03 June, 2016

ஆனந்தித் தட்டான்கள் - கவிஞர் ராஜசுந்தரராஜன்

கவிஞர் கதிர்பாரதியிடம் ஒரு கதைத்தல்முறை (kind of narration) இருக்கிறது. எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டது அது.
“என் தாத்தாவிடம்
விவசாயப் பாடலொன்று இருந்தது.
விதைக்கும்போது அதை முணுமுணுக்கவும்
அறுவடையின்போது எக்காளமாக முழங்கவும்
அவருக்கொரு வாழ்வும் இருந்தது
அதில் என் ஆயா
எப்போதும் சிரித்துக்கொண்டிருந்தாள்.”
இப்படி. இப்படி, ‘எங்களிடம் நீர்முள்ளிப் பூக்கள் இருந்தன’ என்னும் கவிதையில் ஏழு கண்ணிகள் உள்ளன. ஒரொரு கண்ணியும் “என் தாத்தாவிடம்” என்றே தொடங்குகிறது. தமிழ்க்கவிதையில் இப்படியானதொரு கபடியாட்டப் புனைவிற்கு காரணவர் மனுஷ்யபுத்திரன்.
இதற்கான காரணம், ம.பு. தன் கவிதைகளில் கதையாடல்களைக் கொண்டுதர விழைகிறார். பழங்கதைகளில் அல்லது இசைப்பாடல்களில் இப்படி மறுகமறுக வரும், கவனித்திருக்கிறீர்களா? ஆனால் ம.பு., இதற்கூடாகவே, ஒரு பின்நவீனத்துவப் பிரதியையும் முயல்வார். அது காரணம் அவரது மொழியில் அணியலங்காரம், கிட்டத்தட்ட, தவிர்க்கப்பட்டிருக்கும்.
கதிர்பாரதியும் ஆங்காங்கே கதையாடுகிறார், ஆனால் அணியலங்காரம் வேண்டாதவராகத் தெரியவில்லை. இதே கவிதையில், //நீர்முள்ளிப் பூக்களை முத்திசெய்யும்/ ஊசித் தட்டான்களும்/ காயிலிருந்து செங்காய்ப் பருவத்துக்கு மாறும் இலந்தை/ இழுத்துவந்த மஞ்சள் வெயிலும்...// என்று அணிநடைக்கு மாறிவிடுகிறார் பாருங்கள்!
“மெழுகுவர்த்தியை உயிர்ப்பித்து இரவை எரித்தேன்.”
“அப்போது வீசிய பெருங்காற்றுக்கு
ஒடிந்துவிட்ட முருங்கங்கிளையில்
என் பதற்றம் தொற்றிக்கொண்டுவிட்டது.”
“அடைக்கலாங்குருவிகள் கொறித்து உமிழ்ந்த
நெல் உமிகளை
காற்று தன்போக்கில் அடித்துக்கொண்டுபோவதென
வார்த்தைகள் என்னைவிட்டுப் போய்விட்டன.”
கவிஞராகப் புகுந்த எவர்க்கும் இயல்பாக வரக்கூடியது அணிமொழி (figurative language). ஆனால் அதைத் தவிர்த்து தாவுகிறவர்களை கவி இல்லை என்று சொல்லி, விட முடியுமோ? ஆது. கூடவே, அவர்கள் சோதனைக்காரர்களும்கூட. அப்படித்தான் சொல்லப்பட வேண்டும். மாறாக, கதிர்பாரதி ஆனால் எளிய இயல்பான கவிஞர்.
"ஆனந்தியின் இமைகளிலிருந்து
முதன்முதலில் தட்டான்கள் பறந்தபோது
எனக்குள் மழைவரும் போலிருந்தது."
இப்படியோர் எளிய இயல்பான அணிமொழி வாய்க்கப்பெற்றவர் இவர். “ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்” என்னும் இக் கவிதை, முதலில் வந்த ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ தொகுதியிலும் இடம்பெற்றிருக்கிறது. இரண்டாம் தொகுதிக்குத் தலைப்பாகவும் இடப்பட்டிருக்கிறது. ஆகவே, இதிலென்ன முக்கியத்துவம் என்று பார்க்கத் தோன்றியது. காட்சி, வளமையிலிருந்து வெறுமைக்கு மாறுகிறது. உணர்வும் அப்படியே. “ஆ.பொ.தா.த.” தொகுதியின் தொனி இதுதான்: வளமைதிரிந்த வெறுமை.
நகர்சார்ந்த வாழ்க்கைக்கு இடையிடையே நாட்டுப்புற நினைவுகள் தோன்றித்தோன்றி அந்த வெறுமையை வெடிப்புறச் செய்கின்றன. //அவன்தான் காடு வளர்க்கப்போகிறேன் என/ டம்ளரில் தண்ணீர் எடுத்துப் போகிறான்// என்று, நகர்ப்பிறந்து நகர்வாழும் சின்னஞ்சிறு மகனின் விளையாட்டிலும்கூட அது தகிக்கிறது.
இங்கே, ‘தணுக்கிறது’ என்றல்லாமல் ‘தகிக்கிறது’ என்கிறேனே ஏன்?
“உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி/ பச்சமலெப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க...” என்றொரு திரைப்பாடல் இருக்கிறது, இல்லையா? கேட்டிருப்பீர்கள். அதன் இடையிலோர் “ஆரீராரோ...” அது நம் உள்ளத்தை அறுக்கிறது அல்லவா? கலையாப்பில் இதுவும் ஓர் அணிதான். இது மலைதல் (montage) எனப்படும்.
ஒருசார்ந்த காட்சிகள் அல்லது கற்பனைகளால் மலையப்படுவதைக் காட்டிலும் முரணானவைகளால் மலையப்படுகையில் இன்னும் சிறப்பாக இருக்கும். கறுத்த- வானத்தில்-ஒரு-மின்னற்-கீற்று அழகுதான், ஆனால் அதனினும் அழகு மழைக்-கரு-முகில்களை-ஊடுருவி-இறங்கும்-வெய்யில்-விழுதுகள்.
“ஊமத்தங்காயின் முட்களில் சிக்கிக்கொள்ளாமல்
பூவரசம்பீப்பியின் ராகத்தோடு மிதந்தவனுக்கு
மெட்ரோபாலிட்டன் நிலம்...”
“மரணத்தின்போது துளிர்த்திருந்த
அந்த வீட்டு மாமரத்தின் செந்தளிர்கள்...”
கவிஞர் நேசமித்ரன், படிம/ உவமங்களால் இறுகக் கட்டுகிறவர். “சற்றுத் தளர்த்தி மிடையலாமே?” என்று வேண்டியபோது, “வேண்டுமென்றுதான் அப்படிச் செய்கிறேன்,” என்றார். அது ஒரு நிலைபாடு. (பழந்தமிழ்ச்சொற்களைப் புகுத்தி எழுதுகிறவன் நான். நானும் வேண்டுமென்றேதான் இப்படிச்செய்கிறேன். இது ஒரு நிலைபாடு.)
நேசமித்ரனின் உவமஞ்செறி இறுக்கத்திற்கும் மனுஷ்யபுத்திரனின் வெளிப்படக் கிளத்தலுக்கும் இடைப்பட்டதொரு மொழிநடை கைவரப்பெற்றவர் கதிர்பாரதி. ‘ஆம்... உன் குரல்’, ‘புன்செய் வெயிலாகும் முத்தம்’ முதலிய உவமச்செறிவுள்ள கவிதைகளின் கிளத்தலெளிமை இதற்குத் தெளிவு.
முதல் தொகுப்பினை ஒப்பிட இரண்டாவதில் கிராமமும் காமமும் அரசியற்பகடியும் கூடியிருக்கிறது. ‘முப்பிரி பின்னலிட்ட நாகசர்ப்பம்’ போன்ற கலவிக்களத்துக் கவிதைகள் கிழத்தையும் கிளர்த்தும்.
தாழப்பறக்கும் தட்டான்களின் நிலம் ஈரநினைவுகளின் கோடைவெளி.

1 comment:

Thenammai Lakshmanan said...

விமர்சனம் அருமைராஜன் . வாழ்த்துகள் கதிர்பாரதி.