14 October, 2010

மீட்பு

எமக்கு வாய்த்தது நன்னிலம்தான்

நெகிழத் தொடங்கியிருக்கும் இக்கணத்திலிருந்து
அதனியல்பால் எல்லாம் கிட்டும் எமக்கு

எழுதுகோல் முளைக்கும்
கணினியும் கண்டடைவோம்
மரித்திருக்கும் எம் குலசாமிக்கு
உயிர்ப்பு துளிர்விடும்
சாங்கியமும் கொண்டாட்டமும்
மீண்டும் நிறம்கொள்ளும்
நிலத்தின் தாதுக்களால் வண்டல்களால்
செப்பமுறும் எம் மூளை
இருதயம் திடச் சித்தமடையும்
கனவுகள் கள்வெறியூட்டும்
இறுகிக்கிடந்த இச்சைகளுக்கு
றெக்கை அரும்பும்
மூதாதையர் தேடிக் களைப்படைந்த
புதையல்கள் அகழாமல் மேல்வரும்
நீளும் ஆயுள்ரேகைகளில் எம் சந்ததி
வளப்பமுறும்
எல்லாம் கிட்டும் எமக்கு

யாவற்றுக்கும் முன்
உன் பசப்புகளுக்கும் பாசாங்குகளுக்கும்
மயங்கி இருக்கும் நிலத்தை
மீட்டாக வேண்டும்

நன்றி : உயிர்மை - நவம்பர் 2010

1 comment:

உயிரோடை said...

தலைப்பே கவிதைங்க. வாழ்த்துகள்