19 June, 2013

ஐ லவ் யூ அபிஷேக். வயலின் கலைஞர் பத்மா ஷங்கர்

காற்றில் அலைகிற இசைத்துணுக்கு ஒன்றுதான் காதலாக மாறுகிறதா? இல்லை காதல்தான் காற்றில் இசைத் துணுக்காகி மிதக்கிறதா... இரண்டும் இதயம் தொடும்போது ஒன்றுபோல் ஆகிறதே...? எனில் இரண்டும் ஒன்றுதானே? வாசித்து முடிக்கிற கணத்தில் அதிர்கிற வயலின் கம்பிகளைப் போல இந்தக் கேள்விகள் காதலில் அதிர்ந்து கொண்டிருக்கின்றன அபிஷேக். இப்போதும் மும்பையின் செம்பூர் வீதியில் உங்கள் கைபிடித்து நடக்கத் தோன்றுகிறதே அந்தக் காதல்தானே நீங்களும் நானும்.
மும்பையாகிவிட்ட பழைய பம்பாயின் செம்பூர் ஏரியாதான் நானும் அபிஷேக்கும் பிறந்த வளர்ந்த பூமி. நான் ஒரு பக்கம் அபிஷேக் ஒரு பக்கம் செம்பூரில் சுற்றித் திரிந்ததெல்லாம், அந்த தியாராஜர் உற்சவத்துக்கு முன்புதான். அப்போது அந்த உற்சவத்தை முன்னின்று நடத்தியதில் ஒருவர் அபிஷேக். அதில் வயலின் வாசிக்கப் போனபோதுதான் நான் முதன்முதலாக அபிஷேக்கைப் பார்த்தேன். நட்டுமுடித்த அடுத்த நொடிக்குள் ஒரு மரக்கன்று சடசடவென வளர்ந்து விருட்சமாகும் என்றால் நம்புவீர்களா? ஆனால் எங்கள் காதலில் அதுதான் நடந்தது. அதுவும் தன் சல்லிவேர் முதல் ஆணிவேர் வரை விட்டு வளர்ந்து விருட்சமாகிவிட்டது. பார்த்தவுடன் காதல். எனக்குள் இருந்து ஒரு குரல், ’அபிஷேக்தான் உன் வாழ்க்கைத் துணை’’ என்று ஒலித்ததை இப்போதும் என்னால் கேட்க முடிகிறதே.
மும்பையில் பீச், ரெஸ்டாரெண்ட், பார்க்... இவையெதுவுமில்லை நாங்கள் இருவரும் முதன்முதலில் தனியாகச் சந்தித்தது மும்பை சித்தி விநாயகர் கோயிலில்தான். சாமி கும்பிட்டுவிட்டு அர்ச்சனைப் பூக்களை என் கைகளில் திணித்தப்படியேதான் அபிஷேக் தன் காதலைச் சொன்னார். என்னைச் சுற்றி வயலினின் ரீங்காரம். இருந்தாலும் பெண்ணுக்கேயுரிய நாணமும் யூகோவும், ”எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க சொல்றேன்’’ என்று சொல்ல வைத்தது. ஒரு வாரம் கழித்து மஹாலட்சுமி கோயில் நான் அப்போதான் காதல் வயப்பட்டதுபோல ஒகே சொன்னேன். ஆனால், அபிஷேக் தன் காதலைச் சொன்ன கணத்திலேயே கிஷோர் குமாரும், முகமது ரஃபியும் எனக்குள் தங்களின் காதலை இசைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அப்போது செல்போன் இல்லாத காலம். ஆனாலும் பேசிக்கொள்ளாமல் இருக்க முடியாதே. எங்கள் இருவர் வீட்டு லேண்ட்லைன் ஃபோனும் ட்ரிங் ட்ரிங் என்று ரெண்டு ரிங் விட்டு பிறகு மறுபடியும் அலறினால் லைனின் இரண்டு முனைகளிலும் நாங்கள்தான் இருப்போம். ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது அப்பா
வந்துவிட்டார். அப்போது அபிஷேக்கை அபிநயா என்று பெண்ணாக்கிவிட்டத்தை நினைத்து இருவரும் சிரித்துக்கொள்கிறோம். எங்கள் காதல் தன்னிரு கைகளை எடுத்து தானே குலுக்கிக்கொள்ளும் இதுபோன்ற சந்தோஷத் தருணங்களைத் தந்துகொண்டுதான் இருக்கிறது.
காதலைச் சொல்லிக்கொண்டப் பிறகு, முன்பு போல செம்பூர் வீதிகளில் எங்களால் துள்ளிக்குதித்துக் கொண்டு போக முடியவில்லை. யாராவது பார்த்துவிடுவார்களோ என்று இடைவெளிவிட்டும் சிறிது நேரத்தில் யாரும் பார்க்கவில்லை என்று எங்களை ஏமாற்றிக்கொண்டு நெருங்கி நடப்போம். அதுபோன்ற சமயத்தில் அபிஷேக் முணுமுணுத்த ராஜா சாரின், ”நீயொரு காதல் சங்கீதமும்”, ”சுந்தரி கண்ணால் ஒரு சேதியும்” எனக்குள் காதலை ஆழ விதைத்த தருணங்கள். அதன்பிறகு இன்றளவும் இளையராஜாவின் மெடிலடிகளில் எங்கள் காதலைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம்.
அபிஷேக்குக்கு என்னை கல்யாணம் செய்துகொடுக்கும்படி என் பெற்றோரை நிர்பந்தித்தது அவரது அம்மா மீது அபிஷேக் காட்டிய அன்புதான். அதில் நெகிந்து போய்தான் என்னை கல்யாணம் செய்துகொடுத்தனர். திருமணத்துக்குப் பிறகு அதே காதலோடும் இன்னும் அதிக வேகத்தோடும் காலத்தை எதிர்கொள்கிறோம். மோகமுள் படத்தில் பாபுவாக அபிஷேக் நடித்து படம் பெரும்தோல்வியைத் தருணத்தில்தான் நான் அபிஷேக்கைத் திருமணம் செய்துகொண்டேன். அதன்பிறகு அஜித் நடித்த காதல்கோட்டை படத்தில் முதலில் அபிஷேக்தான் நடித்தார். அப்போது அவரது அப்பாவின் மரணம்தான் அந்த வாய்ப்பை கைநழுவிப் போகச் செய்தது. வினித் நடித்து பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆன மேமாதம் படத்தில் முதலில் புக் ஆகி சூட்டிங் போனது அபிஷேக்தான். அப்புறம் வினித் நடித்தார். இதுபோன்ற எங்கள் வாழ்க்கையில் சாண் ஏறி முழம் சருக்கிய தருணங்கள் ஏராளம். ஒரு போதும் காதல் சருக்கியதில்லை. பத்தாயிரம் ரூபாயிலும் குடும்பம் நடத்தியதும் உண்டு. பின்பொரு காலத்தில் வைத்திய செலவுக்காக இருந்த பத்தாயிரத்தை கொடுத்துவிட்டு வந்ததும் உண்டு.
அபிஷேக் எவ்வளவு சோர்வாக இருந்தாலும், ”கண்ணே என் கண்மணியே கண்ணான கண்ணனே... மண்ணுலகில் என் வாழ்வு வளம்பெற வந்துதித்தாய் கண்ணனே... என்று நான் தாலாட்டுப் பாட ஆரம்பித்துவிட்டால் குழந்தையாகிவிடுவார் என் மடியில். அபிஷேக்குக்காக மட்டுமே நான் வாசிக்கும் வயலினில் பேஷ் ராகம் பெருக்கெடும், லால்குடியின் தில்லாடி பிரவகிக்கும். வாசித்து முடிக்கிற கணத்தில் அறையெங்கும் எங்களுக்கான காதல் நிறைந்திருக்கும். எங்கள் ஊடலைப் பெறும்பாலும் முடித்துவைப்பது எனக்குப் பிடித்த பேல்பூரி பானிப்பூரியும் அபிஷேக்குக்குப் பிடித்த அவியல் அடை தோசையும்தான். இதுவரை நாங்கள் வீட்டில் சண்டை போட்டதே கிடையாது எல்லாம் காரில்தான். ரெண்டு பேரும் சண்டை போட வேண்டுமென்றால் காரை எடுத்துக்கொண்டு ஈஸிஆர் பக்கம் போய்விடுவோம். மனம் சரியாகும் வரை சண்டை போட்டுவிட்டு, பிறகு காரோடு சேர்த்து சணடையையும் வெளியே நிறுத்துவிட்டு வீடு வந்த தருணங்களில் காதலின் புன்னைகை அவ்வளவு பிரகாசமாக இருக்கும்.
இன்று நான் வயலின் கலைஞராக ஒரு நூறு பேருக்காவது தெரிகிறேன் என்றால் அது அபிஷேக்கால் என்பதுதான் உண்மை. அதேபோல, ”உன் டெடிகேஷன்ல பத்து பர்செண்ட் இருந்தாகூட நான் எங்கேயோ போயிருப்பேன்” என்று அபிஷேக் என்னை சிலாகிக்கும்போது மீண்டும் ஆரம்பத்திலிருந்து அபிஷேக்கைக் காதலிக்கத் தோன்றுவது பேருண்மை.
இன்று எங்கள் லட்சியத்தை நோக்கி ஒடிக்கொண்டிருக்கிறோம். ஆனால்; அடைந்தபாடில்லை. பணக்காரனா பாத்து கல்யாணம் பண்ணிருந்தா இன்னும் வசதியோடு வாழ்ந்திருப்பாய்தானே என்று என்னைப் பார்த்து அபிஷேக் கேட்கும் தருணங்களில் எல்லாம் இல்லை இல்லை நீதான் எனக்கேற்றவன் என்று நான் சொல்ல வெட்கத்தைப் புதுப்பித்துத் தருவதும் அந்தக் காதல்தான். பெரும்பாலும் நடிகராக அறியப்பட்டிருக்கும் அபிஷேக், சிறப்பாக பாடுவார் என்பதைத் தெரிய வைத்ததே எங்கள் காதல்தான்.


அபிஷேக் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா... கொழும்பில் நடந்த ஒரு லைட் மியூசிக் கச்சேரியில் நீங்களும் நானும் சிரித்துக்கொண்டே காதல் பிசாசே காதல் பிசாசே பாடலைப் பாடினோம். அந்தக் கணத்தில் உதிரிந்த சிரிப்பில் காதல் இருந்தது. அந்தக் கணத்தில் தோன்றிய காதல் பிசாசு நம்மை ஆசீர்வதித்தது. அந்த ஆசீர்வாதத்தோடுதான் இதைப் பகிர்ந்துகொள்கிறேன் ஐ லவ் யூ அபிஷேக்.

-கதிர்பாரதி


கல்கியில் பிரபலங்களின் காதல் 3

1 comment:

நிலாமகள் said...

காரோடு சேர்த்து சணடையையும் வெளியே நிறுத்திவிட்டு//

காதல்... இவருக்கு எப்படியான அலாதி அனுபவங்களை அள்ளி வழங்குகிறது...!!!