03 August, 2015

சொற்றுணை வாழ்க்கை - கவிஞர் விக்ரமாதித்யன் (மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் புத்தகத்துக்காக...)

உன் பாசாங்குக்கும் பசப்புகளுக்கும் மயங்கியிருக்கும் நிலம்

எமக்கு வாய்த்தது நன்மைதான். 
நெகிழத் தொடங்கியிருக்கும் இக்கணத்திலிருந்து
அதனியல்பால் எல்லாம் கிட்டும். 
எழுதுகோல் முளைக்கும்.
கணினியும் கண்டடைவோம்.
மரித்திருக்கும் குலசாமிக்கு உயிர்ப்பு துளிர்விடும். 
சாங்கியமும் கொண்டாட்டமும் மீண்டும் நிறம்கொள்ளும். 
நிலத்தின் வண்டல்களால் செப்பமுறும் மூளை.
இருதயம் திடசித்தம் கொள்ளும். 
கனவுகள் கள்வெறியூட்டும். 
இறுகிக் கிடந்த இச்சைகளுக்கு றெக்கை அரும்பும். 
மூதாதையர் தேடிக் களைப்படைந்த புதையல்கள்
அகழாமல் மேல்வரும். 
நீளும் ஆயுள்ரேகைகளில் நம் சந்ததி வளப்பமுறும். 
எல்லாம் கிட்டும் எமக்கு
யாவற்றுக்கும் முன்
உன் பசப்புகளுக்கும் பாசாங்குகளுக்கும்
மயங்கி இருக்கும் நிலத்தை மீட்டாக வேண்டும்.

(‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’, பக்கம்: 31)

கவிஞனின் சமூகப் பொறுப்பே நல்லகவிதையை நல்கிவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இந்தக் கவிதையை; தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதையொன்றே சொல்லலாம்; சமகால உணர்வுள்ள கவிஞனுக்கே இது சாத்தியமாகும்;

‘‘இடதுசாரிக் கொள்கைப்பற்றும் விவசாய வாழ்வும் பின்னணிகளாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்’’ இப்படி எழுதுவது இயல்பேயாகும்; கதிர்பாரதியிடத்தே உள்ள விசேஷ அம்சமே இதுதான். 

‘‘எமக்கு வாய்த்தது நன்னிலம்தான்’’ என சர்வ நிச்சயமாகத் தொடங்கும் கவிதை, ‘‘நெகிழத் தொடங்கியிருக்கும் இக்கணத்திலிருந்து / அதனியல்பால் எல்லாம் கிட்டும்’’ எனத் தொடர்கிறது; என்னென்ன கிடைக்கும் நிகழும் என்று வளர்கிறது; இறுதி மூன்று வரிகளில், இதற்காக யாது செய்யவேண்டுமென தீர்க்கமாக முடிவுசெய்கிறது; இதுதான் கவிதைச்செய்தி; கவிச்சீற்றம். நிலத்தை மீட்டபிறகுதான் எல்லாம். 

சுருக்கமாக, தெளிவாக அமைந்துள்ள கவிதை; உண்மையான முற்போக்குக் கவிதைக்கு உதாரணமாக விளங்குவது சரளமான கவிதை மொழிதான்; அரசியல் கவிதைதான் & பார்க்கப் போனார். 

துப்பாக்கிக்குள் நிரம்புகிறது சிரிப்பு
அவனிடம் நெடுநாட்களாக சிரிப்பு ஒன்று இருந்து வருகிறது. 
எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அதை உபயோகித்து என்னவெல்லாமோ செய்துவிடுகிறான். 
முதலில் ஒரு பொம்மைக்கு உயிர் கொடுத்தான்
அது கைவிடப்பட்ட வீடொன்றுக்கு விளக்கேற்றுவதாக அமைந்தது. 
பிறகு புறாவொன்றை கூண்டிலிருந்து திறந்துவிட்டு
அதன் உரிமையாளரோடு சமாதானம் செய்வித்தான்
அது சிறுமியின் சிராய்ப்புக்கு மருந்திடுவதற்கு ஒப்புமை கூறப்பட்டது. 
பூர்விகச் சொத்துக்காக ரத்தவெறிகொண்ட பங்காளிகளிடையே
மிதக்கும் இலவம்பஞ்சைப் போல நுழைந்த அவன் சிரிப்பு
வல்லூறுவிடமிருந்து கோழிக்குஞ்சை மீட்பதற்கு உவமையானது. 
வலி சுமந்து பாரமிழுக்கும் வண்டிமாட்டின் கழுத்தை 
ஆசுவாசப்படுத்தி அவன் சிரித்தது
கயவர்களால் வல்லாங்குக்குள்ளான காதலியைத் தோள் சாய்த்து
ஆறுதல் தரும் காதலனைப் போன்றிருந்தது. 
புகை வீட்டு மறிக்கும் தீவனக்கிளை உடைத்துப்போடுவதாக
மூர்ச்சையுற்ற கர்ப்பிணிக்கு விசிறிவிடுவதாக
அவ்வப்போது தோற்றம் கொள்ளும் அந்தச் சிரிப்பில்
திக்கற்ற அகதிக்கு தாய்நாட்டைத் தரும் கரிசனமும் 
வறிய யாசகனுக்கு விருந்துண்டு கிறங்கும் பாக்கியமும்
சுடர்ந்தபோது நான் அதற்கு ரசிகனாகி இருந்தேன். 
சமீபத்தில்,
இலவச வேட்டி சேலை நெரிசலில் இறந்தவனின்
மரணப் பந்தலில் இடிஇடியென அவன் சிரித்தது மட்டும்
துப்பாக்கிக்கு ரவை நிரப்பியதைப் போலானது. 
(பக்கம்: 52)

அவனிடம் நெடுநாள்களாக இருந்துவரும் சிரிப்பைப் பற்றிக் கூறி ஆரம்பமாகிறது கவிதை; அந்தச் சிரிப்பினால், அவன் ஆக்கபூர்வமாக எவ்வளவோ காரியங்களும் சாதிக்கிறான்தான்; அந்தச் சிரிப்புக்கு இவன் ரசிகனாகி இருந்ததும் கூறப்படுகிறது; சமீபத்தில் சிரித்ததுதான் கவிதையின் பாடுபொருளே. 

எதார்த்தத்தின்மீது கட்டப்பெற்ற புனைவு; புனைவின் வழிலேதான் இந்த விஷயத்தையே சொல்லமுடியும்; தீர்க்கமான சமூகப்பார்வைதான் விசேஷமே; இதுவும் அரசியல்கவிதைதான்; கதிர்பாரதி கட்டும் புனைவுகள் அனைத்துமே அழகானவையும் வசீகரமானவையும் ஆகும்; அவை பொருத்தமான இடங்களில் பொருந்தியிருக்கின்றன என்பதும் சுட்டப்பட வேண்டியதே; பெரும்பான்மைக் கவிதைகளும் புனைவின் வாயிலாகவே பேசப்பட்டுள்ளன என்பதும் கவனம்கொள்ள வேண்டியதே; இவருக்குப் புனைவுபடுத்துவது கைவந்த கலையாகவே கூடிவந்திருக்கிறது; ஒரு கவிஞனுக்கு இது பெரிய கொடுப்பினை; கூடவே ஒரு சந்தேகமும்; புனைவு, நிறையப் பயன்படுத்தப்பட்டு விட்டதனால், காலாவதியாகிவிடக் கூடுமே என்றும்; கதிர், சுதாரித்துக் கொள்வாராக. 

கோழிக்காலக் குறிப்புகள்
கோழியைக் கண்டால் எச்சரிக்கையோடு கூடிய
ஆசூயையும் தொற்றிக் கொண்டபோது
இறைக்காக அது மலம் கொத்திக் கொண்டிருந்தது
எனச் சொன்னால் நீங்கள் வாழ தகுதியவற்றவர். 
குப்பைகள் கிளறி, குட்டிச்சுவர்மீது அலைந்து, 
புழுதி குடைந்தாடி, எச்சங்களை உண்டு... என
உங்கள் குற்றச்சாட்டுகளை ஆமோதிக்கிறேன் எனில்
நானும் அப்படித்தான். 
சாமிக்கென நேர்ந்துவிட்ட கோழியிடமிருந்து
அபயஹஸ்தம் கிட்டிவிட்டால் அப்பப்பா மோட்சம்தான். 
பெட்டையோடு சுற்றிவந்து கொண்டை நிமிர்த்தி
அது கொக்கரிப்பதைத் தரிசித்துவிட்டால்
ஜென்மாந்திர ஜென்மமும் சாபல்யமடைந்திடும்.
வராதுவந்த ஓரிரண்டு வரன்களும்
இரண்டொரு பவுனில் இடறிப்போக
கன்னி கழியாமலே காலம் கழியும்
கோமதி அக்காவின் பார்வைக் குவிமையத்தில்
விரட்டிவிரட்டி சேவலும் விரண்டு மிரண்டு பெட்டையும்
சேர்ந்து தொலைக்கிறதா
அவற்றுக்குப் பொல்லாங்கு செய்யாது
தெண்டனிட்டு சேவியுங்கள். 
கோழிகள் நாளையே ஆட்சிப்பீடமேறி
கோமதி அக்காவுக்கு இலவசத் திருமணத்திட்டத்தில்...
(பக்கம்: 15)

கதிர்பாரதிக்குக் கிண்டலும் கேலியும் வசமாக வந்து வாய்த்திருக்கின்றன; அதுவும் ஆக்கமாகவே; அதற்கு ஓர் உதாரணம்தான் இந்தக் கவிதை; இன்றைய அரசியல் சமூக நிலைமைகளைக் கண்கொண்டு காணும் கருத்துக் கொண்டு வாழும் சீரிய கவிஞன் அவற்றையெல்லாம் ஏளனம் செய்யாது / ஏகடியம் பண்ணாது எப்படி இருக்கமுடியும்; நாளைக்கு வரலாறு எழுத முற்படும்போது, இந்தத் தமிழ்க் கவிஞர்கள் என்னதான் செய்து கொண்டிருந்தார்களாம் என்ற கேள்வி வந்து விழுந்துவிடலாகாது இல்லையா; எங்கேயோ எப்படியோ கால்கொள்ளும் கவிதை இலக்கை நோக்கி வந்துவிடும் விதம் செம்மையானதுதான்; இப்படியெல்லாம் சுவாரஸ்யமாகக் கவிதை சொல்ல முடியும் போல என்றே எண்ண வைத்துவிடுகிறார்கள் இளந்தலைமுறைக் கவிஞர்கள். 

இன்னொரு முக்கியமான செய்தியும் உண்டு. 

இங்கே பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிற இந்த மூன்று கவிதைகளுமே சமகாலத் தமிழ்ச் சமூக இருப்புநிலையை எடுத்துப் பேசுபவை என்பதே இவற்றின் பெறுமதி; தமிழ்நிலம் குரித்த ஓர்மையும் உணர்வும் கொண்ட கவிஞனாகவே கதிர்பாரதி திகழகிறார் என்பதுதான் அவருக்குப் பெருமை சேர்ப்பதுமாகும்; மண்ணையும் மக்களையும் மனசில் நிறுத்தியிருக்கும் கவிஞன், மகாகவியாக மாற நீண்டகாலம் பிடிக்காது; தன் திசைவழியைத் தெரிவு செய்துகொள்ள வேண்டியதுதான் நல்ல காரியமாக இருக்கும். 

மதுக்கூடங்களோடு புழுங்குதல்
சமூகநலக் கூடங்களுக்குள் நுழைதல் போல
அத்துணை லகுவானதல்ல மதுக்கூடத்துள் நுழைவது. 
கதவைத் திறந்துகொண்டு நுழையும்போது 
அங்கு நுரைபூத்துத் ததும்பிக் கொண்டிருக்கும் சொற்களின்மீது
இடித்துக் கொள்ளாமல் நுழைதல் வேண்டும். 
உங்கள் இருக்கையை அணுகும்போது கரிசனம் முக்கியம்.
உங்களுக்கு முன் பின் அமர்ந்ததும் அமரப்போவதும்
அதி உன்னத அனுபவமல்லவே. 
மதுசிப்பந்திகளிடம் புன்னகையைக் கொடுத்துவிட்டு 
மதுவைப் பெற்றுக்கொள்ளுதலே சிறந்த தொடக்கம். 
உயிர்த் திரவமெனப் பூரிக்கும் மதுவில்
ஐஸ்கட்டிகளோடு உங்களையும் முக்கிவிடுங்கள்.
ஒவ்வொர் இருக்கையிலும் வெவ்வேறுலகம் சுழலும்
எதனோடு ஒட்டாது உரசாது
நீங்களும் சுழலவிடுங்கள் உங்கள் உலகை. 
போதையின் பெருங்காதலோடு உலகங்களை அவதானிப்பது
அடடா... எவ்வாறு ஆனந்தம்; எவ்வளவு பேரானந்தம். 
மூன்றாவது, நான்காவது... சுற்றுகளுக்குப் பிறகு
வாழ்க்கை குமட்டலெடுக்கத் தொடங்கும். 
அப்போது மனதுக்குள் மதுக்கூடத்தைத் தெண்டனிட்டு விட்டு
வெளியேறிவிடுதலே புத்திசாலித்தனம்.
இல்லையேல்... இன்றும் ஒரேயொரு மிடறுக்குப் பிறகு
ஈசானமூலையில் முகம் இருள அமர்ந்திருப்பவனின்
தனிப்பெரும் விசும்பலில்
மதுக்கூடமே திரும்பத் தொடங்கிவிடும். 
(பக்கம்: 65)

நகுலன்முதல் அப்பாஸ், வித்யாஷங்கர், மலைச்சாமி, முத்துமகரந்தன், குவளைக்கண்ணன், ரமேஷ் (பிரேம்), யூமா வாசுகி, லக்ஷ்மி மணிவண்ணன், யவனிகா ஸ்ரீராம், சி.மோகன், லிபி ஆரண்யா, வே.பாபுவரை நவீன கவிஞர்கள் பலரும் மதுசார்ந்த கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்; ஒரு தொகை நூலே கொண்டுவரலாம், தனியே; உள்ளபடியேயும், அவையெல்லாம் குடிபற்றிய கவிதைகள் அல்ல; ஒவ்வொருவர் கவிதையும் ஒவ்வொரு வகை; சொல்லியிருப்பதும் வேறுவேரு விதம்; எல்லாமே இந்த வாழ்வுகதி பற்றியவைதாம்; திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஒயின்ஷாப்களும் கிடாமார்க் கடைகளும் திறந்துவிடப்பட்டு, தமிழினத்தையே ‘குடிமக்களாக்கிய பிற்பாடு மதுவைப் பற்றிக் கவிஞன் எழுதாமல் இருக்கமுடியாதுதான்; தமிழ்வாழ்வின் ஓர் அம்சமாகவே ஆகிவிட்ட ஒன்றை எப்படித் தள்ளி வைக்க முடியும். 

இங்கே, கதிர்பாரதி, சொல்லும் விஷயம் தனியானது; சொல்முறை, சிலாகிப்புக்குரியது; எதார்த்தமும் புனைவும் விரவப் பேசப்படுவது; இறுதி நான்கடிகளில் வெளிப்படும் செய்தி, மனிதார்த்த அடிப்படையாக விளங்குவது; துயருக்குப் பிரிவு காட்டுவது; இதுதான் இன்றியமையாதது. 

ஆமாம் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்

நான்கைந்து தடவைகளுக்கு அதிகமாகவே
உதிர்ந்து ஒழுகிவிட்ட உங்கள் மனைவியின் கர்ப்பத்தால்
கலைந்துபோகின்றன உங்கள் உள்மன அடுக்குகள். 
அதற்குள், முற்காலத்துக்கும் முற்காலத்தில்
பறவைக்கூடுகளில் ஊடுருவித் திளைத்த சாரையாக
நீங்களிருந்த குற்றவுணர்வு வாலாட்டுகிறது. 
அதைக் கொல்ல நினைத்துதன் இப்போது
சாராயத்தால் மிடறுமிடறாக எரிந்துகொள்கிறேன் என்கிறீர்கள். 
சொல்லும்போதே, ஒரு தண்ணீர்க்காலத்தில்
நவாமரக் குரங்குக்கு நட்டாற்றில் துரோகமிழைத்த
முதலை நானென்று
கல்லீரல் அறைந்தறைந்து கலங்குகிறீர்கள். 
விபத்தில் நசுங்கிய உங்கள் பருவமகளின் துடிதுடிப்பு
செந்நாய்ப்பிறவியில் உங்களால் கிழிக்கப்பட்ட
கலைமான் குட்டியினுடையது என்று
சம்பந்தாசம்பந்தமில்லாமல் வேறு அரற்றுகிறீர்கள். 
ஒரு தேசத்துக்கு ராஜகுமாரனாக இருந்ததும்
தற்போது வாடகைக் குடித்தனத்தில் அவிவதும்
இப்படித்தானென ஆங்காரம் கொள்கிறபோது
உங்கள் போதை உச்சிக்கு வந்திருக்கிறது. 
என்ன வாழ்க்கையடா இதென்று
உயிரைக் கழற்றி எறிவதற்காக
தொப்பித்தூக்கிப் பாறையின் குணநலன்கொண்ட
காலத்தின் இரக்கமற்ற பள்ளத்தாக்கு முனைக்கு
ஒருமுறை சென்றுவிட்டதாகவும்... பிறகு, 
அந்த எண்ணத்தை மட்டும் கழற்றி எறிந்ததாகவும்
அது திரும்பி வந்து துரத்திக் கொண்டிருப்பதாகவும்
அதனால் ஓடிக்கொண்டிருப்பதாகவும் சொல்லிவிட்டு
ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். 
ஆமாம்
ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். 
(பக்கம்: 66)

முதல் ஆறடிகளில் உள்ளது ஒரு செய்தி; நடந்தவை ஏற்படுத்திய குற்றவுணர்வு; அடுத்தடுத்து, நிகழ்கால ஸ்திதி; கவிதை சொல்வதென்ன; கடந்தகாலத்தில் செய்தனவற்றிற்காக இப்பொழுது மறுகிமறுகி வாடுவதையா; போதையில், உளம் கொளும் கோலங்களையா; இரண்டும்தான்; வினையிலிருந்து வந்த வினையும்தான்; தன் நெஞ்சே தன்னைச் சுடுகிறதோ; ‘‘குற்றம் புரிந்தவன், வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது’’ என்பதா; ‘‘நடந்ததை நினைத்து வருத்தப்பட்டால் அவன் மூடன்’’ என்பதா; கவிதை, ஒரு சித்திரமாய் விரிகிறது, நவீன ஓவியம்; அதில் வாசகன் காண்பதே பொருள்; உரைகாரன் சொல்வதல்ல. 

வேடிக்கைக் கவிதைகள், காதல் மற்றும் காமம்சார் கவிதைகள், பிள்ளைகள் பற்றிய கவிதைகள் என்றெல்லாம் கலந்து கட்டிய தொகுப்பு & மதுரைக் கதம்பம் மாதிரி; கட்டுரையில் எடுத்தாண்டிருப்பன், மானாமதுரை மரிக்கொழுந்துபோல; வாசிப்பு ஆனந்தம் தரும் கவிதைகள் தாம் அனைத்துமே; கவிதை வாசகர்கள் படித்துப் பார்க்க வேண்டும். 

விமர்சனமாகச் சில வார்த்தைகள். 

அநேகம் கவிதைகளும் முன்னிலையை விளித்துப் பேசுவன; 
இந்தக் கூறலை அதிகம் பயன்படுத்தக் கூடாது; சிரிப்புத் தரும்;
பலவிதமான சொல்முறையும் பயின்றுவரவேண்டும்; 
இப்படித்தான் சொல்வான் இவன் என்று யாரும்
யூகிக்க இடம்தராமல் இருப்பதே உத்தமம்; 
அர்ஜூனனின் கணைகள், பெரும் இலக்குக் கொண்டவை என்பதைநவீன கவிஞர்கள் நினைவிலிருத்திக் கொண்டால் உலகத்தரத்துக்குத் தமிழ்க்கவிதை உயர்ந்துவிடும். 

‘கோழிக்காலக்குறீப்புகள்’ கவிதையில் இரு பிழைகள்; ஐந்தாவது வரி, ‘‘குப்பைகள் கிளறி, குட்டிச்சுவர்மீது அலைந்து’’ என்பதில் ‘குப்பைகள்’ எனப் பன்மை வேண்டியதில்லை & ‘குப்பை’ போதும்; ‘‘குப்பையைக் கிளறிவிடும் கோழியே / கொண்டிருக்கும் அன்பிலே இரண்டுமுண்டு என்பதை / கண்டதுமில்லையோ வாழ்விலே’’ என்றுதான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியிருப்பார்; பதினான்காவது வரி, ‘‘வராது வந்த ஓரிரண்டு வரன்களும்’’ என்பதில், ‘வரன்’ என்பது பார்ப்பன வழக்கு இல்லையோ; எங்கள் பக்கத்தில், பார்ப்பரை நல்லாதோர், ‘வரன்’ என்று பேசிக் கேட்டதில்லை; ‘பொண்ணுவீடு’ ‘மாப்பிள்ளை வீடு’ என்பார்கள்; தஞ்சை ஜில்லா வழக்கு என்ன. 

மிகமிக முக்கியமான பொறுப்பு, ஒவ்வொரு நவீனகவிஞனுக்கும்; தங்கள் கவிதைத் தொகுப்புக்குத் தாங்களே மெய்ப்புப் பார்ப்பது; அச்சுப்பிழைகளும் ஒற்றுப்பிழைகளும்மரிந்த கவிதைத் தொகுப்புகள், வாசிப்புக்குப் பெரிய இடைஞ்சலை விளைவிக்கின்றன; உ.வே.சா.காலத்திலேயே செம்மையான பதிப்புக் கண்ட தமிழன், நகரத்தார் பதிப்பித்த ‘சிலம்பு’ காலத்திலேயே பிழைகளின் நூல் வெளியிட்ட இந்த இனம் இன்று ஏன் இப்படிக் கொடுமை செய்கிறது; கவிஞன்தான் சிரத்தை கொண்டிருக்க வேண்டும்; பதிப்பாளர் பொறுப்பில் விட்டுவிட்டு இருந்துவிட முடியாது. 

கட்டுரை நீண்டுவிட்டது; பத்திரிகை ஆசிரியரைப் படுத்தக்கூடாது; வாசகனை கஷ்டப்படுத்தக் கூடாது; நிறுத்திவிட வேண்டியதுதான். 
- விக்ரமாதித்யன் நம்பி

நூல்: மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்
ஆசிரியர்: கதிர்பாரதி
முதற்பதிப்பு: டிசம்பர் 2012, இரண்டாம் பதிப்பு: டிசம்பர் 2013
வெளியீடு: புது எழுத்து
எண்: 2/205, அண்ணா நகர், காவேரிப்பட்டணம்- 635 112, 
கிருஷ்ணகிரி மாவட்டம்
விலை: ரூபாய் எழுபது

1 comment:

Unknown said...

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஒயின்ஷாப்களும் கிடாமார்க் கடைகளும் திறந்துவிடப்பட்டு, தமிழினத்தையே ‘குடிமக்களாக்கிய பிற்பாடு மதுவைப் பற்றிக் கவிஞன் எழுதாமல் இருக்கமுடியாதுதான்; தமிழ்வாழ்வின் ஓர் அம்சமாகவே ஆகிவிட்ட ஒன்றை எப்படித் தள்ளி வைக்க முடியும். 

Mmm.