10 May, 2014

நீர்ப்பாய்ச்சி

திருநெல்வேலி
11.09.2013

பேரன்புத் தோழர் கி.ரா. அவர்களுக்கு
வணக்கம்

மகாகவி பாரதியின் 92 வது நினைவுநாள் அன்று இம்மடலை எழுதுகிறேன். செப்டம்பர் 16, 2013 -ல் தங்களுக்கு வயது 90 நிறைந்து 91 தொடங்குகிறது என்பதில் நான் மகிழ்ச்சியும் பூரிப்பும் பெருமிதமும் அடைகிறேன். தங்களுக்கும் தங்களை கண்ணின் மணிபோல பேணிப் பாதுகாத்துவரும் தங்கள் அருமைத் துணைவியாருக்கும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் அன்புசால் வணக்கம்; நெஞ்சம் நிறை நல்வாழ்த்துகள். தாங்கள் மென்மேலும் சீரிய உடல்நலமும் உளநலமும் பெற்று தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் தனித்தன்மையுடன் உயிரூட்டவும் ஒளியூட்டவும் அற்புதமான படைப்புகளைத் தருவீர்களாக. தங்கள் படைப்பாற்றல் மென்மேலும் வளர்க வெல்க. தமிழகம் சிற்ப்புறுக!
குமுதத்தில் தங்கள் கட்டுரைத் தொடரை சில வாரங்கள் மட்டுமே படித்தேன். மகாகவி லட்சியப் பாதையில் நாம் செல்வோம். உங்களிடம் இன்னும் உயர்தரமான வளமான கருத்தாழமிக்க வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளை எதிர்பார்ப்பர் என்பதில் எனக்கு ஐயமில்லை. 24 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தங்கள் புதுவை வாழ்க்கையை மண்வாசனையுடன் மனிதநேயத்துடன் தாங்கள் தமிழுக்கு விரைவில் வழங்க வேண்டும் என்பதே இந்த 89 வயது தோழன் தங்களுக்கு வைக்கும் பணிவான வேண்டுகோள். ஆவணம் செய்க!

இன்றும் தமிழுடன் 
தி.க.சி.

-இதுதான்  தேங்காய்க் கடை சிவசங்கரம் பிள்ளையோட பேரன் தி.க.சி-யிடம் இருந்து எனக்கு வந்த கடைசிக் கடிதம். ஏன் தேங்காய்க்டை சிவசங்கரம்ம் பிள்ளையோட பேரன்னு குறிப்பிட்டுறேன்னு அப்புறம் சொல்றேன். இந்தக் கடிதத்தை, தி.க.சி-யை தாமிரபரணியின் நதிக்கரையில் தகணம் செஞ்சுட்டு வந்த இரண்டாவது நாள் இப்போதான் மறுபடியும் எடுத்துப் பார்க்கிறேன். இந்தக் கடிதத்தோட வார்த்தைகள்ல ஒருவித இறுக்கம் இருக்கிறது இப்போதான் எனக்கு மட்டுப்படுது. தமிழ்ப் பண்டிதர்கள்களோட பேசிட்டு இருந்துட்டு இந்தக் கடிதத்தை எனக்கு எழுதிருப்பார் போல. அதனாலதான் கடிதத்துல பண்டித்தமிழ் சாயல் நிறையவே இருக்கு. என்னமோ சொல்ல வந்திருக்கார். ஆனா, என்னனுதான் எனக்கு மட்டுப்படலை. ஆனாலும் என்ன... எனக்கும் தி.க.சி-க்கும் மட்டுப்படறது மாதிரி எத்தனையோ ஞாபகங்கள் இருக்கே... சம்பவங்களும் நாள்களும் இருக்கே... அதுங்க போதும்னு நினைக்கிறேன். என்னைப் போல திக.சி-யைத் தேடி வந்துபோன மனிதர்கள் இன்னும் இருக்காங்களே... அவங்க போதும்னு நினைக்க்கிறேன். இதுக்கு மேல ஒரு மனிதரைப் பத்தி வேற என்ன நினைச்சுட முடியும். சொல்லிட முடியும். இதுபோல ஆயிரமாயிரம் கடிதங்கள்... ஆயிரமாயிரம் உற்சாசமூட்டுற வேலைகள்னு கடைசிவரைக்கும் இயங்கிட்டே இருந்தார் தி.க.சி. ’’ - எழுத்தாளர் கி.ராஜநாராயணன் முகத்தில் பாறையைப் போல இறுக்கமான கனத்த மௌனம். ஒரு நீண்ட பெருமூச்சை உள்வாங்கிக்கொண்டவர்  ஈரமும் பாரமுமான வார்த்தைகளில் திகசி நினைவுகளை இறக்கி வைத்தார்...


’’ தி.க.சி-யைப் பத்தி ஒரு வார்த்தையில சொல்லணும்னா அவர் ஒரு நீர்ப்பாய்ச்சி. அதனால்தான் வேர்கள் எல்லாம் அவரை நோக்கி நீண்டுகிட்டே இருந்துச்சு. இங்க வேர்கள்ங்கிறது ஆரம்பக் கால படைப்பாளிகள் உள்பட என்னையும் சேர்த்துதான் குறிக்குது. அவர் அளவுக்குப் படைப்பாளிகளை அரவணைச்சுக்கிட்டவங்க தமிழ் இலக்கிய உலகத்துல குறைவுணுதான் சொல்லணும். தன் படைப்புகள் குறித்து அவர் என்ன நினைக்கிறார்னு தெரிஞ்சிக்கறதுல நிறைய பேருக்கு அலாதியான ஆர்வம். தி.க.சி-யும் சின்னவன் பெரியவன் வயசு வித்தியாசமெல்லாம் பாக்காம எல்லாருக்குமான வார்த்தைகளை வெச்சுருந்தார். எல்லாருக்குமான வார்த்தைகள்னா ஆளுக்குத் தகுந்தார்போல பேசுவார்னு அர்த்தமில்லை. அவ்வளவு அரவணைப்பு. அவ்வளவு ஆதுரம். ஆனா, தான் வரிச்சிக்கிட்ட கொள்கையிலும் விமர்சனத்துலையும் கடைசிவரைக்கும் அத்தனை கறார்த்தனத்தோடதான் இருந்தார். அந்தச் சமயத்துல நாம கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போகணும்.

1966 -ம் வருஷத்துல நான் ’பேதை’னு ஒரு கதை எழுதி தாமரை பத்திரிகைக்கு அனுப்பினேன். அப்போ அந்தப் பத்திரிகையோட ஆசிரியர் தி.க.சி. ஒரு பெண் கிடைச்சுட்டா போதும்... அவளை இந்தச் சமூகம் எவ்வளவு கிள்ளுக்கீரைத்தனமா நடத்துதுனு சொன்ன கதை அது. அந்தக் கதையை முடிக்கிறப்ப ’அவள், அவனோட உயிர்த்தலத்தைப் பிடித்தாள்’னு எழுதிருந்தேன். ’’இந்த ’உயிர்த்தலம்’ங்கிற வார்த்தையை எடுத்துடணும். ரொம்ப ஆபாசமா இருக்கு. அந்த வார்த்தையே வரக்கூடாது’’னு தி.க.சி. சொன்னார். ’’இல்லைங்க அந்த வார்த்தைதான் இந்தக் கதைக்கு ரொம்ப முக்கியம். அதுவும் இல்லாம ’உயிர்தலம்’ங்கிற வார்த்தை ஒண்ணும் ஆபாசம் கிடையாது. ஒரு பையன் கீழே விழுந்துட்டான்னா... ’உயிர்த்தல’த்துல எதுவும் அடிப்பட்டிருக்கா பாரு’னு ஊர்ல சாதாராணமாவே பெண்கள் சொல்வாங்க. அதுவும் இல்லாம தொட்டும் பார்ப்பாங்க. இதுல எங்க ஆபாசம் இருக்கு. சாதாரணமா மக்கள்கிட்ட புழங்குற வார்த்தைதானே’’னு நான் கேட்டேன். ’’இல்ல இல்லை... அந்த வார்த்தை ஆபாசம்தான். வேணும்னா என்.டி.வானமாமலை, எஸ்.ஏ.முருகானந்தம், என்.வானமாமலை இவங்ககிட்ட கேட்டுப்பார்ப்போம்’’னு சொன்னார். இதுல எஸ்.ஏ. முருகானந்தம் அப்போ தூத்துக்குடியில் ’சாந்தி’ பத்திரிகையை நடத்திட்டு வந்தவர். என்.டி.வானமாமலை வக்கீலா இருந்தார். என்.வானமாமலை பெரிய படிப்பாளி... இந்த விஷயத்தை தி.க.சி. அவங்ககிட்ட சொல்றதுக்குள்ள நாமளே முந்திக்கணும்னு நானே கதையை எடுத்துக்கிட்டுப் போயி அவங்களைப் பார்த்தேன். கதையைப் படிச்சுப் பார்த்துட்டு , ‘எனக்கு ஆபாசமா ஒண்ணும் தோணலை. ஆனா, அறுவெறுப்பா இருக்கு’னுடார் என்.டி.வானமாமலை. ஆனா, என்.வானமாமலையோ, ’தமிழில் தோன்றிய முதல் பெண்ணியச் சிறுகதை இதுதான்’னு சொன்னார். அடுத்த ரெண்டாவது வாரத்துல அதாவது 1966 ஜூலை மாசம் ’சாந்தி’ பத்திரிகையில ’பேதை’ கதையைப் பிரசுரம் பண்ணிப்பிட்டார் எஸ்.ஏ.முருகானந்தம். அப்போ சென்னையில் இருந்த தி.க.சி-க்கு இது பெரிய திடுக்கிடலாப் போயிடுச்சு. கட்சி, கமிட்டியில்கூட ’இந்தக் கதையை எப்படிப் பிரசுரம் பண்ணலாம்?’னு விவாதத்தை தி.க.சி. கிளப்பினதாக் கேள்விபட்டேன். நானும் அதைப் பத்தி ஒண்ணும் கேட்டுக்கிடலை அவரும் ஒண்ணும் சொல்லலை. ஆனா, எனக்கு அவர் மேல கொஞ்சம் மனத்தாங்கலா போயிடுச்சு. ஆனாலும் அவர் கடைசிவரைக்கும் தன்னோட கருத்துகள்ல கறாரா இருந்தார். கொஞ்ச நாள் கழிச்சு சென்னையிலேர்ந்து நேரா இடைசெவ்வல் கிராமத்துக்கு வந்தார். என் கையைப் பிடிச்சுக்கிட்டு ரொம்ப நேரம் பேசினார். ஆனா, இந்தக் கதையைப் பத்தி அது ஏற்படுத்துன மனக்கிலேசங்களைப் பத்தி ரெண்டு பேரும் ஒண்ணும் பேசிக்கிடலை. இதை ஏன் சொல்றேன்னா... இந்தக் கதையை எழுதுல சமயத்துல எங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு பலமா சினேகிதம் இருந்துச்சு. ஆனாலும் அவர் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காம தன் விமர்சனத்துல காட்டுன கறார்தன்மையில நான் திடுக்கிட்டுத்தான் போனேன்னு சொல்றதுக்காகத்தான்.

’அவர் ஒரு நீர்ப்பாய்ச்சி... அவரைத் தேடி வேர்கள் நீளும்’னு ஆரம்பத்துல சொன்னேன் இல்லையா... என்னோட வேர் அதாவது நான் எப்படி அவரைத் தேடிப் போனேன்னு சொல்லணும்ல... சொல்றேன். அப்போ நான் எழுதவே ஆரம்பிக்காத காலகட்டம். வசதியான குடும்பங்கிறதால வேலைக்கும் போறதில்லை. ஊர்சுத்திக்கிட்டு இருக்கிறதுதான் வேலை. ஆனா ஆளுங்களை நேர்ல போய் பாக்கிறல ஆர்வம் ஜாஸ்தி. பாக்கெட்ல பணத்தை எடுத்து வெச்சுக்கிட்டுக் கிளம்பிடுவேன். திருநவேலிக்கு வந்த நேரா நாங்க போறது கம்யூனிஸ்ட் கட்சி ஆபிஸுக்குத்தான். அப்போ அண்ணாச்சி சண்முகசுந்தரம்தான் திருநவேலி ஜில்லா கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர். சிந்துபூந்துறை முருகேசன்னா எல்லாத்துக்கும் தெரியும். ஏன்னா அப்போ திருநவேலி ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு செயலாளரா இருந்தவரு. பினாடி கம்யூனிஸ்ட் கட்சியில் சேந்தாரு. அவர்கிட்டத்தான் முதன்முதலாக் கேட்டேன்.

’’தி.க.சி. வீட்டுக்கு எப்படிப் போவணும்.’’
’’ஜங்ஷன்லேர்ந்து டவுன் பஸ் புடி. ’சுடலை மாடன் கோயில் தெரு’ன்னு கேட்டு இறங்கு. இறங்கிட்டு ’தேங்காய் கடை சிவசங்கரம் பிள்ளை வீடு எது?’னு கேளு சொல்வாங்க’’னு சொன்னாரு.
இப்போதான் அது ’சுடலை மாடன் தெரு’. அப்போ அது ’சுடலை மாடன் கோயில் தெரு’. மனுஷங்க பேரை மாத்திக்கிடறது போல தெருவும் காலபோக்குல பேரை மாத்திக்கிடும் போல. அப்பறம் ஒரு விஷயம். நான் தி.க.சி-யைத் தேடி அவர் வீட்டுக்குப் போவும் அவங்க தாத்தா சிவசங்கரம் பிள்ளை தேங்காய் யாவரம் பண்ணலை. அதனால என்ன... அப்பவும் அவர் அங்கனகுள்ள இருக்கிற மனுச மக்களுக்கு தேங்காய்கடை சிவசங்கரம் பிள்ளைதான். அப்படியான காலகட்டம். நான் தி.க.சி-யைப் பாக்கப் போனப்போ அவர் ’தான்கோஸ் பேங்க்’ல உத்தியோகத்துல இருந்தாரு.
நேரா வீட்டுக்குப் போனேன். நல்லா பெரிய வீடு. நாலு குடும்பம் இருந்ததா ஞாபகம். முதல்ல பலகைக் கல்லு போட்ட திண்ணை. அதுலதான் தேய்க்காய் கடை சிவசங்கரம் பிள்ளை உட்கார்ந்து இருந்தாரு. என்னையை யாருன்னே அவருக்குத் தெரியாது. ஆனாலும் ’’வாங்க வணக்கம்’’னு சொன்னவரு... ’அப்படியே உள்ளே போங்க மாடில இருக்கான்’னு கை காமிச்சார். நான் தி.க.சி-யைப் பார்க்க வந்திருக்கேன்னு தெரிஞ்சுக்கிட்டார். என்னைப் போல அவர் எத்தனை பேரைப் பாத்திருப்பார். நான் அப்படியே நீண்ட வராண்டால நடந்து இடது கைபக்கமா திரும்பி மாடிப்படியில ஏறிப் போறேன்.  மாடியில் அப்போ நெல்லு காய வெச்சுருந்தாங்க. நட்ட நடுவுல ஊஞ்சல்ல உட்கார்ந்து இருந்தார் தி.க.சி. அவருக்கு முன்னாடி குறுக்குவாட்டா நிலைக்கண்ணாடி இருந்துச்சு. நான் அதுவரைக்கும் நீள்வாக்குல தொங்குற நிலக்கண்ணாடியைத்தான் பாத்துருக்கேன். ஆனா முதல் முறையா குறுக்குவாட்டு நிலக்கண்ணாடி... இதையெல்லாம் கவனிச்சுக்கிட்டு நெல்லு மேல நடந்து போனேன். அப்போ என் உள்ளங்கால்கள்ல நெல்லு முனைங்க குத்துனது இப்பவும் குறுகுறுக்குது. எந்திரிச்சு வந்தவரு என் கையைப் பிடிச்சுக்கிட்டார். அப்புறம் பேசுனோம்... பேசுனோம்... பேசிக்கிட்டே இருந்தோம். அதுக்கு பிறகு திருநவேலிக்கு வந்தா போனா, சுடலை மாடன் கோயில் தெருவுல அந்த வீடு நான் உண்டு உறங்கிற பேசிச் சிரிக்கிற எடமா மாறிப்போச்சு. அப்போ அங்க இருந்த நாலு வீடுகள்ல ரெண்டாவது வீட்டுல தி.க.சி-யோட தம்பி ஒருந்தர் இருந்தார். அவருக்கு அப்படியே தி.க.சி-யோட குரல். அவர் பேசுற நேரத்துல தி.க.சி. பேசுறது மாதிரியே இருக்கும். நான் கல்யாணி(வண்ணதாசன்)கிட்ட கூட கேட்பேன். ’’நாங்களும் சிலநேரம் அப்பாத்தான் பேசுறாருனு ஏமாந்திருக்கோம் மாமா”னு அவன் சிரிச்சுக்கிடுவான். அவன் நல்ல பையன்.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? கல்யாணியை நான்தான் கூட்டிப்போயி பள்ளிக்கூடத்துல சேர்த்தேன். ம்ம்... வண்ணாரப்பேட்டை பள்ளிக்கூடம். தி.க.சி. அப்போ பேங்க் உத்தியோகம்னு சொன்னேன் இல்லையா... ஒரு நாள் என்கிட்ட, ’’இவனுக்கு படிப்பு கொஞ்சம் சரியா இல்லை. வேற ஸ்கூல மாத்தலாம்னு இருக்கேன். ஆனா, எனக்கு நேரமில்லை. நீங்கதான் கூட்டிட்டுப் போவணும்’’னு சொன்னார். என்கூட ’சாந்தி’ எஸ்.ஏ.முருகானந்தமும் வந்தார். ரெண்டு பேரும் கல்யாணியை பள்ளியில சேர்த்தோம். கல்யாணி, அவன் மகளைப் பள்ளிக்கூடத்துல சேர்க்கும்போது ’’பாரத்துல கையெழுத்துப் போடுங்க மாமா’’னு சொன்னான். ஏன்னு தெரியலை. நான் ஏன்னும் கேட்கலை. கையெழுத்துப் போட்டேன். என்னென்னமோ ஞாபகம் வருது பாருங்க... என்னனு சொல்றது இதை.

மனசுக்கு என்னமோன்னு இருந்தா திருநவேலிக்கு பஸ் புடிச்சுடுவேன். நேரா தி.க.சி. வீடு. அங்க பேசிட்டே இருப்போம். வீட்ல தி.க.சி. இல்லைன்னா பேங்குக்குப் போயிடுவேன் பாத்துக்கிடுங்க. அப்படியே பேசிட்டு இருந்துட்டு மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வருவோம். அங்கயே நைட்டு தூங்கி எந்திருச்சா... திருநவேலி டவுன் ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கதுல ஒரு பாதை போவும். அது வழியா நடந்து காடு கரைக்குப் போயிட்டு, தாமிரபரணில குளிச்சுட்டு மேலக்கடைசியில் இருகிற ராஜகுலராமன் தெருவுக்கு வருவோம். அங்கதான் தொ.மு.சி. இருந்தார். அங்க போனா அரட்டைக் கச்சேரிதான். இங்க தொ.மு.சி. பத்தி ஒண்ணு சொல்லணும். புத்தகம் எழுதி முதன்முதலா ஜெலுக்குப் போன முதல் எழுத்தாளன் தொ.மு.சி-தான். ’முதல் இரவு’னு ஒரு நாவல் எழுதினார். பாலியல் கதைனு புடிச்சு ஜெயில்ல போட்டுது பகவத்சலம் மந்திரி சபை. ஆனா அதுல ஒரு வேடிக்கை பாருங்க... புக் கன்னாபின்னானு வித்துது. அந்தப் பணத்துல தன் மனைவிக்கு நெக்லெஸ் வாங்கிப் போட்டார் தொ.மு.சி. ஆனா, ’முதல் இரவு’ புத்தகத்தை தி.க.சி. ஏத்துக்கிடலை. அதையே ஏத்துக்கிடாதவர் என்னோட ’மறைவாய்ச் சொன்னக் கதைகள்’ புத்தகத்தை ஏத்துக்குவாரா? ம்கூம்... ’’ஏங்க வீணானதொரு விளையாட்டு வேலையில் ஈடுபடறீங்க’’னு சொன்னார். ஆனா, நான் அவர் சொல்றதைக் கேட்கலை. இவ்வளவு இருந்தாலும் எங்க சிநேகிதம் சிதையில்ங்கிறதுதான் முக்கியம். எனக்கு நிறைய புஸ்தங்களைக் குடுத்து படிக்கவெச்ச தமிழ் எழுத்தாளர்கள் ரெண்டு பேர் ஒருத்தர் திகசி; இன்னொருத்தர் தஞ்சை ப்ராகாஷ்.

’’இந்தப் புத்தகத்தை நான் வெச்சுக்கிடட்டுங்காளா?’’னு தி.க.சி-கிட்ட கேட்பேன்.
’’வெச்சுக்கிடுங்களேன்...”னு மென்மையா ஒரு சிரிப்பு சிரிப்பார். இனிமே அந்தச் சிரிப்பைத்தான் பார்க்க முடியாது.

தூத்துக்குடி எஸ்.ஏ.முருகானந்தத்துக்குப் பிறகு ’சாந்தி’ பத்திரிகையை தொ.மு.சி. நடத்தினார். அதுல தி.க.சி. எழுதின சினிமா விமர்சனம் பரவலாப் பேசப்பட்டுது. அதுலதான் முதன்முதலா சினிமா டெக்னிகல் விஷயங்களை அதாவது கேமரா ஆங்கிள், எடிட்டிங், லைட்டிங்... பத்தியெல்லாம் தி.க.சி. எழுதினார். ’சாந்தி’ பத்திரிகை சார்பா ’புதுமைப்பித்தன் மலர்” கொண்டுவந்தாங்க. அதுலதான் சுந்தரராமசாமியோட முதல் சிறுகதை ’தண்ணீர்’ வெளிவந்துச்சு. அதுக்குப் பிறகுதான் அவர் தொடர்ந்து எழுத ஆரம்பிச்சார். அப்போ நான், தொ.மு.சி., தி.க.சி., சு.ரா. எல்லாரும் சேர்ந்து திருநவேலியை நடந்தே சுத்தி வருவோம். எங்களுக்கு அந்த இடமெல்லாம் ஏற்கெனவே பழக்கம். ஆனா, சுந்தரராமசாமிக்குப் புதுசு. அப்போதான் ஒரு இடத்தைக் காண்பிச்சு, ‘’இதுதான் மாடத்தெரு’’னு தி.க.சி. சொன்னார். அதைத் தாண்டினா தேரடி, அப்புறம் வாகையடி முக்கு. அங்கே தேர் நின்னுடும். கதை பாதிலேயே நின்னுடுச்சுனா புதுமைபித்தன் ’வாகையடி முக்குல படுத்துட்டது’னு சொல்வார். அந்தச் சொற்பிரயோகம் நவீன இல்லகிய உலகத்துல பின்னாடி பிரபலமாச்சு.

அப்போல்லாம் ஜீவா தலைமையில எட்டையபுரத்துல பாரதி விழா நடக்கும். அந்தக் காலத்துல கம்யூனிஸ்ட்காரங்க எல்லாரும் காக்கி கலர் அரைக்கால் டவுசர்தான் போடுவாங்க. ஜீவாவும் அரைக்கால் டவுசர்தான் போடுவார்.
’’ஏன் இப்படி டவுசர் போட்டுக்கிறீங்க. வேட்டி கட்டிக்கிடக் கூடாதா?”னு கேட்டேன்.
’’வேட்டி கட்டிக்கிட்டா மேடையில ஆட்டம் ஆடி பிரசாரம் பண்ணும்போது வேட்டி அவுந்துடும்’’னு சொன்னார்.
’’பச்சை பெல்ட் போட்டுக்கிடுங்க சரியாப் போகும்’’னு சொன்னேன்.
அதுக்கு அவர், “பச்சை பெல்ட் மிட்டா மிராசுகள் போடறது. நான் போடமாட்டேன்’’ சொல்லிட்டார்.
அப்புறம் ஒரு விழாவுல வேட்டி கட்டிருந்த ஜீவா என்னைக் கூப்பிட்டார்.
’’ராஜிநாராயணன்...’’ - இப்படித்தான் கூப்பிடுவார் அவருக்கு மட்டும் நான் ’ராஜநாராயணன்’ கிடையாது.
‘’வேட்டிக்கு மாறிட்டேன் பாத்திங்களா’’னு சொன்னார்.
இதுதாங்க நம்ம உடை. பெங்காலி புரஃபசரைப் பாருங்க. இன்னமும் பஞ்சகச்சம்தான் கட்டுறாங்கனு சொன்னேன்.
இதை எதுக்குச் சொல்றேன்னா... ஜீவானந்தம் போன்ற தலவர்கள்லாம் டவுசர் போட்டிருக்கும்போது, தி.க.சி-யும் தொ.மு.சி-யும் வேட்டிதான் கட்டிருந்தாங்க. அதுவும் தொ.மு.சி., கள்ளிஜிப்பா போட்டிருப்பார். கலைஞர்களை அவங்க போக்குல விட்டுடணும். அவங்களுக்கு விதிவிலக்குகள் ரொம்ப முக்கியம். ஆனா, கலைஞர்கள்கிட்ட நிறைய நெருக்குதல்கள்களை கம்யூனிஸ்ட் கட்சி தந்ததாலதான் நிறைய கலைஞர்கள் அந்தக் கட்சியைவிட்டு வெளிய வந்தாங்க. ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் கட்சியைவிட்டு ஏன் வந்தாருன்னு நினைக்கிறீங்க... ரெண்டாந்தாரம் கல்யாணம் கட்டிக்கிட்டார். கட்சியில விசாரணைனு கூப்பிட்டாங்க இவர் போகலை. அதான் காரணம். நான் யோசிக்கிறேன்... பி.ஜே.பி-க்கு ஆர்.எஸ்.எஸ்., விஷவ ஹிந்தி பரிஷத்... மாதிரி கம்யூனிஸ்ட் கட்சியிலேயும் அடுக்குகள் இருந்திருக்கணும். இருந்திருந்தா வைதீக கம்யூனிஸ்ட்களை அங்க தள்ளிவிட்டிருக்கலாம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உடைஞ்சதுக்கான காரணத்தை ’ஒண்ணு + ஒண்ணு = 11’னு ஒரு கட்டுரையா எழுதினேன். உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் சொன்ன ஒரு சங்கம் இப்படி ரெண்டா உடைஞ்சுடுச்சு. உடைச்சது முதலாளிகள் சங்கம்தான். அவங்களுக்குள்ள ஒற்றுமை கட்சியில இருந்திருந்தா கட்சி உடைஞ்சிருக்காது. ’நாங்க பிரிஞ்சு போகலை. ஆனா, கட்சியின் ஸதாபகரில் ஒருவரான டாங்கே தலைவர் பதவிலேர்ந்து விலகணும் மார்க்சிஸ்ட் கோரிக்கை வெச்சதை டாங்கே ஏத்திருந்தா கட்சி உடைஞ்சிருக்காது’’னு எழுதின கட்டுரை படிச்சுட்டு, ’நீங்க சரியாத்தான் சொல்லிருக்கீங்க ஆனா யார் கேட்டா... இந்தக் கட்டுரையைக்கூட யாரும் பிரசும்கூட பண்ணமாட்டாங்க’னு வேதனையோட சொன்னதும் இல்லாம கடைசிவரை ஆதரிச்சவர் தி.க.சி. கூடங்குளம் அணு உலை நிர்மாணத்துக்கு எதிரா குரல்கொடுத்தது. ஆதரவு நிலை எடுத்த மார்க்சிஸ்ட்களை விமர்சனம் பண்ணினது மட்டுமில்லாம... அவங்களோட ஈழ எதிர்ப்பு கொள்கைகளையும் நிராகரிச்சு மண்ணுக்கேத்த மார்க்சீஸியத்தைச் சொன்னவராவும் இருந்தார் தி.க.சி..

என்னைப் பார்க்க நிறைய இளையவர்கள் வருவாங்க. ’என்ன எழுதுறீங்க... என்ன புத்தகம் கையில வெச்சுருக்கீங்க?’னு கேட்பேன். ’கவிதை எழுதுறேன் இல்ல... கவிதைப் புத்தகம் வெச்சிருக்கேன்”னு சொன்னாங்கன்னா... நான் அவங்க பக்கமே திரும்ப மாட்டேன்.  ஏற்கெனவே கவிதையில சொன்னதைவிட புதுசா யாரும் எதுவும் சொல்லிடலைங்கிறதுதான் என் அபிப்ராயம். இன்னும் சொல்லப்போனா உரைநடை இலக்கியம் தமிழ்ல வளராம இக்கிறதுக்கு கவிதைகள்தான் காரணம்.  என்னைத் தனிப்பட்ட முறைகள்ல கேட்டா கவிதைகளை தடை பண்ணனும்தான் சொல்வேன். இல்லைன்னா கவிதைக்கு, உரைநடைக்குனு தனித்தனி துறைகள் தொடங்கிடணும். ஆனா, தி.க.சி-கிட்ட இந்தக் குறபாடுகளோ கூப்பாடுகளோ இருந்ததே இல்லை. எல்லா எழுத்தையும் ஆதரிச்சார். அரவனைச்சார். உற்சாகப்படுத்தினார்.


நீர்ப்பாய்ச்சினார்.

அப்போ கல்யாணிக்கு மதுரைல பேங்க் உத்தியோகம். நாகமலை ரோட்லதான் வீடு. ஒரு நாள் வீட்டுக்குக் கூப்பிட்டான்; போனேன். ’’வீட்டுல பெரிய பெரிய பல்லிகள் இருக்கு மாமா என்ன பண்றதுனு தெரியலை..’’னு சொல்லிக் கவலைப்பட்டான். அவன் சம்சாரத்துக்கும் அதே கவலைதான். ’’அதுங்க இங்க இருக்கிறது நல்லதுதான். பூச்சிகளையெல்லாம் தின்னுடும். அதுல விஷப்பூச்சிகளும் அடக்கம். அதனால கவலைபடாத’’ சொன்னேன்.
அவங்க ஏத்துக்கிட்டாங்க.

 இலக்கியத்துல விஷமான கருத்துகளை எதிர்க்கிற வேலையைத்தான் தி.க.சி. பண்ணினார். அதன் மூலம் அவர் நம்பின இலக்கியத்தை அறிமுகத்தினார். அது நிறைய பேருக்கு உபயோகமா இருச்சுன்னு மட்டும்தான் இப்போ என்னால சொல்லமுடியுது...’’  

-இதன் சுருக்கபட்ட வடிவம் ஆனந்த விகடன் இதழில் வெளியானது
 
   
   
   

2 comments:

ULAGAMYAAVAIYUM (உலகம்யாவையும்) said...

nanri kathir. arumaiyaana ninaivalaigal...

உமா மோகன் said...

தற்செயலாக இன்றுதான் இந்த முழுவடிவம் பார்க்கக் கிடைத்தது எங்களை மாதிரி மறதி மன்னார்சாமிகளுக்குக் கொஞ்சம் லிங்க் கொடுத்து நினைவூட்டினா என்ன..