15 December, 2010

ஐம்பூதங்களின் அதிகாரியாக்குக

கடவுளர்களை அதிகாரம் செலுத்தும் ஐம்பூதங்களே
உம்மிடம் சமர்ப்பிக்கிறேன் என்னை
உம் சக்திகளின் சகல வல்லமையோடும்
எனக்குள் சம்பவியுங்கள்
ஒருபோதும் என்னைக் கை நெகிழ்ந்துவிடாதீர்கள்
எதிரிகளைப் புறங்காணச் செய்யும்
உன்னதங்களையும் எனக்கு ஆசிர்வதியுங்கள்
எனக்கு எதிராய் உங்கள் செங்கோல்
திரும்பாதிருக்கட்டும் எப்போதும்
உம் நீதிபரிபாலனத்தின் சிறுதுரும்பும்
என்னைப் பரிசோதிகாத கொடுப்பினையின்
மகிழ்வைச் சுவீகரிக்கட்டும்
என் ஆசைகளைப் பூர்த்திக்கும்பொருட்டு
பிரயாசைகொள்ளட்டும் உம் ஏவலாளிகள்
பரியாசைக்காரர்களின் பாதங்கள்
தீண்டாதபடிக்கு என் நிலத்தை மீட்டருளும்
சேதமுறாவண்ணம் வதந்திகளிடமிருந்து
என் காற்றைத் தடுத்தாட்கொள்ளும்
வல்லூறுகளின் கூரிய நகங்களில்
கிழிபடாதிருக்க என் வானத்தை இரட்சியும்
தீயனவற்றோடு இணைத்து நன்மைகளையும்
காவுகொள்ளாத சக்தி கொடு என் நெருப்புக்கு
கொடும்வெக்கையிலும் ஈரத்தை இழக்காத
நீர்மை வேண்டும் என் நீருக்கு
இயலுமாயின் என்னைக் குறித்துக் களிகூறுங்கள்
உம் அதிகாரங்களின் பரிணாம நீட்சியாய்

நன்றி: கல்வெட்டுப் பேசுகிறது (ஜனவரி 2011)