உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம்!
கதிர்பாரதி, ஓவியங்கள்: ரவி


வண்ணதாசன்
கவிதைகளில் கல்யாண்ஜி, சிறுகதைகளில் வண்ணதாசனாக இலக்கிய முகம் காட்டும் சி.கல்யாணசுந்தரம், ஓர் ஓவியரும்கூட. 'தமிழ்நாட்டில் ஓவியர் கோபுலு, கேரளாவில் நம்பூதிரி, ஆந்திரப்ரபா பாபு... இவர்களுடைய ஓவியங்கள் எனக்கு விருப்பமானவை. நான் தொலைந்துபோக
விரும்பும் காடாக இவர்களது கோடுகள் இருக்கின்றன. இவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் என் கட்டைவிரலை தட்சணையாகத் தரவும் சம்மதம்’ என்பார் வண்ணதாசன்.

''பனிக்குடத்தில் இருந்து சிசு வெளியே வருவதை, ஒரு பசு கன்று ஈனுவதை, முட்டையின் ஓட்டை உடைத்துக்கொண்டு ஒரு பறவைக் குஞ்சு உலகை ஸ்பரிசிப்பதை... ஒவ்வோர் ஆணும் பார்க்க வேண்டும். நான், பசு கன்றை ஈனும்போது, கன்று தரையில் விழுவதற்கு முன்பாக கைகளில் ஏந்தியிருக்கிறேன். அந்த நேரத்தில் என் கைகளில் படிந்த உயிரின் பிசுபிசுப்பு இன்னும் என் எழுத்துகளில் ஒட்டிக்கொண்டு வருகிறது'' என்கிற வண்ணதாசன், தான் நடந்து செல்கிற பாதையில் இறகுகள் உதிர்ந்துகிடந்தால், பொறுக்கி எடுத்துக்கொள்வாராம். காரணம், ''பறவைகளை வளர்ப்பதைப் போல, நான் இறகுகளை வளர்ப்பதாக நினைத்துக்கொள்வேன். தவிரவும், உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம் இருக்கும்தானே!'' என்கிறார். சமீபத்தில் சரஸ்வதி பூஜையின்போது வண்ணதாசன் மஞ்சள் தூளைப் பிசைந்து செய்த அம்மனைத்தான் அவரது இல்லத்தில் வழிபட்டிருக்கிறார்கள்!
தியடோர் பாஸ்கரன்

நாஞ்சில் நாடன்
தமிழ் நவீன இலக்கிய உலகத்தில் மரபு தோய்ந்த குரல் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடையது.
'' 'உச்சத்தைத் தொடணும்னா உச்சத்தில் இருந்து ஆரம்பிக்கணும்’னு ஒரு ஜென் தத்துவம் இருக்கு. இதுதான் என்னை இயக்கும் மந்திரம்.'' என்கிற நாஞ்சில் நாடன், முன்பெல்லாம் வருடத்துக்கு
அதிகபட்சம் மூன்று சிறுகதைகள்தான் எழுதுவாராம். பணி ஓய்வுபெற்ற பிறகு ஐந்து ஆறு என்று எண்ணிக்கை கூடியிருக்கிறது. கம்பன் பயன்படுத்திய சொற்களின் அழகு, ஆழம், வீச்சு... ஆகியவற்றை ஆராய்ந்து இவர் எழுதிய 'கம்பனின் அம்பறாத் தூணி’ என்ற புத்தகம் தமிழ் இலக்கிய பரப்பில் மிகவும் புதிது.

அந்தாதி, உலா, தூது இலக்கியம், பிள்ளைத்தமிழ்.. போன்ற சிற்றிலக்கிய வகை இலக்கியங்களை ஆராய்ந்து 'சிற்றிலக்கியம்’ என்ற புத்தகத்தை எழுதி முடித்துவிட்டார். ''நாஞ்சில் நாட்டு உணவு’ என்ற புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார். இது நாஞ்சில் நாட்டுப் பண்பாட்டின் இயங்குதளம் குறித்த ஆய்வின் அடிப்படையில் எழுதப்படும் புத்தகம். ''காலம் அனுமதித்தால் இன்னும் ஒரு நாவல், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதான் என் இப்போதைய ஆசை'' எனும் நாஞ்சில் நாடன், தன் அத்தனை படைப்புகளையும் கையால்தான் எழுதுகிறார். எழுதும்போது பின்னணியில் அருணா சாய்ராம், சஞ்சய் சுப்ரமண்யன், உன்னி மேனன், டி.எம்.கிருஷ்ணா பாடல்கள் கட்டாயம் ஒலிக்கும்!
கலாப்ரியா
கவிஞர் கலாப்ரியா, 40 ஆண்டுகளுக்கு முன் தன்னோடு பள்ளியில் படித்த நண்பர்களைச் சந்தித்து பால்யகால நினைவுகளுக்குள் 'தொபுக்கடீர்’ என நீச்சலடித்துவிட்டு வந்திருக்கிறார். அந்த அனுபவம் கலாப்ரியாவின் வார்த்தைகளிலேயே...

'இது கீதா. செயின்ட் சேவியர் கல்லூரியில் பேராசிரியை. என் மருமகள்; உன் கவிதைகளின் பரம ரசிகை’ என்று எனக்கு வெட்கம் வரும்படி அறிமுகப்படுத்திய வெ.ராமச்சந்திரன் முகம் பார்த்து, அரை நூற்றாண்டு நெருங்குகிறது. கடினமான கணக்குகளை சரசரவென்று போடும் 'தங்க மெடல்’ பழனியாண்டி, சுந்தரனார் பல்கலையின் இயற்பியல் பேராசியர் என்றெல்லாம் செய்தி வரும். பார்த்து
40 வருடங்கள் ஆகிவிட்டன. முருகானந்தமும் நானும் ஒரே சாப்பாடு, ஒரே ரசனை, அவ்வப்போது ஒரே சரக்கு, ஒரே ஊறுகாய்... என நகமும் சதையுமாகப் பல காலம் பழகினவர்கள்தான். என்றாலும் பார்த்து பத்து வருடங்களாவது இருக்கும். ஆசிரமக் குழந்தைகள் வழங்கிய கலை விருந்தில் ஜனனி என்கிற குட்டிக் குழந்தை அழகாக ஆடியது. தெய்வு, என்னையும் என் துணைவியையும், அந்தக் குழந்தைக்குப் பரிசு கொடுக்கும்படி சொன்னான். பிஞ்சுக் கரத்தால் அந்தச் சிறிய சாப்பாட்டுத் தட்டைக்கூட தாங்கிப் பிடிக்க முடியவில்லை. ஆனால், அதன் வாழ்க்கைச் சுமையைக் கேட்டபோது தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஜனனியின் அப்பா, அவள் அம்மாவைக் கொலை செய்துவிட்டுத் தானும் செத்துப்போய்விட்டானாம். என்ன ஜனனமோ, என்ன மரணமோ. திரும்பும்போது மனம் கனமாக இருந்தது... சில மலையாளக் கதைகள்போல!''
எஸ்.ராமகிருஷ்ணன்

சென்னை உதயம் தியேட்டர் அருகில் உள்ள கோகுலம் பார்க் உணவகம், இவருக்கு விருப்பமானது. கோவில்பட்டியில் இருந்து லூதியானா வரை தீப்பெட்டி பண்டல் ஏற்றிச் சென்ற லாரியில் பயணித்தது இவரால் மறக்க முடியாத பயணங்களில் ஒன்று. பொரிகடலை பொடித்துப்போட்ட வதக்கிய வெங்காயம் கொண்டு இவர் செய்யும் சமையல், குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவாம். மாலை கே.கே.நகர் சிவன் பார்க்கில் நடைபயிற்சியும், காலை வீட்டின் முன்புறத்தில் ஷட்டில்காக் ஆடுவதும் வழக்கம். இவருடைய ஷட்டில்காக் தோழர்... இயக்குநர் சசி!
தேவதச்சன்

கோவில்பட்டியில் இருக்கும் இவரது நகைக் கடையில்தான் எப்போதும் இருப்பார். நண்பர்களோடு பேச வேண்டுமென்றால், காந்தி மைதானத்துக்கு வந்துவிடுகிறார். ''இடம் விஸ்தாரமா இருந்தா, பேச நல்லாருக்கு'' என்கிற தேவதச்சனின் அடுத்த கவிதைத் தொகுப்பின் தலைப்பு... 'எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது’

ஜாதகம், ஜோதிடம் பார்ப்பதில் மகாகெட்டிக்காரர் கவிஞர் விக்ரமாதித்யன். தமிழகம் முழுக்கவுள்ள பாடல்பெற்ற தலங்கள் அனைத்தையும் தரிசித்துவிட்ட விக்ரமாதித்யனுக்கு தஞ்சாவூர் மாவட்டம் திருவாவடுதுறை, திருவீழிமிழலை... இரண்டு ஊர் கோயில்களும் மிகவும் பிடித்தமானவை. இவரது வாசகர் மதுரை எஸ்.செந்தில்குமார் வாங்கிக் கொடுத்த சேர் டேபிளில் உட்கார்ந்துதான் பெரும்பாலும் எழுதுகிறார். அதற்கு முன்பு சூட்கேஸ் பெட்டியை மடியில் வைத்து எழுதிக்கொண்டிருந்தாராம். ''என் கவிதை வாசகர் சரவணக்குமார் சமீபத்தில் சாலை விபத்தில் இறந்துபோனது என்னைத் துக்கத்தில் ஆழ்த்துகிறது. எனது இரண்டாவது காசி பயணத்துக்குப் பெரும் உதவி செய்தவர் சரவணன். என் கவிதைகளின் நுட்பமான வாசகனை நான் இழந்துவிட்டேன்'' என்று வருத்தப்படுகிறார்!
கி.ராஜநாராயணன்
வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா., தீவிரமான சிவாஜி ரசிகர். பூர்வீக இடைசெவல் கிராமத்துக்குப் போய் பத்து வருடங்கள் ஆகிவிட்டனவாம்.
.jpg)
சுகுமாரன்

கோணங்கி

ராமேஸ்வரத்தை சிதைத்த தனுஷ்கோடி புயலில், கடலில் மூழ்கிப்போன ரயிலுக்கு கடைசியாகக் கொடி காட்டிய ரயில்வே ஊழியரின் கைகளைப் பார்க்க வேண்டும் என்று தனுஷ்கோடிக்குச் சென்று அவரைக் கண்டுபிடித்து, அவரது கைகளைத் தடவிப் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பினாராம் கோணங்கி.
'தனுஷ்கோடியில் திரிகிற ஒவ்வொரு நாயும் எனக்கும் பழக்கம். எச்சில் ஒழுகுகிற அதன் நாவில் நான் இருக்கிறேன்!’ என்று அடிக்கடி சொல்வார் கோணங்கி.
No comments:
Post a Comment