21 March, 2022

உயர்திணைப் பறவை கவிதைத் தொகுப்புக்கு கவிஞர் பூவிதழ் உமேஷ் எழுதியது....

 வரிகளுக்கு இடையில் தன்னை அதிகப்படியாக நிரப்பிக்கொள்ளும் கவிதையின் தனித்த ஆற்றல், அகத்தை உணர்வதில் கண்மூடித்தனம் கொண்டவர்களுக்கு அதை மீட்டெடுப்பதற்கான பயன்படுத்தப்படாத ஆற்றலாக இருக்கிறது . அத்தகைய ஆற்றல் நிரம்பிய கவிதைகளோடு நல்லதொரு தொகுப்பாக வந்துள்ளது கதிர் பாரதி அவர்களின் உயர்திணைப் பறவை தொகுப்பு.

ஒரே சொல்லால்/ ஒரு சில சொற்களால் / ஒரே வரியால் மாயம் செய்வது கவிதையின் வழமையான குணம் அதை தொகுப்பு முழுவதும் கதிர் பாரதி நேர்த்தியாகக் கையாள்கிறார். அவருடைய முந்தைய இரண்டு தொகுப்பில் இருந்து வேறொரு தளத்திற்கு இக்கவிதைகள் நகர்ந்துள்ளன.
இக்கவிதைகளில் உள்ளே சிதறி இருக்கும் இடையீட்டு வெளி அவற்றின் விரிவு ஆகியவை ஏகத்துக்கும் யோசிக்க வைப்பதுதான் இதிலுள்ள கவிதைகளின் மிகப்பெரிய வெற்றி. காட்டிலிருந்து வீடு திரும்பாத நாளில் கரடிகளை வசியம் செய்து மெத்தைகளாக்கி தூங்கிவிடும் வேடன் போல நம்மை மாற்றிவிடும் வசியம் இக்கவிதைகளில் உள்ளது.
//பிறந்த நாளுக்கு மறுநாள் வரும் சூரியனுக்கு வயது ஒரு நாள்// (ப – 90) என்று பிரமாண்டத்தை சுருக்கிவிடும் பண்பு, //அது பாம்பு அல்ல வீடு பழகிய தாபம்// (ப-160) என்று கண்முன்னே தெரிவதை மனதின் அரூபத்திற்கு இடம் பெயர்ப்பது ஆகட்டும், //மனம் உறங்கி விட்டதா என தலை உயர்த்தி பார்க்கிறது உடல்// (ப-183) என நனவு நிலையின் நீட்சியாகட்டும் எங்கு நோக்கினாலும் கவித்துவம் குறையாது வாசிப்பு இன்பம் தரும் கவிதைகளாக இருக்கின்றன.
கவிதை தனக்குள் வைத்திருக்கும் சித்திரம் தான் அதன் ஆயுளை நீட்டிக்கும் அந்த வகையில் அம்மாவை மனைப் பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது (ப-20) இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. 30 கவிதைகளில் 28வது தவிர அத்தனை கவிதைகளையும் என் அம்மாவின் படங்களோடு ஒரு அரங்கம் முழுக்க நிரந்தரமாகக் காட்சிப்படுத்தினால் கூட என் ஆசை தீர்ந்து விடாது .
// நீ போ இந்த அனாதை மேகத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வர்றேன்// இப்படி அற்புதமான குரலாக இருந்தாலும்
"யாரோ ஒரு அம்மா" என்றாலும் "என் அம்மா பக்கத்தில் குந்தி கொண்டதுபோல " இப்படி அற்புதமான உணர்வாக இருந்தாலும் எல்லாவற்றிலும் செழுமை குறையாமல் எழுதியுள்ளார். இது போன்ற எண் வரிசையிட்ட கவிதைகள் தன்னளவில் தனித்துவம் மிக்கதாக உள்ளன. இவை பெரும்பாலும் தனித்தனி கவிதைகளாக விளங்கும் தன்மையோடும் இருக்கின்றன.
மகிழ்ச்சி மாறுவேடத்தில் சுற்றும் (ப-64) தன்மையை நகர்த்திவிடும் அவர், இது வாழ்க்கையின் வட்டம் (ப-69) என்று நம்மை ஒப்புக்கொள்ள வைத்து, எல்லா கவிதையிலும் எளிமையை தன் கவிதைகளின் வெளிச்சமாக்கி கைக்கொள்கிறார்.
//இரவில் மினுங்கும் தனிமம்
உன் காமம்// (ப-174) என்று சொல்வது அழகின் உச்சம்.
ஆவர்த்தன அட்டவணை வெளிவந்து நூற்றி ஐம்பது ஆண்டுகள் (2019) முடிந்துவிட்டன. இதுவரை 118 தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கதிர்பாரதி அவர்கள் 119-ஆவது தனிமமாக காமத்தைக் குறிப்பிடுவது புதுமையாக உள்ளது. அதுவும் இரவில் மினுங்கும் அதன் தன்மை கவிதையை ஒளிரச் செய்கிறது.
//ஒரு முறை
தன் மீது தானே ஏறி
மாடிக்கு மெதுவாக நடந்து போனது படிக்கட்டு// (ப-73) இதில் படிக்கட்டுக்கு பதிலாக எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பதிலீடு செய்து கொள்ளலாம். கடைசியில் நல்லவேளை என்று எவற்றுக்கும் பொருத்தி விட்டு போகலாம்.
கல்லின் மீது
உன் அமைதியை எறிந்து
அதற்குள் இருக்கும்
சிலையை எழுப்பினால்
அது
தன்னை கடவுள் என்று நினைத்துக்கொண்டு
அமைதியை
அதட்டி உருட்டி மிரட்டுகிறது
பார்
(ப- 186) என்று அமைதியை உளியாக மாற்றும் அற்புதம் வெயிலோடு மழையோடு மரம் பேசுவது போல ஒரு பேச்சு கடவுளோடு கூட பேசி விட முடியாது (ப-88) என்ற இயற்கை ரகசியம் உட்பட , மனதுக்கும் ஒரு டூ- லெட் பலகை மாட்டுவது (ப - 102) என நல்லதொரு வாசிப்பு அனுபவத்திற்கு கட்டியம் கூறுகிறது இத் தொகுப்பு.
ஆமை + நத்தை= ஜென் (ப- 108 ) என்ற கவிதை மிக புத்திசாலித்தனமான கவிதை. இதிலுள்ள உரையாடல் கவிதைகள் அனைத்தும் மிக அறிவுப்பூர்வமான வகையில் உருவான கவித்துவம் நிரம்பியதாக உள்ளன. (ப 74,92,107-163, 189 )
சொல்ல வேண்டும் என்று தோன்றியது கேட்க வேண்டும் என்று அவசியமில்லை (ப-101)- என்ற நீண்ட தலைப்பில் உள்ள கவிதை ஒரு கலைடாஸ்கோப் பார்வையைத் தருகிறது. இது போன்ற கவிதைகள் ஆழமான தீவிரமான கவிதை மனம் வாய்க்கப்பெறும்போது உருவாகும் பிரதிகள் என்று சொல்லலாம்.
//ஆறு விரைவாக வற்றிவிட்டது மீன் எலும்புகளாக // மீனைத் தின்று முள்ளை எறிவதுபோல ஆற்றைத் தின்று எறிந்தது யார்? என்ற மிகப்பெரிய கேள்வியை சுமந்த கவிதை உள்ளது.
முண்டி முளைத்து மூன்று இலை விட்டது// ப_113 / ஓரிலை / ஈரிலை தாவரம் தானே உண்டு அதெப்படி மூன்று இலை தாவரம் ஒன்று இருக்கும் என்ற கேள்வி நமக்குள் எழுவது இயல்பு காலம் – அகாலம் இதற்கு இடையில் துளிர்க்கும் மனம் என்று மூன்றாவது இலையைப் பொருள் கொள்ளலாம்.
துறவி போவது ஒரு குழந்தை போன பாதை (ப-125) மலர்நீட்டம் (ப – 146 ) ஆம் (169) சிட்டு (ப-141) இவை போன்ற கச்சிதமான கவிதைகள் தொகுப்பு முழுவதும் பல இருக்கின்றன.
மொத்த பற்களும் உதிர்ந்து ஒற்றை பல் மட்டும் மீந்திருக்கும் வினோத கனவு கண்ட (ப-78) அக்பர் பாதுஷா போல திசைகளை அழைத்துக்கொண்டு மோதிரம் போன்ற காற்று வளையம் புக தன்னந்தனியே ஒரு பறவை (ப-110 ) என இந்தத் தொகுப்பு முழுவதும் ஒரு உயர்திணை பறவை பறக்கிறது.
இந்த தொகுப்பில் மற்றொரு சிறப்பம்சம் எனக்கு தெரிகிறது நீளமான தலைப்புகள் எல்லாமே தனக்குள் ஒரு கவிதையை ஒளித்து வைத்துள்ளன. உன் காற்றுக்குமிழை அழைத்துக் கொண்டு போ(ப-142) ப-100 ஆனால் பல கவிதைகளுக்கு தலைப்பிடுவதற்கு அவர் மெனக்கெடவில்லையோ என்று நினைக்கவும் தோன்றுகிறது.
புளியம்பூவை நித்திய மலர் (ப-80) என பல மலர்களைக் (ப-84) கொண்டாடும் இத்ததாகுப்பிற்கு தமிழ் இலக்கிய பரப்பில் எப்படியும் விழுந்துவிடும் தாயம் இந்த கவிதை தொகுப்புக்காக ஏனென்றால் டீ குடிப்பதற்கும் தேநீர் அருந்துவதற்கும் நிரம்ப உண்டு வித்யாசங்கள் (ப-44 ) என்று கதிர் பாரதி சொல்வது போல இத் தொகுப்பு தரும் அனுபவங்களைப் உணர்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் வித்யாசங்கள் நிரம்ப உண்டு.
//மாட்டு வண்டி செல்கிறது இல்லை வண்டிப்பாதை அழைத்துப் போகிறது// (ப-226 ) என்ற கடைசி கவிதை தரும் தத்துவ விசாரணை தொகுப்பை மிக அழகாக கவிஞரின் அடுத்த தொகுப்பை நாம் வாசிப்பதற்காக தொடரும்..... என்று சொல்லாமல் சொல்கிறது.
இந்தக் கவிதைகள் உருவாக்கும் மன இடையீட்டையும் உணர்வோட்டங்களையும் அட்டைப்படம் நேர்த்தியாக உணர்த்தி , /தயவு செய்து உன்னிடம் இருந்து என்னைக் காப்பாற்று (ப-124) /என்று அவரே சொல்வதுபோல மன சிதிலங்களையும் விதிர்ப்பையும் ஒரு சேர வெளிப்படுத்தி உணர்த்துவது பாராட்டத்தக்கது
கவிதைகளை உள்வாங்குவதற்கு ஏற்ற White space உடன் நூலை உருவாக்கியுள்ள K.C செந்தில்குமாரின் பணி இதை பொலிவுற வெளியிட்டுள்ள இன்சொல் என அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
6382240354

No comments: