15 February, 2012

ரயில்



ஒரு நாள் அந்த ரயிலில் என் காதலை அனுப்பி வைத்தேன்
தளும்பிச் சிரித்தபடி ஊர்ந்துபோனது.
பிரிதொரு நாளில் புன்னகையைச் சுமந்துபோன ரயிலுக்கு
எல்லா நிலையங்களும் பச்சைக்கொடியோடு தாழ்ந்து பணிந்தன.
கையசைக்கும் சிறுமலர்கள் பயணிக்கும் பெட்டிக்கு
உற்சாகத்தைத் தெரிவித்துவிட்டு
வீடு திரும்பிய கணத்தில் புல்லரித்துப் பூத்திருந்த
செடியிலிருந்து ஒரு பூவைப் பறித்து
தனக்குச் சூடிக்கொண்டது அந்நாள்.
பார்வைகளும் பதட்டங்களும் பயணமான அன்று
ஒவ்வொரு நிலையத்திலும் எதிர்படும் ரயில்களுக்குக் காத்திருந்து
வழிவிட்டுப் புழுங்கவேண்டி இருந்தது.
கணநேரத்தில் தவறவிட்ட ஒரு தினத்தில் 
ரயிலைத் துரத்துக்கொண்டோடும்படி
கோபத்தையும் இயலாமையையும் ஏவிவிட்டிருந்தபோதுதான்
விபத்தில் சிக்கி மரணித்தது.
என்னைக் கடந்துபோகிறவர்கள் பெருமூச்சைச் சொரிந்தபடி
குழந்தைக்குக் கிசுகிசுக்கிறார்கள்
இவன்தான் ரயிலைக் கொன்றவன்

3 comments:

Anonymous said...

சந்தோஷமாய் பயணித்து விபத்தில் முடியும் ஒரு ரயில் பயணம் மாதிரி பயணிக்கிறது கவிதையோடு காதலும்.. நூல் இழை சோகம் ஒட்டிக் கொள்கிறது மனதில்...

நிலாமகள் said...

இவன் ரயிலைக் கொன்றுவிட்டான் //

ர‌யில் ப‌டிம‌மாகிற‌ த‌ருண‌ம் க‌விதை உய‌ர்ந்து விடுகிற‌து! அவ‌ன‌து க‌வ‌ன‌க்குறைவால் உயிரிழ‌ந்தாலும், உட‌ன் ர‌யில் ப‌ற்றிய‌ அச்ச‌த்தை விளைப்ப‌தால் அவ‌ன் ர‌யிலைக் கொன்றுதான் விடுகிறான்.

உமா மோகன் said...

என்னைக் கடந்துபோகிறவர்கள்

பெருமூச்சைச் சொரிந்தபடி

குழந்தைக்குக் கிசுகிசுக்கிறார்கள்

இவன்தான் ரயிலைக் கொன்றவன்

அவர்களின் தவிப்பும் ஆற்றாமையும்

வாசிப்பவருக்கும் வரும்படி

முன்னே ரயிலை ஓடவிட்டதுதான்

கவிஞனின் திறன்