08 October, 2024

~கவிதை : கதிர்பாரதி ~ சாந்தசொரூபிகளின் தெய்வம்

னக்குள்ளிருக்கும் நாயை அவிழ்த்து
கையில் பிடித்தபடி காலைநடை போனேன்.
நானொரு நல்ல ஜீவகாருண்யன்
நாயோ சாந்தசொரூபிகளின் தெய்வம்.
அதன் விடிகாலைக் காதுகளில்
`மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன்`
பாடலைச் செருகிவிட்டிருந்தேன்.

அப்போததன் வால்கூடச் சாந்தமாவே குழைந்தது.
வீட்டுத் திருப்பம் மறைந்ததும்
`
மாதா`வைக் கழற்றிப் போட்டுவிட்டு

தெருவோரங்களை மோந்து மோந்து பார்த்தது.
திரைப்படச் சுவரொட்டியைக் கண்டதும்
கால் தூக்கி சிறுநீர் கழித்தது.
`
நாக்கை அப்படித் தொங்கப்போடாதே
அதிலிருப்பவர்கள் அதிரூபங்கள்.
அவர்கள்முன் கால்தூக்குவது நாகரிகமல்ல` என்றேன்.
`எனக்கு எல்லாம் தெரியும்… மூடு` என்று
முகத்தை வைத்துக்கொண்டது.
இன்னொரு திடீர் வளைவில்
என்போல எல்லோரும்
அவரவர் மிருகத்தைக் கையில் பிடித்தபடி
காலைநடை வந்திருந்தனர்.

நாயின் கால் நாயறிந்து, எனைக் கழற்றிவிட்டு
நடையும் துறைந்துவிட்டு
இன்னொரு நாயை இழுத்துக்கொண்டு
முட்டைபோண்டா சுவைக்கப் போய்விட்டது.
பூங்காவில் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு
பெண்நாய்களின் பின்புறங்களைக் கவனித்தது.
`
அடச் சீ நீயொரு நாயா?` எனக் கடிந்து
வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டேன்.
நாயும் முகத்தில் சாந்தத்தை அழைத்துவந்துவிட்டது.

வீட்டு எஜமானி தேநீர் கொடுத்தாள்
`
அருகன் சாறு அருந்தினேன் அம்மா` என்று
வாலைக் குழைத்துவிட்டு
காதுகளில் மறுபடியும் `மாதா`வை மாட்டிக்கொண்டது.
நாயைக் காலைநடை கூட்டிப்போனால்
நமக்குத்தான் ரத்தத்தில் சர்க்கரை 
தாறுமாறாய்க் கூடிவிடுகிறது.

_கதிர்பாரதி



No comments: