01 October, 2024

விமர்சனக் குறிப்பு : கதிர்பாரதி ~ வெஞ்சினம்~ சிறுகதைத் தொகுப்பு ~ கார்த்திக் புகழேந்தி (13பிப்2023 அன்று எழுதியது)

கார்த்திக் புகழேந்தி யின் 'வெஞ்சினம் & பிற கதைகள்' தொகுப்பை வாசிக்க வாசிக்க எப்படி இந்த ஆளின் எழுத்தை இத்தனை நாள் வாசிக்காமல் இருந்தோம் என்று ஆயாசமாக இருந்தது.

சிலந்தி வாயிலிருந்து எச்சில் நூல்நூலாகக் கிளம்பிவந்து பின்னலாவதுபோல கார்த்திக் புகழேந்தியிடம் இருந்து கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக பின்னம்பின்னமாகக் கிளம்பிவருகின்றன என்றே தோன்றுகிறது.
நாட்டார் பண்புலகப் பின்னணியோடு எழுதப்பட்ட வெஞ்சினம், கொடிக்கால், காளிக்கூத்து, தலப்புராணம் போன்ற கதைகள் நம் பால்ய நனவிலியில் பாட்டையாக்களாலும் பாட்டிகளாலும் ஊன்றப்பட்ட விதைகள்தாம்.
கதைகளைப் படித்துக்கொண்டு வரும்போதே, யாரோ கதை கேட்டு 'உம்' கொட்டிக்கொண்டு பின்வருவதைப் போன்ற பிரமை உண்டாகிறது.
பூவாத்தாள், பலவேசத்தம்மாள், மங்கா, செல்லி, கோமு ஆச்சி, சந்திரா - மாரி... என கதைகளின் அத்துணைப் பெண்களும் அசாத்தியமானவர்களாகவும், அதிசயமானவர்களாக இருப்பது தாய்வழி ஆளுமைச் சக்தியின் மிச்சச்சொச்சங்கள் என்றெல்லாம் எண்ணவைக்கின்றன.
கார்த்திக் புகழேந்தி
கதைகளுக்காக உலகம் உருவானதா இல்லை கதைகள் உருவாக்கியதுதான் இந்த உலகமா என்ற சிந்தனாமயக்கத்தை உண்டுபண்ணுகிற இந்தத் தொகுப்புக் கதைகள் மிகுந்த வாசிப்பு இன்பத்தையும் மயக்கத்தையும் தரவல்லவை.
கார்த்திக் புகழந்திக்குக் காட்டாற்று வெள்ளம் போல மொழி. மேடு பள்ளங்களை நிறைத்து ஓடிவருதாக மனித மேன்மை - கீழ்மைகளை அடித்துக்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு கதையிலும் ஓர் அகவயமான வெளிச்சம் பீறிடுகிறது. அது மனித ஆழ்மனத்தின் மீது நிகழ்த்தும் ஆத்ம விசாரணைகளாக இருப்பதே இந்தக் கதைகளின் நற்பண்பு என நான் நினைக்கிறேன்.
வாழ்த்துகள் கார்த்திக் புகழேந்தி

No comments: