெயில் நதி சிற்றிதழ் அறிமுகமும் நடக்கிறது

எனக்கு முக்கியமான இந்நிகழ்வில் உங்களின் வருகையையும் எதிர்பார்க்கிறேன். வாருங்கள் நண்பர்களே....


விழா குறித்த விவரங்களுக்கு....
http://www.yaavarum.com/archives/660


அன்புடன்
கதிர்பாரதி9841758984
 

06 December, 2012

தேவை: ஓர் அழுகையும் சில விசும்பல்களும்


உங்களுக்கு எப்படி ஆறுதல் தருவதென்று தெரிந்தேனில்லை.
உச்சந்தலை வருடி 
உள்ளம் தொட வேண்டும் போலிருக்கிறது.
கன்னத்தை இதமாகத் தாங்கலாம்தான்
அது இன்னும் உங்களை தளும்பச் செய்திடுமே.
உள்ளங்கையில் ஆதூரமாக ஓர் அழுத்தம் தந்து
என் ஆறுதலைக் கடத்திவிட முடியாதுதான்.
கண்களில் வழிகிற அந்தத் தவிப்பு
எனை வலிக்கச் செய்கிறதே
இறுக அணைத்து உங்கள் துக்கத்தைத்
தோள்மாற்றிக்கொள்ள முடியுமா என்றுகூட யோசிக்கிறேன்.
சலிப்பில் முளைத்த உங்கள் முன்நெற்றி சுருக்கத்தை நீவிவிடவும்
நடுங்கும் பெருமூச்சை ஆற்றுப்படுத்தவும்
என்னிடம் நிரம்ப உள்ளன சொற்கள்.
எனினும்
இப்போது உங்களுக்குத் தேவை.
கதறி
உடைந்து
நொறுங்கி
கரையும்
ஓர்
அழுகையும்
சில
விசும்பல்களும்.

புது எழுத்து வெளியீடாக வரவிருக்கும் என் கவிதைத் தொகுப்பு:


புது எழுத்து வெளியீடாக வரவிருக்கும் என் கவிதைத் தொகுப்பு :

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்-கதிர்பாரதி

எளிமையும் வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக் கொண்டு தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்பாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின், இந்நிலத்தின் மீது அன்றாடம் நிகழ்த்தப்படும் அற்புதங்களையும் விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாகத் தொட்டுணர்கின்றன இவரது கவிதைகள். பெருங்காமப் பேராற்றுத் தீரத்தில் ஒரு கைநீரள்ளி கோபியர் மீது தெளித்து விளையாடும் கிருஷ்ணனின் கரங்கள் வாய்த்திருகின்றன இவரின் சில கவிதைகளுக்கு. சமகாலச் சூழலில் மொழியையும் அதன் இறுக்கத்தையும் தளர்த்திய கவிதைகள் இவை.
-நரன்
 

08 November, 2012

மோகினியிடம் இருக்கும் மூன்று அரளிப் பூக்கள்

1
உன்னோடு இருந்ததை
எதனோடு உவமிக்கலாம் என்று
எண்ணிக்கொண்டிருந்த வேளையில்
உலகில் எங்கோ ஒரு மூலையில்
அரளிச்செடி ஒன்று
தன் முதல் மலரை 
மொட்டு அவிழ்த்திருக்கும் மோகினி.
அதிலிருந்து வழியும் வாசனை
உன் கழுத்துக்குச் சொந்தமானது
என்பதைச் சொல்லிக்கொண்டே
நான் மரிக்கும்போது
என்னிலிருந்து இரண்டாவது மலர் மலர்கிறதே
அறிவாயா?

2
ஒன்றன்மேல் ஒன்றாக
அடுக்கிவைக்கப் பட்டிருக்கிற
செவ்வரளியாகின்றன உன் இதழ்கள்.
அவற்றைத் தொடுத்து
எனக்குச் சார்த்துகிறபோது
நீலம்பாரித்துப் போகிறேன்.

3
உன் வெட்கத்தில் கதகதப்பாக மடல்விட்ட
வெள்ளரளியில் மயங்கி
அரைத்துக் குடித்துவிட்டு
நுரைத்தப்பித் தள்ளாடுகிற காலம்
ஓங்காரித்து எனை உமிழ்ந்ததில்
உன் காலடியில் விழுந்தேன் 
நான்.
தயவுசெய்து சாகவிடு.

01 November, 2012

டிவி தொகுப்பாளினியுடன் பத்து நிமிடம்

விடியும் நாளொன்று டிவி தொகுப்பாளினியால் ஆசிர்வதிக்கப்படுவது வரமா? சாபமா? விடிந்தும் விடியாமலும் உங்களின் தூக்கம் குறித்து அவள் விசாரிக்கிறாள். தூக்கத்தினால் சிவந்த உங்களின் கண்களைப் பற்றி வினவுகிறாள். தனது விரல்களால் உங்களின் கேசங்களை கோதிவிடுகிறாள்.

இப்படி ஒரு தினத்தை தன் செவ்விதழ்களால் தொகுத்தளிக்கும் தொகுப்பாளினியையும் அவள்
உருவாக்கிச் செல்லும் ஞாபக அலைகளைப் பற்றியுமான அனுபவத்தை கொடுக்கும் கவிதை கதிர்பாரதியின் “சர்வ நிச்சயம்”. சேலம் தக்கை பதிப்பகத்தின் மூலமாக வெளிவரும் “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” என்ற தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதை இது.

இந்தக் கவிதை வாசிப்பதற்கு எந்தச்சிக்கலும் இல்லாத எளிய, நேரடிக்கவிதை.

இன்றைய என் காலை
ஒரு டி.வி.தொகுப்பாளினியின் செவ்விதழ்களால்
திறந்துகொள்கிறது.
’நன்றாகத் தூங்கினீர்களா’ என வாஞ்சையாக வேறு
மாறுகிறது அதிலிருந்து உதிரும் புன்னகை
தொடர்பிலிருக்கும் நேயரின் பொருட்டு
அவளுதிர்க்கும் அச்சச்சோ,
’கண்கள் ஏன் சிவந்திருக்கின்றன’ என்று
என்னிடம் உரிமை எடுத்துக்கொள்கிறது
அவ்வுரிமையில் சுடர்வது
பருவத்தில் கிளைத்து ஒரு வெங்கோடையில்
கருகிய என் பிஞ்சுக் காதல்தான்.
கோத்துக்கோத்துப் பிரியும் அவள் விரல்களை
என்னைந்து விரல்களாக்கிக் கோதிவிடுகிறேன்
தலைகேசங்களை.
நேயருக்கு வாழ்த்துச் சொல்லி
அவள் தவழவிடும் ஒரு மென்கானம் மூலம்
சொல்லொண்ணா பிரியத்துடன்
என் இன்றைய பொழுதைத் தொகுத்து வழங்கிவிட்டாள்.
இப்போது குளியலறையில்
தலைக்கு மேலிருந்து வழிகிறதே
சர்வநிச்சயமாக
அது
அவள் குரல்தான்.

இந்தக் கவிதையை முதலில் பிரித்துவிடலாம். இப்படி பிரித்துக் கொண்டு வரும் போது இடையில் ஏதேனும் வரியோ அல்லது வார்த்தையோ குழப்பம் உருவாக்குவதாக இருந்தால் அடிக்கோடிட்டுக் கொள்வேன். அந்தக் குழப்பத்தை தனியாக ‘டீல்’ செய்து கொள்ளலாம்.

குழப்பம் விளைவிக்கும் கவிதையை வாசிக்காவிட்டால் என்ன? விட்டுவிடலாம் அல்லவா? புதிர்களுக்கும் , சூடோக்கூக்களுக்கும் , விடுகதைகளுக்கும் விடை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் என்ன? ஆனாலும் கண்டுபிடிக்கிறோம். இல்லையா? அதே த்ரில், அதே அனுபவம்தான் கவிதையை புரிந்துகொள்ள வேண்டும் என்ற வேகத்தை ஆரம்ப கட்டத்தில் உருவாக்கியது.

கதிர்பாரதியின் மேற்சொன்ன கவிதையில் ’குழப்பம் உருவாக்கும் அம்சம்’ எதுவும் இல்லை. நேரடியாக பிரித்துவிடலாம்.

1) இவன் விழிக்கும் போதே டிவியை ‘ஆன்’ செய்துவிடுகிறான் என்பது கவிதையில் நேரடியாகக் இல்லாவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது. “டி.வி தொகுப்பாளினியின் செவ்விதழ்களால் காலை திறந்து கொள்கிறது”என்ற முதல்வரியில்.

2) அவள் டிவியில் புன்னகைப்பது தன்னைப் பார்த்துதான் என நம்புகிறான். அந்தப் புன்னகையின் மூலமாக தனது உறக்கம் குறித்து விசாரிப்பாக புரிந்துகொள்கிறான்.

3) தொலைபேசியில் அவளோடு பேசிக் கொண்டிருக்கும் நேயருக்காக “அச்சச்சோ” என அவள் சொல்வதை ’கண்கள் ஏன் சிவந்திருக்கின்றன’ என இவனைப் பார்த்து அவள் உரிமையோடு கேட்பதாக அர்த்தப்படுத்திக் கொள்கிறான்.

3) அவளது உரிமை இவனது கருகிப்போன காதலை ஞாபகப்படுத்துகிறது. அந்தக்காதல் பருவத்தில் உருவாகி கருக்கப்பட்ட காதல்- பிஞ்சுக்காதல். இந்த வரி மறைமுகமாக உருவாக்கும் புரிதலைப்பற்றி கொஞ்சம் கவனிக்க வேண்டும். அவள் இவனுக்கு நெருக்கமானவளாக,பிரியம் மிக்கவளாகத் தெரிகிறாள். அந்த நெருக்கம் தனது பழைய காதலை/காதலியை நினைவுபடுத்தும் அளவுக்கு இருக்கிறது.

4) அவள் தனது விரல்களை கோர்த்துக் கோர்த்துப்பிரிப்பது இவனது கேசத்தைத் கோதுவது போன்ற பிரமையைத் தருகிறது.

5) அவள் ஒளிபரப்பும் பாடலின் மூலமாக அவனது தினத்தை தொகுத்துவிடுகிறாள். அந்தத் தொகுப்பில் பிரியம் நிறைந்திருக்கிறது.

பாடலின் மூலம் எப்படி ஒரு நாளைத் தொகுக்க முடியும்?
அது விர்ச்சுவல்- கற்பிதம் செய்து கொள்வது.

நாம் தினமும் எதிர்கொள்ளும் நூற்றுக்கணக்கான டி.வி தொகுப்பாளினிகளுக்கிடையே ஒருத்தி மட்டும் நம் கவனத்தை பறித்துவிடுகிறாள். ஒருத்தி மட்டும் நமக்கு நெருக்கமானவளாகிவிடுகிறாள். அது ஒரு சொல்லப்படாத பிரியம். வெளிக்காட்டிக் கொள்ள முடியாத அன்பு. அவள் நம் வாழ்வின் மறக்கமுடியாத ஒரு முகத்தையோ அல்லது தருணத்தையோ ஞாபகமூட்டிவிட்டு போய்விடுகிறாள். அவளை தனக்கு நெருக்கமானவளாக நினைத்துக் கொள்வதும் கூட ஒரு கற்பிதம்தானே? இப்படியான கற்பிதம்தான் ஒரு பாடலின் மூலம் அவள் தனது நாளை தொகுத்துவிட்டதாகச் சொல்வது.

6) அவள் இவனது நாளை தொகுத்துவிட்டு டிவித்திரையை விட்டு நகர்ந்துவிட்டாள். இவனும் குளிக்கப்போய்விட்டான். குளிக்கும் போது தலைக்கு மேலிருந்து வழிவது அவளின் குரல் என்று நம்புகிறான். அது தண்ணீர் வழியும் சத்தமா அல்லது தொகுப்பாளினியின் குரல் சத்தமா?

அவன் குளிக்கப்போன பிறகு டிவியில் ஒருவேளை அவள் திரும்ப வந்திருக்கலாம். அந்தக் குரல் இவன் குளிக்கும்போது கேட்டிருக்கலாம் அல்லது அவள் நகர்ந்து விட்ட பிறகும் அவளுடைய நினைவுகள் அவனைச் சுற்றிக் கொண்டிருக்கலாம். இதை கவிதையை வாசிக்கும் வாசகன் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்தக் கவிதை உருவாக்கிப் போகும் சலனம் பல பரிமாணங்களை உடையது. டிவியும் அதன் தொகுப்பாளினிகளும்,சீரியல் நடிகர்/நடிகைகளும் நம் வாழ்வின் பிரிக்கமுடியாத அங்கங்களாகிவிட்ட காலகட்டத்தின் பிரதிபலிப்பாக இந்தக் கவிதையை புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்வின் பழைய ஞாபகங்களைக் கிளறிப்போகும் அம்சமாக, அவர்களுடனான நம் கற்பனை அலைந்து கொண்டிருப்பதை இந்தக் கவிதை பிரதிநிதித்துவப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு டி.வி தொகுப்பாளினியுடன் பத்து நிமிட அனுபவம் உருவாக்கும் இந்தக் கவிதையிலிருந்து- ஒரு நாள் முழுவதும் அல்லது நாளின் பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமிக்கும் டிவியுடனான நமது அனுபவத்தை அல்லது அதனுடனான நம் உறவைப் பற்றி யோசிப்பதற்கான தளத்தை உருவாக்கித் தருகிறது இந்தக் கவிதை. இதுதான் Reader's space. வாசகனுக்கான தளம்.

நன்றி : வா. மணிகண்டன்


29 October, 2012

தகிக்கிறது சிரிப்பு

உங்களுக்கு இல்லைவேயில்லை என்றாகிவிட்ட
ஒருத்தியின் சிரிப்போடு
விடுதியொன்றில் அறை எடுத்துத் தங்குகிறீர்கள்.
அறைக்குள் ஓர் உலகத்தைச் சிருஷ்டித்துவிட்டு 
அதற்கு எல்லாமுமாக ஆகிறது அந்தச் சிரிப்பு.
கண்ணாடித் தம்ளரில் நீரினை வெளியேற்றி
அவள் சிரிப்பினை நிரப்பி கடகடவெனக் குடிக்கிறீர்கள்.
மெல்ல சந்நதம் ஏறுகிறது உங்களுக்கு.
சிரிப்புக்குச் சொந்தமான அவள் இதழ்களை
ருசித்த நினைவுகளால் உன்மத்தமாகிறீர்கள்.
தகிக்கிறது சிரிப்பு.
சிரிப்போடு பிணைந்திருக்கும் ஒரு தருணத்தில்
வாளாக மாறும் சிரிப்பொலி ஊடுருவித் துளைக்க
வலியால் தத்தளிக்கிறீர்கள்.
தண்ணீர்க் குழாயைத் திறந்து சிரிப்பினைக் கையில் பிடித்து
முகத்தில் அடித்துக் கழுவும்போது
இயலாமையின் கண்களில் உப்புத்துளிகள் வழிகின்றன.
சிரிப்பின் அணைப்பில் கட்டுண்டு கிடக்கும் உங்களை
இனி எவற்றாலும் தேற்ற முடியாது.
அறையை நீங்கும்போது உங்களை கீழ்நோக்கி வளைத்து
திடீரென்று முத்தமாக மாறும் சிரிப்பை மட்டும்
தயவுசெய்து ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
ஏனெனில்
அது முத்தம் மட்டுமல்ல.

20 October, 2012

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்


வணக்கம் நண்பர்களே...
சேலம் தக்கை பதிப்பகத்தின் வெளியீடாக...
நிலாரசிகனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு ”மீன்கள் துள்ளும் நிசி”, எனது முதல் கவிதைத் தொகுப்பு ”மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” நண்பர் பா.ராஜாவின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளிவர இருக்கிறது... இந்த மகிழ்வான தருணத்தை நண்பர்களோடு கொண்டாடத் தயாராகி வருகிறது மனம். விழாவுக்கு நண்பர்கள் அனைவரும் வர வேண்டும்.
விழா குறித்த தகவல்கள் விரைவில்....

அன்புடன்
கதிர்பாரதி

18 October, 2012

முகங்கள் 3 கதிர்பாரதி


கதிர்பாரதி என்றொருவன் இருப்பதே எனக்குத் தெரியாது.
பொதுவாகவே தத்தமது பேர்களின் இறுதியில் ஒரு இறகைப் போல
பாரதியையும் காந்தியையும் இணைத்துக்கொண்டு பலபேர் இருப்பதைக்
காண்கிறோம்.எனக்கு அமிர்தம் சூர்யா உடனான நட்பு கிடைத்த பிறகு தான்
அவர் பணிபுரிகிற கல்கி இதழிலேயே கதிர்பாரதி என்னும் ஒரு துணை
ஆசிரியர் இருப்பதை அறிந்தேன்.
அதன் பிறகு நண்பன் நிலாரசிகன் ஏற்பாடு செய்திருந்த கவிதை
நிகழ்வு தூத்துக்குடி அருகே தேரியில் கடந்த ஃபிப்ரவரி 18 ஆம் தேதி
நடந்தது.அங்கே என் முகப்புத்தக இலக்கியஸ்னேகிதர்கள் பலரையும்
நான் முதன்முதலில் சந்தித்தேன்.முக்கியமாக வா.மணிகண்டன்,
பெரியசாமி பொன் இளவேனில்,இளஞ்சேரல்,கறுத்தடையான் மற்றும்
கதிர்பாரதி.

நேரில் பார்க்கும் போது கேட்டே விட்டேன்..."தம்பி
கதிர்பாரதி வரலையா..?"என்று.அதற்கு என்னை முறைத்தபடியே "
நாந்தாங்க கதிர்பாரதி"என்றார்.
இவ்வளவு யூ யூத்தான ஒரு துணை ஆசிரியர்
மற்றும் கவிஞரா....எனக்கு சந்தோஷமாக இருந்தது.ஒரு காலத்தில்
தமிழ் சினிமா சித்தரித்து வைத்திருந்த பத்திரிக்கைக் காரன் என்னும்
பிம்பம் கொடியது.கதர் ஜிப்பாவும் தோளில் ஒரு ஜோல்னாப் பையும்
மொக்கையாய் கழுத்தில் தொங்குகிற கேமிராவும் கண்ணில் கட்டாய
சோடா புட்டிக் கண்ணாடியும் என இன்றைக்கு வழக்கொழிந்து விட்ட
எல்லாவற்றின் மொத்த பிரதி பிம்பன் அவன்.ஆனால் இன்றைக்கு
பத்திரிக்கையாளர்கள் கணிணித்துறையில் வேலை பார்க்கிறவர்களை
விட ஃப்ரீக் அவ்ட் ஆக இருப்பது தான் நிஜம்.அவர்களின் பிரதிநிதியாக
நான் கதிர்பாரதியைப் பார்த்தேன்.
எண்கள் கொடுத்துப் பெற்றுக்கொண்டோம். அதற்கு முன்பே
கதிருடனான ஸ்னேகம் எனக்கு குரல்வழியாகக் கிடைத்தது தான்
என்றாலும் கூட நேரில் பார்த்த பின் இன்னமும் இணக்கமாக மாறிற்று.
என்னுடைய தனிக்கவிதை ஒரு பக்கத்திற்கு கடந்த சனவரி மாதம்
"இயக்குநர்" என்னும் தலைப்பிலானது கல்கியில் வெளியாகி பரவலாக
அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்றது.அதற்கு கல்கி தேர்வெடுத்து
இணைத்திருந்த ஓவியம் மிகச்சிறப்பான ஒன்று.
கதிர் பாரதி தனது யவ்வனம் என்னும் வலைப்பூ
முகவரியைக் கொடுத்து "நண்பா...டைம் கிடச்சா பாருங்க நண்பா..."என்றார்.
நான் பார்த்தேன்.கவிதைகள் கவிதைகள்...அதுவும் வெற்று
வாசகங்கள் அல்ல.உணர்வுப் பூர்வமான கவிதைகள் தான் அத்தனையும்.
தொலைபேசியில் அழைத்து "கதிர் நல்லா இருக்குப்பா கவிதைகள் எல்லாம்.."
என்றால் எதிர்முனையிலிருந்து பலவீனாமான கூச்சக்குரலில்,"அப்டியா நண்பா
சொல்றீங்க...?"என்றார்.
இடையில் கொஞ்ச நாள் வேலைப் பரபரப்பில் கதிர்பாரதி
கவிதை எதையும் அப்லோட் செய்யவில்லை தனது யவ்வனத்தில்.அதற்கடுத்து
முகப்புத்தகத்தில் அவர் பதிவிட்ட எந்தக் கவிதையுமே எளிதில் கடந்து விடக்
கூடியவை அல்ல.
கதிர்பாரதியின் சிறப்பம்சம்..வளைந்து கொடுப்பது.வளைந்து கொடுப்பது
என்பதை இந்த சமூகம் மிகச்சரியாக தவறாகப் புரிந்து வைத்திருக்கிறது.அறம்
வழுவாது,அதே நேரத்தில் எந்த ஒரு மனமும் புண்படாது ஒரு குறிப்பிட்ட
நீட்சி வரை சென்றேனும் மனிதர்களைக் கையாளுவது ஒரு பெருங்கலை.அது
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்க்கப்பெறும்.அந்த வரிசை மனிதர்களில் என்
நண்பர் கதிர்பாரதியை சொல்லலாம்,.
கதிர்பாரதி நாம் என்ன தொனியில் என்ன வாக்கியங்களில்
பேசுகிறோமோ அதே தொனியைக் கூட நமக்குத் திருப்பித் தருபவர்.சிற்றிலக்கிய
அரசியல்கள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்.ஆனால் அவரளவிற்கு
இது வரை யாரைப் பற்றியும் புறம் கூறியது இல்லை.இது ஒரு பெரிய்ய குணம்.அவர்
அடுத்த மனிதனைப் பற்றிப் பேசினால் கூட அந்தப் பேச்சில் அடுத்த மனிதனின் செயல்
குறித்தான விமர்சனம் மற்றும் விளக்கம் இருக்குமே ஒழிய மேம்போக்கான வெறுப்போ
பிறர் மீதான ஆத்திர உமிழ்தலோ கட்டாயம் இருக்காது.
கதிர்பாரதி இளைஞர்.கவிஞர்.இவற்றைத் தாண்டி இதழியல் ஊடகத்
துறைகளில் மிகப் பிரகாசமாக வருவதற்குரிய ஒரு நபர்.அவருக்கு அந்தத் தகுதிகள்
உண்டு.சிறந்ததொரு மனமும் உண்டு.மனிதர்களை கையாள்கிற எவனும் முன்னேறுதல்
கடினமல்ல.
அடிக்கடி தொலைபேசியில் அழைப்பேன்.எப்போதாவது தான் அவர் அழைத்துப்
பேசுவார்.ஆனாலும் எனக்கு அந்தகுறை தெரியாமல் அவரது இளவல் தன் மழலைக்
குரலால் அடிக்கடி என்னோடு பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.அவரது செல்பேசியில்
AAவரிசையில் முதல் பெயராக ஆத்மார்த்தி இருப்பதால் மருமகப்பிள்ளை
அடிக்கடி என்னை அழைத்து சர்வதேச ரகசியங்களை மொழியும்..அதில்
சங்கேதசங்கீதம் பொழியவும் பொழியும்.


இன்னமும்
நட்பு
பாராட்டுவோம்

ஆத்மார்த்தி
 

15 October, 2012

முத்தத்தின் முடிவில்




உதடுகள் ஜாக்கிரதை என 
எழுதிவைத்துக்கொள்ள வேண்டும்
இனி மனதுக்குள்.
உதடுகளில் முளைக்கிற முத்தங்களை
முத்தங்களாக மட்டுமே கடந்துவிட முடியாதெனில் 
முத்தங்கள் முத்தங்கள் மட்டுமா என்ன?
முத்தம் கடவுள்
முத்தம் சாத்தான்
முத்தம் பிரபஞ்சம் 
முத்தமே முக்தி
முத்தமே சக்தி
முத்தமே மொத்தம்
சத்தமாக முத்தம் தருவோரும் 
மொத்தமாக முத்தம் பெருவோம்
பேறுபெற்றோர்
ஏனெனில்
பரலோக ராஜ்ஜியத்தில்
அவர்கள் முத்தமாவார்கள்.
தவிர,
உயிரில் இறங்கும் 
கூரிய பனிவாள்
முத்தம்.
கிடைக்கப் பெறுவோர்
முத்தத்தின் முடிவில்
செத்துப் போகக் கடவது!


09 October, 2012

அறு அறு ஆகா அப்படித்தான் அறு அறு


வாழ்த்துகள்
நீங்கள் என்னை அழ வைத்துவிட்டீர்கள்.
அதுவும் தேம்பித்தேம்பி திக்கித்திக்கி
அய்யோவென அழ வைத்துவிட்டீர்கள்.
வார்த்தைகள் உடைந்து குழைய
என் முகம் ஒரு வெட்டுவெட்டி கேவியதை
நீங்கள் பாத்திருந்தால் ஓவென கட்டிப்பிடித்து அழுதிருப்பீர்கள்.
உங்களைப் பிரித்த பயணத்தின் அந்தத் திருப்பம்தான்
எனக்கு அழுகை திருப்பமானது.
முதன்முறை அழுதாலும்
தேர்ந்த அழுகைக்காரன் அழுவது போல
அழுகிறதாகச் சொன்னார்கள்.
அழுத கணத்தில் என்னிடமிருக்கும் உங்கள் கைகுட்டை
பூவாவதை உணர்கிறேன்.
முகத்தின் மீது போட்டுக்கொள்ளும்போது
அதுவே பாறையாவதாக அழுகிறேன்.
நீங்கள் தொட்ட என்னுடலில் வலிபரவ அழுகிறேன்.
எனக்கென்று குறுராஜ்ஜியமொன்று இருக்கிறது
அதன் குடிகளையெல்லாம் அழச் சொல்லி அழுகிறேன்.
ராஜ்ஜியத்தின் திசைகளெங்கும் திரும்பிப் பார்த்து அழுகிறேன்.
ஞாயிற்றுக் கிழமை கசாப்புகடைக்காரனின் கத்திப் போல
உங்கள் நினைவு கழுத்தை நெருக்கி அறுக்க
அறு அறு ஆகா அப்படித்தான் அறு அறு என அரற்றி
ரத்தம் சொட்டச்சொட்ட அழுது அடங்குகிறேன்.
வாழ்த்துகள்
நீங்கள் என்னை அழ வைத்துவிட்டீர்கள்.
 

03 October, 2012

என் தெய்வமே... தேவதையே... மோகினியே

என் மோகினிக்குப் பித்தவெடிப்புகள் மலர்ந்திருக்கின்றன
அதிலென் கனவினை இட்டு நிரப்புகிறேன்.
ஏனெனில் அவற்றிலிருந்து கவிதைகள் முளைக்கின்றன.
வழியும் மூன்றே மூன்று நரைமுடிகளில் 
பால் பௌர்ணமி இறங்கி வருகிறது
அதை வணங்கி ஆராதனை செய்கிறேன்.
ஏனெனில் அவற்றில் வெளிச்சம் பெறுகின்றன கண்கள்.
காற்றுக்கு அசையும் கூந்தல் கீற்றுகள் முன்
முழந்தாழிடுகிறேன்
அவைதாம் மனதை மேலெழும்பச் செய்கின்றன.
சரியும் சதையமுதங்களுக்கு என் இளமை சமர்ப்பணங்கள்
ஏனெனில் அவை குழந்தையாக்கி உறங்க வைக்கின்றன.
அவளருகே முத்தமாகிக் கிடந்த நான்
சுழன்றடிக்கும் அவள் வாசனையைப் பூசிக்கொண்டு
ருத்ரமூர்த்தியாக ஆடுகிறேன்.
என்னோடு சேர்ந்தாடுகிறது காதல்.
அவள் வதனத்தில் அரும்பியிருக்கும் பருவின் கூர்முனை ஏறி
உயிரைப் பலிபொருளாக்குகிறேன்.
அப்போது என் தெய்வமாகத் தரிசனமாகிறாள்.
என் தெய்வமே
என் தேவதையே
என் மோகினியே

27 September, 2012

நன்றி: http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_27.html




கவிதைகளுக்குள் கதைகளைச் சொல்வதன் மூலமாகவும், விசித்திரமான கவிதைச் சித்திரங்களினாலும் கவனம் பெறக்கூடிய கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் கதிர்பாரதியின் தளம். இவரது கவிதைகளின் புதிய பாதை ஆச்சரியமூட்டுவதாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கின்றன. "கி.மு. இரண்டாயிரத்தில் கேரட்கள் ஊதா நிறத்தில் இருந்தனவாம்" பிறகு ஏன் நிறம் மாறின என்பதை கதிர்பாரதியின் கவிதையின் மூலமாக அறிந்துகொள்ளலாம். 


நன்றி: http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_27.html

25 September, 2012

கேட்பினும் பெரிது கேள்! - புன்னகை சிற்றிதழும் கதிர்பாரதி சிறப்பிதழும்.. ராமலஷ்மி விமர்சனம் http://puthu.thinnai.com/?p=14849



கவிதை தொன்மையானது. எத்தனையோ நூற்றாண்டுகளாக உலகின் எல்லாப் பாகங்களிலும் பயனில் இருந்து, பல துறையைச் சார்ந்தவர்களாலும் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு உணர்வுகளின் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. இருப்பினும் கூடவே கவிதை வாழ்க்கைக்குத் தேவையா எனும் கேள்வியும் இருந்து வரவே செய்திருக்கிறது. அதற்கு விடையாக வாழ்க்கையின் அத்தனை கூறுகளையும் தன் எல்லைக்குள் கொண்டு வந்து காட்டியிருக்கிறது, காட்டிக் கொண்டிருக்கிறது கவிதை. தனது முதன்மையான குறிக்கோள் அழகை ஆராதிப்பதிலோ, தத்துவங்களைப் பொழிவதிலோ, கருத்துக்களை நம்ப வைப்பதிலோ அன்றி கற்பனையோ நிஜமோ, பொதுவானதோ புதிரானதோ, அழகோ அல்லாததோ, நேர்மையோ அநீதியோ.., வாழ்க்கை அனுபவங்களை வார்த்தைகளில் கோர்த்து வாசிப்பவரை மீண்டும் வரிகளிலே வாழச் செய்வதே என நிரூபித்து வந்திருக்கிறது, வருகிறது.

கவிதையின் இன்றியமையாமையைக் கருத்தினில் கொண்டு க. அம்சப்ரியா, செ. ரமேஷ்குமார் ஆகியோர் கவிதைகளுக்காகவே வெளியிட்டு வரும் இருமாதச் சிற்றிதழ் “புன்னகை - கேட்பினும் பெரிது கேள்!”. கவிதைகளோடு அதில் விமர்சனங்களும் இடம்பெற்று வருகின்றன. தனது அறுபதாவது இதழில் அறுபது கவிஞர்களின் கவிதைகளை வெளியிட்டுச் சிறப்பித்திருந்தது . பலரது படைப்புகளோடு ஒரு குறிப்பிட்டக் கவிஞரின் சிறப்பிதழாகவும் கவிஞர்களைக் கெளரவித்து வருகிற புன்னகையின் எழுபதாவது இதழில் அந்தப் பெருமையைப் பெறுகின்றவர் கவிஞர் கதிர்பாரதி. ஜூலை-ஆகஸ்ட் 2012 புன்னகையில் இவரது 13 கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.


ஒவ்வொரு இதழிலும் கவிதை குறித்த பார்வையாக அமைகிற முதல் பக்கம் புன்னகையின் சிறப்பம்சம். எழுபதாவது இதழின் முதல் பக்க வரிகளில் சில, கவிதையிடம் தன்னை ஒப்படைத்திருக்கிற கதிர்பாரதிக்கும் அவரது கவிதைகளுக்குமே பொருந்துவதாக:
“கவிதையை உணர்ந்து படைப்பவர்களுக்கும் கவிதையை உள்ளக் கிளர்ச்சியோடு தேடுகிறவர்களுக்காகவும் கவிதை தன்னை ஒப்படைத்துவிடவே ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறது.
கவிதை கடைசிச் சொட்டு கண்ணீரையும் ஒற்றியெடுக்கும் கைக்குட்டையாகவும் இருக்கும்.
கவிதை போராட்டத்தின் வலிமையை கூடுதலாக்கும் ஒரு வைராக்கியச் சொல்லாகவும் மாறும்.
தனித்த பயணத்தில் பாதைகாட்டியாகவும் தன்னை அடையாளப்படுத்தும்.”
பத்திரிகைகள், சிற்றிதழ்கள் மற்றும் இணையம் மூலமாக இவரது கவிதைகள் ஏற்கனவே எனக்குப் பரிச்சயம் என்கிற வகையிலேயே இதை எளிதாக உணரவும் சொல்லவும் முடிகிறது. சீரணிக்கச் சிரமமான, வாழ்வின் கடினமான நிதர்சனங்களைப் படம் பிடிப்பவையாக இருக்கின்றன இவரது கவிதைகள். கூர்மையுடன் கவனிக்கிற வாசகருக்கு நல்லன அல்லாதன எவையும் இவர் கண்களினின்று தப்பாததும் சமூகத்தின் மீதானக் கோபங்களைக் கூட அழகியலுடன் அங்கதம் கலந்து சொல்லிச் செல்வதும் புலனாகும். அன்பு நகரில்,
“அல்லவை அனைத்தும் நல்லவையானதற்கு
அன்பு ஆட்சிக்கு வந்ததுதான் காரணம்” என்ற சுற்றலா வழிகாட்டியின் வார்த்தைகளில் பதற்றமுற்று அதிகாரம் ஆட்சி செலுத்தும் நகரத்துக்குத் தப்பித்து வந்ததைச் சொல்லுகிற ‘அன்பின் வாதை’ அப்படியான ஒன்றே.

‘வேம்பு கசப்பதில்லை’ கவிதையின் வார்த்தை வனப்பில் தமிழ் தித்திக்கிறது:
“...ஏறுவெய்யில் நிலம் சலிக்கும் ஒரு முன்மாலையில்
பொன்மூக்குத்தி பூக்களால் சிரிக்கும்
வேம்பின் புண்ணியத்தில்
அத்தனை கசப்பாய் இல்லை
இந்தக் கோடை.”

பழைய குடும்பப் படங்கள் எதேச்சையாகக் கையில் கிடைக்கையில் அதில் நம்மையே தொலைத்து விடுகிறோம். நம் அனைவரின் உணர்வாகவும் இந்தக் ‘குடும்பப் புகைப்படம்’:

“நெடுநாட்கள் கழித்து குடும்பப் புகைப்படம் ஒன்றைப் பார்க்கையில்
சுடர்விடும் அன்பைத் தரிசிக்கிறீர்கள் ஒரு முகத்தில்
வேறொன்றில் வெறுப்பு மின்னலென ஓடி மறைகிறது
மற்றொன்றில் சாந்தம் கொண்டலென வீசுகிறது
பிறிதொன்றில் அசூயையும் ஆற்றாமையும் வழிகிறது
தளிர்முகமொன்றில் தன் சல்லிவேருக்கு
பாசநீரைக் கேட்கும் யாசகம் தெரிகிறது
வயோதிகச் சுருக்கங்களில் காலம் சலசலத்துப் பிரவகிக்கிறது
எல்லாவற்றுக்கும் மேலாக சதியொன்றின் வடுவில்
தடுக்கி விழ நேர்கிறது
திடுக்கிட்டு மூடிவிட்ட புகைப்படத்தை
மீண்டுமொருமுறை எடுத்துப் பார்க்கிறீர்கள்” என நீளுகின்ற கவிதையில் இந்தக் கடைசி நான்குவரிகளில் ஒரு திடுக்கிடலை உணரவே செய்கிறோம்.

‘வீட்டை எட்டிப் பார்த்தல்’. மனித இயல்புகளில் ஒன்றான இதை விவரித்துச் செல்லுகிறவர் முடிவில்,
“...புறாக்கள் இரையுண்ட
அவ்வீட்டின் கிணற்றடியை எட்டிப் பார்க்காமல் வந்துவிட்டீர்கள்.
ஏனெனில் கிணற்றுக்குள் தளும்புவது தண்ணீரல்ல
ஒரு பெண்ணின் கேவல்கள் என்று
உங்களுக்குத் தெரிய வந்துவிட்டது.
இனி ஒருபோதும் அந்த வீட்டைக் கடந்து
உங்கள் வீட்டுக்குப் போக முடியாது.” என பெண்ணின் சோகத்துக்கான காரணங்களை வாசகர் கற்பனைக்கு விட்டு தீராத தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்.

‘நமது வாழ்வை முழுமையாக வாழுகிறோமோ?’ கேட்டுக் கொள்ளாமல் கடக்கவே இயலாது நம்மால் மற்றுமொரு கவிதையான ‘கடக்க இயலாத தெரு’வை:
“தெரு ஒன்றைக் கடப்பதென்பது
உண்மையில் வாழ்வு ஒன்றைக் கடப்பதாகும் போலும்.
விம்மல் கலந்து உதிரும் கண்ணீர்த் துளியொன்றை
விளக்கேற்றி வைக்கும் புன்னகையொன்றை
மெதுமெதுவாய் மடல்விரியும் மலரொன்றை
புறவாசலில் பூத்து மறையும் மின்னலொன்றை
தெருவைக் கடக்கும்போது உணராவிட்டால்
இன்னும் நீங்கள் முழுமையாக தெருவைக் கடக்கவில்லை.
வாழ்வையும்தான்.”

சுற்றி நிகழும் ஒவ்வொரு அசைவையும் அவதானித்து, இவரிடம் தன்னை ஒப்படைத்த கவிதைக்கு நேர்மையாக ஒவ்வொரு கணத்தையும் வரிகளாக வடித்து, நம் உணர்வுகளையும் அவற்றில் உயிர்த்தெழச் செய்கிற கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பு இந்த வருடம் வெளியாக இருக்கிறது. வாழ்த்துவோம் கவிஞரை.
***

புன்னகை இதழின் ஆண்டுச் சந்தா: ரூ.60
அனுப்ப வேண்டிய முகவரி:
புன்னகை
68, பொள்ளாச்சி சாலை,
ஆனைமலை - 642 104
படைப்புகள் அனுப்ப:
punnagaikavi@gmail.com

16 September, 2012

சிதைந்து செங்குருதி ஆகுதல்

அடர்மழை தினமொன்றில்
நீ ஏற்காத
என் அலைபேசி அழைப்புகள்
கொட்டுகிற ஒவ்வொரு துளியையும்
திறந்து திறந்து பார்த்து 
உனைக் காணாமல் 
கலங்கி 
வீழ்ந்து 
சிதைந்து
செங்குருதியாக்குகின்றன 
தரையை.

14 September, 2012

தெய்வமாக உறங்குகிறாய்

உன்னை உறங்கச் சொல்லி
காலம் அருள்பாலித்திருக்கிறது.
ஒரு தெய்வமாக உறங்குகிறாய்.
உறக்கத்தின் பின்புறத்தில் சுழலும்
உலகத்துக்கு
நீதான் பட்டத்து ராணி
அதனால்
உன் குறும்புன்னகை வெளிச்சமாகிறது.
நீதான் காவல் தெய்வம்
அதனால்
உன் நீதிபரிபாலனம் கவசமாகிறது.
நீதான் மாநதி
அதனால்
உன் ஈரம் தாய்மையாகிறது.
நீ புரண்டுபடுக்கிறபோது
ஒருயுகம் முடிந்து
மறுயுகம் தொடங்குகிறது எனக்கு.
கண்கள் விழி
உன் உபாசகனின் திக்விஜயம்
முடிவுக்கு வந்துவிட்டது.

24 August, 2012

சர்வநிச்சயமாக


இன்றைய என் காலை
ஒரு டி.வி.தொகுப்பாளினியின் குறும்புன்னகையால் 
திறந்துகொள்கிறது.
’நன்றாகத் தூங்கினீர்களா’ என வாஞ்சையாக வேறு
மாறுகிறது அந்தப் புன்னகை.
தொடர்பிலிருக்கும் நேயரின் பொருட்டு
அவளுதிர்க்கும் அச்சச்சோ,
’கண்கள் ஏன் சிவந்திருக்கின்றன’ என்று
என்னிடம் உரிமை எடுத்துக்கொள்கிறது.
அவ்வுரிமையில் சுடர்வது
பருவத்தில் கிளைத்து ஒரு வெங்கோடையில்
கருகிய என் பிஞ்சுக் காதல்தான்.
கோத்துக்கோத்துப் பிரியும் அவள் விரல்களை
என்னைந்து விரல்களாக்கிக் கோதிவிடுகிறேன்
தலைகேசங்களை.
நேயருக்கு வாழ்த்துச் சொல்லி
அவள் தவழவிடும் ஒரு மென்கானம் மூலம்
சொல்லொண்ணா பிரியத்துடன்
என் இன்றைய பொழுதைத் தொகுத்து வழங்கிவிட்டாள்.
இப்போது குளியலறையில்
தலைக்கு மேலிருந்து வழிகிறதே
சர்வநிச்சயமாக
அது
அவள் குரல்தான்.

10 August, 2012

மகாகவி கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான்.











1.
உலகை
உன்மத்தம தாண்டவமாட வைக்கிற
கவிதையொன்றின் கடைசிவரியை
இயற்றிக்கொண்டிருக்கிற மகாகவியை,
அவன் மகனின் மலத்தைக் கழுவிவிட
நிர்பந்திக்கிற கீழ்புத்தியுடைய இச்சமூகம்
அநதக் கவிதையின் கடைசிவரியைப்
படிக்கையில்
மூக்கைப் பொத்திக்கொள்கிறது.
2.
கவிதை இயற்றலில் லயித்திருக்கும்
ஒரு வெய்யில்பொழுதில்
நான்காம் அடுக்கின் தலையிலிருக்கும்
மொட்டைமாடியில்
வெளுத்தத் துணிகளை உலர்த்த
பணிக்கப்படுகிற மகாகவி,
இடது புறம் ஒரு க்ளிப்
வலது புறம் ஒரு க்ளிப்... போட்டு
தன் கவிதையை
சூரியனில் காயவைத்துவிட்டு
கிடுகிடுவெனக் கிழிறங்கி வருகிறான்.
3.
இருசக்கர வாகனத்துக்கு
எரிபொருள் இடுகிற மகாகவி
சில்லறை பைசாவுக்காக
சட்டைப் பையிலிருந்து
எரியும் கவிதையொன்றை
எடுத்துக்கொடுக்கையில்
மிரண்டு பின்வாங்குகிறது
பெட்ரோல்.
4.
மாமிசம் வெட்டப்படுவதை
நெற்றிக்கண்ணால் வெறித்தபடி
சிக்கன்கடை வாடிக்கையாளர் வரிசையில்
நிற்கிற மகாகவி,
அல்லவற்றைக் கழித்து
நல்லவற்றைச் சேர்த்து
லெக்பீஸ் போல புஸ்டியானதாய்
மனசுக்குள் சொற்களை
வெட்டிவெட்டிச் சேர்க்கிறான் கவிதைக்காக.
குடல்போல கொழகொழ சொல்லொன்று
கவிதையில் என்னையும் சேரேன் என்கிறது.
நிர்தாட்சண்யமாக மறுத்துவிடுகிறவன்,
கூடுதலாக
கால்கள் போன்ற ஓடியாடும் சொற்களை
வாங்கிக்கொண்டு
வீடுவந்து
சூப் வைத்து
கவிதையைக் குடிக்கிறான்.
5.
கொடும்பசியோடு நடந்துபோகிற
மகாகவி முன்பு
பெருத்த பிருஷ்டங்களை இடவலமென
லயத்தோடு அசைத்து அசைத்துப்
போய்க்கொண்டிருக்கிறாள் பேரிளம்பெண்.
பசியாறிய பிறகு
உலகமே காமுறுவகையில்
கவிதையொன்றை
இயற்றிக்கொண்டிருக்கிறான்.
6.
மரம் குறித்த கவிதையொன்றை
யோசித்தபடி
தெருவில் போய்கொண்டிருக்கிற
மகாகவி தலைமீது
திடீரென்று கொட்டுகிற மழை,
மரத்தின் உச்சங்கிளையில்
விழுந்து
வழிந்து
இறங்கி
அவன் காலை நனைக்கும்போது
அப்படியே
மரத்தின் வேர்களும்
நனைகின்றன.
7.
லௌகீகப் பிடுங்கல்கள் தாங்கவொன்னாது
திரைக்குப் பாட்டெழுத வந்த மகாகவிக்கு
இரண்டுக்கட்டை வித்தியாசத்தில்
முதல் குத்துப்பாட்டு வாய்ப்பொன்று
கைமீறிப் போய்விட்ட அன்றைய இரவில்
வன்மையாகத் திரும்பிப் படுத்திருக்கிறாள் மனைவி.
அவளை அண்டாது அணுகாது
விசனத்தோடு
மாநகர நடுநிசி வீதியில் நடந்துபோகிறவன்,
ஆளரவமற்ற ஒரு கணத்தில்
டூபீஸ் உடையில் அபிநயிக்கும்
நடிகையின் சுவரொட்டி முன்பு
சிறுநீர்க் கழித்துவிட்டு வந்து
குப்புறப் படுத்துக்கொள்கிறான்